ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 31 புதன்

“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே நமக்குச் செய்யவல்லவராகிய தேவன்” (எபேசி.3:20) நம்மோடிருந்து அருளிச்செய்த எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும், நன்மைகளுக்காகவும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

தேவனுடைய மகிமை

தியானம்: ஆகஸ்டு 31 புதன்; வேத வாசிப்பு: யாத்திராகமம் 40:1-38

“…மோசே வேலையை முடித்தான். அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது. கர்த்தருடைய மகிமை வாசஸ் தலத்தை நிரப்பிற்று” (யாத்.40:33-34).

யாத்திராகமம் புத்தகத்தில் அடிமைகளாக அறிமுகமான இஸ்ரவேல், புத்தகத்தின் முடிவிலே ஜெயம் பெற்ற ஜனமாகக் காணப்படுவது எத்தனை ஆச்சரியம்! இங்கேயும் நாம் நம்மைக் காண்கிறோம். பாவ அடிமைத்தனத்திலிருந்த நாம் இறுதியில் ஜெயம் பெற்றவர்களாக தேவ சந்நிதானத்தில் நிற்போம் என்ற நிச்சயத்தைத் தந்த தேவனை நன்றியோடே துதிப்போமாக.

கர்த்தர் சொன்னபடியே மோசே செய்து முடித்தபோது, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது. வாசஸ்தலம் என்பது தேவாதி தேவன் பூமியிலே வசிக்கின்ற வீடாகும். அவர் தமது ஒப்பற்ற பிரசன்னத்தினால் அதை நிரப்பினார். ஏறத்தாழ 500 ஆண்டுகளின் பின் வாசஸ்தலத்திற்கு மாற்றீடாக, ஆராதனைக்கு மையமாக சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான். அப்போதும், “கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று” (2நாளா.5:14). கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருந்ததை இஸ்ரவேல் புத்திரர் கண்டார்கள் (2நாளா.7:3). ஆனால், இஸ்ரவேல் தேவனை விட்டு விலகியபோது, தேவ மகிமையும் பிரசன்னமும் ஆலயத்தைவிட்டு விலகியது. ஆலயம் அழிக்கப்பட்டது (2ராஜா.25:) ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கர்த்தராகிய இயேசு ஆலயத்தில் பிரவேசித்துப் போதித்தபோது, இன்னும் அதிகமான பிரகாசம் தேவாலயத்தை நிரப்பிற்று. இயேசு சிலுவையில் மரித்தபோது, அந்த மகிமை திரும்பவும் விலகிற்று. அவர் உயிர்த்தெழுந்தபோதோ தாம் வாசம்பண்ண ஆலயத்தைத் தேடவில்லை. இன்றும் தமக்காக ஒரு ஆலயக் கட்டடத்தை அவர் தேடவில்லை. திருச்சபையாகிய சரீரத்தில், விசுவாசிகளாகிய நம்மில் வாசம் பண்ணுவதையே அவர் தேடுகிறார்.

ஆலயக் கட்டடத்தினிமித்தம் வாக்குவாதம் செய்த ஒரு சபை மக்களிடம், கட்டப் பணியினிமித்தம் ஒற்றுமையும் உண்மைத்துவமும் இல்லாவிட்டால், அந்த ஆலயத்தில் ஒன்றுகூடி ஆராதிக்கும் ஆராதனை தேவசமுகத்திற்கு எழும்புமா எனக் கேட்டபோது, “தேவன் கட்டடத்தில் அல்ல, நமது இருதயத்திலே வாசம்பண்ணுகிறார்” என்றனர். இருதயமே திருக்கானதாக இருக்கும்போது, கர்த்தர் திருக்கானவர்களின் ஆராதனையில் மகிழுவாரா? நமது இருதயங்களிலே தமது மகிமையைப் பிரகாசிப்பித்த தேவனுடைய மகிமை கடைசிவரை நம்மைவிட்டு விலகாதிருக்குமா? இறுதியில் தேவனுடைய வாசஸ்தலம் இருக்கின்ற மனுஷர் மத்தியில் நாமும் இருப்போமா? (வெளி.21:3).

“…தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” (2கொரி.4:6).

சிந்தனைக்கு: தேவன் தங்கி வாழும் நம்முடைய இருதயத்தை தேவகரத்தில் இன்றே ஒப்புவிப்போமாக!

ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 30 செவ்வாய்

“.. கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்.40:4) என்ற வாக்குப்படியே பலவிதமானத் தேவைகளோடு இருக்கிற 10 குடும்பங்களுக்கு கர்த்தர் போதுமானவராக இருந்து வழிநடத்தவும், அவர்களும் கர்த்தரையே தங்கள் நம்பிக்கையாக்கிக் கொள்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.

ஜெபதூபம்

தியானம்: ஆகஸ்டு 30 செவ்வாய்; வேத வாசிப்பு: யாத்திராகமம் 30:1-10

“தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக” (யாத்.30:1).

கிறிஸ்தவ வாழ்வில் வளருவதற்கு ஆலயம், ஆராதனை, வேதப்படிப்பு எனப் பல உந்துதல்கள் இருந்தாலும், ஜெபம் இல்லையானால் பலன் என்ன? ஆனால் இன்று, நமது மூச்சாயுள்ள ‘ஜெபம்’ எவ்வளவு மலிவாக எடை போடப்படுகிறது என்றால் அது மிகையாகாது.

ஆசரிப்புக் கூடாரத்திற்குரிய சகலத்தையும் விபரித்த கர்த்தர், இறுதியாக ஒரு தூபபீடத்தை உண்டாக்கும்படி கூறினார். இது தூபமேசை அல்ல. தூபபீடம். காலை, மாலை, குத்துவிளக்குளை ஏற்றும்போதுகூட ஆரோன் இதிலே தூபம் காட்டவேண்டும். இதில் அந்நிய தூபமோ, வேறெந்த பலிகளோ படைக்கக்கூடாது. வருஷத்தில் ஒருமுறை பாவநிவாரண பலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளில் ஆரோன் பிராயச்சித்தம் பண்ணவேண்டும். இத்தூபபீடம் கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது. இது, மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையே தொங்கும் திரைச் சீலைக்கு முன்பாக வைக்கப்பட வேண்டும்.

ஏழாம் முத்திரை உடைக்கப்பட்டபோது பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணி நேரமளவும் அமைதல் உண்டானது (வெளி.8:1-4). அங்கே ஒரு தூதன் கையிலே தூபகலசம் இருந்தது. சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. ஆம், ஜெப தூபம் ஏறெடுக்கப்பட்டது.

தூபபீடம் என்பதன் மூல மொழியின் அர்த்தம், ‘கொலைக்களம்’ என்பதாம். கொலை செய்யப்பட வேண்டிய ஒருவன் பணம், பொருளுக்காக ஜெபிப்பானா? ஜெபதூபம் ஏறெடுக்கும் இடமானது, நான் கொல்லப்பட வேண்டிய இடம். பலிபீடத்தைத் தாண்டாமல் இத் தூபபீடத்தை நெருங்க முடியாது. ஆம், வெட்டப்படும் வரைக்கும் மாம்பழத்தினுள் குடிகொண்டிருக்கும் வண்டைக் காண முடியாததுபோல, நாம் வெட்டப்படும்வரை நமக்குள் குடிகொண்டிருக்கும் கறைகளும் தெரியாது, நாம் சாகும்வரை கிறிஸ்து நமக்குள் வாழவும் முடியாது. கிறிஸ்து நமக்குள் வாழாமல், பிதாவுக்குப் பிரியமான ஜெப தூபத்தை காலை மாலை எந்நேரமும் தூபமாக ஏறெடுக்க முடியாது. இன்று என் ஜெப தூபம் நம் தேவனை எந்நேரமும் பிரியப்படுத்துமா!

“…பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்கு முன்பாக எழும்பிற்று” (வெளி.8:4).

சிந்தனைக்கு: நமது ஜெபங்கள் நம்முடைய தேவனுக்கு முன்பாக எந்நேரமும், நம் ஒவ்வொரு மூச்சிலும் ஏறெடுக்கப்படுகிறதா? ஏறெடுக்கப்படுமா?