ஜெபக்குறிப்பு: அக்டோபர் 31 செவ்வாய்
“எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்” (சங்.16:7) இவ்வாக்கைப் போலவே எண்ணி முடியாத நன்மைகளையும் ஆலோசனைகளையும் இம்மாதம் முழுவதும் நமக்கு அருளின கர்த்தாதிகர்த்தரைப் போற்றி ஸ்தோத்திரிப்போம்.
ராஜரீக ஆசாரியத்துவம்
தியானம்: அக்டோபர் 31 செவ்வாய்;
வேத வாசிப்பு: வெளிப்படுத்தின விசேஷம் 1:1-6
“…தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு…” (வெளி.1:6).
“என் மூதாதையினரில் ஒருவர் சிற்றரசனாயிருந்தவராம். அரச பரம்பரை இரத்தம்தான் என்னில் ஓடுகிறது” என்று மார்தட்டிக்கொள்வார் ஒரு பாட்டி. அப்படியே அவரும் கெம்பீரமாகவே வாழ்ந்து மரித்தார்.
பிரியமானவர்களே, நாம் பெலவீனர்கள்தான்; வெளியிலும் உள்ளிலும் போராட்டங்களினால் மனம் சோர்ந்துபோகிறவர்கள்தான்; இருக்கட்டும். ஆனால் நாங்கள் சாதாரணமானவர்களே அல்ல என்பதுதான் உண்மை. நமது பெறுமதிப்பு என்ன, நாம் யார் என்பதையெல்லாம் எண்ணிப்பார்க்க தவறுவதால்தான் நம்மில் அநேகர் இந்த உலகுக்குப் பயந்து, மனிதரைப் பிரியப்படுத்தி விழுந்து விடுகிறோம். அன்று சவுலும், தாவீதும் ராஜரீக பரம்பரையில் பிறந்து வரவில்லை. தேவனே அந்த அந்தஸ்தைக் கிருபையாய் கொடுத்தார். சவுல் தன்னைத்தானே உயர்த்தி அதை இழந்துபோனான். தாவீது தேவ தயவினாலும், தேவனைப் பற்றியிருந்ததாலும், கடைசி வரைக்கும் ராஜ ஸ்தானத்தில் இருந்தான். தாவீதின் சந்ததியோ ராஜ ஸ்தானத்தை இழந்தது. என்றாலும், தேவன் தாவீதின் சந்ததியில் நித்திய ராஜாவை எழுப்பி, அவனது ராஜரீகத்தை மகிமைப்படுத்தினார்.
ஆனால், இன்று நாம் ராஜ பரம்பரையினர் அல்லாது இருக்கலாம்; ஆனால், ராஜரீகத்தைக் கிருபையாய் பெற்றவர்கள். ராஜாதி ராஜா தாமே அடிமையாய் வந்து, நமது பாவங்களைச் சிலுவையில் சுமந்து, பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்டு, தமது ராஜ்யத்திற்குரியவர்களாக நம்மை ஏற்படுத்தி, தமது அன்பைப் பிறருக்கும் அறிவிக்கின்ற ஆசாரியத்துவ பணியையும் நமக்குத் தந்து விட்டார். ஆனால், அந்த நித்திய ராஜ்யத்தின் ராஜாக்களான நாம், இந்த உலகில் எப்படி இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் ராஜாக்கள் என்று பெருமைகொள்ளுவோமானால் அதுவே நமது அழிவுக்கு வித்திட்டுவிடும். “உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” (மத்.20:27). கடைசி விருந்திலே சீஷரின் கால்களைக் கழுவி இதைத்தான் இயேசு செய்கையில் வெளிப்படுத்தினார். ஆக, இங்கே நமது ராஜரீகம் சேவையில் வெளிப்பட வேண்டும். ஆசாரியப்பணி, பிறருக்காக மன்றாடி ஜெபிப்பதிலும், நம்மை மீட்டெடுத்த தெய்வீக அன்பை வெட்கமின்றி தயக்கமின்றி அறிவிக்கிறதாகவும் இருக்க வேண்டும். அதுவே நமது ராஜரீகம்; ஆசாரியத்துவம்!
“நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும் படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும்… இருக்கிறீர்கள்” (1பேதுரு 2:9).
ஜெபம்: நீதியுள்ள தேவனே, உம் சொந்த இரத்தத்தினால் எங்களை மீட்டு இராஜாக்களும் ஆசாரியர்களும் ஆக்கினபடியால் உம்மைத் துதிக்கிறோம். அந்த இராஜ ரீகமும் ஆசாரியத்துவமும் எங்கள் வாழ்க்கையில் வெளிப்பட ஜெபிக்கிறோம். ஆமென்.
வாக்குத்தத்தம்: அக்டோபர் 30 திங்கள்
… உங்கள் தேவனுடைய சித்தத்தின்படியே செய்யுங்கள். (எஸ்றா 7:18)
வேதவாசிப்பு: எரேமியா. 45-48 | 2தீமோத்.4
ஜெபக்குறிப்பு: அக்டோபர் 30 திங்கள்
“நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” (மத்.21:22) இவ்வாக்கைப்போலவே பலவிதத் தேவைகளோடிருக்கிற 8 நபர்களும் விசுவாசத்தோடே கர்த்தருடைய சமுகத்தில் காத்திருப்பதற்கும் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஜெபம் செய்வோம்.
ஆணையிட்டவர் மாறாதவர்!
தியானம்: அக்டோபர் 30 திங்கள்; வேத வாசிப்பு: சங்கீதம் 89:7-37
“ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன். தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்” (சங்கீதம் 89:35).
“…நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” (சங்.103:14). தேவனை நியாயந்தீர்க்கின்ற நீதிபதியாகப் பார்க்கின்ற நாம், அவர் உருக்கமும் இரக்கமுமுள்ள தகப்பன் என்பதைக் காணத் தவறிவிடுகிறோம். நாம் பெலவீனர்; ஆனால் தேவனுடைய கரிசனையோ நித்தியமானது. அவர் நம்மை ஆராய்ந்து பார்க்கும்போது, நமது மனுஷீகத்தை மறப்பதில்லை. அவர் நமது பாவங்களுக்குக் கணக்குவைத்து நியாயந்தீர்ப்பாரானால் நாம் எங்கே? அவருடைய இரக்கம் நம்மை ஆட்கொண்டிருப்பதால்தான், கிறிஸ்துவுடன் வாழுகின்ற நித்திய வாழ்வின் நம்பிக்கை இன்னும் நமக்கிருக்கிறது.
இதுவே அன்று தாவீதின் வாழ்விலும் நடந்தது. தாவீது பத்சேபாள் விஷயத்தில் பாவஞ்செய்தான்; ஆனால், அவன் மனந்திரும்பிக் கதறியழுது தேவனிடம் திரும்பியபின், அந்தப் பாவத்தைக் குறித்து கர்த்தர் மறுபடியும் மறுபடியும் சுட்டிக்காட்டி அவனை வேதனைப்படுத்தினாரா? இல்லையே! தாவீதின் மகிமை சிறந்த ஆளுகையைக்குறித்து எழுதிவைக்கப்பட்டதுதான் 89ம் சங்கீதம். “என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன்” (வச.4). இது கர்த்தர் தாவீதுக்குக் கொடுத்த ஆணை. ஆனால் எருசலேம் அழிக்கப்பட்டது, ராஜாக்கள் காலமும் முடிந்தது. ஆகவே இந்த ஆணையை தாவீதின் சந்ததியில் வந்து பிறந்த கிறிஸ்து இயேசுவின் நித்திய ஆளுகையைக்குறித்த தீர்க்கதரிசன ஆணையாக நாம் முன்னோக்கவேண்டும். “நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன். அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன்” (வச.27,29). அப்படியே கிறிஸ்துவில் அது நிறைவேறியது. அவரே நித்திய ராஜா!
தேவபிள்ளையே, கர்த்தர் நல்லவர். நமக்களித்த எந்த வாக்கையும் அவர் மண்ணில் புதைத்துவிடமாட்டார். நமது பாவங்களை மன்னித்து, தம்மோடு வாழுகின்ற நிச்சயத்தையே தந்தவர், மாறிப்போகின்ற இம்மண்ணின் வாழ்வில், கணக்குவைத்து நம்மை அழித்துப்போடமாட்டார். இன்றும் மனந்திரும்புகிற பாவியை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதற்காக நாம் துணிகரமாகப் பாவம் செய்யலாகாதே! தேவனுடைய அநாதி அன்பு என்றும் நமக்குண்டு. அதை உணர்ந்து, இந்த மண்ணின் வாழ்வை ஒறுத்து, ஒவ்வொரு விநாடியும் தேவனை மட்டும் பிரியப்படுத்தி வாழ நம்மை ஒப்புவிப்போமாக.
“எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத் தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே” (2கொரி.1:20).
ஜெபம்: வாக்களித்த தேவனே! நீர் எங்களுக்கு அளித்த வாக்குத்தங்களிலும் ஆணையிலும் மாறாதவராயிருந்து அவைகளை நிறைவேற்றுகிறபடியால் உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.