ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 30 வியாழன்

“ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்” (புலம்.3:31) என்ற வாக்குப்படி இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை கைவிடாமலும் நெகிழவிடாமலும் இருந்து காட்டின அவரது வழிநடத்துதல்களுக்காக துதிப்போம்.

கிறிஸ்துவுக்காய்…

தியானம்: 2017 நவம்பர் 30 வியாழன்;
வேத வாசிப்பு: அப்போஸ்தலர் 5:17-42

“அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்…” (அப்.5:41).

களவு செய்த ஒருவன் தண்டனை அனுபவித்த பின்னர் மீண்டும் களவு செய்தால் அவனுக்குப் பெரிய தண்டனை நிச்சயம் கிடைக்கும். இங்கே பேதுருவும் மற்ற சீஷர்களும் பிடிபட்டு சிறைவைக்கப்பட்டு பின்னர் அதே குற்றச்சாட்டுடன் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டும், எதைச் செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டார்களோ, அதையே திரும்பவும் செய்தார்கள். அப்போ இவர்கள் செய்ததற்கும், அந்தக் கள்வன் செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

அனனியா சப்பீராளின் மரணத்தின் பின்னர் இன்னும் திரளான புருஷர்களும் பெண்களும் கர்த்தரிடம் விசுவாசமுள்ளவர்களாகி சபையில் சேர்க்கப்பட் டார்கள். அற்புத அடையாளங்களும் அதிகமாக நிகழ்ந்தன. இதைக் கண்டு ஆத்திரமடைந்தது யார்? ரோமரல்ல, பிரதான ஆசாரியனும் கூடவேயிருந்த சதுசேய சமயத்தார் அனைவரும்தான். பொறாமையினால் நிறைந்த அவர்கள், இவர்களைப் பிடித்துச் சிறைக்குள் அடைத்தனர். ஆனால், கர்த்தருடைய தூதன் அவர்களை வெளியே கொண்டுவந்து, ஜீவவார்த்தையைப் பிரசங்கிக்கும்படி சொன்னான். அப்படியே அவர்கள் செய்தனர். பின்னரும் அவர்களைப் பிடித்து வந்து, கேள்விகளால் துளைத்தெடுத்தனர். அப்பொழுது பேதுரு சொன்னதை நாம் கவனத்திற்கொள்வது நல்லது. “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” அவர்களது பதில் இதுவே. யூதருக்கு இன்னமும் கோபம் அதிகரித்தது; அதனால் அப்போஸ்தலரைக் கொலை செய்யவும் துணிந்தனர். கமாலியேலின் ஆலோசனையினால் அவர்களைக் கண்டித்து அனுப்பினார்கள். அதற்காக அப்போஸ்தலர்கள் பயந்துபோய் ஒடுங்கிப்போனார்களா? இல்லை. திரும்பவும் இடைவிடாமல் இயேசுதான் கிறிஸ்து என்று பிரசங்கித்தனர். இந்தத் தைரியம் நமக்குண்டா?

மாதத்தின் இறுதி நாளுக்குள் வந்த நாம், இன்று ஒரு தீர்க்கமான தீர்மானம் எடுப்போமா? நாம் செய்தது தீயசெயலாக இருந்தால் அதற்குரிய தண்டனைக்கு முகங்கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால், தேவ சித்தத்தைச் செய்து, அதற்காக உலகம் நம்மை எதிர்த்தால் நாம் யாருக்குச் செவிகொடுக்கப்போகிறோம்? தேவனுடைய காரியத்தைச் செய்யும்போது நமக்குத் தடைகள் வராது என்று எண்ணக்கூடாது. நிச்சயம் தடைவரும்; சாத்தான் எதிர்ப்பான். ஆனால் அப்போதும் தேவனுக்காய் நம்மால் நிற்க முடியுமா?

“தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது. தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்” (அப்போஸ்தலர் 5:39).

ஜெபம்: ஆண்டவரே, ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவராகிய உமக்கே நாங்கள் பயந்து உமது திருப்பணிகளைச் செய்திட உதவிச் செய்யும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 29 புதன்

இவ்வருடத்தின் கிறிஸ்துமஸ் காலத்தை நெருங்கியிருக்கிற நாம் திக்கற்றவர்கள் எளியவர்கள் சிறுமைப்பட்டவர்கள்மேல் இரக்கத்தையும் அன்பையும் காண்பிப்பதற்கும் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியோடே நடப்பதற்கும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

போதும் என்ற மனநிலை

தியானம்: 2017 நவம்பர் 29 புதன்; வேத வாசிப்பு: சங்கீதம் 106:1-15

“…உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே” (எபிரெயர் 13:5).

“நான் மனரம்மியமாய் இருக்கிறேன்” என்று நம்மால் உறுதியாய்ச் சொல்லமுடியுமா? இருப்பதுபோதும் என்ற மனநிலையில் வாழுகிறவர்கள் மிகவும் குறைவு. உலக வாழ்வில் இந்தத் திருப்தி கிடைப்பது அரிதுதான். ஆனால், கிறிஸ்துவுக்குள் மனநிறைவாய் வாழுவது கிடைத்தற்கரிய பெரிய பாக்கியம். அது நமக்கு ஆறுதல், சந்தோஷம், சமாதானம் என்று நிறைவான ஆசியை அது தரும். இருப்பதைவிட்டு, இல்லாததை நாடி, ‘போதாது’ என்ற மனதுடன் இருப்பது, நமது ஆத்துமாவை இளைக்கப்பண்ணும்.

எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் கானானை நோக்கிச் சென்ற வழிகளிலெல்லாம் கர்த்தர் அவர்களோடு கூடவேயிருந்து அவர்களைப் பாதுகாத்து, போஷித்து பராமரித்தார். அவர்களோ கர்த்தருக்கு விரோதமாகவும் மோசேக்கு விரோதமாகவும் அடிக்கடி முறுமுறுத்ததையே நாம் வாசிக்கிறோம். கர்த்தருடைய அற்புதக் கிரியைகளை வெகுசீக்கிரமாய் அவர்கள் மறந்துபோனார்கள். கர்த்தருடைய ஆலோசனைக்குக் காத்திராமல், வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, தேவனைப் பரீட்சை பார்த்தார்கள். அவர்களது முறுமுறுப்பை கேட்ட கர்த்தர், கேட்டதைக் கொடுத்தார். ஆனால் நடந்தது என்ன? “அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்” (சங்.106:15). கேட்டது கேட்டபடியே கிடைத்தது. ஆனால், ஆத்துமாவிலே திருப்தி இல்லையானால், கிடைத்தும் என்ன பயன்?

பவுலடியார், கல்வி செல்வம் எல்லாவற்றுடனும் கெளரவமாக வாழ்ந்த ஒருவர். ஆனால், அவர் கிறிஸ்துவுக்காகப் பிடிக்கப்பட்டு ஒரு புதிய வாழ்வை ஆரம்பித்தபின், அவரது வசதிகளும் வாய்ப்புகளும் அகன்றுபோயின. பலவகையான கஷ்டங்களுக் கூடாகக் கடந்து சென்றார். அதற்காக அவர் முறுமுறுத்ததாகவோ, இயேசுவினிமித்தம் எல்லாவற்றையும் இழக்க நேரிட்டதே என்று மன வருத்தப்பட்டதாகவோ இல்லை. எந்தப் பாதகமான நிலையிலும், போதும் என்ற மனநிலையோடு மனரம்மியமாகவே வாழ்ந்தார். தான் எதற்காகப் பிடிக்கப்பட்டாரோ, அந்த ஓட்டத்தை அவர் கடைசிவரைக்கும் எந்தக் காரணங்கொண்டும் நிறுத்தவில்லை. இப்போது நாம் இஸ்ரவேலரா? பவுலா? நாம் வேறு யாராயும் இருக்கவேண்டாம். நாம் நாமாகவே, நமது நிலையில் கிறிஸ்துவுக்குள் மனரம் மியமாய் வாழக் கற்றுக்கொள்வோமாக.

“என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்பியர் 4:13.).

ஜெபம்: ஆண்டவரே, மனரம்மியமாய் வாழ்ந்த பவுல் சொன்ன இந்த வார்த்தைகளை இன்று எங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளுகிறோம். எங்களை வழிநடத்தும். ஆமென்.