ஜெபக்குறிப்பு: 2018 ஜனவரி 1 திங்கள்

“உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” (ஏசா.41:13) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே இப்புதிய வருடத்திலும் நமது பயங்களைப் போக்கி அனுதினமும் அவரது வழிகளில் வழுவாதபடி நம்மை நடத்திட ஜெபிப்போம்.

தொடர்ந்து முன் செல்ல…

தியானம்: 2018 ஜனவரி 1 திங்கள்; வேத வாசிப்பு: சங்கீதம் 33:1-14

“அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்… என்றார்” (யாத்.33:14).

சத்தியவசன வாசகர்கள் அனைவருக்கும் எமது ஊழியத்தின் சார்பாகவும் ஊழியர்களின் சார்பாகவும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். தேவனுடைய சமாதானமும், கிருபையும், ஆசீர்வாதமும் நிறைவும் உங்கள் குடும்பங்களில் தங்க வேண்டுதல் செய்கிறோம் (ஆ-ர்).

புதிய வருடத்தின் முதல் நாளிலே, நேற்றும், இன்றும், என்றும் மாறாத நமது ஆண்டவரை துதித்துப் போற்றுவோமாக. கஷ்டங்களோ சந்தோஷங்களோ, தேவ கிருபையால், ஒரு வருடத்தைக் கடந்து, இன்னுமொரு புதிய வருடத்திற்குள் வந்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது, இந்தப் புதிய வருடத்தின் முதல் நாளே, நம்மை நன்றி உணர்வினால் நிரப்புகிறது. அதேசமயம், மலர்ந்திருக்கும் இப்புதிய வருடம் எப்படியாக அமையுமோ என்ற ஏக்கமும் நம் இருதயங்களை ஆட்கொள்ளத்தான் செய்கிறது. இன்பமும் துன்பமும் சுழல் சக்கரம் என்று கூறுவார்கள். இது உண்மையாயினும் இச்சுழல் சக்கரமானது சில வேளைகளில் தான் சந்திக்கும் இன்பத்தை மறைத்து துன்பத்திலேயே சிக்குண்டு ஸ்தம்பித்து விடுகின்றது.

இப்படிப்பட்ட ஸ்தம்பிதமான நிலையில் இஸ்ரவேல் ஜனங்கள் பலவித வேலைகளால் சிக்குண்டிருந்தார்கள். மோசேகூட அவர்களைத் தொடர்ந்தும் வழிநடத்த முடியாத நிலையை எதிர்கொண்டான். என்றாலும், முதலாவது, ஸ்தம்பித்த நிலைகளில் மோசே ஒருபோதும் நின்றுவிடவில்லை. “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்” என்ற தேவவாக்கை உறுதியோடு பற்றிக்கொண்டிருந்ததால், தொடர்ந்தும் இஸ்ரவேலை முன்நோக்கி நடத்திச் செல்ல முடிந்தது. அடுத்து, எப்போதும், தம்மை அடிமைத்தனத்திலிருந்து மீட்ட தேவனுடைய ஆலோசனையின்றி அவர் முன்செல்லவுமில்லை.

இன்று நமது வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் மாறிமாறி வந்தாலும், நாம் சுழன்றுகொண்டிருப்பவர்கள் அல்ல; நாம் மேல்நோக்கிச் செல்கிறவர்கள் என்பதை முதலாவது நாம் உணரவேண்டும். ஆகவே, சுழற்சிகள் நம்மைப் பாதித்திட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இல்லையேல், நமது பயணம் ஸ்தம்பித்து விடும். எந்தநிலையிலும் தொடர்ந்து முன்செல்ல, தேவன் தந்த வாக்குகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, அவரது வார்த்தையின் ஆலோசனையில் நிலைத்து நிற்போம். மலர்ந்திருக்கும் இப்புதிய வருடத்தில் நமக்கு முன்பாக என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால், “என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்” என்று வாக்களித்த தேவன் நமக்கு முன்னே செல்கிறார். அந்த நம்பிக்கையுடன் தைரியமாக முன்செல்வோமாக.

“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான்  உன் தேவன்” (ஏசாயா 41:10).

ஜெபம்: உமது சமுகத்தால் எங்களை வழிநடத்துகிற ஆண்டவரே, கடந்த ஆண்டிலே  எங்கெல்லாம் நான் தடைப்பட்டு நின்றிருந்திருந்தேனோ, அவற்றைச் சரிசெய்து, உமது ஆலோசனையுடனும், பெலத்துடனும் முன்செல்ல உமதருள் தாரும். ஆமென்.

அற்ப காரியங்கள்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2018)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி : 1 சாமுவேல் 17: 1-27
தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளை காவலாளி வசமாய் விட்டு,  ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள்  இருக்கிற இடத்திலே வந்தான் (1 சாமு. 17:20).

வாழ்வில் நாம் அடையும் பெரிய வெற்றிகளுக்கு சிறிய காரியங்கள் அடிப்படையாக அமையும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். சில நேரங்களில் சிறியவர்கள், சிறிய வேலைகள் மற்றும் சிறிய பொறுப்புகள் போன்றவை தேவனுடைய பார்வையில் பெரிய காரியங்கள் சாதிக்க வைக்கும்.

பெலிஸ்தர்கள் அடிக்கடி இஸ்ரவேலுக்கு விரோதமாகப் படையெடுத்து வந்தனர். பெலிஸ்தரின் தலைவனான கோலியாத் என்பவன் மாபெரும் உருவமுடைய அரக்கனாக இருந்தான். அவன் ஒருவேளை ஏனாக்கியரின் ஒரு குமாரனாக இருந்திருக்கலாம் (எண்.13:33, யோசுவா 11:22). எப்ரோனிலிருந்து யோசுவா விரட்டியிருந்த இராட்சதர்களான இவர்கள் பெலிஸ்தியரின் நடுவே அடைக்கலம் புகுந்திருக்கலாம். கோலியாத்துக்கு ஒப்பானவர் இஸ்ரவேலரில் ஒருவரும் இல்லை. எலியாப், அபினதாப், சம்மா என்னும் தன்னுடைய மூத்த சகோதரர்களின் நலம் விசாரிக்க யுத்தகளத்துக்கு வந்த தாவீதும் அவனுக்கு அற்பமானவன். தாவீதுக்குத் தரப்பட்ட பொறுப்பு மிகச்சிறியதே; தனது சகோதரர்களுக்கு ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், பத்து அப்பங்களையும், ஆயிரம் பேருக்கு அதிபதியானவனுக்குப் பத்துப் பால்கட்டிகளையும் எடுத்துக் கொண்டு யுத்தகளத்துக்குச் சென்றுவர வேண்டும். அந்த நாள் அவனுக்கு மிகச் சிறியதொரு வேலையில் ஆரம்பித்தது. ஆனால் அது இஸ்ரவேலரின் வரலாற்றில் ஒரு சிறந்த வெற்றியின் நாளாக அமைந்தது.

தனது தகப்பன் தனக்குக் கொடுத்த கட்டளையின்படியே “தாவீது அதி காலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டான்” (1சாமு.17:20). யுத்தகளத்துக்குச் சென்று தனது சகோதரர்களிடம் அவன் பேசிக்கொண்டிருக்கையில் இதோ பெலிஸ்திய வீரன் இஸ்ரவேலருக்கு எதிராக சவால்விட வந்துநின்றான். அவனுக்கு எதிராக நின்றிருந்த இஸ்ரவேலரின் சேனைகள் பயந்து நடுங்கினர். இஸ்ரவேலின் வீரர்களை ஸ்தம்பிக்கச் செய்த அச்சத்தைக் கண்ட தாவீது திகைத்து ஆச்சரியப்பட்டான். தனது நாடும் தேவனும் அவமானப்படுவதைக் காண விரும்பாத அவன், ஏன் கோலியாத்தை யாரும் எதிர்க்கவில்லை என்று விசாரித்தான். “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்த சேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்”. அதைக் கேட்ட அவனுடைய மூத்த சகோதரன் அவனை அமைதிப்படுத்த அங்கிருந்து அவனை அகற்றிவிட்டான். தங்களுக்கு அப்பங்களையும் பால்கட்டியையும் கொண்டுவந்தவன் இஸ்ரவேலின் கோழைத்தனத்தைப்பற்றி பேசக்கூ டாது என்று அவன் நினைத்தான்.

சிங்கத்தையும் கரடியையும் தாவீது கொன்றது அற்பமான காரியம் என்று அவனைச் சுற்றி நின்றவர்கள் அவனை அசட்டை செய்தனர். கோலியாத்தை எதிர்ப்பது மிகப் பெரிய ஒரு காரியம். தாவீது அவனை எதிர்க்க ஒத்துக்கொண்டாலும் அதற்குத் தேவையான யுத்த உடைகளை அணிந்துகொள்ள முடியாத சிறுவனாய் இருந்தான். அவன் எடுத்துக் கொண்ட ஆயுதமான கவணும் ஓர் அற்பமான கருவியே ஆகும். தாவீதைப் பொறுத்தவரை அனைத்தும், கோலியாத்தை வெல்லும் வாய்ப்பும் அற்பமானதே. ஆனால் நாம் யாவரும் அறிந்தபடி தாவீதின் தேவன் வெற்றி தருபவர். இஸ்ரவேலின் அற்பமான மேய்ப்பன் இராட்சதனான கோலியாத்தைக் கொன்றான். தேவன் பெரிய காரியங்களை நடப்பிக்க சிறிய காரியங்களை உபயோகிக்கிறார் என்று ஹோரஷியஸ் பனால் என்பவர் குறிப்பிடுகிறார்.

“பரிசுத்த வாழ்வு என்பது அநேக சிறிய காரியங்களால் உருவாகும். அப்.பவுல் அல்லது பரி.யோவான், டேவிட் பிரெய்னாட், ஹென்றி மார்டின் போன்றவர்களைப் போல பல வருடங்களில் சாதித்த காரியங்களை ஒரு மணித்துளியின் அற்பமான காரியங்களால் சாதிக்க முடியும். உண்மையான கிறிஸ்தவ வாழ்வுக்கு நீண்ட பிரசங்கங்களோ, சிறந்த உரைகளோ அற்புதங்களோ யுத்தங்களோ சாதனைகளோ இரத்த சாட்சிகளோ தேவையில்லை; சொற்ப வார்த்தைகள் போதுமானது. மின்னல்கள் அல்ல. தொடர்ச்சியான சூரியக் கதிர்களும், பெரிய ஓசையுடனும் வேகமாகப் பாய்ந்து ஓடும் நதிகளின் நீர் அல்ல; அமைதியான புத்துணர்ச்சியைத் தரும் சீலோவாம் குளத்தின் தண்ணீர் செய்யும் அருட்பணியே பரிசுத்த வாழ்வின் அடையாளம்” என்று அவர் எழுதியுள்ளார்.

தேவனுடைய ஊழியத்தில் அற்பமான மனிதர்கள், அற்பமான காரியங்கள், அற்பமான பொறுப்புகள் என்று எதுவும் கிடையாது. அப்பத்தையும் பால்கட்டியையும் எடுத்துச் செல்ல தேவன் கட்டளையிட்டதை நீங்கள் செய்யாவிடில் நிச்சயமாகத் தோற்றுவிடுவீர்கள். தாவீது மட்டும் அன்றையதினம் தனது வீட்டிலேயே இருந்திருந்தால் கோலியாத் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார்!


அதிகாலைப்பாடல்

தேவன் இருக்கும்போது குறைவும் நிறைவாகும்!
செல்வத்தையோ புகழையோ அடைய முயற்சிக்காதீர்;
ஜெயகிறிஸ்துவின் நாமத்தில் செல்லும்பொழுது;
ஜெயக்கிரீடத்தை நீங்கள் பெறுவது நிச்சயம்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (ஜனவரி-பிப்ரவரி 2018)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்

தமிழ் வேதாகமத்தின் வரலாறு

(6) புதிய மொழிபெயர்ப்பு

மோனஹன் குழுவினரது மொழிபெயர்ப்புப்பணி காரணமாக 1942-ல் புதிய ஏற்பாடு வெளிவந்தது. இது நெஸ்லே என்பவர் தயாரித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிருந்தது. இப் பிரதியில், ஆரம்பத்தில் அப்போஸ்தலர்கள் எழுதியவை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதேசமயம் லார்சன், பெப்ரீஷியஸ் ஹென்றி பவர் என்போருடைய தமிழ் மொழிபெயர்ப்புகளையும், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப்பார்த்து மோனஹன் குழுவினர் தமது பணியைச் செய்தனர். இவர்கள் தமது மொழி பெயர்ப்பு சாதாரண கிராமவாசிக்கும் விளங்கக்கூடிய வண்ணம் இலகுவான மொழியில் இருக்கவேண்டும் என்பதிலும், கிறிஸ்தவர்கள் அதுவரை காலமும் உபயோகித்துப் பழகிய வார்த்தைகளை மாற்றக்கூடாது என்பதிலும் அதிக அக்கறையுடையவர்களாக இருந்தனர்.

அதேசமயம், முழுமுதற் கடவுளுக்குத் தேவன் எனும் பதத்தைவிட கடவுள் என்ற பதமே சரியானது என்பதனால், அதையே மோனஹன் குழுவினர் உபயோகித்தனர். மொழிபெயர்ப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போது அதற்கெதிராகச் சிலர் தமது கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதனால், இவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் இக்குழுவினர் இருந்தனர். புதிய மொழிபெயர்ப்புக்கெதிராகச் சொல்லப்பட்ட கருத்துக்களும், அதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் அளித்த பதில்களும் இந்தியக் கிறிஸ்தவ தேசாபிமானி எனும் பெயர் கொண்ட ஆங்கிலப் பத்திரிகையில் வெளியிடப்பட்டன. புதிய மொழிபெயர்ப்பு, 1611ஆம் ஆண்டில் வெளி வந்த ஜேம்ஸ் அரசனது பதிப்பு வேதாகமம் உபயோகித்த கிரேக்கப் பிரதியை அடிப்படையாய்க் கொண்டிராதமையினால், அது சரியான மொழிபெயர்ப்பல்ல என்பதே இம்மொழிபெயர்ப்புக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டாகும். மொழிபெயர்ப்புக் குழுவினர், அக்கிரேக்கப் பிரதியைவிட அதற்கும் முன்பிருந்த கிரேக்கப் பிரதிகளே நம்பகமானவை என்பதைச் சுட்டிக்காட்டி வந்தனர்.

1949 இல், மோனஹன் குழுவினரது பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வெளி வந்தது. 1954 இல் புதிய ஏற்பாடு திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. லார்சன் மொழிபெயர்ப்புக்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பு மோனஹன் மொழிபெயர்ப்புக்கு ஏற்படாத போதிலும், மக்கள் தொடர்ந்தும் ஹென்றி பவரின் திருத்தப்பட்ட ஐக்கிய பதிப்பையே உபயோகித்து வந்தனர். மொழிபெயர்ப்புகளுக்கிடையே இருக்கும் வித்தியாசங்கள் குறைவாகவே இருக்கின்றபோதிலும், மக்கள் தாம் உபயோகித்துப் பழகிய மொழிபெயர்ப்பிலேயே திருப்தியடைந்து விட்டனர். அவர்கள் மூலமொழியின் சரியான அர்த்தத்தைத் தரும் ஒரு மொழி பெயர்ப்பு அவசியம் என்பதை உணரவில்லை. மோனஹன் குழுவினர் அதிக கவனத்துடன் தமது மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்தபோதிலும், அவர்களுடைய வேதாகமத்தில் ஆங்காங்கே சில அச்சுப்பிழைகளும், வேறுவகையான பிழைகளும் இருந்தன. எனவே, அவற்றைத் திருத்துவதற்கு 1961இல் ராஜரீகம் என்பவரது தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாடும் சங்கீதங்களும் 1979இல் வெளிவந்தன. இது இலக்கணப் பிழைகள் அற்றதாகவும், எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் சிறிய வசனங்களைக் கொண்டதாகவும் இருந்தது. மேலும், வடமொழிச் சொற்கள் நீக்கப்பட்டு தனித் தமிழில் இம்மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. இதுவும் பெரும்பாலான கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆரம்பகால ரோமன் கத்தோலிக்க மிஷனரிகள் ஒருசில வேதப் பகுதிகளை மட்டுமே தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். 1857ஆம் ஆண்டே ரோமன் கத்தோலிக்கச் சபையினரால் மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பாண்டிச்சேரியில் வெளிவந்தது. இது, வெளிநாட்டு மிஷன்களுக்கான பாரீஸ் சங்கத்தைச் சேர்ந்த மிஷனரிகளினால் மொழிபெயர்க்கப்பட்டது. 1890இல், இயேசு சங்கத்தைச் சேர்ந்த ஜே.பி.டிரின்சல் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு வெளிவந்தது. 1904ஆம் ஆண்டு பாண்டிச்சேரியிலிருந்த ரோமன் கத்தோலிக்க மிஷன் அச்சகத்தில் பழைய ஏற்பாடு தமிழில் பிரசுரிக்கப்பட்டது. 1960 இல், முழு வேதாகமமும் ஒன்றாக வெளியிடப்பட்டது. 1970 இல், இக்கால மொழி நடைக்கு ஏற்றவிதமாக ரோமன் கத்தோலிக்கச் சபையினர் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.

1974இல், இந்திய வேதாகமச் சங்கம், ரோம சபையுடன் இணைந்து பழைய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணியை ஆரம்பித்தது. 1977இல் இந்திய சுவிசேஷ ஊழிய நூல் நிலையத்தினர் “ஜீவனுள்ள மீட்பின் செய்தி – ஒரு தெளிவுரை” எனும் தலைப்பில் புதிய ஏற்பாட்டின் இலகு மொழிநடையிலான மொழிபெயர்ப்பை வெளியிட்டனர். இது, ஆங்கிலத்தில் வெளிவந்த லிவிங் பைபிள் எனும் வேதாகமத்தின் தமிழாக்கமாகும். இம்மொழிபெயர்ப்பு இலங்கைத் தமிழர்க்கு ஏற்றதல்ல எனக்கருதிய இலங்கையிலுள்ள லிவிங் பைபிள் ஸ்தாபனத்தினர் லிவிங் பைபிளை மறுபடியுமாக மொழிபெயர்த்து 1981இல் ‘வாழும் இறைவாக்கு’ எனும் பெயரில் வெளியிட்டுள்ளனர்.

இக்காலத் தமிழ் நடையில் வேதாகமம் இருந்தாலேயே மக்களால் தேவனுடைய வார்த்தையை இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும் எனும் எண்ணத்தில் புதிய மொழி பெயர்ப்புகள் வெளிவந்தாலும், பெரும்பாலான தமிழ்க் கிறிஸ்தவர்கள் ஹென்றி பவரின் திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பையே இன்றுவரை உபயோகித்து வருகின்றனர்.

(முற்றிற்று)

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி-பிப்ரவரி 2018)

|1|
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை யாவரும் படித்து வருகிறோம். மிகவும் ஆறுதலாக இருக்கிறது. பலவிதமான சூழ்நிலையில் இருக்கும்போது தியானபகுதி மூலம் பெலனடைகிறோம். ஆறுதலாகவும் இருக்கிறது. எங்களது விசுவாச பாதையிலும் ஆவிக்குரிய ஜீவியத்திலும் நிலைத்து நிற்கவும் எங்களுக்காக ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன்.

Mrs.M.V.Samuel, Nellikuppam


|2|
தங்களின் அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழை பெற்றுவருகிறேன். தினமும் வேதத்தை கருத்தோடு படிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

Mr.D.Prabudoss, C/o 99 APO


|3|
அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை அனைத்தும் தொடர்ந்து வருகின்றன, மிகுந்த ஆசீர்வாதமாக பிரயோஜனமாக உள்ளது. மிக்க நன்றி. வானொலி செய்தியும் தவறாது கேட்டு வருகிறேன். நன்றாக உள்ளது.

Mrs.S.Gandhiraj, Chengalpattu.


|4|
நான் கடந்த அநேக ஆண்டுகளாக சத்தியவசன பங்காளராக உள்ளேன். எப்போதும் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்க மறக்கமாட்டேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் வேதாகமப் பகுதிகளை அதிகாலை வேளையில் வாசிப்பதோடு மாலை வேளைகளிலும் வாசித்து தியானித்து திருப்தி அடைகிறேன். செப்டம்பர் மாத தியானங்கள் மிகமிக நேர்த்தியான ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. விசுவாசத்தில் இன்னும் உறுதியாய் நிலைத்து வளர்வதோடு இனமறியாதொரு மனநிம்மதியையும் திருப்தியையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. சத்தியவசன ஊழியங்களையும் ஊழியர்களையும் இந்தக் கடைசி காலங்களிலே கர்த்தர் அபரிமிதமாக ஆசீர்வதித்து வளர்ச்சியடையச் செய்ய ஜெபிக்கிறேன்.

Mrs.Chandrabaipaul, Chennai.


|5|
தங்களின் அனுதினமும் கிறிஸ்துவுடன் தினமும் படிக்கிறேன். ஜெபக் குறிப்புகளுக்காக ஜெபிக்கிறேன். காலையில் மொபைலில் அனுப்பும் வசனங்களை வாசித்து பயனடைகிறேன். தினமும சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mr.Ruban Immanuel, Chennai.

page 1 of 2