ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 30 ஞாயிறு

“பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்” (சங்.22:27). அகில உலகமெங்கும் நடைபெறும் ஆராதனைகளுக்காகவும் ஆராதனையில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் புத்தியுள்ள ஆராதனை செயயும் வண்ணமாக தங்கள் சரீரங்களை தேவனிடத்தில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கவும் மன்றாடுவோம்.

ஜெயங்கொள்வேனா?

தியானம்: 2020 ஆகஸ்ட் 30 ஞாயிறு | வேத வாசிப்பு: வெளி.3:18-22

“உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன் (வச.18). மனந்திரும்பு (வச.19). ஜெயங்கொள்ளுகிறவனெவனோ என்னோடேகூட உட்காரும்படி… (வச.21)

“ஆலோசனை, புத்திமதி நான் சொல்லலாம். ஆனால், அதன்படி நடப்பதா இல்லையா என்பதை நீதான் தீர்மானிக்கவேண்டும்” என்று தகப்பன் சொல்லக் கேட்ட மகன், “அப்பா, நான் உங்களைப்போலவே இருக்க ஆசைப்படுகிறேன்” என தகப்பன் மார்பிலே சாய்ந்தான். நல்லதும் சரியானதும், நாம் ஜெயம் பெறத்தக்கதுமான ஆலொசனைகள் நமக்கு ஏராளமாகவே கிடைக்கிறது. ஆனால், நாமேதானே தீர்மானிக்க வேண்டும்!

“ஆலோசனைக் கர்த்தர்” சபைக்கு ஆலோசனை தருபவர். ஆண்டவர் வாசலில் நிற்கிறார், தம்முடன் அவர் இல்லை என்பதைக்கூட உணரமுடியாமல், போலி திருப்தியில் இருக்கிற சபையின் உள்ளான நிர்ப்பாக்கியத்தை உணர்த்திய ஆண்டவர், அதைச் சரிப்படுத்துவதற்குரிய வழிகளையும் காட்டுகிறார். உன் பொன்னிலே, உன் ஐசுவரியத்திலே நீ திருப்தியாயிருக்கிறாய்; ஆனால், பொன்னும் வெள்ளியும் என்னுடையது. அது எப்போதும் உன்னிடத்தில் நிலைக்காது. நீ என்னிடத்தில் வா, என்றைக்கும் மாறாத மங்காத புடமிடப்பட்ட பொன்னை நான் உனக்குத் தருகிறேன் என்கிறார் ஆண்டவர். புடமிடப்பட்ட விசுவாசம், மாசற்ற திவ்விய சுபாவம் தேவனிடமே உண்டு. அடுத்ததாக, தங்கள் உற்பத்தி ஆடையில் பெருமை கொண்டிருக்கிறவர்களைப் பார்த்து கர்த்தர் கூறுகிறார்: நாளை இது பொட்டரித்துப்போம்; அழிந்துபோம். என்றும் அழியாத என் நீதியின் ஆடையை அந்த வெண்வஸ்திரத்தை என்னிடம் பெற்றுக்கொள் என அழைக்கிறார். மேலும், கண்களுக்கு மருந்துபோடும் உன் கண்களுக்கு யார் கலிக்கம் போடுவது என ஆண்டவர் கேட்கிறார். தேவன் காணும்விதமாக நாம் காணவேண்டுமானால், அவர் நமது கண்களை ஆளவேண்டும். அப்போதுதான் நமது நிர்வாணமும், அவலட்சணமும் நமக்கு தெரியும். மனந்திரும்பவேண்டிய அவசியத்தை உணரமுடியும்.

நமது பெருமைகளைக் குப்பையாக எறிந்துவிட்டு நம்மை தாழ்த்தி, கிறிஸ்துவின் நீதியின் ஆடையைப் பெற்றுக்கொள்ள மனந்திரும்புவோம். தேவ பார்வையுடன் நமது பார்வையை இணைத்து, உலகத்தாலும் சத்துருவாலும் வருகின்ற சோதனைகளை பரிசுத்தாவியானவரின் பெலத்தால் ஜெயிப்போமாக. அப்போது ஜெயங்கொண்டு, தேவராஜ்யத்தின் பிள்ளைகளாக நாம் பிதாவின் சந்நிதானத்தில் தலைநிமிர்ந்து நிற்கலாமே! இதைவிட்டு, மனம்போனபடி வாழ்ந்துகொண்டு, நான் கிறிஸ்துவுடன் என்றும் இருப்பேன் என்று எப்படி கனவு காணமுடியும்? நம்மை ஆராய்ந்து பார்க்கும்படிக்கு தேவ ஆவியானவர் கரங்களில் நம்மை விட்டுவிடுவோமாக. நித்தியத்தை நாமும், பிறரும் இழந்து விடாதபடிக்கு எழுந்து பணி செய்வோமாக. வாசலில் நிறுத்தாமல், நமக்குள்ளே ஆண்டவர் ஆட்சி செய்ய வரவழைப்போமாக.

ஜெபம்: ராஜரீகம் பண்ணும் தேவனே, நீர் எங்களில் வாசம் பண்ணி ஆட்சி செய்யும்படியாக எங்களது ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஒப்புக்கொடுக்கிறோம். ஆமென்.