ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 28 ஞாயிறு
இம்மாதத்தின் இறுதிநாளாகிய பரிசுத்த ஓய்வு நாள் ஆராதனையிலே கர்த்தர் செய்த எல்லா உபகாரங்களையும் நினைத்து இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம் (சங்.116:13). இம்மாதத்தில் நாம் ஏறெடுத்த எல்லா விண்ணப்பங்களின் சத்தத்துக்கு கர்த்தர் செவி கொடுத்தபடியாலும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரபலிகளை ஏறெடுப்போம்.
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்.7:11) .
ஓய்வுநாள்
தியானம்: 2021 பிப்ரவரி 28 ஞாயிறு | வேத வாசிப்பு: ஏசாயா 58:9-14
என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே … உன் வழிகளின் படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும்… (ஏசா.58:13).
வழிப்போக்கன் ஒருவன் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு மனிதன் அவனிடம் வந்து, தனக்கு மிகவும் பசிக்கிறது என்றும், ஏதாவது இருந்தால் தரும்படியும் கேட்டுக்கொண்டான். அந்த வழிப்போக்கன் தன்னிடம் ஏழு பிஸ்கட்டுக்கள் இருக்கின்றன என்றும், தனது பசியைப் போக்க அதில் ஒன்றைத் தான் எடுத்துக்கொள்வதாகக் கூறி, மீதி ஆறையும் அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். சிறிது நேரத்தில் அந்த மனிதன் வழிப்போக்கனைத் துரத்திச்சென்று, அந்த ஒரு பிஸ்கட்டையும் பறித்துச் சென்று விட்டான். இக்கதையை வாசிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? அந்த மனிதன் நன்றி கெட்டவன் என்று திட்டித்தீர்க்கிறீர்களா? அப்படியானால் அந்த மனிதன் வேறுயாருமல்ல, நாமேதான்.
ஆண்டவர், ஆறு நாட்களை நமக்காகவே தந்திருக்க, அவருடைய ஓய்வு நாளையும் தட்டிப்பறிக்க எண்ணுகிறது எப்படி? விரைந்தோடும் இன்றைய கால கட்டத்தில் வேலைக்குச் சென்று ஆறு நாளும் களைத்துப்போகும் பெரியவர்களும், பாடசாலை என்றும் ஸ்பெஷல் வகுப்பு என்றும் புத்தகப் பையைச் சுமந்து செல்லும் சிறுவர்களும், ஞாயிற்றுக் கிழமையில் ஓய்ந்திருந்து கட்டிலில் புரளத்தான் விரும்புகின்றனர். ஞாயிறு காலையில் எழுந்து ஆலயம் புறப்படுவதென்றால் ஏன்தான் கிறிஸ்தவர்களாகப் பிறந்தோமோ என்று எண்ணுவோரும் உண்டு.
ஞாயிறு என்பது வாரத்தின் இறுதி நாள் கிடையாது; அது வாரத்தின் முதலாம் நாள். அந்த நாளில் ஆண்டவரின் பாதத்தில் நாம் காத்திருந்து அவரது ஆசியோடும் வழிநடத்துதலோடும் அந்த வாரத்தை ஆரம்பிக்கும்போது அந்த வாரம் முழவதுமே நமக்கு ஆசீர்வாதமாக அமைகிறது என்பதை ஏன் நாம் சிந்திப்பதில்லை! அன்று ஏழாம் நாள் ஓய்வு நாள்; கர்த்தர் தமது பிள்ளைகளுடன் உறவாடவென்று வேறுபிரித்த நாள். அதைப் பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி கட்டளையிட்டார் கர்த்தர். இன்று கர்த்தர் உயிர்த்தெழுந்த வாரத்தின் முதல் நாள், நமக்குப் பரிசுத்த நாள். கிறிஸ்து வெற்றி சிறந்த அந்த நாளை அவருக்காய் வேறுபிரித்து அவருடன் உறவாடி மகிழும்போது, அதுவே தேவனுக்கும் பிரியம், நமக்கும் ஆசீர்வாதம். வாரத்தின் முதல் நாளைத் தேவனோடு ஆரம்பிக்கும் போது நிச்சயமாகவே அந்த வாரம் முழுவதும் நமக்கு ஆசீர்வாதமாக அமையும். பிரச்சனைகள் பிணக்குகள் வந்தாலும் கர்த்தர் நம்முடன் கூடவே வருவதை நாம் அனுபவிக்கலாம். ஆகவே இதை ஒரு முக்கிய தீர்மானமாக எடுத்து, அதைக் கடைப்பிடிக்க நாம் ஏன் முன்வரக்கூடாது? சிந்திப்போம்.
ஆறு நாளும் வேலை செய்யலாம் ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது (யாத்தி. 31:15).
ஜெபம்: துதிக்குப் பாத்திரராகிய கர்த்தாவே, ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிப்பதற்கும் அந்த நாளில் கர்த்தரை விட்ட விலகப்பண்ணுகிற வேறெந்த காரியங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்காதபடி உம்மை கனப்படுத்த எங்களுக்குக் கிருபை செய்யும். இயேசுவின் நாமத்தில் பிதாவே. ஆமென்.
வாக்குத்தத்தம்: 2021 பிப்ரவரி 27 சனி
ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (ரோம.8:26).
எண்ணாகமம் 10,11 ; மாற்கு 6:32-56
ஜெபக்குறிப்பு: 2021 பிப்ரவரி 27 சனி
உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் (யாத்.33:12) அனைத்து நாடுகளிலுள்ள Back To the Bible ஊழியர்கள், சத்தியவசன ஊழியர்கள் யாவரது நல்ல சுகத்திற்காக, அவர்களது குடும்பங்களின் தேவைகளுக்காக, தேவ ஊழியத்தை தேவ பெலத்தோடு செய்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.
பாவமன்னிப்பின் ஜெபம்!
தியானம்: 2021 பிப்ரவரி 27 சனி | வேத வாசிப்பு: மத்தேயு 6:7-15
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார் (மத்.6:14).
பக்கத்து வீட்டுக்காரரோடு சண்டையிட்டுவிட்டு, “ஆண்டவரே, எனக்கு அநியாயம் செய்த எனது பக்கத்து வீட்டுக்காரனை நீர்தாமே தண்டியும்” என்று ஜெபிப்பது சரியா? இது தேவனுக்குகந்த ஒரு ஜெபமாக இருக்குமா? நமது ஜெபங்கள் அர்த்தமுள்ளதாய் இருக்கவேண்டும் என்றே தேவன் விரும்புகிறார். ஆனால் இன்று நாம் கவர்ச்சிகரமான ஜெபங்களையும், சத்தமான ஆரவார ஜெபங்களையும், வாக்குத் தத்தங்களையும், தீர்க்க தரிசனங்களையும் தேடி ஓடிக் கொண்டிருப்பது எப்படி?
இன்றைய தியானப்பகுதி ஜெபத்தைக் குறித்துப் பேசுகிறது. அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை ஜெபத்தில் அலப்பவேண்டாம் என்று ஆண்டவர் எச்சரிக்கிறார். மாதிரி ஜெபத்தையும் ஆண்டவர் சொல்லிக்கொடுக்கிறார். அது மாத்திரமல்ல, அந்த ஜெபத்தில், எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் என்று சொல்லிக்கொடுத்த ஆண்டவர், தொடர்ந்து வரும் வசனங்களில், ‘நீங்கள் மற்றவர்களின் தப்பிதங்களை மன்னித்தால், பரமபிதா உங்கள் தப்பிதங்களை மன்னிப்பார்; நீங்கள் மன்னியாமற்போனால் அவரும் உங்களுக்கு மன்னிக்கமாட்டார்’ என்று போதிப்பதைக் காண்கிறோம். ஆகவே, நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமேயாகில் நாம் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்க தயாராக இருக்கவேண்டும் என்பது தெளிவாகப் புலப்படுகிறதல்லவா!
ஜெபத்துக்கும், தேவனுடைய வார்த்தைக்கும் எவ்வளவு நெருங்கிய தொடர்புண்டு என்பதைச் சிந்தியுங்கள். நமது ஜெபம் கேட்கப்படவேண்டுமேயானால் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுகிறவர்களாய் நாமிருக்கவேண்டும். நாம் நமது இஷ்டம்போல் வாழ்ந்துவிட்டு, தேவவார்த்தைக்கு நம் வாழ்வில் இடமளிக்காமல் விட்டுவிட்டு நமது ஜெபங்கள் கேட்கப்படவில்லையே என்று குறை சொல்வதில் பிரயோஜனமில்லை. அதைத்தான் இயேசு தெளிவாக இங்கே ஜெபத்தைப் பற்றிச் சொல்லுகிறார். ஆகவே, நாம் என்ன ஜெபிக்கிறோம்; நமது ஜெபம் தேவசித்தத்துக்கு, அதாவது தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதான ஜெபமாக அமைந்துள்ளதா என்பதையெல்லாம் நாம் நிதானித்து அறிந்துகொள்வது நல்லது. “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ அது உங்களுக்கு செய்யப்படும்” என்று ஆண்டவர் இயேசு சொன்னதை நாம் தியானித்துப் பார்த்ததுண்டா?
“வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது” (நீதிமொழிகள் 28:9).
ஜெபம்: மிகுந்த மனதுருக்கமுள்ளவரே, எங்கள் ஜெபங்கள் வீண் வார்த்தைகளால் அலப்புண்டாக்குகிற வார்த்தைகளாகவும் கடமைக்காக ஜெபிக்கிறவர்களாக இராமல் வேத வசனங்களுக்குக் கீழ்ப்படிகிறதான ஜெபமாக இருக்க எங்களை ஒப்புவிக்கிறோம். ஆமென்.