ஜெபக்குறிப்பு: 2022 ஆகஸ்ட் 30 செவ்வாய்
… அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன் (ஏசா.65:24) என்ற வாக்குப்படியே சகலவற்றையும் கேட்டு கவனித்திருக்கிற ஆண்டவர் பலவிதமானத் தேவைகளோடு, எதிர்பார்ப்புகளோடு நீண்ட நாட்களாக ஜெபித்துவருகிற தம்முடைய ஜனத்திற்கு கர்த்தர் மனஉருக்கமாய் இரங்கி அவர்களது தேவைகளைச் சந்தித்திட மனவேண்டுதல்களை நிறைவேற்றிட ஜெபிப்போம்.
பயமுறுத்தலா? பயப்படாதே!
தியானம்: 2022 ஆகஸ்ட் 30 செவ்வாய் | வேத வாசிப்பு: தானியேல் 3:13-26

நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன், …. விடுவிக்காமற் போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை … (தானியேல் 3:17,18).
இரட்சிப்பின் நற்செய்தியானது உலகெங்கும் அறிவிக்கப்படவேண்டும் என்பது தேவகட்டளை. அந்த நற்செய்தியை அறிவிக்கிறவர்களும், ஏற்றுக்கொள்கிறவர்களும் இன்றும் பல இன்னல்களையும் துன்பங்களையும், சிலசமயம் மரணத்தைக் கூட சந்திக்கவேண்டியதிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். தேவனுக்காக வைராக்கியமாக இருப்பதை இந்த உலகம் ஏற்காது.
அன்று தானியேலின் காலத்தில் நடந்ததும் அதுதான். நேபுகாத்நேச்சார் அறுபது முழ உயரமும், ஆறு முழ அகலமுமான பொற்சிலையைப் பண்ணுவித்து தூரா என்னும் சமபூமியிலே அதை நிறுத்தி, எல்லா மக்களும் அதைப் பணிந்து வணங்கவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். ஆனால், பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படியாக ராஜாவினால் ஏற்படுத்தப்பட்ட சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற யூதர்கள் அந்தச் சிலையை விழுந்து வணங்கவில்லை. இது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. ராஜா அவர்களை மறுபடியும் விசாரித்து, மீண்டும் தருணம் கொடுத்தான். மேலும் அவர்கள் சிலையை வணங்காவிட்டால் அவர்கள் எரிகிற அக்கினிக்குள் போடப்படுவார்கள் என்றும் பயமுறுத்தினான். அப்போது அவர்கள் கூறிய பதில்தான் இன்றைய தியான வசனம். இதன் விளைவாக அவர்கள் எரிகிற அக்கினிக்குள் போடப்பட்டார்கள். ஆனால், அவர்களோடு நான்காவது மனுஷனாக தேவசாயலுள்ள ஒருவரும் அக்கினிக்குள் உலா வருவதை ராஜா கண்டு ஆச்சரியப்பட்டான். அக்கினி அவர் களை எதுவுமே செய்யவில்லை. இதைக் கண்ட ராஜா, அவர்களை வெளியே அழைத்து, அவர்களுடைய தேவனே உண்மையுள்ள தேவன் என்று அறிக்கை செய்தான்.
தேவபிள்ளையே! கிறிஸ்துவுக்காய் நாம் நிற்கும்போது இந்த உலகம் நம்மை அழித்துப்போட வகைபார்க்கும்; அதைத் தவிர்க்கமுடியாது. குடும்பத்தில், சமுதாயத்தில், அரசாட்சியில், எப்பக்கத்திலிருந்தும் பயமுறுத்தல் வரத்தான் செய்யும். அதற்காகப் பயப்படவேண்டிய அவசியமில்லை. நாம் ஆராதிக்கிறவரும், சேவிக்கிறவருமான தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், எரிகிற அக்கினியிலிருந்து தமது பிள்ளைகளை சாட்சியாக மீட்டவர், இன்று நம்மைக் கைவிடுவாரா? வாழ்வோ, சாவோ எதுவுமே அவருக்குச் சாட்சியாக வாழும் வாழ்விலிருந்து நம்மை வீழ்த்திப்போட இடமளிக்கக்கூடாது. ஆகவே, தேவனுக்காக வாழ்வதிலோ, நற்செய்தியை எடுத்துக் கூறுவதிலோ ஒருபோதும் பின்வாங்கிவிடாத படி, தேவபெலத்தை நாடி ஜெபிப்போமாக. அக்கினி போன்ற சோதனையிலும் நம்மோடு இருப்பவர் ஆண்டவர்! மரண நேரத்திலும் அவரே நமக்கு அருகில் நிற்பார்!!
ஜெபம்: அன்பின் பிதாவே, எந்தப் பயமுறுத்தல் வந்தாலும், உமக்காக வாழவும் நற்செய்தியை அறிவிப்பதில் பின்வாங்காதிருக்கவும் உமது பெலன் தாரும். ஆமென்.