ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 31 செவ்வாய்
கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டு வந்ததற்கு நான் எம்மாத்திரம்? (2சாமு.7:18) இதுவரை நம்மை நேர்வழியாய் நீதியின் பாதையில் வழுவாத படி கண்ணின் கருவிழியைப் போல உறங்காமல் தூங்காமல் பாதுகாத்த கர்த்தருடைய அதிசயமான வல்லமைகளை கிருபைளையும் எண்ணி மனதார ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.
உம் நினைவும் என் நினைவும்!
தியானம்: 2023 ஜனவரி 31 செவ்வாய் | வேத வாசிப்பு: அப்போஸ்தலர்; 16:6-12; 22-34

… ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார் (அப்போஸ்தலர் 16:7).
“தூசியிலிருந்து என்னைத் தூக்கியெடுத்த ஆண்டவருக்காக ஏழைகள் மத்தியிலேயே சேவை செய்வேன் என்று பொருத்தனை செய்துதான் நான் மருத்துவத்துறையிலே இறங்கினேன். ஆனால் இன்று நான் இருக்கும் இடத்திலும் சூழ்நிலை நன்றாக இல்லை; அதேசமயம் பெற்றோர் வேறு வழியிலே இறங்கும்படி வற்புறுத்துகிறார்கள். நான் என்ன செய்ய?” இது ஒரு வாலிபப் பெண்ணின் குழப்பமான நிலைமை. தேவனுக்கென்று நல்ல காரியங்களைச் செய்ய முன்வரும்போதும் சோதனைகள் வரத்தான் செய்யும்.
ஆசியாவிலே வசனத்தைச் சொல்லத்தான் பவுலும் சீலாவும் புறப்பட்டனர். ஆனால் ஆவியானவர் தடைபண்ணினார். பின்னர் பித்தினியா நாட்டுக்குப் போக எத்தனித்தார்கள். இரண்டாம் தடவையும் ஆவியானவரே தடைசெய்தார். எங்கே போவதென்று பவுலே வியந்திருப்பார். ஆனால் பவுலுக்குத் திட்டவட்டமான தரிசனம் கிடைத்தது. அதன்படி பிலிப்பி பட்டணத்துக்குப் போனார்கள். ஆவியானவர் வழிநடத்தினார் என்பதற்காக அங்கு மாலையும் மரியாதையுமா கிடைத்தது? இல்லை, தொழுமரம்தான் கிடைத்தது. அதற்காக பவுல், “ஆண்டவரே இதுதானா உமது வழிநடத்துதல்” என்று முறுமுறுக்கவில்லை. பதிலுக்கு பாட்டுப் பாடினார்கள். இதனால் ஒரு குடும்பமே தேவனிடத்தில் திரும்பியது.
தேவபிள்ளையே, பவுலுக்கோ திட்டவட்டமான தரிசனம் கிடைத்தது. ஆனால் நான் என்ன செய்ய என்று நீ குழம்பலாம். குழம்பாதே! உன் காரியத்தைத் தேவகரத்தில் ஒப்புக்கொடுத்து முற்றிலுமாக அவரிடத்தில் சரணடைந்து விடு. அப்போது, நீ எடுத்துவைக்கும் அடியோ, நீ போகின்ற பாதையோ தவறானால் நிச்சயம் தேவன் உன்னைத் தடுத்து ஆட்கொள்வார். உன் விருப்பத்திற்கு மாறாக பல காரியங்கள் நடந்தாலும் பதறாதே. முன்னேறிச் செல். அந்த இடத்திலும் ஏதோவொன்றை தேவன் உனக்காக ஆயத்தம் செய்து வைத்திருப்பார். நீ நினைத்த வழியிலும் அந்த வழி கடினமானதும் பாடுகள் நிறைந்ததாக வும் இருந்தாலும்கூட பொறுமையாக ஓடு. முடிவில் அந்த வழி வித்தியாசமானதும் மேன்மையானதுமாக இருப்பதைக் காண்பாய். நீ நினைத்த பலனிலும் அதிக பலனைக் காண்பாய். ஏன் தெரியுமா? நீ தேவகரத்தில் இருக்கிறாயே! அவர் உன்னைக் காண்கிறவர்.
ஆகையால், நீ உன் ஜெபத்தை மாற்றிக்கொள். கர்த்தாவே உமது நினைவும் வழியும் என்னுடைய மாதிரி இல்லை. ஆகவே, இன்றிலிருந்து உமது நினைவை என் நினைவிலும், உமது வழியை என் வழியிலும்வையும் என்று ஜெபி. அப்போது எப்படி உன் தெரிந்தெடுப்பு தவறிப்போகக் கூடும்?
ஜெபம்: எங்களை உள்ளங்கையில் வரைந்திருக்கிற ஆண்டவரே, இன்றிலிருந்து நீர் நினைப்பதையே நானும் நினைக்க உமது நடத்துதலை உணர என்னை நீரே வழிநடத் தியருளும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2023 ஜனவரி 30 திங்கள்
அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார் (ஏசா.19:22).
வேதவாசிப்பு: யாத்திராகமம் 20-21 | மாலை: மத்தேயு 21:28-46
ஜெபக்குறிப்பு: 2023 ஜனவரி 30 திங்கள்
இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் (ஏசா.6:8) இவ்வித அர்ப்பணிப்போடு மிஷனெரிபணிக்கு சென்றுள்ள ஒவ்வொருவரையும் கர்த்தர் வரங்களினால் நிரப்பி வல்லமையாய் பயன்படுத்தவும், அனைத்து மிஷனெரி ஸ்தாபனங்களுக்காகவும், இப்பணிகளை ஆதரிக்கும் அனைத்து விசுவாசக் குடும்பங்களையும் கர்த்தர் அளவில்லாமல் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.
சரியான சுதந்திரம்
தியானம்: 2023 ஜனவரி 30 திங்கள் | வேத வாசிப்பு: 1கொரிந்தியர் 10:14-24

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது (1கொரி. 10:23).
நமது வாழ்வில் ஏற்படும் தாக்கங்களுக்கு, நமது தெரிந்தெடுப்புகளே காரணம் என்பதையும், நல்ல தெரிந்தெடுப்புகளைச் செய்தவர்கள் தேவநாம மகிமைக்காகவே ஜீவித்தார்கள் என்பதையும் சிந்தித்தோம். அப்படியிருந்தும் நமது அன்றாட வாழ்விலே தெரிந்தெடுக்கவேண்டிய தருணங்கள் ஏற்படும்போது நாம் தடுமாறுவது ஏன்? நாம் சுயாதீனர். நமக்குப் பிரியமானதைத் தெரிந்தெடுக்கும் உரிமை நமக்குண்டு. சுயாதீனம் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடையாளம். பாவத்திலிருந்து நமக்கு விடுதலை உண்டு. தேவன் அருளும் எல்லாவற்றையும் அனுபவிக்கவும் நமக்கு சுயாதீனம் உண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள் நாம் இந்த சுதந்திரத்தை தப்பாகப் பயன்படுத்தக்கூடாது. நமது சுதந்திரம் நம்மையும் கெடுக்கக்கூடாது; பிறரையும் துக்கப்படுத்தக்கூடாது.
பவுலடியார் அதைத்தான் நமக்கு விளங்க வைத்திருக்கிறார். உணவு தேவன் தந்தது. அதை அளவுக்கதிகமாக உண்டால் நமது சரீரத்திற்குக் கேடு வரும். அதேசமயம் ஒரு விக்கிரகக் கோவிலில் அமர்ந்து சாப்பிட்டோமானால் நம்மைப் பார்க்கிற விசுவாச பலவீனமான ஒருவனை நாம் தடுக்கி விழப்பண்ணுகிறவர்கள் ஆவோம். இதனால் நாம் கிறிஸ்துவுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறோம் (1கொரி.8:12). இப்படியே ஒவ்வொரு காரியத்தையும் கணக்கிட்டுப் பார்க்கலாம். ஆகவேதான் பவுலடியார் எல்லாவற்றையும் அனுபவிக்கத்தக்க அதிகாரம் இருந்தாலும், எல்லாம் தகுதியாயிராது என்று அறிவுரை கூறுகிறார்.
“கலாச்சாரம், பாரம்பரியம், காரணகாரியம் (தர்க்கரீதியாக காரணங்காட்டி செய்கின்றவை), உணர்ச்சி (எக்காரணமுமில்லாமல் உணர்ச்சிவசப்பட்டுச் செய்பவை), இதுபோன்ற எவ்விதத்திலும் உறுதியற்ற அதிகாரங்களின் அடிப்படையில் தெரிவுகளைச் செய்வதினாலேயே வாழ்க்கையில் அநேக குழப்பங்கள் ஏற்படுகின்றன. இவை நான்கும் மனிதனின் வீழ்ச்சியினால் ஏற்பட்டவைகள். எனவே, பிழையான திசையில் வழிநடத்தாத ஒரு பரிபூரண வழிகாட்டி நமக்கு தேவை. அத்தேவையை தேவனுடைய வார்த்தையே சந்திக்கிறது” – ரிக்வாரன்.
இன்றைய நாளிலும் எதைத் தெரிந்தெடுப்பது எதை விடுவது என்ற போராட்டத்தோடு இந்தத் தியானத்தில் இணைந்திருக்கும் தேவபிள்ளையே, நாம் தவறான வழிகாட்டிகளின் வழிகளை விட்டுவிட்டு, நமக்காக சகலத்தையும் தெரிந்தெடுத்து வைத்திருக்கிறவரிடம் திரும்புவோம். உணவு உடை செல்வம் எதுவானாலும், தேவன் தந்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் தகுதியானது எது என்று சிந்தித்து உன் தெரிந்தெடுப்புகளை தீர்மானங்களைச் செய். அப்போது உன்னில் தேவன் மகிமைப்படுவார்.
ஜெபம்: “கர்த்தாவே, நீர் அருளிய சுதந்திரத்தை உமக்குள் காத்துக்கொண்டு, உமக்குள் என் தெரிந்தெடுப்புகளைச் செய்யவும் உம்முடைய நாமத்தை என் வாழ்க்கையில் மகிமைப்படுத்தவும் என்னை நடத்தியருளும். ஆமென்.”