வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 31 வியாழன்

என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமி. 30:10)
வேதவாசிப்பு: காலை: யோபு 29-31 | மாலை: அப்போஸ்தலர் 27: 1-20

ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 31 வியாழன்

கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான் ஆண்டவரே (சங்.130:3) நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் நமக்கு மன்னித்து, அவைகளை நினையாமலும் இருப்பேன் என்று வாக்குப்பண்ணி இதுவரையிலும் நம்மை நிலைநிறுத்தின கிருபைகளுக்காக கர்த்தரை முழுஉள்ளத்தோடும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

வாழ்வின் திசைகாட்டி!

தியானம்: 2025 ஜூலை 31 வியாழன் | வேதவாசிப்பு: யாத்திராகமம் 13:20-22

YouTube video

கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன்சென்றார் (யாத்.13:21).

ஆறு நிலைகளில் செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றி வருவதுபோல் ஓர் அமைப்பினை (GPS) அறிவியல் வல்லுநர்கள் நிறுவியுள்ளனர். உலகின் எந்த மூலையில் நாம் இருந்தாலும் நாம் இருக்கும் இடத்தை குறைந்தது 5 செயற்கைக்கோள்கள் கண்டுபிடித்துவிடும். சில சிறப்பு கருவிகளைக் கொண்டும் சில வகை சிக்னல்களை அனுப்புவதன் மூலமும் 100 மீட்டருக்கு உள்ளதாக நாம் இருக்கும் இடத்தை பகலிலோ இரவிலோ கண்டுபிடித்துவிடலாம். இந்த GPS இருப்பதினால் நாம் தொலைந்து போகமாட்டோம்.

தங்களுக்கு தெரியாத பாதை வழியாக இஸ்ரவேல் மக்கள் நடந்துசெல்லும் போதும் தேவன் இவ்வித புவி இடஅமைப்பைத் தருகிறார். பகல்நேரத்தில் அது மேகஸ்தம்பமாகவும், இரவில் அது அக்கினி ஸ்தம்பமாகவும் இருந்தது. இந்த விண்ணக பாதுகாப்பைக் கவனித்து நடந்ததால் இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் தைரியமாக நடந்தனர்.

நமக்கு இவ்விதமான மேகஸ்தம்பமோ அக்கினி ஸ்தம்பமோ இல்லை என்றாலும் நம்மை நடத்துவதற்கு சில திசைகாட்டியைத் தந்திருக்கிறார். அதனை நாம் பரிசுத்த வேதாகமம் என்று அழைக்கிறோம். நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது ஆவிக்குரிய பயணத்தில் நாம் இருக்கும் இடத்தை மிகச் சரியாகக் காட்டும் சத்தியவார்த்தை அது! மேலும் நமது வாழ்வில் நாம் அதன் உண்மைகளைக் கடைப்பிடிக்கும்போது நாம் செல்லவேண்டிய பாதையையும் தெளிவாகக் காட்டும். நாம் குறிக்கோள் இல்லாமல் அலைந்து திரியவேண்டிய அவசியமில்லை. தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுக்கும் போது நாம் அழிந்துபோக மாட்டோம்.

பிரியமானவர்களே, வேதத்தை வாசித்தால் மட்டுமே பயனுண்டு என்பதை நீங்கள் மறந்து போகாதீர்கள். அதை மேசையின் மீதோ புத்தக அலமாரியிலேயோ வைத்துவிட்டால் நாம் செல்லவேண்டிய பாதைக்கு அது வழிநடத்தாது. வாழ்க்கைக்கு திசைகாட்டியான அதனை வாசித்து தியானிக்க தினமும் நீங்கள் ஏன் ஒரு 15 நிமிடங்கள் ஒதுக்கக்கூடாது? தேவவார்த்தையை சரியாக உபயோகித்தால் அது நீங்கள் போகவேண்டிய இடத்துக்கு அது உங்களை அழைத்துச்செல்லும்.

தேவனுடைய வார்த்தைகள் எப்பொழுதும் சரியான பாதையையே காட்டும்.

ஜெபம்: தேவனே, என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிற உம்முடைய வசனத்தை எங்களுக்குத் தந்ததற்காய் உமக்கு நன்றி. அந்த வெளிச்சத்தில் வாழ்ந்து உம்மை அடைய உதவும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 30 புதன்

தன் ஜனங்களுடைய நன்மையை நாடி … (எஸ்தர் 10:3) தேசத்தின் குடிமக்கள் அனைவரும் சமாதானமாகவும் நல்ல ஐக்கியத்தோடும் காணப்படவும் சுற்றிலும் யுத்தமில்லாதபடி மக்கள் சுபிட்சமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படவேண்டும் என்று ஜனங்களின் நன்மையை நாடி தேசத்தின் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய தேசத் தலைவர்கள் தேசத்தை ஆள கர்த்தர் கிருபை செய்ய ஜெபிப்போம்.

மறக்க வேண்டாம்!

தியானம்: 2025 ஜூலை 30 புதன் | வேதவாசிப்பு: யாத்திராகமம் 13:17-20

YouTube video

மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான் (யாத்.13:19).

அநேக காரியங்களை நாம் சீக்கிரத்தில் மறந்துவிடுகிறோம். “நான் நினைவில் வைக்கவேண்டியதை எழுதி வைத்துக்கொள்வேன். ஆனால் நான் எழுதிய காரியங்களை நினைவுக்கு கொண்டுவரும் நேரத்தைவிட எழுதிய தாளை தேடுவதிலேயே அதிக நேரம் செலவழிந்து விடும்” என்று சொல்லும் சிலரைச் சந்தித்திருக்கிறோம்.

மோசேயும் இஸ்ரவேலரும் எகிப்து நாட்டை விட்டு புறப்படும்போது புதைத்து வைக்கப்பட்டிருந்த யோசேப்பின் எலும்புகளைத் தோண்டி எடுத்து அவைகளையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். இந்த எலும்புகள் யோசேப்பின் விசுவாசத்தின் அடையாளம். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார். அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டு போங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரிடம் உறுதி வாங்கியிருந்தான் (யாத்.13:19). இந்த விசுவாசம் பாராட்டப்பட வேண்டியதாகும்.

கடந்த காலங்களைப்பற்றி பேசுவதில் உபயோகமில்லை என்றாலும் அதை நாம் மறந்துவிட முடிவதில்லை. நமக்கு முன்னதாக வாழ்ந்த பக்தர்கள் வாழ்வில் தேவன் கிரியை செய்த விதங்களை அறியும்போது நாம் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொள்ளுகிறோம். தேவனுடைய உண்மைக்கு உதாரணங்களாய் அவைகள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. அவர்களிடம் அவர் காண்பித்த நிலையான அன்பு நம்முடைய துன்பநேரங்களில் தைரியப்படுத்துகின்றது, தேவனுடைய பரிசுத்தத்தை நினைவுபடுத்துகிறது. நம்முடைய முன்னோர்கள் தேவனுக்கு கீழ்ப்படியாதபோது அவரது பரிசுத்த கரம் அவர்களை சிட்சித்தது.

பிரியமானவர்களே, உங்கள் குடும்பத்திலும் இவ்வாறு நினைவில் நிற்பவர்கள் உள்ளனரா? மறைந்துபோன அல்லது மருத்துவமனையில் இருக்கும் வயதான தேவபிள்ளைகள் இவர்களது நினைவினால் உங்களது வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதா? உங்கள் காலம் கடந்து போகுமுன்னர், சென்ற காலத்தை பின்னோக்கிப் பாருங்கள். நிகழ்காலத்துக்கு அது அதிக ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.

கடந்த காலத்தை நாம் கொண்டுவர முடியாது. ஆனால் அவை நமக்கு நினைவில் நிற்பவையாக அமையலாம்!

ஜெபம்: இருந்தவரும் இருக்கிறவருமானவரே, எங்களுக்கு முன்னதாக வாழ்ந்த தேவபிள்ளைகளின் வாழ்க்கையின் நினைவுகளால் நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். அதற்காக நன்றி செலுத்துகிறோம். ஆமென்.