வாக்குத்தத்தம்: 2025 ஜூலை 1 செவ்வாய்

நீங்கள் …. அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள் (கலாத்தியர் 5:13).

நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். (ஏசா.43:19)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 21-23 | மாலை: அப்போஸ்தலர் 7:41-60

ஜெபக்குறிப்பு: 2025 ஜூலை 1 செவ்வாய்

தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே உமக்கு நிகரானவர் யார்? (சங். 71:19).

வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும் (உபா.11:12) என்ற வாக்குப்படியே கர்த்தர் நம்மேல் நோக்கமாயிருந்து நமது கால் வழுவாதபடி நடத்திவந்தார். கர்த்தரை ஸ்தோத்திரித்து புதிய மாதத்தின் நன்மைக்காய் தேவநடத்துதலுக்காய் நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.

செயலற்ற வேளையில்!

தியானம்: 2025 ஜூலை 1 செவ்வாய் | வேதவாசிப்பு: யாத்திராகமம் 4:27-31

YouTube video

கர்த்தர் … அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள் (யாத். 4:31).

ஒருநாளும் நம்மை விட்டுவிலகாமல் வழிநடத்தின தேவன்தாமே இப்புதிய மாதத்திற்குள் பிரவேசிக்க நமக்கு கிருபை செய்தபடியால் தேவனை ஸ்தோத்தரிப்போம். இம்மாதம் முழுவதும் தேவன் நம்மை ஆதரித்து நம் தேவைகளை சந்தித்து வழிநடத்துவார். எல்லா தீங்குக்கும் நம்மை விலக்கிப் பாதுகாப்பார். “நான் வனாந்தரத்தில் வழிகளையும் அவாந்தர வெளியில் ஆறுகளையும் உண்டுபண்ணுவேன்” (ஏசா.43:11) என்றவர் நம்மை முன்னின்று நடத்துவார்.

காணாமல் போன தங்களது குழந்தை எலியைத் தேடி அதன் பெற்றோர்கள் ஊரெல்லாம் அலைந்தனர். இறுதியில் தாங்கள் இதுவரை கண்டிராத ஓர் அழகான ஆற்றின் கரையை அடைந்தனர். தங்கள் முன் குழலூதுபவர் ஒருவர் கம்பீரமாக நிற்பதைக் கண்டனர். தந்தை எலிக்கு மிகுந்த பயமுண்டாயிற்று. நடுக்கத்துடன் தன் மனைவி எலியைப் பார்த்து உனக்கு பயமாக இல்லையா? என்று மெல்லிய குரலில் கேட்டது. அதற்கு மனைவி எலி பயமா? எனக்கா? இவரைப் பார்த்தா? இல்லவே இல்லை என்று கூறிவிட்டு ஐயோ எனக்கும் அதிக பயமாக இருக்கிறதே என்று கதற ஆரம்பித்துவிட்டது. இரு எலிகளும் தங்கள் உடலை மண்ணோடு அழுத்தி தலைகளைத் தாழ்த்தி அக்குழலூதுபவரைப் பணிந்துகொண்டன என்று கென்னத் கிரகாம் என்பவர் தனது கதையில் கூறியுள்ளார்.

தேவனை தொழுதுகொள்வதே சிறந்த செயல் என்று கருதும் சில நேரங்கள் நம் வாழ்விலும் உண்டு. அகிலத்தையும் ஆளும் தேவன் தங்கள்மேல் கரிசனையுள்ளவராய் இருக்கிறார் என்று மோசேயும் ஆரோனும் கூறக்கேட்ட இஸ்ரவேல் மக்கள் ஆச்சரியப்பட்டு தேவனைத் தலைகுனிந்து தொழுதுகொண்டார்கள். தங்களது நன்றியைக் காட்ட இதைவிட வேறு சிறந்த காரியம் அவர்களுக்குத் தெரியவில்லை. அநாதிகாலமுதல் சர்வசிருஷ்டிக்கும் அதிகாரியான தேவன் இன்றும் சர்வவல்லவராகவும் அதிசயமானவராகவும் இருக்கிறார். சுவாசமுள்ள யாவும் அவரிடமிருந்தே உயிர்பெற்று வாழ்ந்துவருகின்றன. அவரது மகிமையையும் மகத்துவத்தையும் ஒப்பிடும்போது நாமும் இந்த எலிகள் போன்றே காணப்படுகிறோம். ஆனாலும் தூசியான நம்மிலும் அவர் அன்புகூர்ந்து தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்து, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சித்தார். பிரியமானவர்களே, தேவனுடைய மகத்துவத்தைத் தியானிக்க நேரம் ஒதுக்குங்கள். அவரது பேரன்பின் ஆச்சரியம் உங்களை நிரப்பட்டும்.

தேவனை உண்மையாய் அறிந்துகொண்டவர்கள் அவரை பயத்தோடும் நடுக்கத்தோடும் தொழுதுகொள்ளுவார்கள்.

ஜெபம்: துதிக்குப் பாத்திரரே, இந்தப் புதிய மாதத்தில் எங்களை ஆசீர்வதித்து வழிநடத்தும். நீர் எங்களுக்குப் பாராட்டி வரும் உமது அன்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (ஜூலை – ஆகஸ்டு 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம்மை பாதுகாத்து வழிநடத்திவரும் அன்பின் தேவன் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்வருடத்திலும் நாம் ஆறு மாதங்களைக் கடந்துவர தேவன் நமக்கு கிருபை செய்துள்ளார். அவருக்கு துதி ஸ்தோத்திரங்களை நாம் ஏறெடுப்போம். இவ்விதழில் இடம்பெற்றுள்ள தியானங்கள் அனைத்தும் உங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

நமது தேசத்திலும் உலகத்தின் பல பகுதிகளிலும் யுத்தங்களையும் போர் சூழல் மூண்டு வருவதை நாம் காணமுடிகிறது. இவைகளெல்லாம் இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு நாம் சமீபமாக இருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆனபடியால் நாம் யாவரும் இயேசுகிறிஸ்து மாற்கு 13:37இல் நமக்கு அறிவுறுத்தினபடியே நாம் விழித்திருப்பது அவசியமாயிருக்கிறது.

ஜூலை மாதம் 15ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று சென்னை வேப்பேரியில் உள்ள அனிதா மெதடிஸ்ட் பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் போதகர்கள் விசுவாச பங்காளர்களுக்கான வேதாகம கருத்தரங்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கப்படும். சென்னையிலுள்ள பங்காளர்கள் இந்த கருத்தரங்கில் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்பட அன்பாய் அழைக்கிறோம். இதைக்குறித்த விபரங்கள் 7ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் விபரங்களுக்கு எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி தொடரில் வேதாகமம் எவ்வாறு உருவானது என்ற புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது. அதை வாசித்து ஆசீர்வாதமடையுங்கள். ஜூலை மாதத்தில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் யாத்திராகமம் புத்தகத்திலிருந்து எழுதிய தியானங்களின் இரண்டாம் பகுதியின் மொழியாக்கத்தையும், ஆகஸ்டு மாதத்தில் சகோ.நீரியஸ் பெர்னாண்டோ அவர்கள் பலவிதமான தலைப்புகளில் எழுதியுள்ள தியானங்களையும் பிரசுரித்துள்ளோம் வாசித்து ஆசீர்வாதமடையுங்கள்.

கே.ப.ஆபிரகாம்

உண்மையுள்ளவர்!

அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்டு 2025)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: நெகேமியா 9:31-38

எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம் பண்ணினோம் (நெகே.9:33).

இச்சங்கீதம் எருசலேமின் அலங்கம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், கூடாரப்பண்டிகையின்பொழுது யூதர்களால் பாடப்பட்டது. மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு தேவனுக்கு தங்களை அர்ப்பணித்தனர். இது கடவுளின் பல பண்புகளை விவரிக்கிறது. ஆனால் நாம் அவருடைய உண்மைத்துவத்தை வலியுறுத்த விரும்புகிறோம்.

1. உண்மையுள்ள சிருஷ்டிகர் (1 பேதுரு 4:9)

ரோமப்பேரரசில் உள்ள விசுவாசிகளை துன்புறுத்தலுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்ள பேதுரு இக்கடிதத்தை எழுதினார். விரைவில் அக்கினி சோதனை நடக்கவிருந்தது (வச.12-19). எனவே இதுவரையில்லாத வகையில் உண்மையான சிருஷ்டிகராகிய தேவனிடம் தங்களை அவர்கள் ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தது. அவர் நம்முடைய பிரபஞ்சத்தை உருவாக்கி பராமரிக்க முடியுமானால், நிச்சயமாக தமது மக்களைக் கவனித்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அவரால் முடியும். சூழ்நிலைகள் உங்களை கதிகலங்கச் செய்யும்பொழுது, உண்மையுள்ள நம் சிருஷ்டிகரிடம் திரும்புங்கள்; அவர் அனைத்தையும் பொறுப்பெடுத்துக்கொள்ளுவார்.

2. உண்மையுள்ள பிரதான ஆசாரியர் (எபி.2:17-18)

இயேசுகிறிஸ்து இன்று பரலோகத்தில் அரசராகவும், ஆசாரியராகவும் இருக்கிறார். நாம் சோதிக்கப்படும்போதெல்லாம் அவர் நமக்குத் தேவையான கிருபையை அளிக்க வல்லவராய் இருக்கிறார் (14-16). “எனது உணர்வுகள் யாருக்கும் தெரியாது” என்று தேவபிள்ளைகள் ஒருபோதும் கூறக்கூடாது. ஏனெனில் தேவன் நம்மை முழு மையாகப் புரிந்துகொள்பவர். நமது தேவைகளை அவர் அறிவார். நமக்கு அனுதாபம் காட்டுகிறார். அவர் பூமியில் வாழ்ந்தபோது இன்று நாம் அனுபவிக்கும் சோதனைகளையும் பாடுகளையும் அவர் அனுபவித்தார். நாம் நமது எதிரிகளை வெற்றிகொள்ளத் தேவையான கிருபையை அவர் ஒருவரே நமக்கு அருளமுடியும்.

3. உண்மையுள்ள வழக்கறிஞர் (1 யோவான் 1:9-2:1).

நமக்குத் தேவையான கிருபைக்காக நாம் தேவனிடம் திரும்பாவிட்டால் என்ன நடக்கும்? எதிரியின் பேச்சைக்கேட்டு தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனால் என்ன ஆகும்? சாத்தான் நம்மைக் குற்றஞ்சாட்டி நம்முடைய தோல்விகளைக் கூறி நிலைமையை இன்னும் மோசமாக்குவான். ஆனால், இயேசு நம்மைக் கைவிடமாட்டார். நமது பாவங்களுக்காக அவர் மரித்து, தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பாக நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார். நம்முடைய பாவங்களுக்காக அவர் ஏற்கனவே மரித்துவிட்டார்; பிதாவானவர் தம்முடைய பிள்ளைகள் பாவங்களை அறிக்கையிட்டால் அவர்களை மன்னிப்பதற்கு தயை பெருத்தவராய் இருக்கிறார். இந்த அனுபவத்தை விளங்கிக்கொள்வதற்கு சகரியா 3ஆம் அதிகாரத்தை வாசித்து அதை நம்புங்கள்.

4. உண்மையுள்ள சாட்சி (வெளி. 1:5; 3:14).

இயேசு இவ்வுலகில் ஊழியம் செய்தபோது தேவனுடைய வார்த்தையைத் தெளிவாகப் பேசினார். அவருடைய வார்த்தைகள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் கண்டதையும், கேட்டதையும் சாட்சியாக அறிவிக்கிறார் என்று யோவான் ஸ்நானன் கூறியுள்ளார். தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், ஏனெனில் தேவன் அவருக்கு தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார் (யோவான் 3:32,34; 18:37) தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளவும் அதை நடைமுறைப்படுத்தவும் தூயஆவியானவர் நமக்கு உதவுகிறார். இவ்வாறே நாம் “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அறிவிலும் வளர்கிறோம்” (2 பேதுரு 3:18).

5. உண்மையுள்ள வெற்றி வீரர் (வெளி.19:11).

இயேசு சமாதான பிரபு; ஆனால், அவர் அனைத்து எதிரிகளையும் வென்று தமது அரசை நிறுவும் வெற்றி வீரர் (2 தெச.1;: 7-10). இன்று, விசுவாசிகளாகிய நாம், “நம்மில் அன்புகூருகிறவராலே நாம் முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம் (ரோமர் 8:37). ஒருநாள் அவர் கெர்ச்சிக்கும் சிங்கம்போல வருவார்; ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்ற பெயரை அணிந்திருப்பார் (வெளி.19:16). நமக்கான போர்களில் இன்று அவர் வெற்றி பெறட்டும்!

கர்த்தர் உண்மையுள்ளவர்; எனவே அவர்மீது நாம் நம்பிக்கை வைப்போம். நம் முடைய சொந்த விசுவாசத்தில் நம்பிக்கை வைப்பதால் நாம் வெற்றியாளராக முடியாது. ஆனால், நம்மோடு என்றும் உண்மையாக இருக்கும் கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதாலேயே அது நிறைவேறும்; நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு பலப்படுத்துவது? “விசுவாசத்துக்காகப் போரிடுவது அல்ல, உண்மையான ஒருவரைச் சார்ந்திருப்பதாலேயே நம்முடைய விசுவாசம் வளரும்” என்று சீனாவுக்கான முன்னோடி மிஷனரி ஜே.ஹட்சன் டெய்லர் எழுதியுள்ளார். “நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்” 2 தீமோ.2:13ஐ அவர் மேற்கோள் காட்டுகிறார். உண்மையான அவரையே எப்பொழுதும் சார்ந்திருப்போமாக!

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது (புலம்பல் 3:22-23).

மொழியாக்கம்: திருமதி அகஸ்டா மங்களதுரை

1. வேதாகமம் எப்படி எழுதப்பட்டது?

வேதாகமம் உருவானது எப்படி? (ஜூலை – ஆகஸ்டு 2025)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமப் புத்தகங்களை எழுதியவர்கள் இன்று எழுதுவார்களானால் கீழ்க் கண்ட நவீன கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார்கள்:

WORD PROCESSOR
IBM SELECTRIC II தட்டச்சுஇயந்திரம்
AN ELECTRIC SMITH CORONA
AN OLD MANUAL OLYMPIC

இவை புத்தகங்களை எழுதவும், அச்சிடவும் பயன்படும் புதிய கருவிகள்.

காலங்கள் மாறுகின்றன. பொருட்களும் மாறுகின்றன, வேதாகமம் எதில் எழுதப்பட்டது என்பது முக்கியமல்ல, தேவனுடைய ஆவியானவர் தங்களுக்குக் கிடைத்த எதன் மேலும் எழுதுங்கள் என்று எழுத்தாளர்களுக்கு கட்டளையிட்டார். எவ்வளவு தாழ்மை பாருங்கள்!

அநேக பொருட்களின்மேல் வேதாகமம் எழுதப்பட்டது.

வேதாகமம் மிகப்பழைய காலத்தில் எழுதப்பட்டதால் அக்காலத்தில் நடை முறையில் எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களின்மேல் கர்த்தருடைய வார்த்தைகள் எழுதி வைக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1.களிமண்:

களிமண்ணில் கூரை ஓடுகள் செய்யப்பட்டு, அவற்றில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருப்பதை இன்று காண்கிறோம். பண்டைய காலத்தில் சாதாரணமாக எங்கும் கிடைக்கக்கூடியது களிமண். களிமண்ணால் தகடுகள் செய்யப்பட்டு, அதில் STYLUS என்னும் முக்கோண வடிவ எழுதும் கருவியால் எழுத்துக்கள் எழுதப்பட்டன. அவை உலர்ந்தபின் செங்கல் சூளையில் வைத்து சுடப்படுவதுபோல், இந்தத் தகடுகள் சுடப்பட்டு உறுதி செய்யப்படும்.

எசேக்கியேல் 4:1 இல் மனுபுத்திரனே, நீ ஒரு செங்கல்லை எடுத்து, அதை உன் முன்வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து, என்று உள்ளது. ஆங்கில வேதாகமத்தில் மண் ஓடு என்று உள்ளது. இதுதான் களிமண் தகடு. இப்படிக் களிமண் தகட்டில் எருசலேம் நகரத்தை வரைந்து காட்டுவதன் மூலம் தேவன் எரேமியாவுக்கு எருசலேம் நகரம் பாபிலோனுக்கு அடிமைப்பட்டுப் போகும் என்று உணர்த்த விரும்பினார்.

வேதாகமம் சார்ந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் இப்படி அக்காலத்தில் எழுதப்பட்ட களிமண் ஓடுகள் பலவற்றை தங்கள் ஆராய்ச்சியின்போது கண்டெடுத்துள்ளார்கள், அவற்றில் சித்திர எழுத்துகளும், குறியீடுகளும் உள்ளன.

2.கல்

பத்துக்கற்பனைகளை எழுதக் கற்பலகைள் பயன்படுத்தப்பட்டன. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிக்கிறதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார் (யாத். 24:12)

சீனாய்மலையில் கர்த்தர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார் (யாத்.31:18).

தேவனிடத்தில் பெற்ற கற்பனைப் பலகைகளைச் சுமந்துகொண்டு மோசே இறங்கிவரும்போது, கீழே இஸ்ரவேல் புத்திரர் பொன் கன்றுக்குட்டியைச் செய்து அதை வணங்கி, ஆடிப்பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு, கோபங்கொண்டு, தன் கையில் இருந்த இரண்டு கற்பலகைகளையும் கீழே போட்டு உடைத்துவிட்டான். அப்பொழுது தேவன் மோசேயிடம் வேறு இரண்டு கற்பலகைகளைச் செய்து கொண்டு தம்மிடம் ஏறிவரச் சொன்னார்.

கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன் (யாத்34:1) என்றார்.

பின்னால் யோசுவாவின் காலத்தில் கர்த்தருடைய கற்பனைகள் வேறு கற்களில் எழுதப்பட்டன. தேவனுக்குத் தகன பலிகளைச் செலுத்தும்படி யோசுவா ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான் (யோசு.8:32). அகழ்வாராய்ச்சியில் எகிப்தில் கல் தூண்களிலும், கல் பலகைகளிலும் எழுதப்பட்ட பல எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

3.பாப்பிரஸ்

உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; காகிதத்தினலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன் (2 யோவான் 12). இங்கே காகிதம் என்று யோவான் குறிப்பிடுவது பாப்பிரஸ் என்று அறியப்படுகிறது.

அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகள் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலே கண்டேன் (வெளி.5:1). இந்தப் புத்தகம் பாப்பிரஸினால் செய்யப்பட்டது.

VELLUM – கன்றுக்குட்டியின் தோல்
PARCHMENT – ஆட்டுக்குட்டியின் தோல்
LEATHER – பசுவின் தோல்

2 தீமோ.4:13இல் இவற்றில் இரண்டு குறிப்பிடப்பட்டுள்ளன. துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.

புஸ்தகங்கள் அல்லது சுருள்கள் எனப்படுவது நீண்ட, பரப்பான பொருட்கள். அவற்றின்மீது செய்திகள் எழுதப்பட்டிருக்கும். மிருகங்களின் தோல்கள் பக்குவப்படுத்தப்பட்டு, நீண்ட சுருளாகச் செய்யப்பட்டு அவற்றில் செய்திகள் எழுதி, சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்.

பாப்பிரஸ் என்பது தண்ணீரில் வளரும் ஒரு செடி. இது 15 அடிவரை வளரும். இதன் உச்சியில் மிருதுவான பூக்கள் காணப்படும். இதன் தண்டு முக்கோண வடிவமானது. இதன் உட்பகுதியில் (Pith) சோறு, மிருதுவாக இருக்கும். இதுதான் எடுக்கப்பட்டு பேப்பர் செய்யப்படும். ஆரம்பத்தில் நீள அகலமான தகடுகள் போலச் செய்யப்பட்டு, பலப்படுத்தும்படியாக அதன் மேல் பிசின் பூசிக் காயவைப்பார்கள். பின்னர் பேனாவில் மை தொட்டு அதில் எழுதுவார்கள்.இக்காலத்தில் காகிதம் செய்வதற்கு வேறெந்தப் பொருளையும்விடப் பாப்பிரஸ்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

4.உலோகம்

பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப் பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி, அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக (யாத்.28:36) இதை இஸ்ரவேலரிடம் கூறும்படி தேவன் மோசேயிடம் கட்டளையிட்டார்.

யோபு பெருமூச்சு விட்டுக்கொண்டு இவ்வாறு கூறினான்: ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதித்தால் நலமாயிருக்கும் (யோபு 19:23,24).

வேதாகம எழுத்தாளர்கள் பொன்னை மாத்திரம் உபயோகிக்கவில்லை. அவர்கள் தங்களுக்குக் கிடைத்த சாதாரணப் பொருட்களிலும் எழுதினார்கள்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்