• சுவி. சுசி பிரபாகரதாஸ் •
(ஜனவரி-பிப்ரவரி 2023)

சுவி. சுசி பிரபாகரதாஸ்

பிரியமானவர்களே! இன்று கேள்விகள் இல்லாத மனிதர்கள் இவ்வுலகில் இல்லையென்று கூறலாம். சில கேள்விகள் கேட்காத பட்சத்தில் உரையாடவோ, பேசவோ, எழுதவோ முடியாது. தெளிவுள்ள மனிதர்களும் தெளிவில்லாத மனிதர்களும் கேள்விகளைப் பல நிலைகளில் எழுப்புவார்கள்.

கேள்விகள் பல வகைப்படும். தேவனிடம் கேட்கின்றதான கேள்விகள், சாத்தான் கர்த்தரிடம் கேட்கும் கேள்விகள், மனிதர்கள் மனிதர்களிடம் கேட்கும் கேள்விகள் என பல வகைகளாக பிரிக்கலாம். எங்கே? எப்போது? எவ்வாறு? ஏன்? என்ற கேள்விகளும் முக்கியமானவை.

ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பன். இவரது வாழ்விலும் வெளிப்படையாகவும், உள் மனதிலும் கேள்விகள் பல எழுப்பப்பட்டுள்ளன.

1. எங்கே என்ற கேள்வி:

கர்த்தர் யாவையும் அறிந்தவர். கர்த்தர் நமது எஜமான். நாம் அவரது பணியாட்கள். ஆகவே நாம் கீழ்ப்படியவேண்டும். ஆதியாகமம் 12:13இல் காத்தர் ஆபிராமை அழைத்து தான் காண்பிக்கின்ற தேசத்திற்குப் போகும்படி கட்டளையிட்டார். எங்கே? என்ற கேள்வி ஆபிரகாமின் மனதில் எழும்பியிருக்கக்கூடும். எங்கே? என்ற கேள்விக்குக் காண்பிக்கும் தேசம் என்ற பதில் கிடைத்தது என்று வாசிக்கின்றோம்.

கர்த்தர் நமது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தை அறிந்து திட்டமிட்டுச் செயற்படுத்துபவர். நமது வேளையின்படி அல்ல, அவரது வேளையின்படி நடத்துவார். நமது இரட்சகர், “என் வேளை இன்னும் வரவில்லை” என்று யோவான் 2:3இல் கூறவில்லையா? பாடுபடும் போதும் “என் வேளை வந்தது” என்று நமது மீட்பர் இயேசு கூறினார்.

நமது தேவன் ஏற்ற வேளைகளில் ஏற்ற சூழ் நிலையில் செயற்படுபவர். ஆபிரகாம் விசுவாசித்தான். வாக்குத்தத்தப் பிள்ளையான ஈசாக்கைக் கண்டான். நாமும் பொறுமையுடன், வாக்குத்தத் தத்தை பிடித்துக்கொண்டு, விசுவாசத்தில் நடந்தால் அற்புதங்களைப் பெறுவோம்! இந்த ஆபிரகாமின் கீழ்ப்படிதல் பொறுமையின் கீழ்ப்படிதலாகும்.

2. எவ்வாறு என்ற கேள்வி:

ஆதியாகமம் 17:17 இல் நூறு வயதானவளுக்குப் பிள்ளை பிறக்குமோ? என்ற ஆபிரகாமின் கேள்வி எவ்வாறு? என்ற கேள்வியை பிரதிபலிக்கின்றது. இக்கேள்வியை கேட்கும்போது ஆபிரகாமுக்கு 99 வயதாகும். ஆதி.17:1-21 வசனங்களில் கர்த்தரின் உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபிரகாம் விசுவாசித்து நகைத்தான். முகங்குப்புற விழுந்து நகைத்தான். அதாவது விசுவாசித்து ஆராதித்தான். இது எவ்வாறு? என்ற கேள்வி நமக்குள் எழச் செய்யலாம். கர்த்தர் அற்புதங்களைச் செய்பவர். கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.

எவ்வாறு என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. காத்தரிடமே உள்ளது. கர்த்தரிடம் நம்பிக்கையுடன் அர்ப்பணிப்போம். கர்த்தருக்கே கட்டளை கொடுக்கும் மக்கள் வாழும் காலத்தின் மத்தியில் நாம் இருக்கின்றோம். கர்த்தரின் கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றவர்களைக் கர்த்தர் ஆசீர்வதிப்பார். ஆபிரகாமின் வாழ்வில் நிபந்தனையற்ற கீழ்ப்படிதல் காணப்பட்டது. நமது வாழ்வில் இப்படிப்பட்ட கீழ்ப்படிதல் காணப்படுமா? தேசம், இனம், குடும்பம் இந்த மூன்று பகுதிகளை விட்டு விலகி தியாகத்துடன் ஆபிரகாம் புறப்பட்டார். இதில் ஆதி.12:1-3 வசனங்களில் பூரணமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கின்றார். இன்று இந்த நிபந்தனையில்லாத அர்ப்பணிப்பு, நம்மிடத்திலும் நமது குடும்பத்திலும் நமது திருச்சபையார் மத்தியிலும் காணப்படுகின்றதா? சிந்திப்போம்! செயல்படுவோம்!!

3. எப்போது என்ற கேள்வி:

ஆதி.15:2,3 வசனங்களில், “நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே, எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தராய் இருக்கிறானே” என்று ஆபிரகாம் கர்த்தரிடம் பேசினார்.

இந்த வாக்கியங்களின் எதிரொலி என்ன? எப்போது பிள்ளை தருவீர் என்பதாகும். கர்த்தர் அவன் பிள்ளையைக் குறித்து வாக்குத்தத்தங்களைக் கூறினார். “வானத்தின் நட்சத்திரங்களைப் போல ஆபிரகாமின் சந்ததி பெருகும்” ஆதி 15:13-16இல், எகிப்திலே ஆபிரகாமின் சந்ததியினர் படப் போகும் 400 வருட உபத்திரவத்தையும் வெளிப்படுத்தினார்.

எவ்வாறு சுகம் கிட்டும்? எவ்வாறு கர்த்தர் உயர்த்துவார்? எவ்வாறு விடுதலை கிடைக்கும்? கேள்வியுண்டா? கர்த்தர் வல்லமையுள்ளவர்; மரணத்தை ஜெயித்தவர்; மகத்துவங்களைச் செய்பவர். நம்புங்கள். விசுவாசியுங்கள். நமது வழிகள், நமது நினைவுகள், நமது திட்டங்கள் அல்ல. கர்த்தரின் வழிகள், அவரது நினைவுகள், திட்டங்கள் உயர்ந்தவை. எவ்வாறு என்ற கேள்விக்குப் பதில் தெரியாவிட்டாலும், ஆபிரகாம் தேவவார்த்தையை விசுவாசித்து கீழ்ப்படிந்தான். நாமும் வார்த்தைக்குக் கீழ்ப்படிவோமாக.

4. ஏன்? என்ற கேள்வி

ஆதி.22:1-18 வசனங்களில், “ஏகசுதனும் நேச குமாரனாகிய ஈசாக்கைத் தகனபலியாக பலியிடு” என்று கட்டளையைக் காத்தர் கொடுத்தபோது, அதிகாலையில் அதாவது, உடனடியாகக் கீழ்ப்படிகிறான். உன்னதமான விலைக்கிரயம் செலுத்தும் வாழ்வை ஆபிரகாமிடம் காண்கிறோம். கர்த்தர் கொடுத்ததை அவன் கர்த்தரிடமே திரும்பக் கொடுக்கிறான். ஏன் என்ற கேள்வி நமக்குள் எழும்பியதுபோல ஆபிரகாமிடம் எழும்பியிருக்கலாம். ஆபிரகாம் கேள்விகளை, உணர்ச்சிகளை வார்த்தைக்கூடாக மேற்கொண்டான். செயற்பட்டான். கர்த்தரையோ, வாக்குத்தத்தத்தையோ. எதிர்காலத்தைக் குறித்தோ அவன் பயப்படவில்லை. இவ்விடத்தில் நாம் இருப்போமானால், ஏன் என்று கேட்டு செயற்படாமல் சோர்ந்து போயிருப்போம்.

இது ஏன் எனக்கு? என்ற கேள்வி உங்களுக்குள் வருகின்றதா? காத்தரின் பாதம் சரணடைவோம். நமக்கு முன்பு அறைகூவலுடனான ஒரு வாழ்க்கை, ஆபிரகாமின் செயல் நமக்கு முன் மாதிரியாகும்.

நாம் அனைவரும் கர்த்தருக்கு முதல் இடம் கொடுத்து வாழுவோம். ஆபிரகாம் ஈசாக்கை மறுபடியும் பெற்றுக்கொண்டான். அவன் சோதிக்கப்பட்ட பின்பு சுத்த பொன்னாக மாறினார். ஆபிரகாமின் கீழ்ப்படிதல் முதற்தரக் கீழ்ப்படிதலாய்க் காணப்பட்டது.

பிரியமானவர்களே! எங்கே, எவ்வாறு? எப்போது, ஏன் போன்ற கேள்விகள் உங்கள் வாழ்வில் எழும்பினாலும், இந்தச் செய்திக்கூடாக நிபந்தனையற்ற கீழ்ப்படிதல், பொறுமையின் கீழ்ப்படிதல், வார்த்தைக்குக் கீழ்ப்படிதல், முதற்தரக் கீழ்ப்படிதல் இவைகளை ஆபிரகாமின் வாழ்விற்கூடாக நாம் கற்றுக்கொண்டோம். நமது வாழ்வை ஆபிரகாமுடன் ஒப்பிட்டு தேவகிருபையைப் பெற ஜெபிப்போமா!

உங்களுக்குத் தெரியுமா?

நம் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் தேவனின் உண்மைத்தன்மையை அனுபவிப்பதற்கு நமக்கு வாய்ப்பளிக்கின்றன.