ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 31 ஞாயிறு
“.. இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்” (1சாமு.8:12) இவ்வாக்கின்படியே கர்த்தர் எவ்வளவோ கடினமான சூழ்நிலையின் மத்தியிலும் நம்மை கைவிடாமல் கண்ணின்மணி போல் பாதுகாத்து நம்முடைய ஜெபங்களுக்கு பதில் தந்தபடியால் தேவனை ஸ்தோத்திரிப்போம்.
உன்னைத்தான் தேடுகிறார்!
தியானம்: ஆகஸ்டு 31 ஞாயிறு; வாசிப்பு: எசேக்கியேல் 22:23-31
“நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும்
சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன்,
ஒருவனையும் காணேன்” (எசேக்கியேல் 22:30).
கர்த்தருடைய ஆதங்கங்களுக்கு நாம் என்ன மறு உத்தரவு கொடுக்கப் போகிறோம்? இங்கே ‘சுவர்’ என்பது கல் மண்ணினால் கட்டப்பட்டது அல்ல. தீமையை எதிர்த்துப்போராடுவதற்காக எடுக்கிற பிரயத்தனங்களிலே தேவனுக்கு உண்மையுள்ள தேவபிள்ளைகள் ஒன்றிணைந்து எழுந்து நிற்பதையே இது குறிக்கிறது. இந்தச் சுவர் ஓட்டைவிழுந்து பழுதடைந்துள்ளது என்கிறார் கர்த்தர். ஏனெனில், தேவனை விட்டுத் தூரம்போன நிலையிலுள்ள அந்த மக்களைத் திருப்பிக்கொண்டுவர ஒரு உண்மையுள்ளவன் காணப்படவில்லை. இது ஏன்?
சமய சடங்காசாரங்களினாலும், நற்கிரியைகளினாலும் இந்தச் சுவரைப் பழுதுபார்க்கிறவர்கள் அநேகர்; ஆனால் அது வெறும் மேற்பூச்சுத்தான். தேவ சித்தத்தைவிட்டு, தங்கள் அறிவுக்கு ஏற்றபடியும், மக்களைப் பிரியப்படுத்தும் படிக்கும் கொடுக்கும் தேவசெய்திகளும் இந்தச் சுவருக்கு வெறும் மேற்பூச்சுத்தான். ஆரவாரங்களும் உணர்ச்சிகளைக் கொந்தளிக்கவைக்கும் காரியங்களும்கூட வெறும் மேற்பூச்சுத்தான். இவை மக்களுடைய பிரச்சனைகளை மூடி மறைக்கின்றனவே தவிர, அவர்களுடைய உண்மை நிலையை உணர்த்தி, ஆவிக்குரிய ரீதியில் மக்களை கட்டியெழுப்ப இவை உதவாது.இவை அன்றன்று ஆறுதலை கொடுக்கும்; ஆனால், பெரும்புயல் அடிக்கும்போது இடிந்து விழுந்து விடும். அன்று தேவனுடைய வார்த்தையை ஏந்திச் சென்ற யோனா அதைச் சொல்ல மறுத்து எதிர்ப்புறம் போனான். இன்று, தேவனுடைய வார்த்தையை ஏந்திச் செல்லுகிறவர்கள் மக்களுடைய வாழ்விலே மேற்பூச்சுப் பூசி, தங்கள் பெயரை உயர்த்திக் கொள்கிறார்கள். மக்களுக்காகத் தங்களை அர்ப்பணிக் கத்தவன் யார்? மக்களைத் தேவனண்டைக்கு வழிநடத்துகிறவன் யார்?
யோவான் ஸ்நானனும், ஆண்டவரும் செய்த முதற் பிரசங்கம் என்ன என்பதைத் தேடி வாசித்துப் பாருங்கள். இன்று இத்தனை அதிகாரத்துடன் தேவ செய்தியைக் கொடுக்கிறவர் யார்? யோவானுக்கும், ஆண்டவருக்கும் என்ன நேர்ந்தது என்று தெரியுமே! அதைச் சகிக்க நாம் தயாரில்லை. இதனால்தான் நமது தேசமும் இன்று தத்தளிக்கிறது. மக்களை நடத்த உண்மையுள்ளவன் யார் என்று கர்த்தர் தேடுகிறார். அவர் தேடும் நபர் நாமாக இருக்க விரும்பினால் நமக்கு தேவை உண்மையானதொரு ஆவிக்குரிய பழுதுபார்த்தலே. தேவனின் வழியில் நடவாமல், வார்த்தையை மாத்திரம் சொன்னால், நமது வாழ்வை நாமே கெடுப்பதாகிவிடும். தேவசெய்தியைக் கொடுக்கு முன்னர் யோனா தன்னைச் சரிசெய்யவேண்டியிருந்தது. இன்று முதலில் நமது வாழ்வைச் சரிசெய்வோம். அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இவ் உலகில் நாம் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டாமா?
ஜெபம்: “பிதாவே, நீர் தேடும் நபர் நானாக இருக்க, இன்றே என் போலித் தனங்களை அழித்து, என் ஆவிக்குரிய வாழ்வைச் சீர்செய்ய வேண்டி என்னைத் தருகிறேன். ஆமென்.”
வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 30 சனி
… கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன். (சங்.88:9)
ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 30 சனி
“.. கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்” (யோவான்.16:24) என்ற வாக்குப்படி பலத் தேவைகளோடு இருக்கிற 11 குடும்பங்களில் கர்த்தர் தம்முடைய சமாதானத்தைத் தந்தருளி உதவி ஒத்தாசைகளை அருளிச்செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.
இன்னொரு ஆமணக்கு முளைக்காது!
தியானம்: ஆகஸ்டு 30 சனி; வாசிப்பு: யோனா 4:10,11
“…ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.
…மகா நகரமாகிய நினிவேக்காக நான்
பரிதபியாமலிருப்பேனோ…” (யோனா 4:10,11).
தேவனுடைய மன உருக்கமும் இரக்கமும், மனிதனுடைய ஆத்திர அவசரமும், எப்போதும் எதிர்மாறாகவே செயற்படுகிறது. தேசத்திலும், நம்மைச் சுற்றிலும் பொல்லாப்பு செய்கிறவர்களின் செயல்களைக் கண்டு, இவர்களுக்கு அழிவு வராதா என்று நாமும் சொல்லுவதுண்டு. ஆனால் தேவ இரக்கம் நமது கற்பனைக்கும் மேலானது, உறுதியானது. மனிதனை அழிவினின்று காப்பதற்காக அவர் போடும் திட்டங்களும் நமது அறிவுக்கு அப்பாற்பட்டது. இல்லாவிட்டால் கிறிஸ்து நம்மைத் தேடி வந்திருப்பாரா? ஆமணக்குச் செடிக்காக வருந்திய யோனாவுக்கோ அந்த நினிவே மனிதர் பெரிதாகத் தெரியவில்லை.
இயேசு சொன்ன உவமையிலே, தன்னை உதாசீனம் செய்து, வீட்டை விட்டுப்போன மகனைக்குறித்த தகப்பனுடைய மனநிலையை சிந்தித்து பார்ப்பது நல்லது. மகன் வெளியேறியதும் அவனை வெறுத்து ஒதுக்கினாரா? இல்லை. அந்த தகப்பன் தன் மகனை இன்னும் நேசித்தான். இல்லையானால் தூரத்திலே வந்த மகனை அவன் கண்டிருக்கமுடியாது; அவன் வந்து மன்னிப்புக் கேட்கும் வரையிலும் பார்த்திராமல் ஓடிச்சென்று கழுத்தைக் கட்டியணைத்து முத்தஞ்செய்திருக்கவும் முடியாது. அந்தத் தகப்பனின் வீட்டுவாசல் தன் மகனுக்காக திறந்தே கிடந்தது. நமது பெற்றோரை நினைத்துப் பாருங்கள். நாம் எத்தனை தவறு செய்தபோதும் அவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கினார்களா? இவர்களே இப்படியென்றால் ஆண்டவர் எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும்!
இங்கே தேவனுடைய வார்த்தையை உரைக்கிறவன், தேவனுடைய குணாதிசயத்தை வெளிப்படுத்த தவறிவிட்டான். பெருங்காற்றும், பெரிய மீனும் படிப்பித்த பாடத்தையும் மறந்துவிட்டான். தன் உயிரைத் தேவன் அற்புதமாக மீட்டுக் கொடுத்ததையும் மறந்துவிட்டான். இப்போது ஒரு ஆமணக்குச் செடி; அத்துடன் ஒரு பூச்சி, உஷ்ணமான கீழ்க்காற்று எல்லாமே தேவனுக்குக் கீழ்ப்படிந்தன. இவற்றைக்கொண்டு ஒரு மனிதனுக்குக் கர்த்தர் கற்றுக்கொடுக்க நேரிட்டது என்ன பரிதாபம்! ஆனாலும் அவனால் ஏற்கமுடியவில்லை, ஆம், நினிவே மக்களைவிட தானே கர்த்தரைவிட்டு தூரம் போய்விட்டதை அவன் உணரவில்லை. என்றாலும் கர்த்தர் இன்னமும் யோனாவை நேசித்தார். தேவ பிள்ளையே, இன்னுமொரு ஆமணக்குச்செடி இனி நமக்காக முளைக்காது. தமது குமாரனையே தந்து, நம்மேல் கொண்டுள்ள மனதுருக்கத்தை தேவன் வெளிப்படுத்திவிட்டார். அப்படியிருக்க, நம்மை சூழ்ந்துள்ள வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத ஏராளமான மக்களைக் குறித்த பொறுப்பை நாம் மறக்கலாமா! ஆண்டவருடைய குணாதிசயங்களை வெளிப் படுத்த நம்மை ஒப்புவிப்போமாக!
ஜெபம்: “பிதாவே, என் கடின நெஞ்சை மாற்றி, உமது மனதுருக்கத்தை வெளிப்படுத்தி மக்களுக்காகப் பரிதபிக்கின்றவனாக என்னை மாற்றும். ஆமென்.”