ஜெபக்குறிப்பு: மே 31 ஞாயிறு
“.. இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்” (1சாமு.7:12) இவ்வாக்குப்படியே பரிசுத்தராகிய கர்த்தர் இம்மாதத்தை நன்மையாக நடத்தினார். இந்த நாளின் பரிசுத்த ஆராதனையிலும் நம்மை பாதுகாத்து நடத்தின அவருக்கே எல்லா மகிமையையும் செலுத்தி அவருக்கு முன்பாக பணிந்து தொழுதுகொள்வோம்.
சாவும் சந்தோஷம்தான்!
தியானம்: மே 31 ஞாயிறு; வாசிப்பு: வெளிப்படுத்தல் 12:9-12
“மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் ….தங்கள் ஜீவனையும்
பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின்
வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.” (வெளி. 12:11)
அசைகின்ற எந்த உயிரினமும், ஒரு சிற்றெறும்புகூட, சாகாதபடிக்குத் தன்னைப் பாதுகாப்பதற்காக வேகமாக ஓடுகிறது. ஆனால், மனுஷனோ, ஒருபடி மேலே நின்று, “சாவு நேர்ந்தாலும்கூட” என்று சவாலிட வேண்டியவனாய் இருக்கிறான். இந்த சவாலில் நாம் ஜெயம் பெறுவோமா? அல்லது, உலக வாழ்வை நேசித்து தோற்றுப்போவோமா?
ஆதித் திருச்சபை சுகமாக வாழவில்லை; பல துன்புறுத்தல்களுக்கு ஆளானது. சிதறடிக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும்கூட அன்று (அப். 8:1) அவர்கள் பின்வாங்கிப்போகவில்லை. மாறாக, சென்ற இடங்களில் சுவிசேஷத்தைப் பரப்பினர். பவுலடியாரின் வாழ்வு நமக்கு மாதிரி என்று சொல்லுவதைவிட, சவாலான ஒன்று என்றால் மிகையாகாது. ரோமர் 8:35-39 வரையான வசனங்களை எழுதுவதற்கு பவுலுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்! சாவின் விளிம்பில் நின்றபோதும், சந்தோஷ நிருபங்களை தைரியமாக எழுத எப்படி அவரால் முடிந்தது? மிஷெனரிப் பணிக்காகச் சென்ற அநேகருடைய வாழ்வு மரணத்திற்கு உட்பட்டும், அவர்களுடைய பணி தொடர்ந்த சம்பவங்கள் நாமறிந்ததே. இவ்வருட ஆரம்பத்திலேயே நான்கு தேவாலயங்கள் நமது நாட்டிலேயே அடித்து நொறுக்கப்பட்டபோதும், அந்த விசுவாசிகள் தளர்ந்து, இயேசு வேண்டாம் என்று ஓடியா போனார்கள்? இல்லையே!
நமது வாழ்வும், சாவும் சாட்சியுள்ளதாயிருப்பது நமது தெரிவிலும் தீர்மானத்திலும்தான் தங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் பிள்ளைகளுக்கு உபத்திரவம் உண்டு; அது இப்போது வாசலுக்கு வந்துவிட்டது என்ற உண்மையை நாம் உணரவேண்டும். கிறிஸ்துவின் நாமத்திற்காய் பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்போதுதான் நமது விசுவாசம் சவாலுக்குட்படுகிறது. இயேசு சிலுவையில் தமது ஜீவனை விட்டபோதே சாத்தான் பயங்கரமாகத் தாக்கப்பட்டுவிட்டான் என்ற உண்மையை நாம் மறந்துவிடுவது ஏன்? அந்தப் பலி நமக்காக, நமது இடத்திலிருந்து இயேசு செலுத்தினார். அந்த வெற்றி இயேசுவின் பலியினால் பெறப்பட்டது. அந்த வெற்றியை நாம் விசுவாசிப்பது மெய்யானால், பிசாசின் சோதனைகளைச் சந்திக்கும்போது பயப்படவோ அல்லது தப்பி ஓடவோ அவசியமில்லை. நமக்கு ஜெயம் கொடுத்த ஆண்டவரை நாம் உண்மைத்துவமாய் சேவிப்போமானால், அது போதும். தேவபிள்ளையே, சாத்தான் உன்னைப் பார்த்து நடுங்குகிறான் என்ற உண்மையை நீ மறப்பதால்தான் வாழ்வில் உனக்குத் தோல்வி. எழுந்து காலூன்றி நின்று தீமையை எதிர்த்து ஜெயம் பெற்றுக்கொள். சாவுதான் நேர்ந்தாலும், அதுவும் சந்தோஷமாகவே இருக்கும்.
ஜெபம்: “பாவத்தை வென்று ஜெயம்பெற்ற ஆண்டவரே, நீர் எனக்குள் இருப்பதற்காய் நன்றி. மரணம் நேர்ந்தாலும் உமக்குள் ஜெய வாழ்வு வாழ கிருபையாயிரும். ஆமென்”
வாக்குத்தத்தம்: மே 30 சனி
…நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து …. சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். (எசே.11:19)
ஜெபக்குறிப்பு: மே 30 சனி
“..உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத்.28:20) என வாக்குப் பண்ணின தேவன்தாமே 6 நாடுகளில் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழிய ஸ்தாபனங்களோடுகூட இருந்து, ஊழியத்தின் எல்லையை விரிவாக்கி, தேவனுடைய திட்டங்கள் நிறைவேற ஜெபிப்போம்.
ராஜ்யம் சரிந்தது!
தியானம்: மே 30 சனி; வாசிப்பு: 2இராஜாக்கள் 17:6-23
“…தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின
தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல்
புத்திரர் பாவஞ்செய்து…..” (2 இராஜாக்கள் 17:7)
“ஆண்டவரே நமது பழைய வாழ்வை மறந்து ஏற்றுக்கொண்டபின், நாம் அவற்றைத் திரும்பிப் பார்ப்பது சரியாகுமா?” என்று ஒருவர் கேட்டார். அந்த நினைவுகள் நம்மைத் திரும்பவும் பழைய வாழ்வுக்கு இழுத்துச்செல்ல இடமளிக்கக்கூடாது. ஆனால், கர்த்தர் நம்மை எந்த நிலையிலிருந்து எப்படி மீட்டெடுத்தார் என்பதை நினைக்கத் தவறினால், அதுவே நமது வீழ்ச்சிக்கு வித்திட்டுவிடும். நாம் பெற்ற இரட்சிப்பிற்காக தினமும் ஆண்டவருக்கு நன்றி சொல்லப் பழகிக்கொள்வோமாக. அது நம்மை மரணபரியந்தம் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக வாழ வழிவகுக்கும்.
இக்காரியத்தில்தான் இஸ்ரவேலர் பெருந்தவறு செய்தனர்;. எகிப்தில் அடிமையாயிருந்து தத்தளித்த தங்களை மீட்டு, அங்கிருந்து புறப்படப்பண்ணி, சுதந்தரமாக ஒரு தேசத்தையே கொடுத்து வாழவைத்த தேவனாகிய கர்த்தரை மறந்து, தமக்கென்று இரண்டு கன்றுக்குட்டிகளை ஏற்படுத்தி வணங்க ஆரம்பித்திருந்தனர், யூதாவிலிருந்து பிரிந்துசென்ற இஸ்ரவேலர் (1 இராஜா.12:28). தங்களைச் சுற்றியிருந்தவர்களின் தீய காரியங்களைப் பின்பற்றி, விக்கிரகங்களை ஆராதித்தனர் இந்த இஸ்ரவேலர். விக்கிரகாராதனையை வெளிப்படையாகச் செய்த அவர்கள், இரகசிய பாவத்திலும் விழுந்தனர் (வச.9). பல தடவைகள் பலவிதங்களில் கர்த்தர் எச்சரித்தும் மனந்திரும்பாமற்போனது இந்த இஸ்ரவேல். 2 இராஜாக்கள் 17ஆம் அதிகாரம் ஒரு துக்ககரமான அதிகாரம். ஏனெனில், வச.23 வுடன் வடராஜ்யமான இஸ்ரவேலின் கதை முடிந்தது.
நாமும் பல்வேறு இன மக்கள் மத்தியில், பலவித பழக்கவழக்கங்கள், சமய சடங்காசாரங்கள் மத்தியிலேதான் வாழுகிறோம். அடுத்தவனின் காரியங்களைப் பின்பற்றுவது மிக இலகு. அது அழகாயிருக்கும்; நாலுபேருடன் சேர்ந்து பழக, மனம்விரும்பியபடி வாழ வாய்ப்பளிக்கும்! நாளடைவில், இதிலென்ன, என் இருதயம் இயேசுவைத்தான் சேவிக்கும் என்று துணிகரமாகச் சொல்லவும் வைக்கும். தேவனுடைய நீடியபொறுமை என்பது, நமது புரிந்துகொள்ளும் திறனுக்கும் அப்பாற்பட்டது. இஸ்ரவேலை எச்சரித்ததை விட, இன்று நம்மை அதிகமாக எச்சரித்து, ஆலோசனைகள் தந்து, கல்வாரி அன்பையும் நமக்குள் ஊற்றியிருக்கிறார் ஆண்டவர். சிலசமயங்களில் அவருக்காக நிற்பது கடினமாயிருக்கலாம். ஆனால், தெரிந்தெடுக்க வேண்டியது ஒன்றுதான். தேவனுக்காக வாழப் போகிறோமா? நமக்காகச் சாகப்போகிறோமா? தேவனை மகிமைப்படுத்தாத இஸ்ரவேல் வடராஜ்யம் சரிந்தது. தேவனை மகிமைப்படுத்தாத காரியங்கள் நம்மிடமும் இருக்குமானால், அவற்றை அறிக்கை செய்து இன்றே வெறுத்து ஒதுக்குவோமாக.
ஜெபம்: “பிதாவே, உம்மைத் துக்கப்படுத்துகின்ற காரியம் என்னில் இருந்தால் அதை உணர்த்தும். உமக்காக உறுதியாய் நிற்கப் பெலன் தாரும். ஆமென்.”