ஜெபக்குறிப்பு: மார்ச் 31 வியாழன்

“.. அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்” (ஏசா.63:10) என்ற வாக்குப்படியே, இம்மாதம் முழுவதும் நம்மை ஆதரித்து, கடினமான எல்லாப் பாதைகளிலும் நம்மைத் தாங்கி ஏந்தி சுமந்து வந்த அவருக்கே எல்லா துதிகளையும் செலுத்தி ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

…மிஞ்சி எண்ணாதிருங்கள்.

தியானம்: மார்ச் 31 வியாழன்; வேத வாசிப்பு: லூக்கா 18:9-14

‘கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்’ (யாக்கோபு 4:10).

ஆண்டவரை ஏற்றுக்கொண்டு அவருக்காக வாழ ஆரம்பிக்கும்போது, நாம் அவரது சமுகத்தை அதிகமாகத் தேடுவோம். ஜெபத்தில் அநேக நேரத்தைச் செலவிடுவோம். வேதத்தை ஆர்வத்தோடு படித்துத் தியானிப்போம். சந்திப்போருக்கெல்லாம் ஆண்டவரைக் குறித்துச் சொல்லுவோம். இவ்விதமான ஒரு தாகம், ஆவல், வேகம் நம்மிலே தோன்றும். ஆனால், நாளடைவில் அவைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். அதன்பின் ‘நான் ஆண்டவருக்காக அதைச் செய்தேன், இதைச் செய்கிறேன், இப்படிச் செய்யப் போகிறேன்’ என்று நம்மை நாமே திருப்திப்படுத்துகின்ற ஒரு வாழ்வுக்குள் நாம் சுலபமாக வந்துவிடுவதுண்டு.

இன்றைய வாசிப்புப் பகுதியிலே, தங்களை நீதிமான்கள் என்று எண்ணி, மற்றவர்களை அற்பமாக எண்ணுகின்ற சிலரைக் குறித்து இயேசு சொன்ன ஒரு உவமையை வாசித்தோம். ஜெபிப்பதற்கு நாம் தேவசமுகத்திற்குப் போகுமுன்பே, நம்மைக் குறித்து தேவன் சகலவற்றையும் அறிந்திருக்கிறார் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஆனால், இந்தப் பரிசேயனோ தன்னைக் குறித்து அளவுக்கு மிஞ்சி எண்ணினது மாத்திரமல்ல, தான் செய்த காரியங்களைத் தேவனுக்கு முன்பாகப் பட்டியல் போட்டுச் சொல்லிக்காட்டுகிறான். இவையெல்லாம் தேவனுக்குத் தெரியாது என்று எண்ணியதுபோல் அவற்றைத் தேவனுக்குத் தெரியப்படுத்துகிறான். ஆனால் ஆயக்காரனோ, ‘தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்’ என மிகச் சுருக்கமான ஒரு ஜெபத்தை ஏறெடுக்கிறான். இவர்களில் நாம் யார்?

நமது வாழ்வும், நாம் தேவனுக்காய் செய்யும் காரியங்களும் தேவனுடைய சமுகத்தில் குப்பையும், தூசியும் போன்றது. அதைக்குறித்து எந்தப் பெருமையும் நாம் கொள்ளுவதற்கில்லை. இன்னும் என்னவெல்லாம் நாம் ஆண்டவருக்காய் செய்யலாம், எப்படி அவர் ஊழியத்தை விருத்தியாக்கலாம் என்ற எண்ணமே நமக்குள் எப்போதும் இருக்கவேண்டுமே தவிர, அவருக்காக, அவருடைய ஊழியத்திற்காக நாம் செய்யும் காரியங்களைக் குறித்து நாம் பெருமைகொள்ள ஒன்றுமேயில்லை. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்பட்டால் அவர் நம்மை உயர்த்துவார். நம்மைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி நாம் எண்ணலாகாது. நமது வாழ்வைக் குறித்து நாம் கூறும் சாட்சியல்ல; மற்றவர்கள் நமது வாழ்வைக் குறித்துக் கூறும் சாட்சியே வலிமையுள்ள சாட்சியாக இருக்கும். எந்த நிலையிலும் நம்மைத் தாழ்த்தி வாழக் கற்றுக்கொள்வோம். தாழ்மையோடு சேவைச் செய்ய நம்மை அர்ப்பணிப்போம்.

சிந்தனைக்கு: சீஷரின் கால்களைக் கழுவி தாழ்மையின் ஊழியத்தைக் கற்றுத் தந்த ஆண்டவரின் வழியிலே நாம் நிற்கிறோமா என நம்மை ஆராய்ந்து பார்த்து, பெருமையான நினைவுகளை அழித்து, நம்மைத் தேவ கரத்தில் ஒப்புவிப்போமாக.

ஜெபக்குறிப்பு: மார்ச் 30 புதன்

“..கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாகிய” (சங்.119:105) கர்த்தருடைய வேதத்தை தியானிக்க முடியாதபடி, விசுவாசிகளை ஆவிக்குரிய வாழ்விலிருந்து திசைதிருப்ப சாத்தான் கையாளும் பலவகையான தந்திரங்களில் மாணவர்கள், புதிய விசுவாசிகள் அடிமைப்பட்டு விடாதபடி விழிப்போடிருக்க ஜெபிப்போம்.

முதன்மையானது தேவனுக்கே!

தியானம்: மார்ச் 30 புதன்; வேத வாசிப்பு: மல்கியா 1:6-14

‘…பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலீபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக’ (லேவியராகமம் 22:22).

பிரபல்யமான ஆலயமொன்றின் பிரசங்கபீடத்தில் நின்றிருந்த குருவானவர், ‘தயவுசெய்து கிழிந்த தாள்களையும் செல்லாக் காசுகளையும் காணிக்கைப் பெட்டியில் போடவேண்டாம்’ என்று கூறினார். இதைக் கேட்டபோது மிகவும் வெட்கமாகவும், துக்கமாகவும் இருந்தது.

‘நான் பிதாவானால், என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே? ஊனமானதை உங்கள் அதிபதிக்குக் கொடுத்தால் அவன் அதில் பிரியப்படுவானோ? அப்படியானால் ஏன் எனக்கு ஊனமானதைச் செலுத்துகிறீர்கள்?’ என்று இன்று தேவன் நம்மைப் பார்த்துக் கேட்டால் நமது பதில் என்ன? தேவனுக்கு முதன்மையானதைக் கொடுக்கப் பழகிக்கொள்வோம்.

அன்று ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுக்களிலும், அவைகளில் கொழுமையானவைகளிலும் தேவனுக்குக் காணிக்கை கொண்டுவந்தான். தேவன் அதை அங்கீகரித்தார் என்று வாசிக்கிறோம் (ஆதி.4:3,4). ஆபேல் பார்த்துப் பார்த்து சிறந்ததைத் தெரிவுசெய்து தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுத்தான். தேவனுக்கு அவனுடைய மனநோக்குப் பிரியமாயிருந்தது.

நாம் தேவனுக்குக் கொடுப்பவை எவை? கீரை விற்பவன் வேண்டாம் என்று திருப்பித்தந்த கிழிந்த பத்து ரூபாய் நோட்டையா? இல்லாவிட்டால் பிச்சைக்காரனே வேண்டாம் என்று சொல்லிப்போகும் ஐந்து ரூபாய் சில்லறையையா? சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் அதிக மதிப்புள்ள தாள்களை கொடுக்கிறோம். ஆனால் ஆலயத்தில் காணிக்கைப் பை வந்ததும், பாக்கெட்டுக்குள்ளும், கைப்பைக்குள்ளும் கையைவிட்டு சில்லறை ஏதும் அகப்படுமா என்று தேடித்தேடி எடுத்துக் கொடுக்கிறோம். அருமையானவர்களே, நமது நிலைமையைக் குறித்து நாம் வெட்கப்பட்டு நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும்.

நாம் கொடுக்கும் காணிக்கையில்; ஆண்டவர் வாழுகிறவர் அல்ல. அவர் அண்டசராசரங்களையும் படைத்து அவற்றை ஆளுகை செய்யும் உன்னதமான கர்த்தர். அவருக்கு நாம் கொடுக்கும் காணிக்கை தேவையற்றது. ஆனால் நாம், அவர்மீது கொண்டுள்ள அன்பின் அடையாளமாகவே கொடுக்கிறோம். அப்படியானால் தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பை நாம் ஏன் சிந்திப்பதில்லை? நமக்காகத் தமது ஜீவனையே கொடுத்தாரே ஆண்டவர்! இந்த தேவனில் நாம் எவ்வளவு அன்பு வைத்திருக்கவேண்டும்! அந்த அன்பு உண்மையானால் நமக்குள்ளதில் முதன்மையானதைக் கொடுப்போம்!

சிந்தனைக்கு: உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய் என்ற பாடலைப் பாடும்போது நமது மனஉணர்வு என்ன? இதுவரை நாம் கொடுத்த கொடையையும், கொடுத்த மனநிலையையும் சிந்தித்துப் பார்ப்போமாக.