ஜெபக்குறிப்பு: மார்ச் 1 செவ்வாய்

“சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற” (கொலோ. 2:10) வல்லமையுள்ள கர்த்தர்தாமே இந்த மாதம் முழுவதும் நாம் கையிட்டுச் செய்யும் காரியங்களில் நம்மோடிருந்து  வழிநடத்தும்படியாக  ஜெபம் செய்வோம்.

உடைந்த உள்ளத்துடன்…

தியானம்: மார்ச் 1 செவ்வாய்; வேத வாசிப்பு: யாத்திராகமம் 40:1-16, 34

‘மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப் பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக’ (யாத்.26:34).

தவறு செய்த பிள்ளையை அடித்துவிட்டு, பின்னர் அவன் பக்கத்தில் அமர்ந்திருந்து தடவிக்கொடுத்துக் கண் கலங்கும் தகப்பன்மாரைக் கண்டிருக்கிறீர்களா! மெய்யான அன்பில், பாசத்துடன் கண்டிப்பும் கலந்திருக்கும். கண்டிப்பிற்குப் பின்பாக அன்பு அதிகளவாய் ஊற்றெடுக்கும்.

மலையுச்சிக்கு மோசேயை அழைத்த தேவன், மனுஷனை நியாயந்தீர்க்கின்ற நியாயப்பிரமாணங்களை மாத்திரம் கொடுத்தனுப்பியிருந்தால், தேவநீதி மாத்திரமே வெளிப்பட்டிருக்கும். கர்த்தரோ அதனுடன் கூடவே ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியையும் காண்பித்தே அனுப்பினார். அதன் மகாபரிசுத்த ஸ்தலத்தில், கற்பனைகள் எழுதப்பட்ட கற்பலகைகளைக்கொண்ட சாட்சிப்பெட்டி வைக்கப்படவேண்டும். அது மனிதனை நியாயந்தீர்க்கும். கர்த்தரோ, அந்தப் பெட்டியின்மீது கிருபாசனத்தை வைக்கும்படி மோசேக்குக் கட்டளையிட்டார். அது கிருபையின் ஆசனமாகும். நீதியுடன் கிருபையையும் வெளிப்படுத்துகின்ற ஆண்டவர் எவ்வளவு உயர்ந்தவர்! ஏற்கனவே மலையடிவாரத்தில் கற்பனைகளை உடைத்துப்போட்ட இஸ்ரவேலில் கர்த்தர் கோபங்கொண்டாலும், புறக்கணிக்கவில்லை. திரும்பவும் மோசேயை அழைத்து, அவனைக்கொண்டு பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளை எழுதுவித்தார் (யாத்.34:28). திரும்பி வந்த மோசே ஆசரிப்புக்கூடாரத்தை, ‘கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்’. சாட்சிப்பெட்டியின்மீது கிருபாசன மூடியை வைத்து, மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.

கற்பனைகள் அடங்கிய சாட்சிப்பெட்டி தேவனுடைய நீதியை வெளிப்படுத்தியது; அதன் மீது வைக்கப்பட்ட கிருபாசனம் பாவ மனிதன் மீட்கப்பட தமது கிருபை வேண்டும் என்பதை பழைய ஏற்பாட்டிலேயே கர்த்தர் வெளிப்படுத்திவிட்டார். அந்தக் கிருபை கிறிஸ்துவில் நமக்கு வெளிப்பட்டிருக்கிறது. அவர் தம்மைப் பலியாக்கியதால் திரைச்சீலை கிழிய, தேவசந்நிதானத்திற்கு தைரியமாய் கிட்டிச்சேருகின்ற பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இந்தப் பெரிய கிருபையை, அதனாலுண்டான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்று, அதனைத் துஷ்ப்பிரயோகம் செய்வோமானால் நாம் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வோம்? (எபி.2:4) ஆகவே, ஆண்டவரின் அன்பையும் கிருபையை யும் நினைந்து உடைந்த உள்ளத்துடனும் நொருங்குண்ட ஆவியுடனும், அவருடைய கிருபாசனத்தண்டை சேருவோமாக.

‘ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்’ (எபிரெயர் 4:16).

சிந்தனைக்கு: நாம் மரணத்துக்கு நியமிக்கப்பட்டவர்கள் என்பதையும், தேவ கிருபையே நம்மை மீட்டது என்றும் நினைக்கும்போது, நமது உள்ளம் உடையவில்லையா???

பூரண வாக்குறுதி

அதிகாலை வேளையில்… (ஜனவரி-பிப்ரவரி 2016)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: ஆதியாகமம் 32:22-32
ஏழாம் நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப்
பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றி வந்தார்கள்; அன்றைய தினத்தில்
மாத்திரம் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள் (யோசுவா 6: 15).

உலகத்தில் சுதந்திரமாய் உள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தலை நடத்துகின்றன. அரசாங்கத்தின் இந்த ஜனநாயக முறையானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்கு வாக்குறுதிகள் மற்றும் உறுதிமொழிகளையும் விளக்குவதற்கு கூட்டங்கள் போடவும் அதன்படி தங்கள் அலுவல்கள் நடத்தவும் வாய்ப்புகளைத் தருகிறது. பொதுவாக இத்தகைய கூட்டங்களில் அதிகமான உறுதி மொழிகளைத் தந்து வாக்காளரின் எண்ணங்களைக் கவருபவரே வெற்றியைப் பெறுகிறார். ஆனால் இவ்விதமான அரசியல் கட்சிகள் தரும் வாக்குறுதிகள் பெரும்பாலும் அக்கூட்டத்திலேயே முடிந்து விடுகிறது என்பதனை வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

எனவே வாக்காளர்களுக்கு தங்களுடைய வேட்பாளரைப் பற்றிய கரிசனை ஏற்படுவது இயல்பானதே. ஆனால் இவையனைத்துக்கும் மாறாக தேவனுடைய வாக்குகள் உள்ளன. ஒரு விசுவாசி அவைகளில் பூரண நம்பிக்கையை வைக்கலாம். தேவன் தாம் அருளிய தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றியதை மிகச் சரியாக பதிவும் செய்து வைக்கிறார்.

தேவன் தமது வாக்குறுதியை பூரணமாய் நிறைவேற்றுகிறார் என்பதற்கு இஸ்ரவேலர் எரிகோ பட்டணத்தின் மீது பெற்ற வெற்றியை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். இஸ்ரவேலருக்கு வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு முன்னர் யோசுவா, யோர்தானுக்கு அப்புறம் உள்ள எரிகோ பட்டணத்தை வேவு பார்ப்பதற்கு இரண்டு மனிதர்களை அனுப்பினார். அவர்கள் அப்பட்டணத்திற்குச் சென்று செய்திகளை சேகரிக்க ஏற்ற இடமான ஓரிடத்துக்கு வந்தனர். அது ராகாப் என்னும் வேசியின் வீடாகும்.

ராகாபின் வாழ்வு முறையை அந்த இஸ்ரவேல் மனிதர்கள் கண்டிக்கவில்லை. ஆனால் கர்த்தராகிய தேவன் ராகாபின் இருதயத்தில் கிரியை செய்ய ஆரம்பித்திருந்தார். எரிகோவின் அரசர் அந்த இரு வேவுகாரர்களையும் பிடிக்க முயற்சித்த பொழுது, ராகாப் அவர்களை சணல் தட்டைகளுக்கு மறைத்து விட்டாள். யெகோவா தேவன் மீது தான் வைத்திருந்த விசுவாசத்தை, “.. உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்” (யோசு.2:11). இந்த இரகசிய உளவாளிகளுக்கு ராகாப் உதவியதால், அந்த பட்டணத்தின் அழிவிலிருந்து அவளுக்கும் அவளது வீட்டாருக்கும் தேவன் இரட்சிப்பைக் கட்டளையிட்டார்.

இஸ்ரவேலர் எரிகோ பட்டணத்தைக் கைப்பற்றுவதற்கு தேவன் கொடுத்த திட்டம் வித்தியாசமானது. ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு பட்டணத்தை அமைதியாய் ஒரு முறை ஆறு நாட்கள் சுற்றிவர வேண் டும். ஏழாம் நாளில் ஏழுதரம் சுற்றி வரவேண்டும். ஆசாரியர்கள் கொம்புகளினால் எக்காளங்களை ஊதும் நெடுந்தொனியாலும், ஜனங்களின் ஆர்ப்பரிப்பு தொனியாலும் எரிகோவின் மதில் விழும் என்பதே அது.

தேவன் கட்டளையிட்டபடியே இஸ்ரவேல் மக்கள் செய்தனர். ஏழாம் நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றி வந்தார்கள்; (யோசு. 6 :15) ஏழாம் நாளில் ஏழாம் முறை சுற்றி வந்தவுடன் ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எரிகோவின் கோட்டை தரைமட்டமானது. இஸ்ரவேலின் சேனை பட்டணத்துக்குள் தடையின்றி புகுந்து ராகாபும் அவளது குடும்பத்தினரையும் தவிர அப்பட்டணத்தில் உள்ள அனைவரையும் சங்காரம் பண்ணினார்கள். அவர்கள் தேவனுக்கு வெளிப்படையான கிரியையினால் கீழ்ப்படிந்ததினால் ஒரேநாளில் தேவனுடைய இரு பெரிய வாக்குறுதிகள் நிறைவேறியதை மக்கள் கண்டனர். கானான் தேசத்தின் காவல் நுழைவாயிலாக இருந்த எரிகோ பட்டணம் தேவன் தந்த கட்டளையின்படியே முற்றிலும் அழிக்கப்பட்டது. அது போலவே தேவன் வாக்குப்பண்ணியபடி ராகாபும் அவளது குடும்பமும் அழிவிலிருந்து காக்கப்பட்டனர்.

எரிகோ பட்டணத்து வெற்றியில் நாம் மற்றொரு தேவனுடைய வாக்குறுதியைக் காணலாம். தேவன் ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால் அதை அவர் கட்டாயம் நிறைவேற்றுவார் என்பதை வெளிப்படுத்த யோசுவா அழிக்கப்பட்ட எரிகோவின் மதிலைக் கட்டுபவனுக்கு ஒரு சாபத்தை அளித்தார். வசனம் 26இல் யோசுவா “இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக் கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன்” என்று மக்களை எச்சரித்தார்.

இந்த சாபமும் ஆகாப் அரசரின் அரசாட்சி காலத்தில் (கி.மு. சுமார் 925ஆம் ஆண்டு) பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினபொழுது நிறைவேறிற்று. கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக் கொடுத்தான் (1இரா.16:34). தேவன் தாம் வாக்குப்பண்ணியதைக் கட்டாயம் நிறைவேற்றுவார்.

ராகாபுக்கு அளிக்கப்பட்ட இரட்சிப்பின் வாக்குறுதியிலும், ஈயேல் என்பவரின் அழிவிலும் தேவன் கூறி வாக்குறுதியை இலகுவாக நாம் கருதக்கூடாது. தேவன் சொன்னதை நிறைவேற்றியே தீருவார். நீங்கள் அதனை நம்பலாம். வாக்கு மாறாத தேவனுடைய வாக்குகள் அடங்கிய சத்திய வேதத்தை வாசித்து அதனை நமக்கு உரிமையாக்கிக் கொள்ளுவோம்.

அதிகாலைப்பாடல்:

ஐயமும் அச்சமும் என்னைப் புயலெனத் தாக்கும்போது
மாறாத தேவனுடைய வாக்குறுதிகளை நான் பற்றிடுவேன்;
ஜீவனுள்ள தேவவார்த்தைகளே என்றும் என் வாழ்வின்
அடிப்படை நம்பிக்கையாய்க் கொண்டு வாழ்வேன்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி-பிப்ரவரி 2016)

1. தங்களது வெளியீடுகளான அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் ஆகிய புத்தகங்கள் மிக அழகான வேதவிளக்கங்களுடன் எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாய் இருக்கின்றன. கர்த்தர் தாமே சத்தியவசன ஊழியத்தை இன்னும் அதிகதிமாக ஆசீர்வதித்து அநேக ஆயிரமான மக்களுக்கு பயன்படுத்துவாராக!

Sis.Pradeepa, Vellore.

2. தாங்கள் அனுப்பித்தந்த விருத்தாப்பியம் என்ற புத்தகம் மிகமிக அருமையாக இருந்தது. ஒன்றரை நாட்களில் இதை படித்து முடித்துவிட்டேன். இந்நூல் இக்காலத்தின் வயது முதிர்ந்தோருக்கும். நம் பிள்ளைகளுக்கும் ஏற்றபடியும், வசனத்தின்படியும் அமைந்துள்ளது. எனக்கு அதிக பிரயோஜனமாக இருந்தது. இரண்டரை வருடங்களாக எனது கணவருக்கு நான் செய்யும் உதவிகளை நினைத்தும் அவரால் நான் படும் வேதனைகளை நினைத்து கவலையோடு ஆண்டவருடைய சமுகத்தில் அநேகந்தரம் போராடினது உண்டு. தங்களின் நூலைப் படித்தவுடன் கர்த்தர் தங்களுக்கு கொடுத்த பொறுமையை எண்ணி தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

Mrs.Nirmala doss, Udathagai.

3. நீங்கள் அனுப்பிய விருத்தாப்பியம் புத்தகம் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. அந்த புத்தகத்தைப் படித்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். எனக்கு 78 வயதாகிறது. இந்தநாள்வரை வீட்டின் வேலைகளை இயன்றளவு செய்து வருகிறேன். சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Daisy Simon, Coimbatore.

4. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் என் தனி ஜெபத்திற்கு பெரிதும் உதவியாயிருக்கிறது. சகோதரிகள் சாந்திபொன்னு, தர்ஷினி சேவியர் அவர்களின் விளக்கவுரை நல்ல ஒரு வழிகாட்டியாக இருக்கின்றது. மேலும் வேதவாசிப்பு வரிசை அட்டவணை மூலம் இதுவரை 5 முறை வேதாகமத்தை வாசித்துமுடிக்க தேவன் பெலன் தந்தார். தங்கள் ஊழியம் மேலும் விரிவடையட்டும் என்று குடும்பமாக ஜெபித்து வருகிறோம்.

Sis.Shanthi Manipillai, Coimbatore.

5. கடந்த 3 ஆண்டுகளாக சத்தியவசன பங்காளராக இருந்துவருகிறோம். சிறப்பாக அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற புத்தகத்தின் தியானங்களை எங்கள் குடும்ப ஜெபத்தில் வாசித்து ஜெபம் செய்து வருகிறோம். தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் செய்திகள், வேத விளக்கங்களைக் கேட்டு ஆசீர்வாதம் அடைகிறோம். ஊழியம் மேன் மேலும் வளர ஜெபிக்கிறோம்.

Mrs.Janet Mary, Madurai.

6. The book `Viruthappiyam’ is a great encouragement for the elderly and my special appreciation for the Author. May the Good Lord continue to enlarge your ministry and provide for all the needs in my prayer.

Dr.Jebrraj Samuel, Chennai

ஆசிரியரிடமிருந்து…

(மார்ச்-ஏப்ரல் 2016)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

“நம்முடைய பாவங்களையும் சாபங்களையும் சிலுவையில் சுமந்து தீர்த்த” ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இதிலுள்ள ஒவ்வொரு தியானங்களும் வாசிக்கிற ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பிரயோஜனமாயிருக்க வேண்டுதல் செய்கிறோம். தியானபுத்தகத்தின் மூலமாக தாங்கள் பெற்றுவரும் ஆசீர்வாத நன்மைகளை எங்களுக்கு எழுதுங்கள். மற்றவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள்.

தவிர்க்க முடியாத சில காரணத்தால் 2016 ஆம் வருட காலண்டர் தாமதமாக அனுப்ப நேரிட்டது. கடந்த மாதத்தில் பங்காளர்கள் அனைவருக்கும் காலண்டரை அனுப்பி வைத்திருந்தோம். காலண்டர் விநியோகத்திற்கும் உள்ளது. கூடுதலாக தேவைப்படுவோரும் எங்களுடன் தொடர்புகொள்ள அன்பாய் கேட்கிறோம்.

2015 ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். அவர்களது பெயர் பட்டியலை 7ஆம் பக்கத்திலே பிரசுரித்துள்ளோம். தங்களது பெயர்களைத் தெரிவித்தும் பிரசுரிக்கப்படாமல் இருந்தால் எங்களுக்கு எழுதுங்கள்.

எதிர்பாராமல் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையினால் ஞாயிறு காலை ‘புது யுகம்’ டிவியில் ஒளிபரப்பி வந்த தொலைகாட்சி நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் துவங்க ஜெபத்தோடு முயற்சிக்கிறோம்.

இவ்விதழில் மார்ச் மாத தியானங்களை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் உடைக்கப்படுதலின் அனுபவத்தை மையமாக வைத்து எழுதியுள்ளார்கள். ஏப்ரல் மாத தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். தியானங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கும்,

கே.ப.ஆபிரகாம்