வாக்குத்தத்தம்: 2018 மார்ச் 1 வியாழன்

இயேசு அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள். (மாற்கு 8:7,8)
வேதவாசிப்பு: எண்ணாகமம்.15-17 | மாற்கு.8:1-21

ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 1 வியாழன்

“கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது” (எரேமி.10:6) வல்லமையுள்ள தேவன் இப்புதிய மாதத்தில் நம்மோடி ருந்து  தமது ஓங்கியபுயத்தால் நம்மை தாங்கி வழிநடத்திட  நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.

இயற்கையை நேசிப்போம்!

தியானம்: 2018 மார்ச் 1 வியாழன்; வேத வாசிப்பு: ஆதியாகமம் 3:17-19

“…பூமி உன்னிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்…” (ஆதி. 3:17).

அறுவடை முடிந்து, அடுத்த விதைப்பிற்கான கால இடை வெளிக்குள், நமது பிரதேச வயல் நிலங்களில் புல், முள், கொடி செடி எல்லாம் உயர வளர்ந்திருக்கக் காணலாம். அவற்றைச் சுத்தம் செய்து, நிலத்தை உழுது, பண்படுத்தவே ஒரு தொகை பணம் செலவாகி விடும். இது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில், இயற்கையில் மனிதர் ஏற்படுத்திய சீர்கேடுகள் காரணமாக, சுவாசக் கோளாறுகள், குடிநீர் பிரச்சனைகள், கண் வருத்தங்கள் என்று எத்தனை எத்தனை? இவை யாவும் ஏற்படுவது ஏன்?

ஏதேன் அழகான விளைச்சலான பூமி. மனிதனுக்குத் தேவையான ஆகாரத்தை அது நிறைவாகக் கொடுத்தது. ஆதாம் அதைப் பண்படுத்திப் பாதுகாத்தான். அதற்காக வியர்வை சிந்தவேண்டிய அவசியம் ஆதாமுக்கு இருக்கவில்லை. ஏனெனில் பூமி அவனுக்கு நல்ல பலனைக் கொடுத்தது. எப்போது மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், தேவனுடனான உறவைவிட்டுப் பிரிந்தானோ, எப்போது மனித உறவைக் கெடுத்தானோ, அப்போதே பூமியும் இயற்கையும் அவனுக்கு விரோதிகளாயின. “நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே…” (வச.17) என்பதை கவனிக்கவேண்டும். தேவனுடைய படைப்பிலே எல்லாமே நல்லதுதான். நன்மை தீமை அறிகின்ற விருட்சமும் நல்லதுதான். ஆனால், அது மனிதனுக்குத் தேவையில்லையென்றுதானே தேவன் விலக்கி வைத்தாரே தவிர, அந்த விருட்சம் தன்னில்தானே தீயது அல்ல. மனிதன் தேவனுடைய சொல்லை மீறினான். அவனுடைய பாவத்தால் பூமி சபிக்கப்பட்டது. இயற்கை தடுமாறியது. பஞ்சங்களும் உண்டாயின.

சபிக்கப்பட்ட பூமி, ஆபேலின் இரத்தத்தை வாங்கிக்கொண்டது. இந்தப் பூமியிலே ஆபேலின் இரத்தத்தைச் சிந்திய காயீன் சபிக்கப்பட்டிருப்பான் என்றார் கர்த்தர் (ஆதி.4:10,11). நியாயம் கேட்டுக் கூப்பிட்ட ஆபேலின் இரத்தம் சிந்தப்பட்ட இதே பூமியில்தான், மனிதனின் பாவத்தைச் சுமந்து தீர்த்த கிறிஸ்துவின் இரத்தமும் சிந்தப்பட்டது. அன்று ஆபேலின் மரணத்திற்குக் காரணமான காயீன் சபிக்கப்பட்டான். இன்று கிறிஸ்துவின் மரணத்துக்குக் காரணமான நாம் தேவ கிருபையினாலே மீட்கப்பட்டிருக்கிறோம். ஒருநாள் உண்டு. தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாகச் சிருஷ்டிப்பார்; எல்லாம் புதிதாகும். அதுவரைக்கும் இந்தப் பூமியை, இந்த இயற்கையைப் பாதுகாக்கவேண்டிய முழு பொறுப்பு பாவம் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெற்றுக்கொண்ட நமக்குரியது. இயற்கையைச் சீண்டாமல் அதை நேசிப்போம்.

 “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன். முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” (ஏசாயா 65:17).

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நீர் சிருஷ்டித்த இயற்கைகளுக்காக மழையைத் தரும் மேகங்களுக்காக உமக்கு நன்றி சொல்லுகிறோம். இவற்றை அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்க உமதருளைத் தாரும். ஆமென்.

கர்த்தரைத் துதித்தல்!

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2018)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி : 1 நாளாகமம் 23: 1- 32
“நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து … ” (1நாளா.23:30).

தாவீது அரசர் தனது வாழ்நாளில் பல ஆண்டுகள் நாடோடியாக அலைந்து திரியநேரிட்டது. எனவே அவர் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கென ஒரு நிலையான ஸ்தலத்தைக் கட்ட விரும்பினார். ஆனால் தாவீது யுத்த மனிதராய் இருந்ததினால் அந்த வாய்ப்பினை தேவன் அவருக்குத் தர விரும்பவில்லை. எனவே தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்குக் கட்டளைகொடுத்தார். (1நாளா.22:6).

தேவனுடைய ஆலயத்தைக் கட்டு வதில் உறுதியாயிருந்த தாவீது அதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்து கொடுத்தார். கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்கள், ஆணிகளுக்குத் தேவையான இரும்பு மற்றும் கட்டிட வேலையாட்களையும் நிபுணர்களையும் சேகரித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தேவனைத் துதிக்க ஒரு பாடகர் குழுவினை அமைத்தது அவருடைய சிறந்த பங்காக அமைந்தது. லேவியரின் பிரபுக்களுடன் மூன்று குடும்பத்தினரை ஆலயத் திருப்பணிக்கென தனியாகப் பிரித்து வைத்தார். அவர்கள் வெறும் பாடகர்கள் மாத்திரமல்ல; தீர்க்கதரிசிகளாகவும் இருந்தனர். மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்து வைத்தார்கள் (1 நாளா.25:1).

தலைமுறை தலைமுறையாக இந்த பாடும் பொறுப்பு தகப்பனிடமிருந்து மகனுக்குச் செல்லவேண்டுமென்றும் கட்டளையிட்டார். இவர்கள் யாரெனில் கெர்சோனியனான பெரகியாவின் குமாரன் ஆசாப். இவர் தலைமைப் பாடகரும் இவரது குமாரர்கள் அரசர் கட்டளைப்படி நின்றுகொண்டு தீர்க்க தரிசனம் உரைப்பார்கள். கோகாத்தியரின் குடும்பத்திலிருந்து ஏமானின் குமாரர்கள், அரசரின் கர்த்தருடைய வாக்கை உரைக்கும் தீர்க்கதரிசியாயிருந்தனர். மெராரியின் குடும்பத்தைச் சார்ந்த எதித்தூனின் குமாரர்கள் சுரமண்டலம் இசைத்து இறைவாக்குரைத்து ஆண்டவரின் மகிமையைப் பாடினார்கள். குறிப்பிட்ட சங்கீதங்களின் தலைப்புகளில் இந்த பாடகர் தலைவர்களின் பெயர் காணப்படுகிறது.

1 நாளாகமம் 23 – 25 வரையுள்ள அதிகாரங்களில் ஆலயத்துக்கும் அதன் ஊழியங்களுக்கும் பாடுபவர்கள் ஏராளமாய் இருந்தனர் எனக் காண்கிறோம். இம்மூன்று குடும்பத்தைச் சார்ந்த பாடகர்கள் 288 பேர். இவர்கள் பன்னிரண்டு பேர்களாகப் பிரிக்கப்பட்டு இருபத்து நான்கு குழுவினராக செயல்பட்டனர். இசைக் கருவிகளுடன் யேகோவா தேவனைத் துதித்துப் பாடும் முக்கியமான செயலில் ஈடுபட்ட நான்காயிரம் லேவியரை தாவீது ஏற்படுத்தினார். ஆறாயிரம் பேர் தலைவர்களாகவும் மணியக்காரர்களாகவும் இருந்தனர். வாசல் காப்பவர்களாக நான்காயிரம் பேரும் மீதமுள்ள இருபத்து நான்காயிரம் லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களாகவும் இருந்தனர்.

இவர்களுடைய வேலை நமக்கு சாதாரணமாகத் தோன்றினாலும் அவர்களுக்கு அது சாதாரணமானதல்ல; கர்த்தருடைய ஆலயத்தில் ஆசாரியர்களுக்கு உதவியாக நிற்பதும் பரிசுத்த ஸ்தலத்தையும் பரிசுத்த பணிமுட்டுகளை சுத்தம் பண்ணுவதும், சமுகத்தப்பங்களையும், போஜனபலிக்குத் தேவையானவற்றை ஆயத்தம் செய்வதும், ஓய்வு நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் கர்த்தருக்குச் சர்வாங்க தகன பலிகள் செலுத்த உதவுவதும் அவர்களுடைய பணியாயிருந்தது.

அனைத்துக்கும் மேலாக நாள் தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதிப்பதே அவர்களுடைய மேலானதும் மகிழ்ச்சியைத் தரும் காரியமாயிருந்தது. அதிகாலையில் லேவியர்கள் எழுந்து தேவனைத் துதிப்பதை ஆரம்பித்து வைப்பார்கள். அது முக்கியமான பொறுப்பு மாத்திரமல்ல, ஆழமான பொருள் நிறைந்ததுமாகும். கோராகின் புத்திரரின் எஸ்ராகியனான ஏமானின் போதக சங்கீதமான 88ம் சங்கீதம் அவர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் யேகோவாவைப் போற்றி துதிக்கும் பாடலுக்கு ஓர் உதாரணமாகும். நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும் (வச.33).

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து தேவனைத் துதித்தலுடன் ஆரம்பிப்பது நமக்கும் கிடைத்த சிறந்த வாய்ப்பாகும். தாவீதின் பாடகற் குழுவினர் செய்ததுபோல நாமும் உண்மையுடன் இதனை பயிற்சி செய்வோம். அதிகாலையில் எழும்பி தேவனைத் துதிப்பதில் காணப்படும் உண்மைத்துவம் அந்த நாளை நமக்கு ஓர் ஆசீர்வாதமான நாளாக்கித் தரும்.

அதிகாலைப் பாடல்:

தூய தூய தூயா! சர்வ வல்ல நாதா!
தேவரீர்க்கெந்நாளும் சங்கீதம் ஏறுமே!
தூய தூய தூயா மூவரான ஏகா!
காருணியரே, தூயதிரியேகரே!

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச் – ஏப்ரல் 2018)

|1|
சத்தியவசனம், அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகங்களுக்காக ஒவ்வொரு மாதமும் அதிக ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பேன். எங்கள் குடும்ப ஜெபங்களில் தினந்தோறும் தியான புத்தகத்தின் வேத வசனங்களோடு படித்து வருகிறோம். இவைகள் எங்களுக்கு ஆசீர்வாதமாகவும் ஆவியை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது. இவ்விரு புத்தகங்களிலும் எழுதுபவர்களுக்காகவும் சகோதரி சாந்தி பொன்னு அவர்களுக்காகவும் விசேஷித்து ஜெபிக்கிறேன். இவ்வூழியம் இன்னும் அதிகமாக விரிவடைந்து, அதிக ஆத்துமாக்கள் ஆதாயம் பெற்றுக்கொள்ள ஜெபிக்கிறேன்.

Mrs.Meneka George, Coimbatore


|2|
அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை எல்லாம் ஒழுங்காக பெற்றுக்கொள்கிறோம். வடநாட்டிலுள்ள எங்களுக்கு இது வாழ்க்கையில் தேனிலும் இனிமையாக இருந்து வருகிறது. தேவன்தாமே தங்கள் ஊழியத்தை எல்லாவித நன்மையாலும் தாங்கி ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் ஆன்மீக வளர்ச்சியடைய ஜெபிக்கிறோம்.

Mr & Mrs.S.C.M.Pandian, Ujjain.


|3|
நம்பிக்கை டிவி வழியாக சத்தியவசன நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். Dr.புஷ்பராஜ், Prof.எடிசன். சகோ.பிரகாஷ் ஏசுவடியான் ஆகியோர் சத்தியங்களைக் கொடுத்துவருகிறார்கள். இச்செய்திகளினால் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு எங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றீர்கள். இயேசுகிறிஸ்துவுக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக.

Mr.M.Manoharan, Tirunelveli.


|4|
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். நாங்கள் வாங்கிய வீட்டிற்கு பல ஆண்டுகளாக பத்திரம் கிடைக்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் கிடைக்கவில்லை. தடைகள், போராட்டங்கள் பண இழப்புகள்தான் நேரிட்டது. இறுதியாக தங்கள் பத்திரிக்கையில் சாட்சி எழுதுவேன் என பொருத்தனை பண்ணி கர்த்தருடைய பாதங்களை இறுகப்பற்றிக் கொண்டு ஜெபித்தோம். ஆண்டவர் எங்கள்மேல் மனதுருகி பத்திரம் கிடைக்க உதவி செய்தார். குடும்பமாக கர்த்தருக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறோம்.

Mrs.Tamilarasi, Coimbatore.

ஆசிரியரிடமிருந்து…

(மார்ச் – ஏப்ரல் 2018)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

மரணத்தை ஜெயமாக விழுங்கின ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தாலும் ஆதரவான காணிக்கையாலும் தாங்கி வருகிறமைக்காக அதிக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 2017ஆம் ஆண்டு பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம்.

பள்ளி அராசங்கத்தேர்வு எழுதப்போகும் தங்கள் பிள்ளைகளுக்காக வேண்டுதல் செய்கிறோம். நமது பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள்  எழுதவிருக்கும் தேர்வு விவரங்களை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் அவர்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.

மார்ச் மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதியில் கோவை மணிகூண்டு அருகில் உள்ள T.E.L.C ஆலயத்திலும், 26,27,28 திங்கள்-புதன் ஆகிய பரிசுத்த வாரத்தின் நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு திருச்சி பொன்மலைபட்டி C.S.I. Christ Church – லும் நடக்கவுள்ள லெந்துகால சிறப்புக் கூட்டங்களில் வானொலி செய்தியாளர் பேராசிரியர் எடிசன் அவர்கள் செய்தி வழங்க இருக்கிறார்கள். அப்பகுதியிலுள்ள பங்காளர்கள் இக்கூட்டங்களில் பங்குபெற்று ஆசீர்வாதம் பெற அன்பாய் அழைக்கிறோம்.

சத்தியவசன ஊழியத்தை  தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்த விரும்பும் பங்காளர்கள் அவர்களது விலாசத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். 2018ஆம் வருட காலண்டரை அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பித் தருகிறோம்.

இவ்விதழில் மார்ச் 1 – 16 வரையுள்ள தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். மார்ச் 16 முதல் ஏப்ரல் 15 வரையுள்ள தியானங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். ஏப்ரல் 16-30 நாட்களுக்கான தியானங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் ஒவ்வொன்றும் உங்களது தனிப்பட்ட குடும்ப தியான நேரங்களில் அதிக பயனுள்ளதாகவும் ஆசீர்வாதமாகவும் இருப்பதை அறிந்து தேவனைத் துதிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் அன்பாய் கேட்கிறோம்.

சத்தியவசன விசுவாசபங்காளர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்