ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 30 புதன்
தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.136:16). இந்த மாதம் முழுவதும் நம்முடைய அனைத்து தேவைகளையும் சந்தித்து வழிநடத்தின தேவனைத் துதிப்போம். சத்திய வசன ஊழியத்தின் தேவைகளை சந்தித்து அவர் செய்த மகத்தான கிரியைகளுக்காகவும் அவரை ஸ்தோத்தரிப்போம்.
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக்.18:7). – இயேசு கிறிஸ்து
உயர்ந்த பெறுமதிப்பு
தியானம்: 2020 செப்டம்பர் 30 புதன் | வேத வாசிப்பு: ஏசாயா 6:1-7
…ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன் (ஏசாயா 6:5).
“நான் என் சொந்த வீட்டிலே திருடுகிறேன். என் கணவனின் அடி உதைக்குப் பயந்து பொய்யும் கூறுகிறேன்” என்று ஒரு சகோதரி வேதனையோடு சொன்னாள். ஏன் அப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “கணவனும் சரி, உழைக்கின்ற பிள்ளைகளும் சரி, கணக்குப் பார்த்துத்தான் பணத்தைக் கொடுக்கிறார்கள். ஆகவே, நான் அவர்களில்லாத நேரங்களில் திருடுகிறேன்” என்றாள் அத்தாய். என்ன பரிதாபம்!
தேவ கட்டளைகள் நம்மைக் குற்றவாளிகளாக்கி நியாயந்தீர்க்கும் நோக்கத்தோடு கொடுக்கப்படவில்லை. நமது வாழ்வின் பெறுமதிப்பை நமக்கு விளக்குவதற்காகவும், நம்முடைய தேவனுடைய பரிசுத்தத்தை ஞாபகப்படுத்தவும், எது சரி – எது தவறு என உணர்த்தவுமே அவை தரப்பட்டுள்ளது. ஆகவே நாம் நமது பெறுமதிப்பைப் பாதுகாக்க வேண்டும், ‘என் தேவன் யார் என்பதை இவ்வுலகம் காணவேண்டும்’ என்ற வாஞ்சை நமக்கு அவசியம். நாம் உண்மை பேசுவதன் நோக்கம், நான் பொய் சொல்லுவதில்லை என்று பெருமை பாராட்டுவதற்காக இருக்கக்கூடாது; மாறாக, என் தேவன் உண்மையுள்ளவராகையால் நானும் உண்மை உள்ளவனாயிருக்க வேண்டும் என்பதே நம் நோக்கமாகட்டும். இது எல்லாக் கட்டளைகளுக்கும் பொருந்தும். நமது அன்றாட வாழ்விலே நமக்கு வரும் சோதனைகள் யாவும் தேவனை கிட்டிச் சேருவதாகவே. அதே சமயம் இது நமக்கு ஒரு பெரிய போராட்டம்தான். எனினும், நமது காரியங்களை தேவ சமுகத்தில் மனதார அறிக்கை செய்து விட்டோமானால் அவரே நம்மை நடத்துவார்.
அந்த உன்னதமான தரிசனத்தைக் கண்ட ஏசாயா, மகிழ்ச்சியால் துள்ளவில்லை. மாறாக, தேவ சமுகத்தில் தன் பாவ நிலைமையை உணர்ந்து கதறினார். தேவன் அவர் அக்கிரமத்தை நீக்கி பாவத்தைப் போக்கினார். இல்லாவிட்டால், “இதோ அடியேன்” என்று ஏசாயா தன்னை அர்ப்பணித்திருக்க முடியாது. தொடர்ந்து, ஏசாயா கர்த்தருடைய வார்த்தையைத் துணிகரமாக உரைத்திருக்கவும் முடியாது. தேவனுக்குக் கீழ்ப்படிய ஒரே வழி அவரிடம் சரணடைவதுதான்.
தேவன் தமது பிள்ளைகளைக் குறித்து வைத்திருக்கிற மதிப்பு மிகவும் உயர்ந்தது. இல்லையானால் தம்மையே பலியாகத் தந்திருப்பாரா? ஆக, தேவ கட்டளைகளை நாம் பாரமாக எண்ணக்கூடாது. அவற்றைக் கைக்கொள்ள வேண்டிய பெலனை கர்த்தர் தருகிறார். இன்றே நமது பாவ நிலையை உணர்ந்து, அறிக்கையிட்டு, மனந்திரும்பி தேவனுக்காக வாழ்வோம்!
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை (சங்.16:8).
ஜெபம்: அன்பின் தேவனே, நீர் என்னைக் குறித்து வைத்திருக்கிற மேன்மைக்கும் கனத்திற்கும் ஏற்ப நான் உண்மையாகவும் பரிசுத்தமாகவும் வாழ எனக்குக் கிருபை தாரும். ஆமென்.