வாக்குத்தத்தம்: 2020 செப்டம்பர் 1 செவ்வாய்

கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். (சங்.25:4)


அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம். (உபா.33:27)
சங்கீதம் 139-144; 1 கொரிந்தியர் 11

ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 1 செவ்வாய்

உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறு உத்தரவு அருளுவார் (ஏசா.30:19).


அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம் (உபா. 33:27). இப்புதிய மாதத்தின் தேவன் நமக்கு அடைக்கலமும் ஆதாரமுமாக இருக்கும் படியாகவும் நம்முடைய அனைத்து தேவைகளையும் சந்திக்கும்படியாகவும், புதிய வழிகளை திறக்கும்படியாகவும் வேண்டுதல் செய்வோம்.

பிரதான கற்பனை

தியானம்: 2020 செப்டம்பர் 1 செவ்வாய் | வேத வாசிப்பு: உபா.6:4-6 மத்.22:35-40

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக (மத்.22:37).

“செய்யக்கூடாததைக் கணக்கு வைத்து, அதை எப்படிச் செய்வது என்று குழம்பி தவிப்பதைப் பார்க்கிலும், செய்யவேண்டியது எது என்று தீர்க்கமாக அறிந்துகொண்டு, அதை உத்தமமாக செய்ய முயற்சிப்போமானால், செய்யவேண்டியது வெற்றிகரமாக நிறைவேறும்; செய்யக்கூடாதது தானாகவே ஒதுங்கிவிடும்” என்றார் ஒரு பிரசங்கி.

தமக்கு சாட்சியாக இருக்கும்படி அழைத்த இஸ்ரவேலுக்கு, தேவன், மோசே மூலம் ‘செய்’ என்றும் ‘செய்யாதே’ என்றும் நியாய விதிமுறைகளை கொடுத்திருந்தார். அன்றைய பரிசேயரோ, செய்யவேண்டியது செய்யக்கூடாதது என பல துணை கட்டளைகளைத் தமக்கென உருவாக்கியிருந்தனர், ஒரு நியாயசாஸ்திரி இயேசுவிடம் வந்து, “பிரதான கற்பனை எது” என்று கேட்டான். கர்த்தர் அருளிய பத்து கற்பனைகளையும் சராம்சமாக்கிய இயேசு, ஒன்றோடொன்று இணைந்து நிற்கும் இரு கட்டளைகளை கூறினார். முதலாவது, தேவனிடத்தில் முழுமையாக அன்புகூருவது; இரண்டாவது, நம்மிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவது. இவ்விரண்டையும் பிரித்து பார்க்கமுடியாது. உண்மையாகவே தேவனிடத்தில் அன்புகூருவோமானால் அவரே நமக்கு ஒரே தேவன் என்பது வெளிப்படை. அவர் நம்மைப் படைக்கும்போதே தம்மை தேடுகின்ற இருதயத்தை நமக்குள் வைத்துவிட்டார். ஆனால் மனிதனுடைய விழுகையுடன் இது கறைப்பட்டுப் போயிற்று. என்றாலும் தேவனை தேடுகின்ற தேடுதல் நமக்குள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மனிதன் தனித்து வாழமுடியாது. அவனுக்கு ஒரு பெலன் தேவை. அது தேவனைத் தேட வைக்கிறது.

பிரியமானவர்களே, நாம் தேவனை முழு உள்ளத்தோடு அன்புகூருவது மெய்யென்றால், அவரது நாமம் அவமதிக்கிற விதமாக ஒருபோதும் நடக்கமாட்டோம். உண்மை அன்பு இருந்தால், மெய்யாகவே தேவனுக்கு கீழ்ப்படிந்திருப்போம். “என்னில் அன்புகூர்ந்து, நான் சொல்வதைக் கேட்டு கீழ்ப்படிந்திருப்பதையே என் மகளிடத்தில் எதிர்பார்க்கிறேன்” என ஒரு தாய் கண்ணீரோடு கூறினாள். ஒரு தாயின் ஏக்கம் இப்படியிருக்க, தேவனின் ஏக்கத்தை நாம் புரிந்து கொள்கிறோமா? “மகனே, மகளே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்று ஆண்டவர் கேட்கிறார். நமது நேசத்தை அவர் எதிர்பார்க்கிறார். இல்லாவிட்டால் இந்தக் கற்பனைகளைக் கொடுத்திருப்பாரா? பாவத்தில் நாம் விழுந்துபோனாலும் அவரை நாம் நேசிக்க வேண்டுமென்பதே தேவனுடைய ஆவல். அதற்காகவே தமது அன்பை முதலில் அவரே நமக்குச் சிலுவையில் வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னமும் நாம் என்ன சொல்லுவோம்?

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம் (1யோவான் 4:1).

ஜெபம்: அன்பின் தேவனே, “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று நாங்கள் பாடுகிறபடியே அந்த அன்பை நடைமுறையில் வெளிப்படுத்தி காட்ட கிருபை தாரும். ஆமென்.

பரிவும் பகையும்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2020)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி : நியாயாதிபதிகள் 19:1-30


  நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள்; பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான் (நியா.19:5).


பண்டைய அண்மை கிழக்கு நாடுகளின் குடும்பங்களில் இரண்டு மாறுபட்ட அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிந்தன. அவை சாதாரண மக்களிடையே காணப்பட்ட விருந்தோம்பலும் கொடுமையான தீயவர்களிடம் காணப்பட்ட பகையுணர்வுமாகும். நியாயாதிபதிகள் 19ம் அதிகாரத்தில் காணப்படும் நிகழ்வு இவ்விரண்டு அம்சங்ளையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றது.

வரலாற்று பதிவின்படி, எப்பிராயீம் மலைகள் அருகே உள்ள ஒரு லேவியன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச் சேர்ந்த ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான். அவள் அவனுக்கு துரோகம் பண்ணி பெத்லெகேமிலுள்ள தன் தகப்பன் வீட்டுக்குப் போய் அங்கே நான்கு மாதம் தங்கியிருந்தாள். இந்த பிரிவுக்குப் பின்னர் லேவியன் அவளுடன் நலம் சொல்லி திரும்ப அழைத்து வர எண்ணி பெத்லெகேமுக்கு தெற்கு நோக்கிப் பிரயாணம் ஆனான். ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனைக் கண்டபொழுது மகிழ்ச்சியடைந்தான்.

அம்மனிதனின் மாமனுடைய வீடு பண்டைய அண்மை கிழக்கத்திய நாடுகளின் உபசரிப்புக்கு தலையாய உதாரணமாய் விளங்கியது. மூன்று நாட்கள் அம்மனிதன் அங்கு தங்கியிருந்தான். அவர்கள் மகிழ்ச்சியுடன் புசித்துக் குடித்திருந்தார்கள். நான்காம் நாள் அவர்கள் அதிகாலமே எழுந்து பாலஸ்தீனிய கோடை வெயிலுக்கு முன்னதாக சென்றுவிடலாம் என புறப்பட்டனர். ஆனால், ஸ்திரீயின் தகப்பன் மீண்டும் தங்கியிருந்து விருந்துண்ண வற்புறுத்தினார். அந்த நாளும் கழிந்தது. மறுநாள் போகலாம் என்று மீண்டும் அம்மனிதனின் மாமன் வேண்டிக்கொண்டார்.

பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் “இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலை மயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம்” என்றான் (19:8). இம்முறை அம்மனிதன் மறுத்துவிட்டான். எப்பிராயீம் மலைதேசத்தை இருட்டுவதற்குள் சென்றடைய முடியாது எனத் தெரிந்திருந்தும் அவன் தனது மனைவியுடன் பெத்லெகேமைவிட்டுக் கிளம்பினான்.

எபூசியர் எருசலேமில் வாழ்வதினால் அங்கே செல்ல விரும்பாமல் கிபியாவுக்கு வடக்கே மூன்று மைல் செல்ல எண்ணினான். அங்கே அவனுக்கு சிறந்த உபசரிப்பு கிடைக்கும் என நம்பினான். ஆனால் அவர்களை ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் தெருவிலே தங்குவதற்கு ஆயத்தமானார்கள். அப்பொழுது கிபியாவில் வசித்து வரும் எப்பிராயீம் மலைதேசத்தைச் சேர்ந்த ஒரு கிழவன் அவர்களைத் தன் வீட்டில் தங்கவைத்துக்கொண்டான்.

இந்த வேளையில் சோதோம் கொமோரா பட்டணத்து நிகழ்வு திரும்பிற்று. பேலியாளின் மக்களாகிய சிலர் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி, “உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டு வா” என்று ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தனர். இக்குறிப்பினை லோத்தின் சந்ததியாரிடமிருந்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும் (ஆதி.19:1-11). லேவியனுக்குப் பதிலாக தனது மகளையும் லேவியனின் மறுமனையாட்டியையும் ஒழுக்கமற்ற அக்கும்பலுக்கு தருவதாக அக் கிழவன் கூறினான். இது அவர்களைச் சாந்தப்படுத்தியது.

அவர்கள் இராமுழுவதும் அவளை இலச்சையாய் நடத்தி, தங்கள் இச்சையை நிறைவேற்றிக்கொண்டனர். விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகு மட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்துகிடந்தாள். அவள் எஜமான் காலமே எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன் வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரீ வீட்டுவாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாய்க் கிடந்தாள் (நியா.19:26,27).

இங்கே பரிவும் பகையும் காணப்படுகிறது. அந்நியரை உபசரிக்க தன் இல்லத்தைத் திறந்து கொடுத்த மனிதனின் செயலுக்கும் மற்றவரின் வீட்டின் கதவைத் தட்டி ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த மக்களின் செயலுக்கும் காரணம் யாது? தேவனுடைய பார்வைக்குப் பிரியமானதைச் செய்ய ஒரு மனிதனுக்கும் தேவனுடைய பார்வைக்கு பொல்லாப்பைச் செய்ய மற்றவருக்கும் தூண்டுகோலாக இருந்தது எது? இதற்குரிய விடையானது, நாம் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப் பட்டபடியால் நன்மையானவைகளைச் செய்யும் விருப்பம் நம்மில் இயற்கையாகவே உள்ளது. ஆனால், அவை நம்முடைய பாவத்தால் அழிக்கப்பட்டு தீமையைச் செய்யும் இயல்புக்கு ஈர்க்கப்படுகிறோம் என்று கூறலாம்.

பெத்லெகேமின் மனிதனும் கிபியாவிலிருந்து வந்த எப்பிராயீம் முதியவரும் மற்றவர்களைப் பிரியப்படுத்த முயன்றனர். ஆனால் கிபியாவின் ஓரினச் சேர்க்கை மனிதர்களோ தங்களது இச்சையை நிறைவேற்றவே விரும்பினர்.

மற்றவர்களுடைய துன்பத்தில் தங்களுடைய சுயவிருப்பத்தை நிறைவேற்றுவது திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமான இருதயத்திலிருந்தே எழும்புகின்றது (எரேமியா 17:9). இவ்விதமான இருதயத்தை எவ்விதத்திலும்; கட்டுப்படுத்தவே முடியாது. இரட்சிப்பின் கிருபையிலேயே அதை குணமாக்கமுடியும்.


அதிகாலைப் பாடல்:

எத்தனை பாவ பாதகங்களைச் செய்தேன் என்று
நீர் நன்றாய் என்னைத் தூண்டிக் காட்டுவீர்;
வெட்கம்கொண்ட அடியேன் துக்கமுள்ளோனாய் வந்தேன்,
பாவம் செய்யாதபடி தடுத்திடும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(செப்டம்பர் – அக்டோபர் 2020)

[01]
உங்கள் ஊழியங்கள் அநேகருக்கு பிரயோஜனமாக இருப்பதை அன்பர்கள் கடிதம் மூலம் அறியமுடிகின்றது. தேவன்தாமே உங்கள் ஊழியத்தை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். தங்கள் ஊழியர்களின் அன்பை சென்ற வருடம் சென்னையில் நடந்த கூடுகைகளில் நேரில் அனுபவித்தவன் நான் 81 வயதிலும் தேவன் எனக்கு போதுமானவராகவே இருக்கிறார்.

Mr.Richard Sam Alex, Chennai.


[02]
Praise the Lord, Anudhinamum Christhuvudan Meditation words by Sis.Shanthi Ponnu is encouraging us through small examples to our mind. God bless you all.

Mrs.Kamala Robert, Coimbatore.


[03]
தாங்கள் மேற்கொண்டிருக்கும் உன்னதப் பணிகளான இலக்கியப்பணி, அனுதினமும் கிறிஸ்துவுடனான தியானப்பணி, வானொலி மற்றும் தொலைக்காட்சி பணிகள் மூலமாக விதைக்கப்படும், திருவசனங்கள் நிச்சயமாக அதனதின் பணிகளைச் செய்து மீட்பர் இயேசுவுக்குள் அனைவரையுங்கூட்டிச் சேர்க்கும் என்று விசுவாசிக்கிறேன். கொரானா காலத்திலும் ஜுன் மாத அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழை அனுப்பியதற்கு உங்களுக்கு நன்றி. இறைப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் சுகம் பெலன் அளித்துக் காப்பாராக.

Mr.G.Dhanaraj, Coimbatore.


[04]
Praise the Lord, சத்தியவசன வானொலி பணி வழங்கும் திங்கள், செவ்வாய் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்கிறேன், தற்போது எடிசன் அவர்கள் இயேசுவின் மலை பிரசங்கத்தை தொடர்ந்து பேசிவருகிறார். மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது, நன்றி. நிகழ்ச்சியை நடத்துபவரின் குரல் வலம் மிக அருமை, அவருக்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்கள் மேலும் சாம் கமலேசன், பிரகாஷ் ஏசுவடியான், தியோடர் வில்லியம்ஸ், டாக்டர் புஷ்பராஜ் பாடல்கள் அனைத்தும் அருமையாகவும் ஆசீர்வாதமாகவும் உள்ளது சத்தியவசன ஊழியங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.

Mr.J.A.Judson, Salem.


[05]
Beloved brother in Christ, Greetings in Jesus NAME. Your Magazine Anuthinamum Christhuvudan is of very much useful to our Spiritual Life. Every day in the Morning, before We start our day’s Work, We read the Word for that day and We meditate on that. We as a family are remembering you all.Your loving family and also your wonderful ministry in our daily Prayers.

Mr.S.Mathews, Vellore.


[06]
தங்கள் வலைத்தளத்தில் உள்ள இன்றைய தியானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

Bro.Jebaraj, Aruppukottai

ஆசிரியரிடமிருந்து…

(செப்டம்பர் – அக்டோபர் 2020)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம்மை சேர்த்துக் கொள்ளும்படியாக சீக்கிரம் இவ்வுலகிற்கு வரவுள்ள இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் மூலம் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சத்திய வசன வானொலி நிகழ்ச்சிகள், தொலைகாட்சி நிகழ்ச்சி, இணையதளம், மற்றும் Whats app/SMS ஆகியவற்றின் மூலமாக அநேகர் பிரயோஜனமடைந்து வருவதை அறிந்து ஆண்டவரைத் துதிக்கிறோம். உங்கள் ஆவிக்குரிய நண்பர்களுக்கும் சக விசுவாசிகளுக்கும் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வையுங்கள். வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு தேவன் தந்துள்ள ஆதரவாளர்களுக்காக (Sponsors) அவரை ஸ்தோத்திரிக்கிறோம்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலினால் நாம் சந்தித்துவரும் இன்னல்களையும் துயரங்களையும் நம் தேவன் அறிந்திருக்கிறார். கர்த்தர் தம்முடைய ஜனங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். நம் அனைவரது தேவைகளை சந்திக்கும்படியாகவும் இந்த இக்கட்டுகாலத்திலிருந்து மீண்டு வருவதற்கும் பாரத்துடன் வேண்டுதல் செய்கிறோம். இந்நாட்களில் கர்த்தரோடுள்ள உறவை நாம் ஒவ்வொருவரும் புதுப்பித்து அவருக்குப் பிரியமான வழிகளில் நடக்க குடும்பமாய் தீர்மானிப்போம். அவரது வருகையை எதிர்பார்த்து வாழும் நம் ஒவ்வொருவரையும் பரிசுத்தப்படுத்தி அவர் தம்முடன் சேர்த்துகொள்ள வல்லவராய் இருக்கிறார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். … நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் (யோவா.14:1-3).

இவ்விதழில் செப்டம்பர் மாத தியானத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தாய் தகப்பன்மாரை கனம் பண்ணுதல், பராமரித்தல், குடும்ப உறவை பரிசுத்தமாக பேணி காப்பதைக் குறித்தும் விளக்கியுள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் சகோதரர் தர்மகுலசிங்கம் அவர்கள் பலவித தலைப்புகளில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்பதற்கும், கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தில் ஊன்ற கட்டுகிறதற்கும் ஏதுவாக தியானங்களை எழுதியுள்ளார்கள். இத்தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்க மறவாதீர்கள். இத்தியானங்கள் தங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்