ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 24 சனி
என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபை செய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் (எசேக்.20:44) சத்தியவசன இலக்கிய பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் தமிழில் மொழியாக்கங்களைச் செய்து தரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் அளவில்லாமல் ஆசீர்வதித்து நல்ல சுக பெலனோடு அவர்களை ஊழியத்தில் வல்லமையாய் உபயோகிக்க வேண்டுதல் செய்வோம்.
கர்த்தர் சேர்த்துக்கொள்வார்!
தியானம்: 2021 ஜூலை 24 சனி | வேத வாசிப்பு: ஏசாயா 49:13-18
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார் (சங்;. 27:10).
கைவிடப்படுவது அல்லது தனிமைப்படுத்தப்படுவது மெய்யாகவே மிகவும் கொடிய அனுபவமாகும். முன்னர் இந்த வசனத்தைப் படிக்கும்போது, பெற்றோர் தம் பிள்ளைகளை கைவிடமுடியுமா என்று நினைப்பதுண்டு. தாயன்பு மேலானது. ஏழையாயிருந்தாலும் எந்தவொரு தாயும் தன் பிள்ளைக்காக செய்யும் தியாகங்கள் சொல்லிமுடியாது. ஆனால். இன்று பெற்றோர் தம் பிள்ளைகளைக் கைவிடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. சந்தர்ப்பவசத்தினால் கைவிடுகிறவர்களும் உண்டு; திட்டமிட்டுக் கைவிடுகிறவர்களும் உண்டு. புருஷன் அல்லது மனைவி கைவிட்டால் இன்னொரு துணையை இன்று துணிகரமாகத் தேடிகொள்கிறார்கள். ஆனால், பெற்றோரே கைவிட்டால் இன்னொரு பெற்றோரைச் சம்பாதிக்க முடியுமா? ஏழ்மையினிமித்தம் தம் பிள்ளைகளை விற்றுவிடுபவர்களும், சொந்த நலன் கருதி பிள்ளைகளைக் கைவிடுகிறவர்களும் இன்று அதிகரித்துள்ளனர். கைவிடப்படும் பிள்ளையின் வேதனை எப்படிப்பட்டது என்று சிந்தித்தால் இத்தனை கொடிய காரியத்தை நாம் செய்யவே மாட்டோம்.
நமது ஆவிக்குரிய ஜீவியத்திலும்கூட, கைவிடப்படும் நிலைமைகள் ஏற்படலாம். ஆறுதலின் ஸ்தலங்களும், ஆவிக்குரிய நண்பர்களுங்கூட நம்மைக் கை விட்டுவிடலாம். நமக்காக ஜெபிக்கவோ, ஆறுதல் கூறவோ எவரும் இல்லாத தனிமை உண்டாகலாம். இப்படிப்பட்ட துயரங்கள் நமக்கு ஏற்படும் என்று அறிந்திருந்த கர்த்தர்தாமே நமக்குத் தாயும் தகப்பனும் நண்பனுமாயிருந்து, தமது கரத்தை விரித்து நம்மைச் சேர்த்துக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறார். தாவீது இதனை நம்பினார். ஆகவேதான் எத்தனை துன்பங்கள் வந்தபோதும் அவர் கலங்கவில்லை. கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார் என்று தைரியமாகக் கூறுகிறார்.
“அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை; இதோ என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கிறேன்” என்று கர்த்தர் கூறுகிறார் (ஏசா.49:15,16). அருமையான தேவ பிள்ளையே, கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் என்பதை நீ உறுதியாய் நம்பும் வரையிலும் உன் தனிமை உன்னைவிட்டு விலகாது. கைவிடப்பட்டதாக தோன்றும்போதெல்லாம், கர்த்தர் தமது உள்ளங்கையை விரித்து, அதிலே உன்னைக் காண்பதை நீ உன் விசுவாசக் கண்களால் காணவேண்டும். பெற்றோரினால் கைவிடப்பட்ட அனுபவம் உண்டா? அல்லது, பெற்றோரால் கைவிடப்பட்ட யாரையாவது சந்தித்திருக்கிறீர்களா? அப்போதுதான் நம்மால் கைவிடப்படுதலின் வேதனை புரியும். அங்கேதான் தேவன் எப்படி அவர்களை அரவணைக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். உலக பெற்றோர் நாளை மரித்துப்போகலாம். கர்த்தரோ நித்திய நித்தியமாய் தம்மிடமாய் நம்மை சேர்த்துக்கொள்வார்.
ஜெபம்: எங்களைக் கைவிடாத அன்பின் தேவனே, நம்பிக்கைக்குரிய மனிதர்களால் நாங்கள் கைவிடப்பட்டு தவிக்கும் வேளையிலும் உம்முடைய பலத்த கரத்திற்குள் எங்களை வைத்து பத்திரமாய் பாதுகாத்துவருகிறீர். உம்மைத் துதிக்கிறோம். ஆமென்.