ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 30 புதன்
இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். (ரோம.9:5) சர்வத்திற்கும் மேலான தேவன் இந்தமாதம் முழுவதும் நம்மோடிருந்து நம்மை நடத்தினார். முடிவு பரியந்தமும் நம்மில் அன்புகூர்ந்து நடத்த வல்லவராகிய அவருக்கே சகல கனமும் மகிமையும் புகழும் உண்டாக அவரை உயர்த்தி ஆராதிப்போம்.
ஆத்துமாவின் ஆறுதல்!
தியானம்: 2021 ஜுன் 30 புதன் | வேத வாசிப்பு: சங்.31:1-7; 2கொரி.1:2-4
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (சங். 94:19).
எனது வாழ்க்கையின் ஒரு காலப்பகுதியிலே தனித்துவிடப்பட்டேனோ என்ற ஓர் உள்ளுணர்வோடு போராட நேர்ந்தது. அடுத்த அடி எங்கே எப்பக்கம் வைப்பது என்று அறியாமல் திகைத்து நின்றேன். “நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது. என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் நான் விசாரப்படுகிறேன்” (சங்.38: 17,18) என்ற சங்கீதக்காரனின் ஜெபத்தை ஏறெடுத்தேன். என் இதயத்தில் ஆயிரமாயிரம் கேள்விகள் அலைமோதின. இதனைப்படிக்கும் நண்பரே, நீரும் உம் உள்ளம் உடைந்த நிலையில் தத்தளிக்கிறாயா? கலக்கத்தைவிட்டு, கர்த்தரை நோக்கிப்பார். என்னைத் தாங்கிய தேவவார்த்தையே உன் சிறுமையில் உனக்கு ஆறுதலும் மீட்பும் அருளுவதற்கு வல்லமையுள்ளதாக உன்னிடத்திற்குக் கடந்து வரும் (சங்.119:49,50).
இன்னும் ஒரு தடவை, பயங்கர வியாதியினால் தாக்குண்டு, உள்ளத்தில் விசாரங்கள் பெருக செய்வதறியாமல் தவித்திருந்தேன். மூன்றாம் நாளிலே கர்த்தர்தாமே யோர்தான் நதியிலே தாம் செய்த மகத்தான அற்புதத்தை நினைவுபடுத்தி என்னை ஆறதல்படுத்தினார் (யோசுவா 3:1-17). என் ஆத்துமா தேற்றப்பட்டதை உணர்ந்து அமைதியடைந்தேன். தேவன் தமது கிரியையை என்னில் ஆரம்பித்தார். தேவபிள்ளையே, மரண போராட்டத்தில் அகப்பட்டு உன் உள்ளமும் விசாரத்தினால் நிரம்பியிருக்கிறதா? தேவன் உன்னை தேற்ற வல்லவராயிருக்கிறார். இப்படியே பலவித காரணங்களினால் பெருகும் விசாரங்களும், என்னவாகுமோ என்ற அங்கலாய்ப்புகளும், குடும்பம் உடைந்துவிடுமோ என்ற ஏக்கங்களும் துக்கங்களும் பெருகி நிம்மதியின்றி தவிப்பவர்கள் ஏராளம்”.
பிரியமானவர்களே, பவுலடியார் நமது தேவனுக்கு ஒரு அருமையான நாமம் ஒன்றைச் சூட்டியுள்ளார். “சகலவிதமான ஆறுதலின் தேவன்”. இதிலே ‘சகல’ என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ஆம், சகல உபத்திரவங்களிலேயும் அவரே நமக்கு ஆறுதல் செய்கிறவர் (2கொரி.1:3,4), “அவரே நம் உபத்திரவத்தைப் பார்த்து, நமது ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறவர்” (சங்.31:7), “அவர் நம் ஆத்துமாவைத் தேற்றுகிறவர்” (சங்.23:3). இவ்வார்த்தைகள் பொய்யல்ல. வியாகுலங்கள் பெருகும் நேரங்கள், நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று தவிக்கும் நேரங்கள்தான், தேவனுடைய அன்புக்கரத்தின் ஆறுதலை நாம் அதிகமாக அனுபவிக்கும் நேரம். அப்போது, விசாரங்களுக்கு மேலாக வியக்கத்தக்க மகிழ்ச்சியால் நமது ஆத்துமா நிரம்புவதை அறிந்துகொள்ளலாம். ஆத்தும வியாகுலங்களை நான் அனுபவித்திருக்கிறேனா? இன்று யாரை நான் தேடி நாடுகின்றேன்?
ஜெபம்: எங்களைத் தேற்றும் தேவனே, உம்மை மறந்து நான் அழுகிறவனாக அல்ல, உம்மைப் பற்றிக்கொண்டு ஜெயத்தோடு எழும்ப எனக்குப் பெலன் தாரும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2021 ஜுன் 29 செவ்வாய்
உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் (சங்.32:8).
2நாளாகமம் 17,18 | அப்போஸ்தலர் 7:1-19
ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 29 செவ்வாய்
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார் (சங்.40:1) இவ்வாக்குப்படியே பலத் தேவைகளுக்காக அதிக நாட்களாக கர்த்தருடைய சமுகத்தில் காத்திருக்கிற பங்காளர் குடும்பத்தினரின் காத்திருத்தலுக்கு தேவன் தமது தயவுள்ள சித்தத்தின்படி ஏற்ற பதிலைத் தந்து தேவைகளைச் சந்திக்க பாரத்துடன் மன்றாடுவோம்.
என்னைத் தாங்கிடும் கிருபை!
தியானம்: 2021 ஜுன் 29 செவ்வாய் | வேத வாசிப்பு: சங்கீதம் 73:1-28
என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. (சங். 94:18).
நமது வாழ்க்கைப் பாதை நமக்கு எப்போதும் நியாயமானதாகவே தெரிகிறது. நமது நினைவுகளும் திட்டங்களும்கூட சரியானதாகவே தோன்றுகின்றன. வீதியிலே ஒரு சரியான நோக்கோடு நடந்துசெல்லும் ஒருவர், நினையாத நேரத்தில் பாதையிலுள்ள சிறுகுழியிலும் மண்மேடுகளிலும் கால் சிக்கி விழுந்துவிடுகிறார்; அதேபோல, சரியான பாதை என்று நாம் எண்ணும் பாதையிலும் இடர்கள் வரத்தான் செய்யும். நினைவுகளும் திட்டங்களும் திடீரென்று சரிய ஆரம்பிக்கும். துன்மார்க்கர் தளைக்கும்போதும், நமக்கு தீங்கு செய்கிறவர்களும் நம்மைத் தள்ளிவைப்பவர்களும் மேன்மையடையும்போதும், நமது மனம் குழம்புகிறது. அதற்கு இடமளிப்போமானால் நிற்கிறோம் என்கிற நாமும் சற்று சறுக்கி விழத்தான் செய்வோம். தேவபிள்ளையே, நிதானத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்திருக்கிற உன் வாழ்விலும் சறுக்கல்கள் ஏற்பட்டிருக்கிறதா? விடை காணமுடியாத பல கேள்விகள் உன்னைச் சோர்வடையச் செய்கின்றனவா? சறுக்குகின்ற உன் கால்களைத் தூக்கிவிடுவார் யார் என்று ஏங்கி நிற்கிறாயா?
தேவன் நிச்சயம் பதில் தருவார். எருசலேம் தேவாலயத்தின் பாடற்குழுவின் பிரதான தலைவனும், துதி கீதங்கள் இசைப்பவனுமாகிய ஆசாப்பின் கால்கள் கூட சறுக்கிவிட்டதாம். அதாவது, “துன்மார்க்கர் செழித்தோங்குவதைக் கண்டு பொறாமை கொண்டேன். நான் விருதாவாகவே என் இருதயத்தை சுத்தம்பண்ணி குற்றமில்லாமையிலே என்கைகளைக் கழுவினேன்” (சங்.73:13) என அலுத்துக் கொண்டான் ஆசாப். இதுதான் அவனுடைய சறுக்கல். ஆனால், அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்தபோது உண்மையைக் கண்டான். துன்மார்க்கரின் முடிவை அவனால் உணரமுடிந்தது. அப்போது, தன் நினைவை மாற்றிக்கொண்டவனாக, “ஆனாலும், என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று” என்றான்.
தேவபிள்ளையே, உன் மனக்குழப்பத்திற்கு காரணங்கள் என்ன? எதுவாயிருந்தாலும் தேவனது சமுகத்திற்குள் போக மாத்திரம் மறந்துவிடாதே. அங்கே தான் உன் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். நீ விழுந்துவிட முன்னதாகவே, அவரது ஒப்பற்ற கிருபை உன்னை மறுபடியும் ஜீவபாதையிலே நிலை நிறுத்தும். கூப்பிடும் சத்தத்தைத் தேவன் கேட்கவும், நம்மைத் தாங்கிக்கொள்ளவும் நாம் எம்மாத்திரம்? ஆனால், அதுவே அவரது “கிருபை” என்று அறிந்துகொள். உன் நினைவுகள் தத்தளிக்க ஆரம்பிக்கும்போதே தேவனை நோக்கிக் கூப்பிடு. உனக்குப் பிரியமானவர்கள் உனக்கு எதிராகத் திரும்பும்போது, உன் மீட்பரை நோக்கி அபயமிடு. உன் சூழ்நிலைகள் உடனே மாறாவிட்டாலும், தேவன் நிச்சயம் உன்னைத் தாங்குவார்.
ஜெபம்: என்னைத் தாங்கி நடத்தும் தேவனே, என் வாழ்வில் என்ன நேர்ந்தாலும், மனக் குழப்பமடையாமல், உமக்குள் திடமாகவும் ஸ்திரமாகவும் நிற்க பெலன் தாரும். ஆமென்.