ஜெபக்குறிப்பு: நவம்பர் 30 ஞாயிறு
“நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்” (சங்.147:5) பெரிய ஆண்டவர் இம்மாதம் முழுவதும் அவர்தம் செட்டைகளால் நம்மை மூடி எல்லா தீமைக்கும் விலக்கிக் காத்தபடியால் நன்றி நிறைந்த இதயத்தோடு அவரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.
சந்திக்க ஆயத்தமா?
தியானம்: நவம்பர் 30 ஞாயிறு; வாசிப்பு: எபேசியர் 2:4-9
“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு
இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபேசியர் 2:8).
வேதப்படிப்புக்கு வந்திருந்த சில வாலிபரிடம் “இன்னும் சிலமணி நேரங்களில் கிறிஸ்து வரப்போகிறார் என்று அறிவித்தல் கிடைத்தால், அந்த சொற்ப நேரத்துக்குள் நீங்கள் என்ன செய்வீர்கள்” என்று கேட்டபோது, “என் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்பேன்”, “என் விரோதிகளுடன் ஒப்புரவாகுவேன்”, “ஆலயத்திற்குச் சென்று ஜெபிப்பேன்” என்று பல பதில்கள் எழுந்தன. ஒருவன் மட்டும், “நான் என் ஆண்டவரைச் சந்திக்க எப்போதும் ஆயத்தமாய் இருப்பதால், சந்தோஷமடைவேன்” என்றான்.
நிறைவேறிவரும் அடையாளங்களைப் பார்க்கும்போது, இயேசுகிறிஸ்துவின் வருகை மிக அருகில் நெருங்கிவிட்டதை நாம் உணரலாம். அவரைச் சந்திக்க நாம் ஆயத்தமா? நாம் ஆயத்தம் என்று வாயினால் சொன்னாலும் நம்மை நாம் நிதானித்துப் பார்ப்பது அவசியம். முதலாவது, நமது ஆவிக்குரிய வாழ்வின் அஸ்திபாரத்தைச் சோதித்துப் பார்ப்பது நல்லது. அஸ்திபாரம் உறுதியில்லாத கட்டடம் சிறு காற்றுக்குக்கூட நிலைத்து நிற்காது. தேவனுடைய வார்த்தையை தன் அஸ்திபாரமாகக் கொள்ளாதவன் வாழ்வும் அப்படித்தான். அடுத்தது, எனது செயற்பாடுகள். அநியாயம் செய்யாத வாழ்க்கை, ஊழியப்பணி, கொடுக்கின்ற காணிக்கை, சபையில் பங்களிப்பு, தானதருமங்கள் இவைகளை வைத்துக்கொண்டு, “நான் ஆயத்தமானவன்” என்று திருப்திப்படுவது நம்மை நாமே ஏமாற்றுவது போன்றது. ஏனெனில் நமக்குள் நற்கிரியையைத் தொடக்குகிறவரே ஆண்டவர்தான். இதிலென்ன வீண்பெருமை. ஆகவே, செய்கின்ற காரியங்கள் அல்ல; அவற்றை எந்த நோக்குடன் செய்கிறோம் என்பதை நிதானிப்பது நல்லது. அடுத்தது, நமக்கும் ஆண்டவருக்குமுள்ள உறவு. வெறும் வேத வாசிப்பு, ஒரு சிறிய ஜெபம், ஆலய ஆராதனை இவற்றை வைத்துக்கொண்டு நான் ஆண்டவருடன் நல்லுறவில் இருக்கிறேன் என்று சொல்லமுடியாது. உறவு என்பது ஆண்டவருடன் நாம் கொண்டிருக்கும் நெருக்கம். அவருடைய பாதத்தில் காத்திருக்கும் அன்பின் செயல். தேவ ஆலோசனையின்றி ஒரு அடியேனும் எடுத்துவைக்காத உறுதி. தேவ சித்தத்தைத்தவிர வேறெதற்கும் வாழ்வில் இடமளிக்காத வைராக்கியம். இன்னும் அதிகம் சொல்லலாம்.
“மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்ற சத்தத்துக்கு, “ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்” என்று நம்மால் கூறமுடியுமா? நம்மில் யாரும் தேவ சந்நிதானத்தில் காணப்படாமற் போகாதபடிக்கு ஆண்டவர் நம் அனைவரையும் தம்முடன் சேர்த்தருளுவாராக.
ஜெபம்: “ஆண்டவரே, உமது கிருபையில் சார்ந்து, உமது வருகைக்கு எப்போதும் ஆயத்தமாக வாழவும், பிறரை ஆயத்தப்படுத்தவும் என்னை வழிநடத்தும். ஆமென்.”
வாக்குத்தத்தம்: நவம்பர் 29 சனி
தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம். (2கொரி. 9:15)
ஜெபக்குறிப்பு: நவம்பர் 29 சனி
“பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு .. கரடுமுரடானவை சமமாக்கப்படும்” (ஏசா.40:4) என்ற வாக்குப்படியே Back To The Bible மராத்தி வானொலி ஊழியங்களில் உள்ள தேவைகளை கர்த்தர் சந்திக்கவும், மராத்தி பேசும் மக்கள் மத்தியில் கர்த்தர் ஒரு எழுப்புதலை தந்தருளவும் ஜெபிப்போம்.
ஆக்கினைத்தீர்ப்பு இல்லை
தியானம்: நவம்பர் 29 சனி; வாசிப்பு: மத்தேயு 25:14-30
“…நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்” (யோவான் 5:29).
‘நரகம் ஒன்று உண்டா? யார் அதைப் பார்த்தார்கள்’ என்று வீண் விதண்டா வாதம் பேசுகிறவர்கள் ஒருபுறம் என்றால், ‘நான் நரகத்திற்குப் போனேன், பார்த்தேன்; அங்கே அழுகுரல் அக்கினி….’ என்று பிதற்றுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நரகம் என்று ஒன்றுண்டு என்று வேதம் மிக தெளிவாகக் கூறியிருக்கிறது. என்றாலும், இது மனிதருக்காக அல்ல; விழுந்துபோன தேவதூதர்களுக்காகவே இருக்கிறது (2 பேதுரு 2:4). தமக்கென்றும், தம்முடன் நித்தியமாய் வாழவென்றும் மனிதனைப் படைத்த தேவன், அவனுக்காக நரகம் என்ற ஒன்றை ஏற்படுத்துவாரா? இப்படியிருக்க, மேட்டிமையால் விழுந்துபோன சாத்தானுக்கு உறுதுணையாக நின்று தேவனுக்கு விரோதமாக கலகம் பண்ணுகிறவர்கள் வேறெங்கே போவார்கள்!
வசனத்தைக் கேட்டு, கிறிஸ்துவை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்பது வாக்குறுதி. இன்னொரு வகையிலே சிந்தித்தால், அவர்கள் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படமாட்டார்கள். இது பெரிய கிருபையல்லவா! “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை” (ரோமர் 8:1) என்று பவுல் எழுதுகிறார். வரிசையில் நிறுத்தப்பட்ட தூக்குத்தண்டனைக் கைதிகளுடைய தண்டனை வாசிக்கப்படுகையில், எனது முறை வரும்போது, “நீ போகலாம். நீ குற்றவாளி அல்ல” என்று சொன்னால் எப்படி இருக்கும்! உண்மை என்னவென்றால், தேவனுடைய வார்த்தைக்குத் திரும்பத் திரும்ப கீழ்ப்படியாமற்போன முழு மனுக்குலமும் குற்றவாளிகள் வரிசையில் நிற்க வேண்டியவர்கள்தான். ஆனால், கிறிஸ்து நமது பாவங்களுக்கான தண்டனையைத் தாம் ஏற்றுக்கொண்டதால், நியாயத்தீர்ப்பின் நாளிலே நாம் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்படுவோம். இது, இயேசுகிறிஸ்துவைச் சொந்தமாக ஏற்றுக்கொண்டு, அதனைக் கிரியையில் வெளிப்படுத்துகிறவர்களுக்குத்தான் பொருந்தும். நாம் கிரியையால் இரட்சிக்கப்படுவதில்லை; ஆனால், நமது இரட்சிப்பு உண்மையெனில் அது கிரியையில் வெளிப்படவேண்டுமே.
நமக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லையென்றாலும், நியாயத்தீர்ப்புண்டு. நாம் ஆண்டவருக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். (மத்.12:36, லூக்.16:2 மத்.25:19, எபி.13:17 ரோமர் 14:12 இப் பகுதிகளைப் பார்க்கவும்). தேவபிள்ளையே, நாம் மீட்கப்பட்டது மெய்யென்றால் நம் இஷ்டப்படி வாழமுடியாது. நம் இஷ்டப்படி வாழுவோமானால் நித்திய வாழ்வின் சந்தோஷத்தை இழந்துவிடுவோம். நித்திய வாழ்வா? நித்திய நரகமா?
ஜெபம்: “பிதாவே, நீர் கிருபையாய் ஈந்த ஆசியை எக் காரணங்கொண்டும் இழந்துவிடாதபடி, உமது வழியில் என்னை நடத்தும். ஆமென்.”