ஜெபக்குறிப்பு: டிசம்பர் 31 புதன்

இவ்வருடத்தின் ஒவ்வொரு கணப்பொழுதையும் கர்த்தருடைய கிருபையால் நாம் கடந்துவர தேவனருளிய பாதுகாப்பிற்காகவும், சுகத்திற்காகவும் முழு உள்ளத்தோடு நன்றி செலுத்தி, வருட இறுதி ஆராதனை, மற்றும் புத்தாண்டு ஆராதனைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், நாமும் புதிய எண்ணங்களோடும் புதிய தீர்மானங்களோடும் புத்தாண்டிற்குள் பிரவேசிக்க ஜெபிப்போம்.

தாழ்மையின் பாடம்

தியானம்: டிசம்பர் 31 புதன்; வாசிப்பு: யோவான் 13:1-15

“நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும்
செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்”
(யோவான் 13:15).

வருடத்தின் கடைசிநாளில் வந்து நிற்கிறோம். புதிய வருடத்தை புதிய சிந்தையோடு ஆரம்பிக்க நம்மில் எத்தனைபேர் ஆயத்தமாய் இருக்கிறோம்? கடைசிநாளில் வந்து நிற்கும் நாம் ஆண்டவர் சிலுவைக்குப் போகுமுன்னர் செய்து காட்டிய கடைசிப் பாடத்தைக் குறித்துச் சிந்திப்பது நல்லது. நமக்குப் பிரியமான ஒருவர் மரிக்கும்போது அவருடைய கடைசி வார்த்தை, செய்யும்படி சொல்கின்ற கடைசிக் காரியம் இவற்றை நாம் முழு மூச்சாக ஏற்று நிறைவேற்ற முயற்சிப்போம். பல காரியங்களை சீஷருக்குக் கற்றுக்கொடுத்த ஆண்டவரும் கடைசி இராப்போசனத்தின்போது முக்கியமான பாடம் ஒன்றைச் செய்தே காட்டினார். அதுவே தாழ்மையின் பாடம்.

இது ஒரு முக்கிய பாடம். சீஷர்கள் ஒருபோதும் மறந்துவிடாதபடிக்கு அதனைச் செய்தே காட்டினார் ஆண்டவர். சீஷரது மனதிலே பதிந்திருந்த இந்த தாழ்மையென்னும் பாடத்தைக் குறித்து அவர்களும் தமது நிருபங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார் (1பேது.5:5). கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்; அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார் (யாக்.4:10).

ஆண்டவரின் மூன்றரை வருட ஊழியகாலத்தில் ஆண்டவர் அவராகவே இருந்தார். சீஷர்கள் சீஷர்களாகவே இருந்தனர். ஆனால், கடைசி இராப்போஜனத்தின்போது ஆண்டவர் தமது அரையிலே துண்டைக்கட்டி, பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து உட்கார்ந்து, ஒவ்வொரு சீஷரினதும் கால்களைக் கழுவினார். கழுவி முடிந்ததும், “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், ….நான் உங்களுக்குச் செய்ததுபோலவே நீங்களும் செய்யும்படிக்கு உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” என்றார். இயேசு இறுதியாக கற்றுக்கொடுத்துச் செய்துகாட்டியது தாழ்மையின் போதனையாகும்.

ஆண்டவரே, தமது மேன்மையைவிட்டு இறங்கி, தம்மைப் பின்பற்றின சீஷர்களின் கால்களைக் கழுவி, மனுஷ குமாரன் ஊழியம் கொள்ளும்படி அல்ல; ஊழியம் செய்யும்படிக்கு வந்தார் என்பதை நிரூபித்தார். இன்று நமது காரியம் என்ன? அதே இராவிருந்தை நினைவுகூரும் நம்மில் சிலர் ஒரு சடங்காகக் கால்களைக் கழுவுவதுண்டு. இன்னும் பலர், பரிசுத்த மேஜையண்டை முழங்காற்படியிடும்போது, தமக்குப் பிடிக்காதவரோ, கோபக்காரரோ அருகில் அமராதவாறு பார்த்துக் கொள்வர். இது எப்படி இருக்கிறது? இனி இந்தப் புது ஆண்டினை புதிய சிந்தையோடு ஆரம்பிப்போம். உங்கள் அனைவருக்கும் சத்தியவசன ஊழியர்கள் சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஜெபம்: “அன்பின் தேவனே, நீர் கற்றுக்கொடுத்த தாழ்மையின் பாடத்தை வரும் ஆண்டிலாவது நான் உண்மையாய் கடைப்பிடிக்க உதவி செய்யும். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: டிசம்பர் 30 செவ்வாய்

“.. நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்” (எரேமி.29:11) என்று வாக்குரைத்த தேவன்தாமே பலவிதமானத் தேவைகளோடு இருக்கிற 10 குடும்பங்களுக்கு இரங்கி அவர்களது மனவிருப்பங்களையும் வேண்டுதல்களையும் அருளி அவர்களை ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

கற்றிடத் தாமதியாதே!

தியானம்: டிசம்பர் 30 செவ்வாய்; வாசிப்பு: அப். 18:24-28

“… தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய்
அவனுக்கு (அப்பொல்லோ) விவரித்துக் காண்பித்தார்கள்”
(அப்போஸ்தலர் 18:26).

ஒரு குடும்பத்தினர் வெளிநாட்டவரை விருந்துக்கு அழைத்திருந்தனர். விருந்தினருக்கு நண்டு விருப்பம் என்பதால், அவர் கரண்டியால் சாப்பிடுவதற்கு இலகுவாக நண்டின் ஓட்டை உடைத்து சமைத்து வைத்தார்கள். அவரும் அதை சுவைத்து உண்ணும்போது நான்கு வயதுள்ள அவ்வீட்டு சிறுமி, தானே நண்டை உடைத்துச் சாப்பிடுவதை இவர் கவனித்தார். உடனே, நானும் இவளைப்போல நண்டை உடைத்துச் சாப்பிட இவளிடமிருந்தே கற்றுக்கொள்கிறேன் என்று சொல்லி, கரண்டியை அப்பால் வைத்துவிட்டு கைகளினால் சாப்பிட ஆரம்பித்தார். தனது வயதையும் மதிப்பையும் எண்ணாமல் ஒரு சிறுமிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்திய இவர் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொண்டார்.

இங்கே அப்பொல்லோவும், ஆவியில் அனலுள்ளவனாய், கர்த்தருக்கு அடுத்தவைகளை திட்டமாய்ப் போதகம்பண்ணுகிறவனாய் இருந்தும், தனக்கு எல்லாம் தெரியும் என்றிராமல், ஆக்கில்லா பிரிஸ்கில்லாவிடம் கற்றுத் தெரிந்துகொள்ள தன்னை தாழ்த்தி விட்டுக்கொடுக்கிறதை வாசிக்கிறோம். இவ்விதமாய் அவன் கற்றுக்கொண்டதால் அதிக உறுதியுடன் வெளியரங்கமாய் யூதர்களுடன் பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவை கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்த ஏதுவாயிற்று. அப்பொல்லோ தன்னைத் தாழ்த்த கற்றுக்கொண்டதால் மற்றவர்களை கிறிஸ்துவுக்குள்ளாய் பெலப்படுத்தவும், அவர்களுக்கு உதவவும் அவனால் முடிந்தது.

நாமோ நமக்கு எதுவும் தெரியாமலேயே எல்லாம் தெரிந்ததுபோல பேசி விடுகிறோம். அறிந்துகொள்ளவும், கற்றுக்கொள்ளவும் நமது பெருமை இடங்கொடாது. தேவனுடைய வார்த்தைகளைக்கூட ஆராய்ந்து படிக்க நமக்கு விருப்பங்கிடையாது. தெரிந்த கொஞ்சத்தை வைத்துக்கொண்டு நாமும் குழம்பி, பிறரையும் குழப்பிவிடுகிறோம். நாம் புதியவற்றைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். தெரியாதோருக்கு அத் தம்பதியினர் செய்ததுபோல நாமும் உதவி செய்திட தயாராக இருக்கவேண்டும்.

2014ஆம் வருட இறுதியில் வந்து நிற்கும் நாம் நம்மை ஒருகணம் ஆராய்ந்து பார்ப்போம். பரிசுத்த வேதாகமத்தைக் கற்றுத் தேர்ந்தவர்கள் யாருமே இல்லை. அப்படியிருக்க அப்பொல்லோவிடம் காணப்பட்ட தாழ்மை நம்மிடம் உண்டா? எத்தனை தடவை நமது பெருமையினால் பல காரியங்களைத் தவற விட்டிருக்கிறோம். நாம் பிறருக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய தருணங்களை இழந்திருக்கிறோம். இன்றே தாழ்மையாக கற்றுக்கொள்ள தீர்மானிப்போம். கர்த்தர் தாமே நம்மை வழிநடத்துவாராக!

ஜெபம்: “அன்பின் தேவனே, என்றும் உம் பாதம் அமர்ந்து, தாழ்மையின் சிந்தையோடு உம்மிடம் கற்றுக்கொள்ள என்மேல் கிருபையாயிரும். ஆமென்.”