ஜெபக்குறிப்பு: நவம்பர் 1 சனி

“என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்” (சங்.17:5) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்முடைய நடைகளை அவரது வழிகளில் ஸ்திரப்படுத்தி, அவர் காட்டும் பாதையில் நாம் நடந்துசென்றிட நமக்கு உதவிச்செய்யும்படியாக ஜெபிப்போம்.

இரண்டாம் வருகை

தியானம்: நவம்பர் 1 சனி; வாசிப்பு: யோவான் 14:1-4

“…நான் மறுபடியும் வந்து உங்களை
என்னிடத்தில் சேர்த்துக்கொள்வேன்”
(யோவான் 14:3).

இந்நாட்களில் நடைபெறும் சம்பவங்கள் உலகத்தின் முடிவைக் குறித்தும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக்குறித்தும் அதிகமாய் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. யுத்தங்கள், கலவரங்கள், தீவிரவாத செயல்கள், இயற்கை அழிவுகள் என்பன உலகத்திற்கு நிச்சயமாக முடிவு உண்டு என்பதை உறுதிப் படுத்துகின்றன. 1550ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த நொஸ்ரடாமஸ் என்ற பிரஞ்சு நாட்டவர், 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதியோடே இந்த உலகத்திற்கு முடிவு வந்துவிடும் என்று கூறினார். இதை ஜப்பானியர்களில் அநேகர் நம்பி, அதிக கலக்கமுற்றிருந்தார்கள் என்று செய்தித்தாள்கள் அறிவித்தன. இந்த நொஸ்ரடாமஸ் என்பவரை ‘தீர்க்கதரிசி’ என்று சிலர் சொன்னார்கள். ஆனால், அப்படியல்ல. இன்றைக்கு தீர்க்கதரிசன வரத்தைப் பற்றியும் குறிசொல்லுதலைப் பற்றியும் அநேக குழப்பங்களுண்டு. அதற்கு, ‘தீர்க்கதரிசி’ என்று தம்மை அழைத்துக்கொள்ளுகிறவர்கள் சிலர் குறிசொல்லுகிறவர்களைப்போல் செயற்படுவதே காரணமாகும். மேலும், 2012 டிசம்பர் மாதத்துடன் உலகம் முடிந்துவிடும் என்று கூறப்பட்டதையும் பல நாடுகள் நம்பின; நடந்ததா?

உலகத்தின் முடிவு நிச்சயம். அதற்குமுன் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் நிச்சயம் என்பதை பரிசுத்த வேதாகமம் 2000 வருடங்களுக்கு முன்னரே முன்னறிவித்துவிட்டது. ஆனால் எப்போது நடைபெறும் என்பதை யாரும் கூற முடியாது என்பதுதான் உண்மை. மத்தேயு 24:30ல் “மனுஷகுமாரன் வல்லமை யோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.” என்று வாசிக்கிறோம். இதே வார்த்தைகளை மாற்குவும் லூக்காவும்கூட எழுதியுள்ளனர். (மாற்கு 13:26; லூக்கா 21:27). யோவான் 14:3ம் வசனத்தில் “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன்.” என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஆண்டவர் தம்முடைய வர்களை தம்மிடம் சேர்த்துக்கொள்ள மீண்டும் வருவார் என்பது நிச்சயம். ஆகவே, நிச்சயப்படுத்தப்பட்ட நிகழ்வைக்குறித்து இன்னுமொரு தீர்க்கதரிசனம் அவசியமில்லை. மாறாக, கட்டாயம் நிகழவுள்ள கிறிஸ்துவின் வருகையில் அவரைச் சந்திக்க ஆயத்தமாவதே ஞானமுள்ள செயலாகும். ஆகவே, அன்றாட வாழ்விலே நம்மைநாமே ஆராய்ந்து பார்த்து, வாழ்வில் சரிசெய்ய வேண்டியவற்றைச் சரிசெய்து, கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தமாவோமாக.

ஜெபம்: “அன்பின் தேவனே, உமது வருகையில் உம்மைச் சந்திக்க எப்பொழுதும் ஆயத்தமாய் காத்திருக்கிறவனாக வாழ எனக்கு உதவி செய்தருளும். ஆமென்”

சீர்திருத்தம்

அதிகாலை வேளையில்… (நவம்பர்-டிசம்பர் 2014)
– Dr.உட்ரோ குரோல்

“அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின்
பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.”
(2 நாளாகமம் 29:20)

இஸ்ரவேலின் வடநாட்டிலிருந்து பத்து கோத்திரங்கள் தாழ்ச்சியையும், தென்நாட்டைச் சேர்ந்த இரண்டு யூதாவின் கோத்திரங்கள் ஏற்றத்தையும் இறக்கத்தையும் சந்தித்துக் கொண்டிருந்தன. சமாரியாவின் அழிவுக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், யூதாவின் பதின்மூன்றாவது இராஜாவாக எசேக்கியா தனது தகப்பனார் ஆகாசின் மறைவுக்குப் பின்னர், அரியணை ஏறினார். அப்பொழுது இஸ்ரவேலை அதன் கடைசி அரசரான ஓசியா ஆண்டு கொண்டிருந்தார். எசேக்கியா இராஜாவாகிறபொழுது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் நீண்ட நல்லாட்சி புரிந்தார்.

தமது தகப்பனைப் போலிராமல், தேவனுக்கு முன்பாக தாவீதைப் போல செம்மையாய் நடந்தார். “அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.” (2நாளா.29:2) என்று வேதம் அவரைப் பற்றிக் கூறுகிறது. பென்சிரா என்ற பழங்காலத்து வரலாற்று ஆசிரியர், தாவீது, யோசியா மற்றும் எசேக்கியா ஆகிய மூன்று அரசர்கள் மாத்திரமே உன்னத தேவனுடைய கட்டளைகளை மறக்காமல் கைக்கொண்டனர் என எழுதியுள்ளார். மேலும் இவரைப் பற்றி, “அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக் கொண்டு நடந்தான். ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று” (2இரா.18:5-7) என்று வேதத்தில் எழுதப் பட்டுள்ளது.

தனது ஆட்சியின் முதலாவது மாதத்தில் யூதாவின் வரலாற்றில் காணாத ஒரு மத சீர்திருத்தத்தை இவ்வரசர் கொண்டுவந்தார். ஆகாஸ் அரசரால் மூடப்பட்டிருந்த தேவாலயத்தைத் திறந்து அதனைப் பழுது பார்த்து, சர்வாங்க தகனபலி பீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்தார். இத்தகைய சீர்திருத்தத்தைச் செய்வதற்கு ஏசாயா தீர்க்கதரிசி அவருக்கு தூண்டுகோலாகவும், உறுதுணையாகவும் இருந்தார். எசேக்கியா அரசனுக்கு ஏசாயா தீர்க்கதரிசி உறவின் முறையாவார் என்று யூதபாரம்பரியம் கூறுகிறது. இத்தீர்க்கதரிசி, உசியா, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா ஆகிய நான்கு யூத அரசர்களின் ஆட்சியின் பொழுது தீர்க்கதரிசனம் உரைத்தார் (ஏசாயா 1:1). எசேக்கியா அரசரும் ஏசாயா தீர்க்கதரிசியும் இணைந்து, யேகோவா தேவனை வணங்குவதற்கு இஸ்ரவேலில் மதசீர்திருத்தத்தைச் செய்தனர். எட்டே நாளில் தேவாலயம் பழுது பார்க்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டது. கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகன பலிபீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரிக்கப் பட்ட அறிக்கை எசேக்கியா அரசருக்கு அளிக்கப்பட்டது. இவை ஆகாஸ் அரசர் காலத்தில் உபயோகமற்றவையாக இருந்தன.

“அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான்.” (2 நாளா.29:20). ஆசாரியர்கள் செலுத்தப்பட வேண்டிய பலிகளை செலுத்தினர். லேவியர்கள் கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசித்து, கீதங்களால் கர்த்தரைத் துதித்தனர். கீதவாத்தியங்கள் முழங்க, ஆசாரியர்கள் பூரிகைகளை ஊதி ஆர்ப்பரிக்க, சபையினர் தேவனைப் பணிந்துகொண்டனர். உண்மையிலேயே இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. அங்கிருந்த அனைவரும் எசேக்கியா அரசருடன் இணைந்து யேகோவா தேவனைப் பணிந்து கொண்டனர். இது எசேக்கியா அரசரின் முதல் சீர்திருத்தம்.

இரண்டாவதாக, அவர் “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி, எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள்” என்று இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினார். அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் யோசுவாவின் காலத்தில் இஸ்ரவேலர் பஸ்கா பண்டிகையை ஆசரித்தனர். அதன்பின்னர், இஸ்ரவேலர் அப்பண்டிகையை ஆசரித்தது இங்கேதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விடைப்பட்ட கொந்தளிப்பின் நாட்களில் தேவனுடைய ஜனம் எவ்வளவாய் தாழ்ந்துவிட்டனர்!

தம்முடைய ஜனத்தின் மேல் கரிசனை கொண்டு, தமது ஆலயத்தைப் பழுதுபார்த்து, சுத்தப்படுத்தி, பலிகளையும் ஆராதனையையும் ஒழுங்குபடுத்தி அதிகாலமே எழுந்து தம்மை பணிந்துகொண்ட இம்மனிதனைக் கண்ட யேகோவாவின் மனம் அதிகமாய் மகிழ்ச்சியினால் துள்ளியிருக்கும். இவையெல்லாம் எசேக்கியா அரசரின் சீர்திருத்தங்களின் ஆரம்பமே. இன்று இதுபோன்ற எசேக்கியாக்கள் அதிகாலமே எழும்பி, இஸ்ரவேலில் மீண்டும் தொழுகையில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தால் தேவனுடைய உள்ளம் எவ்வளவாய் களிகூறும். இதற்காக நாம் ஜெபிப்போமா? தேவஜனங்களின் இரட்சிப்புக்காகவும் இஸ்ரவேலின் சமாதானத்துக்காகவும் வேண்டிக்கொள்வோம்.

அதிகாலை கீதம்:
உம் கிரியையை உயிர்ப்பியும் தேவா!
உம் வல்லமையான கரங்கள் விரியட்டும்;
உம் வல்லமையான சத்தத்தை உயர்த்தும்,
உம் ஜனங்கள் உயிரடைந்து கேட்கட்டும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (நவம்பர்-டிசம்பர் 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(9) சிங்கள மொழிபெயர்ப்பு

1786-இல் ஆதியாகமமும் 1787-இல் யாத்திராகமமும் 1789-இல் லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் எனும் புத்தகங்களும் சிங்களத்தில் இவரால் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.

1796-ஆம் ஆண்டு இலங்கையைப் பிரித்தானியர் கைப்பற்றினர். 1812-ஆம் ஆண்டு கொழும்பில் வேதாகமச்சங்கத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டது. 1813-இல், கல்கத்தா வேதாகமச் சங்கம், ஒல்லாந்து சபை மிஷனரிகள் மொழிபெயர்த்த சிங்கள புதிய ஏற்பாட்டில் 2000 பிரதிகளை அச்சிட்டு கொழும்புக்கு அனுப்பியது. எனினும் இலங்கை வேதாகமச்சங்கம் அம்மொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தது. 1805-ஆம் ஆண்டு அரசில் பணிபுரிவதற்காக இலங்கை வந்த டொல்ஃபிரி என்பவர் பல மொழிகளை அறிந்திருந்ததோடு, இலங்கை வந்த குறுகிய காலத்திலேயே பாளி மற்றும் சிங்கள மொழிகளைக் கற்றமையினால், அவரிடம் புதிய சிங்கள வேதாகம மொழி பெயர்ப்புப் பணியை வேதாகமச் சங்கம் ஒப்படைத்தது. இவர் 1817-இல் மரணமடைந்தார்.

அச்சமயம் இவர் புதிய ஏற்பாட்டில் 2 தீமோத்தேயு 2 ஆம் அதிகாரம் வரை சிங்களத்தில் மொழிபெயர்த்திருந்தார். மொழிபெயர்ப்பு வேலைகளில் இவருக்கு மெதடிஸ்ட், பப்டிஸ்ட், அங்கிலிக்கன் சபை மிஷனரிகளும் பல சிங்கள மக்களும் உதவி செய்துள்ளனர். டொல்ஃபிரியின் மரணத்தின்பின் அவருக்கு உதவியாயிருந்த மிஷனரிகள் மொழிபெயர்ப்பு வேலைகளைப் பூர்த்தி செய்தனர். புதிய ஏற்பாடு 1817-இலும், பழைய ஏற்பாடு 1823-இல் மூன்று பகுதிகளாகவும் வெளிவந்தது. இம்மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர்களுள் அங்கிலிக்கன் சபை மிஷனரி அன்று ஆர்மர், பப்டிஸ்ட் சபை மிஷனரி சாட்டர், மெதடிஸ்ட் சபை மிஷனரி கிளவ் என்போர் முக்கியமானவர்களாவர்.

1827-இல் இவ்வேதாகமம் திருத்தப்பட்டது. சிங்களத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்த காலத்தில் டொல்ஃபிரி பாளி மொழியிலும் வேதாகமத்தை மொழிபெயர்த்தார். அவரது மரணத்தின் பின் மெதடிஸ்ட் மிஷனரி க்ளவ் இம்மொழிபெயர்ப்பைப் பூர்த்தி செய்தார். இம்மொழி பெயர்ப்பு பர்மாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு பெளத்த பிக்குகள் மத்தியில் ஊழியம் செய்தவர்களால் உபயோகிக்கப்பட்டது. டொல்ஃபிரியின் வேதாகமத்தின் மொழிநடை உயர்வானது என கருதிய சபை மிஷனரி சங்கத்தினர் 1820-இல் ஒரு புதிய சிங்கள மொழிபெயர்ப்பு வேதாகமத்தைத் தயாரிக்கத் தொடங்கினர்.

கோட்டே எனுமிடத்தில் பணியாற் றிய சாமுவேல் லெம்பிரிக், ஜே.செல் சிர்க் எனும் இரு மிஷனரிகளும் புதிய சிங்கள வேதாகம மொழி பெயர்ப்பாளர்களில் முக்கியமானவர்களாவர். எனினும், இவர்களது மொழி பெயர்ப்பில் தரம் குறைந்த சிங்கள மொழியே உபயோகிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. 20 வருட காலமாக இம்மொழி பெயர்ப்பு பரீட்சார்த்தமாக உபயோகிக்கப்பட்ட போதிலும், மக்கள் இம்மொழி பெயர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், 1852-இல் ஒரு புதிய மொழி பெயர்ப்பைத் தயாரிக்க வேதாகமச் சங்கம் ஒரு குழுவை நியமித்தது. இதில் அங்கிலிக்கன் மற்றும் மெதடிஸ்ட் சபை மிஷன்களைச் சேர்ந்தவர்கள் அங்கம் வகித்தனர். இவர்களது முயற்சியின் பயனாக 1885-இல் புதிய சிங்கள வேதாகமம் வெளி வந்தது.

அதேசமயம், பப்டிஸ்ட் சபை மிஷனரிகளான ஜேம்ஸ் சாட்டர், எபனேசர் டேனியல் எனும் இருவரும் இன்னுமொரு புதிய சிங்கள மொழி பெயர்ப்பு வேதாகமத்தைத் தயாரித்தனர். இவர்களது பணி காரணமாக 1862-இல் புதிய ஏற்பாடும், 1876-இல் பழைய ஏற்பாடும் சிங்கள மொழியில் வெளிவந்தது. 1905-இல் இம்மொழி பெயர்ப்பு திருத்தப்பட்டது. இது மறுபடியுமாக 1919-இல் ஒரு சில திருத்தங்களுடன் பிரசுரிக்கப்பட்டது. அதேசமயம் 20-ஆம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவர்களும் வேதாகமத்தை சிங்களத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினர். 1920-ஆம் ஆண்டு சகல சபைகளும் உபயோகிக்கக்கூடிய விதமான ஒரு ஐக்கிய பதிப்பு வேதாகமம் இருக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. 1925-இல் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1931-இல் புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. 1938-இல் முழு வேதாகமத்தினதும் ஐக்கிய பதிப்பு சிங்கள மொழியில் வெளிவந்தது. இவ்வைக்கியப் பதிப்புத் தயாரிப்பில் பப்டிஸ்ட் மிஷனரி சங்கத்தவர்கள் மொழிபெயர்த்த வேதாகமமே முக்கிய பங்கு வகித்தது.

(10) ஏனைய மொழி பெயர்ப்புகள்

ஆசியாவில் பலதரப்பட்ட மொழிகளைப்பேசும் மக்கள் இருக்கின்றனர். அம்மக்களுடைய மொழிகளிலும் தேவனுடைய வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. லாஓஸ் நாட்டில் பணியாற்றிய சுவிஸ் மிஷனரிகள் 1926-இல் புதிய ஏற்பாட்டையும், 1932-இல் முழுவேதாகமத்தையும் லாஓஸ் நாட்டு மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். அதேபோல, கம்போடியாவில் பணியாற்றிய கிறிஸ்தவ மிஷனரி ஐக்கியத்தைச் சேர்ந்த மிஷனரிகள் 1929-இல் புதிய ஏற்பாட்டையும், 1954-இல் முழு வேதாகமத்தையும் கம்போடிய மொழியில் மொழிபெயர்த்து வெளி யிட்டனர்.

மேலும், இந்தோனேஷியா நாட்டின் தீவுகளில் பேசப்படும் மொழிகளுள் 8 மொழிகளில் முழு வேதாகமமும், 12 மொழிகளில் புதிய ஏற்பாடும் 30 மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

(தொடரும்)

வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர்-டிசம்பர் 2014)

1. ஒவ்வொரு ஞாயிறு மதியம் 12 மணிக்கு தமிழன் டிவியில் ஒளிபரப்பும் சத்தியவசனம் நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன். பாடல்களும் செய்திகளும் மனதில் பதியும்படி உள்ளது. பாகவதர் ஐயா அவர்களது செய்தி ஆசீர்வாதமாக இருந்தது. உங்களது ஊழியம் மேலும் ஆசீர்வதிக்கப்பட ஜெபிக்கிறேன்.

Mr.G.Alexander, Erode.

2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான நூலின் சத்தியங்கள் இம்மட்டும் கர்த்தருக்குள் எங்களை பாதுகாத்து நடத்தி வந்தமைக்காக கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறோம். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.D.Devanesan, Ranipet.

3. சத்தியவசன சஞ்சிகை கிடைக்கப்பெற்றோம். “இயேசு உங்களை விசாரிக்கிறவர்” என்ற புத்தகம், நாங்கள் குடும்பமாக மீளாத்துயரில் மூழ்கியிருந்தபோது கிடைத்தது. மிக்க நன்றி. மிகுந்த ஆறுதலைத் தந்தது. வசனத்தின் மூலமாக ஆண்டவர் எங்களைத் தேற்றினார். வேதாகமப்புதிர், வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகங்களையும் கவனத்துடன் படிக்கவும் ஆவிக்குரிய வாழ்வில் வளரவும் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் தினமும் ஆண்டவர் எங்களோடு பேசுவதைப் போலவும், அந்தந்த நாளுக்குரிய பெலனைத் தந்து, சோர்வை நீக்கி, விசுவாசத்தில் வளர உதவுகிறது. தியானங்களை எழுதுகிற சகோதர, சகோதரிகளுக்காக தினமும் ஜெபிக்கிறேன்.

Mrs. Mercy, Tirunelveli.

4. Greetings to you in the precious Name of our Lord and Saviour Jesus. We are really blessed by your Messages. Please pray for us to fulfill God’s plan in our life. We also continue to pray for your Ministry.

Mrs.V.Prince Antony, Villupuram.

5. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்திலுள்ள ஒவ்வொருநாளின் தியானங்கள், வேதவாசிப்புகளை படித்து ஆறுதல் அடைகிறேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!

Mrs.Ratna Samraj, Banglore.

6. கர்த்தருடைய கிருபையால் நானும் என் குடும்பமும் ஆசீர்வாதமாக இருக்கிறோம். செப்டம்பர் – அக்டோபர் தியானபுத்தகம் கிடைத்தது. ஜூலை – ஆகஸ்டு மாதத்தின் தியானங்கள் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. ஜூலை மாதத்தின் தியானத்தில் ஆதியாகமப் புத்தகத்திலிருந்து நிறைய காரியங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. ஆகஸ்டு மாதத்தின் தியானத்திலிருந்து யோனா மூலமாக அநேக காரியங்களைக் கற்றக்கொண்டேன். யோனாவுடைய வாழ்க்கையிலிருந்து என்னை தற்பரிசோதனை செய்ய கர்த்தர் கிருபைசெய்தார். ஒவ்வொரு நாளின் ஜெபக்குறிப்புகளுக்காகவும் நாங்கள் தவறாமல் ஜெபித்து வருகிறோம். ஊழியப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!

Pastor. A.Soman, Gobi.

page 1 of 2