ஜெபக்குறிப்பு: மார்ச் 31 வெள்ளி
“கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்” (ஏசா.49:13) இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மேல் இரக்கமாக இருந்து நடத்திவந்த அவருடைய வழிநடத்துதல்களுக்காக ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.
உணர்வுள்ளவர்களாக…
தியானம்: மார்ச் 31 வெள்ளி; வேத வாசிப்பு: சங்கீதம் 51:1-19
“தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவர மான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” (சங்கீதம் 51:10).
சிலரிடம் எதையாவது செய்யும்படி கேட்டால், “நான் தகுதி யற்றவன். நான் ஒரு பாவி. ஆண்டவரின் காரியங்களைச் செய்ய எனக்கு எந்தத் தகுதியும் இல்லை” என்று சொல்லுவார்கள். அதைக் கேட்டு மற்றவர்களும், “எவ்வளவு தாழ்மையான மனிதன். தன்னை உயர்த்தி என்றைக்குமே பேசுவது கிடையாது. இவரைப்போல ஒருவரைக் காணமுடியாது” என்று அவரைக் குறித்து புகழ்பாடுவர். அந்தப் புகழ்ச்சியையும் அவர் ஏற்க மறுப்பார். இப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாள் எல்லாம் இப்படியே சொல்லிக்கொண்டே இருப்பார்களே தவிர, தங்கள் வாழ்வில் என்றைக்குமே மாற்றத்தை ஏற்படுத்தமாட்டார்கள். இவர்களை உணர்வற்றோர் என்று சொல்லலாமோ!
தாவீது, கொடிய பாவமாகிய விபசாரத்தில் விழுந்தான். அதிலிருந்து தந்திரமாக தப்பிக்கொள்ள கொலையும் செய்வித்தான். ஆனால், தன் பிழையை உணர்ந்தபோதோ, அவன் மனஸ்தாபத்துடன் மனந்திரும்பி, தேவனோடு தனது உறவைக் காத்துக்கொண்டான். தேவனுடைய இதயத்தில் இடத்தையும் பிடித்து கொண்டான். தாவீது பாவமன்னிப்புக்காகக் கதறிய இந்த 51ஆம் சங்கீதம் எவ்வளவு உணர்வோடு பாடப்பட்டுள்ளது. இன்று நாமும் இதைப் பாவ மன்னிப்புக்காகப் பயன்படுத்துகிறோம்.
பாவத்தில் விழுந்தவன் விழுந்த இடத்திலேயே கிடக்காமல் மீண்டும் எழுந்து பாவமன்னிப்புப் பெற்று பரிசுத்தமாய் வாழவேண்டுமென்றே தேவன் விரும்புகிறார். தாவீதின் வாழ்வில் அந்தப் பரிசுத்தத்தை நோக்கியே அவன் ஓடினான். ஆனால் இன்று, பலரும் தங்களைப் ‘பாவிகள்! பாவிகள்!’ என்று சொல்லிக் கொள்வார்களே தவிர, அந்தப் பாவநிலையில் இருந்து எழுந்திட அவர்களுக்கு மனமில்லை. மனமாற்றமடைந்து புதுவாழ்வு வாழ விருப்பமில்லை. பாவத்திலேயே வாழ்ந்து சந்தோஷப்பட விரும்புகிறார்கள்.
விசேஷமாக இந்த நாட்களில், நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமாக. பாவத்தை வெறுத்து மனந்திரும்ப நாம் ஆயத்தமா? அதற்கு நாம் நமது தவறுகளை ஒத்துக்கொள்ளவேண்டுமே! உணர்வற்றவர்களைப்போல வாழாமல் உணர்வடைந்து மனந்திரும்புவோம். நாம் பாவிகள் தகுதியற்றவர்கள் என்று சொல்லிக் காலத்தைக் கடத்துவதை விட்டுவிட்டு, உண்மையாகவே மனந்திரும்பி தேவனுக்குப் பிரியமானவர்களாய் வாழுவோம். தாவீதைப்போல, நம்மை நாமே உணர்ந்து, “உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்” என்று நம்மாலும் பாட முடியுமா?
“என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங்கீதம் 66:18).
ஜெபம்: அன்பின் தேவனே, ஒவ்வொருநாளும் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு எங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து, சரிசெய்ய வேண்டியதைச் சரிசெய்ய எங்களுக்கு கிருபை தாரும். ஆமென்.
வாக்குத்தத்தம்: மார்ச் 30 வியாழன்
… நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரே.30:10)
வேதவாசிப்பு: யோசுவா.10,11 லூக்கா.6:20-49
ஜெபக்குறிப்பு: மார்ச் 30 வியாழன்
“என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2கொரி.12:9) என்ற வாக்குப்போலவே சத்தியவசன ஊழியர்களை கர்த்தர் பலப்படுத்தி தமது கிருபையால் தாங்கி நடத்தவும், அவர்களது தேவைகளைச் சந்தித்திடவும் பாரத்துடன் ஜெபிப்போம்.
பொறுமையோடு சகித்தல்
தியானம்: மார்ச் 30 வியாழன்; வேத வாசிப்பு: ஆதியாகமம் 45:1-11
“என்னை இவ்விடத்திற்கு வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம். …ஜீவரட்சணை செய்யும் படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்” (ஆதி. 45:5).
வாழ்க்கையில் பலவிதமான துன்பங்களை நாம் எதிர்நோக்கியிருக்கலாம். ஆனால் இப்போது அவற்றைத் திரும்பிப்பார்த்தால், அந்தத் துன்பங்களுக் கூடாகவும் நாம் பெற்ற அனுபவங்களையும் நன்மைகளையும் கண்டுகொள்ளக் கூடியதாகவே இருக்கும். எனினும் துன்பங்களுக்கூடாகச் செல்லுகையில் நாம் எப்படி அவற்றை எதிர்கொள்கிறோம் என்பதிலேதான் நமது வெற்றி தங்கியிருக்கிறது. பொறுமையோடு சகித்திருக்கிறோமா? அல்லது, நமது துன்பங்களுக்குக் காரணமானவர்களை நொந்துகொண்டோமா?
யோசேப்பு தனது வாழ்வில் எத்தனையோ துன்பங்களை எதிர்கொண்டார். ஆனால் முடிவில் அவை யாவுமே அவருக்கு ஆசீர்வாதமாய் அமைந்ததே தவிர, எதுவும் கேடாய்ப் போகவில்லை. அவரது துன்பங்களுக்குப் பலர் காரணமாய் இருந்தனர். அதிலும் முக்கியமாக அவரது சகோதரர் காரணமாய் இருந்தனர். யோசேப்பு தனது துன்பங்களுக்குக் காரணமாயிருந்த தனது சகோதரரை நொந்துகொள்ளாமல், அவர்கள் தன்னை எகிப்துக்கு வரும்படி விற்றுப்போட்டாலும், ஜீவரட்சணை செய்யும்படிக்கே தேவன் தன்னை அந்த இடத்திற்குக் கொண்டுவந்தார் என்று, தனது துன்பங்களைப் பெரிதுபடுத்தாமல், அதில் நேர்ந்த நன்மைகளை நினைத்து தேவனை மகிமைப்படுத்தினார்.
இயேசுவானவரும் தமது சிலுவைப் பாடுகளை பொறுமையோடு சகித்துக்கொண்டார். தனது பாடுகள் பிதாவின் சித்தமே என்பதையும், அதற்குப் பின்னால் மனுக்குலத்தின் மீட்பு அடங்கியுள்ளதென்பதையும் அறிந்தவராய் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக்கொண்டார். சிலுவையில் தன்னைக் காயப்படுத்தி துன்பப்படுத்தினவர்களுக்காகவும் ஜெபம் பண்ணினார். சந்தோஷமான நேரத்தை எதிர்கொள்வதைப் பார்க்கிலும், துன்பமான நேரத்தை எப்படி எதிர் கொள்ளுகிறோம் என்பதில்தான் நாம் தேவன்மீது வைத்திருக்கிற நம்பிக்கையின் உறுதி வெளிப்படுகிறது. இன்று நமது காரியம் என்ன? துன்ப சூழ்நிலைகளிலும் நாம் நிதானமாக நடக்கிறோமா? அல்லது நமது துன்பங்களுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்களை நாம் துன்பப்படுத்துகிறோமா? தேவன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, அவர் தரும் பெலனோடுகூட பிரச்சனைகளைப் பொறுமையோடு சகித்து, அதனை எதிர்கொண்டு ஜெயம் பெற தேவன் கிருபை செய்வாராக. துன்பங்களைக் கண்டு துவளக் கூடாது. நமது ஆண்டவர் நமக்காகத் துன்பப்பட்டாரே!
“என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள். நானோ ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்” (சங்கீதம் 109:4).
ஜெபம்: ஆண்டவரே, துன்பமான நேரத்தில் உம்மில் சார்ந்து நீர் தந்தருளும் பெலத்தோடு எதிர்கொண்டு ஜெயமெடுக்க உமது கிருபை தாரும். ஆமென்.