ஜெபக்குறிப்பு: 2018 மே 1 செவ்வாய்

“..அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமி.33:26) வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ள தேவன் தாமே இப்புதிய மாதத்தில் நம் ஒவ்வொருவரது தேவைகளையும் சந்தித்து தமது மிகுந்த இரக்கங்களினால்  நம்மை வழிநடத்த ஒப்புவித்து ஜெபிப்போம்.

பாவத்தின் விளைவு!

தியானம்: 2018 மே 1 செவ்வாய்; வேத வாசிப்பு: ரோமர் 3:22-26

“எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி…” (ரோமர் 3:23).

ஏதேன் தோட்டத்தில், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைத் தவிர ஏனையவற்றைப் புசிப்பதற்கு தேவன், ஆதாம் ஏவாளை அனுமதித்திருந்தார். அவர்களோ தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போய், தேவனுடனான உறவை இழந்துபோனார்கள். அவர்கள் செய்த பாவத்தின் விளைவானது மரணத்தைப் பிறப்பித்தது. அது நித்தியத்தையும் பாதிக்கக்கூடியது. ஆதாமின் பாவத்தின் காரணமாகவே மரணம் அறிமுகமானது. இந்த மரணத்தை நாம் மூன்று விதமாக விபரிக்கலாம்.

ஒன்று, உடல் ரீதியான மரணம் (Biological death). இதன் காரணமாகவே ஆதாம் ஏவாள், பின்வந்த சந்ததியினர், நம் அனைவரதும் சரீரங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் பெலவீனமாகி இயற்கை மரணமடைகிறது. இன்றும் தொடருகின்ற இயற்கை மரணம் இதுதான். இரண்டாவது, மன ரீதியான மரணம். (Psychological death). ஆதாமையும் ஏவாளையும் குற்ற உணர்வும் வெட்கமும் ஆட்கொண்டது. அதனால் அவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டார்கள். முன்புபோல இருவரும் ஒற்றுமையாயிருக்க இயலாமற்போனது. பிற மனிதருடனும் உறவு அறுந்துபோக இதுவே காரணமாக அமைந்தது. மூன்றாவது, மரணம், ஆத்மீக ரீதியானது (Spiritual death). ஆதாமும் ஏவாளும் தேவனிடமிருந்து பிரிந்துபோனார்கள். தேவனோடிருக்கின்ற உறவு அறுந்து போனால், அந்த மனிதன் மரித்ததற்கு சமம். இது ஆதாம் ஏவாளுக்கு மாத்திரமல்ல, மனுக்குலத்துக்கே பயத்தையும் கலக்கத்தையும் திகிலையும் ஏற்படுத்தியது.

தேவசாயலில் உருவாக்கப்பட்டு, தூய்மையான வாழ்வு வாழ்ந்த மனிதன் பாவத்தில் விழுந்ததன் விளைவாக மனுக்குலமே இப்பொழுது பாவத்தோடு போராடும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஆதாம் ஏவாளைத் தொடர்ந்து, “எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி” (ரோமர் 3:23) விட்டார்கள். ஆனாலும், மனிதன் மீது அக்கறையுள்ள தேவன் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. அவர் ஒவ்வொரு மனிதனினதும் தனிப்பட்ட பாதுகாப்பைக் குறித்து அக்கறையுள்ளவர். ஆகவேதான் நம்மை இரட்சிப்பதற்காக தேவன் ஒரு இரட்சகரை வாக்குப்பண்ணினார். அவர் ஒருவரே பாவத்தின் விளைவான மரணத்தை ஜெயிக்க வல்லவர். நாமும் அந்த இரட்சகரையே நோக்கிப் பார்ப்போம். மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவினாலேயே நாம் பாவத்தின் பிடியிலிருந்து முற்றிலும் ஜெயம் பெற்றுக்கொள்ளுகிறோம்; நீதிமான் களாக்கப்படுகிறோம். அந்த நிச்சயத்தை நீங்களும் பெற்றுக்கொண்டுள்ளீர்களா?

“அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோமர் 4:25)

ஜெபம்: அன்பின் தேவனே, பாவஞ்செய்து தேவ மகிமையையிழந்திருந்த எங்கள்மேல் நீர் வைத்த கரிசனைக்காக உம்மைத் துதிக்கிறோம். கிறிஸ்துவுக்குள் எங்களை நீதிமானாய் மாற்றிவிட்டீர், ஸ்தோத்திரம். ஆமென்.

தரிசனமா அல்லது விசுவாசமா?

அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2018)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி : ஏசாயா 37:1-38
அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள் (ஏசாயா.37:36).

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி. 11:1). இதை ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் 36 மற்றும் 37ஆம் அதிகாரங்களில் தரப்பட்ட நிகழ்வுகள் அழகாக விளக்குகின்றன. அசீரிய அரசர் சனகெரிப் யூதாவின் சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து அவைகளைப் பிடித்துக்கொண்டார். எருசலேமுக்கு தென்மேற்கேயுள்ள லாகீஸ் என்ற பட்டணத்தை முற்றுகையிட்டார். ரப்சாக்கே என்னும் அதிகாரியின் தலைமையில் ஒரு பெரிய சேனையை அனுப்ப திட்டமிட்டார். யூத நாட்டு சேனை வீரர்களை ரப்சாக்கே அதைரியப்படுத்தினால் யுத்தம் இல்லாமலேயே எசேக்கியா ராஜா சரணடைந்து விடுவார் என அசீரியர்கள் எண்ணினர்.

அதன்படியே ரப்சாக்கே யூதாவின் சேனைகளிடம் அவர்கள் வெற்றி பெற முடியாததன் காரணத்தை விளக்குகிறார். நெரிந்த நாணல் கோலைப் போன்று இருக்கும் எகிப்திய அரசர் பார்வோனை நம்புவது வீண். வலிமை வாய்ந்த அசீரிய சேனைக்கு எதிராக வந்த அனைத்து நாட்டையும் அவர் களது தெய்வங்கள் தப்புவிக்கவில்லை. இஸ்ரவேல் தேவனையும் நம்புவதில் அர்த்தமில்லை என்று சோர்வான வார்த்தைகளைக் கூறினார். எசேக்கியாவும் அவனது ஜனங்களும் என்ன செய்ய முடியும்? எசேக்கியாவின் ஊழியக்காரர் தேவமனிதனாகிய ஏசாயாவிடம் ஆலோசனைக்காக அனுப்பப்பட்டனர்.

அவர்களிடம் தம்மை நிந்தித்த ரப்சாக்கேயை தேவன் பார்த்துக் கொள்வார். அவருடைய நிந்தனை சொற்களுக்காக அசீரிய சேனைகளை தேவன் அழிப்பார் என்றும் ஏசாயா உறுதியளித்தார். அசீரியர்களை அழிப்பதன் மூலம் நீர் ஒருவரே கர்த்தர் என்பதை பூமியின் இராஜ்யங்களெல்லாம் அறியும் (ஏசாயா 37:20). அசீரியா ராஜா தேவனுடைய பரிசுத்த நகரத்துக்குள் வருவதுமில்லை, அதன் மேல் அம்பு எய்வதுமில்லை என்றும் ஏசாயா முன்னுரைத்தார். தனக்கு விரோதமாகச் சொன்ன நிந்தனை சொற்களுக்காக தேவன் ஆச்சரியமான முறையில் யூதாவை பாதுகாப்பார். எசேக்கியா அரசரும் அவருடைய மக்களும் ஒரு விசுவாச வாழ்க்கை நடத்தினார்கள். ஆனால் அந்த விடுதலை வரும்விதம் அவர்களுக்குக் கூறப்படவில்லை. அவர்கள் தேவனை முழுதும் விசுவாசிக்க வேண்டும்.

அன்று இரவிலேயே தீர்க்கதரிசி முன்னுரைத்த அந்த அழிவு நேரிட்டது. அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள் (ஏசாயா37:36). யூத ஜனங்கள் சந்தேகம் எண்ணம் கொண்டிருந்தாலும் தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொண்டார். அதிகாலையில் அவர்கள் எழுந்திருந்து பார்த்தபொழுது இலட்சத்தெண்பத்தையாயிரம் அசீரியர்களின் பிரேதர்களைக் கண்டனர். அவர்கள் தேவனுடைய பரிசுத்த நகரத்துக்கு விரோதமாக எழும்ப வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனெனில் நமது தேவன் வாக்குறுதியைக் காப்பவர்.

1952ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் நாள் ஃபிளாரன்ஸ் சாட்விக் என்ற பெண்மணி காத்லினா தீவிலிருந்து கலிபோர்னியா கடற்கரையோரத்துக்கு நீந்திச்சென்று சாதனை படைக்க முயன்றார். அந்த தூரம் அவருக்கு பெரிய சவால் அல்ல. ஆனால் பசிபிக் கடலின் பனியானது எலும்பையும் நடுக்க வைத்தது. அது மட்டுமல்லாது அடர்ந்த மூடுபனியானது அந்த பகுதி முழுவதையும் கரையைக் காணாத அளவுக்கு மூடிவிட்டது. சுமார் 15 மணி நேர நீச்சலுக்குப் பிறகு தன்னுடைய இலக்கை அடைய அரைமைல் தூரம் இருக்கும் பொழுது அவர் தனது முயற்சியைக் கைவிட்டுவிட்டார். கரைமட்டும் என் கண்ணில் தென்பட்டிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்று பின்னர் அவர் ஒரு நிருபருக்கு பேட்டி அளித்தார்.

சில காலம் கழித்தபின்னர் தனது முயற்சியை மீண்டும் துவக்கினார். பனி கடற்கரை முழுவதையும் மூடியிருந்தாலும், கண்ணால் தனது இலக்கைக் காண இயலாவிட்டாலும் அவர் தனது நீச்சல் நிகழ்வை வெற்றிகரமாக சாதித்து முடித்தார். ஏனெனில் கரை அருகிலேயே உள்ளது என அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டார்.  அந்த நம்பிக்கை அவரை தைரியமாக நீந்தச் செய்து இலக்கை அடைய உதவியது. உண்மையில் இரண்டு மணி நேரத்துக்கு அதிகமான கால வித்தியாசத்தில் ஆண்களுடைய முந்தைய சாதனையை அவர் முறியடித்தார்.

சில வேளைகளில் நாமும்கூட நமக்காக கிரியை செய்யும் தேவனுடைய கரத்தைத் தெளிவாகப் பார்க்க முடியாததால் நம்முடைய இலக்கை அடையாமல் போகிறோம். நம்முடைய இலக்கை அடைய முழு விருப்பம் கொண்டிருந்தாலும் நாம் அதனைக் காணமுடியாதவாறு சந்தேகம் என்னும் பனி தடுத்து விடுகிறது. ஆயினும் தேவனை நம்பி நமது இலக்கை நோக்கி நாம் ஓடும் பொழுது அதிகாலையில் நமது இலக்கு அடைந்ததையும் எதிரியின் பிரேதங்களால் போர்க்களம் நிரம்பியிருப்பதையும் நாம் காணலாம். காரிருளிலும் நாம் தேவனை நம்ப வேண்டும். விசுவாசம் என்பது காணப்படாதவைகளின் உறுதி என்பதை நாம் அறிய வேண்டும்.

அதிகாலைப் பாடல்:

தேவன்மேல் உள்ன ஆழமான விசுவாசம்
எத்தகைய துன்பங்களைக் கண்டும் தளராது;
அநேக எதிரிகளின் எதிர்ப்புக்கும் அஞ்சாமல்
அவரையே நம்பி அசையாமல் இருக்கும்.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மே – ஜுன் 2018)

|1|
I am in receipt of your Anuthinamum Christhuvudan and Magazines regularly. The prayerful Messages and essays in each page of the issues are directely pierced every heart of readers and make all readers to come close to Jesus.

Mr.Dhanaraj, Coimbatore.


|2|
ஐயா நீங்கள் மாதாமாதம் அனுப்பும் புத்தகம் கிடைத்தது. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தின் மூலம் நல்ல செய்தி கிடைக்கிறது. தேவனை நான் இன்னும் அதிகமாக தேடும் ஆர்வம் உள்ளது. நான் படித்த பிறகு என்னுடன் உள்ள சகோதரிகளுக்கும் படிக்கக் கொடுக்கிறேன். அவர்களும் படித்து பயன்பெறுகிறார்கள். தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

Mrs.Radha, Trichy.


|3|
அனுதினமும் கிறிஸ்துவுடன் கால அட்டவணைப்படி வேதாகமத்தை ஒரு ஆண்டில் படித்து முடித்துவிட்டேன். கர்த்தருடைய பெரிதான கிருபையால் எனக்கு 8௦ வயது துவங்கிவிட்டது. வேதாகமத்தை வாசிக்கவும் அதன் மேன்மையையும் அதின் ஆழத்தையும் அறிந்துகொள்ளவும் வாஞ்சையையும் விருப்பத்தையும் ௮திகமாக கொடுத்துவருகிறார். தணியாக இருப்பதால் அதிக நேரம் ஜெபிக்கவும் வேதாகமத்தை வாசித்து தியானிக்கவும் கர்த்தர் கிருபை கொடுத்து வருகிறார்.

Mrs.Leela Packianathan, Tuticorin.


|4|
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படி 2017ஆம் ஆண்டில் பரி.வேதாகமத்தை முழுவதுமாக ஒருமுறை வாசித்து முடித்துவிட்டேன். வேதாகமத்தை முழுவதுமாக வாசித்து முடிக்க தியானபுத்தகம் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நான் கடந்த ஐந்தாண்டு காலமாக இந்தப் புத்தகத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வேதாகமத்தை முழுமையாக வாசித்து முடித்துள்ளேன் என்பதையும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தவறாமல் இப்புத்தகம் கிடைப்பதற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mrs.Gnanajothi Selvaraj, Nallur.


|5|
Dear Brother, The two Magazines from yourself Sathiyavasanam and Anuthinamum Christhuvudan is very much blessing to our family. Thank you for your prayers.

Sis.J.Sugirtha, Chennai.


|6|
தாங்கள் வெளியிடுகின்ற சத்தியவசன, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகங்கள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பிரயோஜனமுள்ளது. தினசரி வேதவாசிப்பு பகுதிகள், ஒவ்வொரு நாளுக்கான தியானங்கள் எங்களை அதிகதிகமாய் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிறது. உங்கள் ஊழியத்தை அதிக ஆசீர்வாதமானதாக காண்கிறேன்.

Mr.G.Prabin, Reetapuram.


|7|
சத்தியவசன பத்திரிக்கைகள் தடையின்றி வருகிறது. கால அட்டவணைப்படியும் மற்றும் ஜெப விண்ணப்பங்களையும் தினமும் காலையில் வாசித்து பயன்பெறுகிறோம். அவைகள் எங்கள் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் வேதத்தை படித்துமுடிக்க ஆண்டவர் உதவி செய்கிறார்.

Mr.Joel Selvanayagam, Coimbatore.

ஆசிரியரிடமிருந்து…

(மே – ஜுன் 2018)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இத்தியானங்கள் மூலமாக ஆசீர்வாதமடைந்தவர்கள் எழுதிய சாட்சி கடிதங்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்காக ஜெபிக்கக் கேட்ட அனைவருக்காகவும் நாங்கள் பாரத்தோடு ஜெபித்தோம். பிளஸ் டூ எழுதின பிள்ளைகள் யாவரும் சிறந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்று விரும்பின உயர்கல்வியை பெறுவதற்கு கர்த்தர் கிருபை செய்யவும், செமஸ்டர் தேர்வு எழுதப்போகும் பிள்ளைகளுக்காகவும் தொடர்ந்து ஜெபிக்கிறோம்.

மார்ச் மாதம் முதல் whatsapp ஊழியத்தை துவங்க தேவன் கிருபை செய்தார். ஒவ்வொரு நாளின் அன்றாட வேதவாசிப்பு, அந்த நாளுக்குரிய வேதவாக்கு தினசரி ஜெபக் குறிப்புகள் அதில் இடம்பெறுகின்றன. தாங்கள் இவ்வூழியத்தின் மூலம் பயனடைய விரும்பினால் தங்கள் பெயரையும் வாட்ஸ் ஆப் எண்ணையும் பதிவு செய்துக்கொள்ளவும். whatsapp No. 6380692034 ஆகும்.

இவ்வருட பங்காளர் காணிக்கையைப் புதுப்பித்துக் கொண்டு தொடர்ந்து சத்தியவசன ஊழியத்தை ஜெபத்தோடு தாங்கிவருவதற்கும் அன்புடன் வேண்டுகிறோம்.  சத்தியவசன காலண்டர் தேவைப்படுவோர் எங்களுக்கு எழுதுங்கள். இலவசமாக அனுப்பித் தருகிறோம்.

இவ்விதழின் மே மாதத்தில் சகோ.ஏர்னஸ்ட் அவர்கள் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையில் கடந்து செல்லவேண்டிய போராட்டங்கள் சோதனைகளில் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து கனிகொடுக்கிற சத்தியங்களை தியானங்களாக தொகுத்து எழுதியுள்ளார்கள். ஜுன் மாதத்தில் சகோதரி.ஜெபி பீடில் அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டும்பணியில் அழைக்கப்பட்டிருக்கிற நாம் நெகேமியாவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகளையும் நேர்த்தியாக எழுதியுள்ளார்கள். இத்தியானங்களை எழுதிய சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். இத்தியானங்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கும்,

கே.ப.ஆபிரகாம்