ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 30 சனி
“இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்” (செப்.3:15) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் நம்முடைய எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மோடிருந்த கர்த்தர் இனியும் எல்லாத் தீங்குக்கும் விலக்கிக்காப்பார். அவருக்கே சகல கனத்தையும் மகிமையையும் செலுத்தி ஸ்தோத்திரிப்போம்.
சுடர்களைப்போல் பிரகாசிக்க…
தியானம்: 2018 ஜுன் 30 சனி; வேத வாசிப்பு: பிலிப்பியர் 2:1-16
ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப் போலப் பிரகாசிக்கிற நீங்கள்… (பிலி.2:14).
இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் பலதரப்பட்ட பிரச்சனைகளும், பிரிவுகளும், சண்டைகளும் காணப்படுவது துக்கத்துக்குரிய விஷயமாகும். இதனால் ஐக்கியமும், ஒற்றுமையும் குறைந்துகொண்டே போகிறது. இதனால் தேவநாமம் அல்ல, மனுஷ நாமங்களே மகிமைப்படுகிறது என்பதுவும் கவலைக்குரிய விஷயமாகும். இப்படிப்பட்ட காரியங்கள் இன்று மாத்திரமல்ல, ஆரம்ப காலத்திலும் விசுவாசிகளுக்குள் காணப்பட்டதையும் மறுக்க முடியாது.
அன்று பிலிப்பிய சபையிலே, கொரிந்து, கலாத்திய சபைகளில் காணப்பட்டதுபோன்ற பிரச்சனைகள் இல்லாவிட்டாலும், பவுலின் சிறையிருப்பு பிலிப்பு சபையினருக்கு மனச்சோர்வையும், சிலர் மத்தியில் ஒற்றுமையின்மையையும், யூத மதக் கொள்கைகள் குறித்த சிறு பிரச்சனைகளையும் கொண்டு வந்தது. இதனால் பிலிப்பு சபையினர் மத்தியில் காணப்பட்ட அன்பும், ஒற்றுமையின்மையும் குலைந்துபோய்விடக்கூடாது என்ற நோக்கோடு பவுல் சிறையிலிருந்தே அவர்களுக்கு உற்சாகத்தையும் ஆலோசனைகளையும் கடிதங்கள் மூலம் தெரிவித்தார். அந்த ஆலோசனைகளில் ஒன்றுதான், அவர்கள் எப்போதும் சுடர்களை போன்று பிரகாசிக்கவேண்டும் என்பதாகும். அதற்காக ஜீவ வசனமாகிய வேத வசனங்களை எப்போதும் வாழ்க்கையில் பிடித்துக்கொள்ளவேண்டும் என்று பவுல் ஆலோசனை எழுதினார். ஏனெனில் அவர்கள் கோணலும் மாறுபாடுமான சந்ததியினரின் மத்தியிலேதான் வாழவேண்டும். அவர்கள் மத்தியில் அவர்கள் குற்றமற்றவர்களும், கபடற்றவர்களுமாக தேவபிள்ளைகளுமாக வாழவேண்டும்.
இன்றும் நாம் பல்லின மக்கள் மத்தியில், பல மாறுபாடுகள் நிறைந்த மக்கள் மத்தியில், மாத்திரமல்ல பல தெய்வ வணக்கமுள்ள மக்கள் மத்தியில்தான் வாழுகிறோம். இந்த இருண்ட உலகில் சுடர்களாக நாம் விளங்கவேண்டுமென்பதே தேவசித்தம். சுடரில் மாசு இருக்காது. அது பாரபட்சம் இன்றி எல்லோருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இப்படிப்பட்ட வாழ்வு வாழவேண்டுமானால், ஒரே வழியாகிய தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளைப் பற்றிக்கொள்வோமாக.
தேவன் ஒரு நோக்கத்துடன் நம்மை இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கியுள்ளார். இருளின் மத்தியில் இருக்கும் மக்கள் மத்தியில் நாம் சுடர்களாகப் பிரகாசித்து, அவர்களையும் அந்த வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ உதவி செய்வதே நமது ஒரே நோக்கமாக இருக்கட்டும். தேவனுடைய நாமம் மகிமைப்படும்போது, பிரிவினைகளுக்கும், சண்டை சச்சரவுகளுக்கும் அங்கே இடமிராது. தேவவசனத்தைப் பற்றிக்கொண்டு தேவநாமத்தை மகிமைப்படுத்துபவர்களாக வாழ்வோமா?
“உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங்.119:105).
ஜெபம்: வெளிச்சத்தின் தேவனே, இருளின் மத்தியில் இருக்கும் மக்களுக்கு முன்பாக உமக்காகப் பிரகாசிக்கின்ற சுடராயிருக்க கிருபை தாரும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2018 ஜுன் 29 வெள்ளி
கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; … அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது. (2நாளா.17:3,5)
வேதவாசிப்பு: 2நாளா.17,18 | அப்போ.7:1-19
ஜெபக்குறிப்பு: 2018 ஜுன் 29 வெள்ளி
“இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன்” (ஏசா.51:22) இவ்வாக்குப்படி பலவிதத் தேவைகளோடிருக்கிற 13 நபர்களது கண்ணைக் கண்ணீருக்கும், காலை இடறுதலுக்கும் தப்புவித்து, அவர்களது வாழ்வில் தேவனது அற்புதவல்லமை வெளிப்படும்படி மன்றாடுவோம்.
வெற்றியுள்ள வாழ்க்கைக்கு…
தியானம்: 2018 ஜுன் 29 வெள்ளி; வேத வாசிப்பு: யோசுவா 1:1-9
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திட மனதாயிரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் (யோசுவா 1:9).
தான் கையிட்டுச் செய்யும் வேலைகளில் வெற்றி காணவேண்டும் என்று தான் சாதாரணமாக எவரும் நினைப்பதுண்டு; அதையே இலக்காகக்கொண்டு செயற்படுவார்கள். என்றாலும், சில வேளைகளில் சிலருக்கு அவர்கள் வாஞ்சிக்கிற வெற்றி கிட்டுவதில்லை. ஆனால், யோசுவாவின் வாழ்வில் நடந்தது என்ன?
மோசே மரித்த பின், இஸ்ரவேலுக்கு வாக்களிக்கப்பட்ட கானானுக்குள் மக்களை வழிநடத்தும் பொறுப்பை தேவன் யோசுவாவிடம் கொடுத்தார். யோசுவா தான் தேவனிடத்திலிருந்து பெற்ற பொறுப்பை வெற்றியோடு முன்னெடுத்து சென்றமைக்கு மூன்று முக்கிய காரணங்களை நாம் சிந்திக்கலாம். ஒன்று, தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களை, யோசுவா இறுகப்பற்றிக்கொண்டிருந்தான். அடுத்து, எல்லா நேரங்களிலும் தேவபெலத்தோடு, திடமனதோடு முன் சென்றான். இறுதியாக, தேவனுடைய வார்த்தைக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தான். ஆக, யோசுவாவின் வெற்றிக்குக் காரணம், தேவனுடைய வாக்குத்தத்தங்கள். அவர் பெலன். அவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிதல். இம் மூன்றையும் தன் வாழ்க்கையில் இணைத்து செயற்படுத்தினான் யோசுவா. தான் தேவனிடத்திலிருந்து பெற்ற பொறுப்பை வெற்றியோடு நிறைவு செய்தான்.
இன்று தேவனுடைய வார்த்தைகள், வாக்குகள் நமது கரங்களில் நமது சொந்தப் பாஷையிலேயே தரப்பட்டுள்ளது. அப்படியிருக்க எந்த நிலையிலும் நாம் தோல்வியடையவேண்டிய அவசியமே இல்லை. ஆனால், தேவன் நம்மோடிருக்கிறார் என்று நமது அறிவு சொன்னாலும், பல தடவை அதை விசுவாசிக்க தயக்கம் ஏற்படுகிறது. இது சந்தேகமாக மாற, பின்னர் பயம் ஆட்கொள்கிறது. பின்னர் எப்படி வெற்றிப் பயணத்தைத் தொடருவது?
இன்று நாம் வெற்றிப்பாதையில் ஓடுகிறோமா? அல்லது, தோற்றுப்போய் தத்தளிக்கிறோமா? தோல்வியை முதலில் ஒப்புக்கொண்டு, வெற்றியைத் தரும் தேவனிடம் சரணடைவோமாக. யோசுவாவோடு கூடவே இருப்பேன் என்ற தேவனே நம்முடன் இருப்பவரும் என்பதால், நாம் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. பிரச்சனைகள், தடைகள் நிச்சயம் வரும். வந்தாலுங்கூட தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளைப் பற்றிக்கொண்டு, என்ன இடர்தான் வந்தாலும் தைரியத்துடனும், தேவனுடைய பெலத்துடனும் முன்செல்வோமாக. கர்த்தர் நம் வாழ்வில் ஜெயத்தைத் தருவார் என்பதை முழுமனதுடன் விசுவாசிப்போமாக.
“உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்”
(சங் 84:5).
ஜெபம்: மன்னிப்பின் தேவனே, கடந்த காலங்களில் நான் அடைந்த தோல்விகளையும் அதற் கான காரணங்களையும் உண்மை மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். இனி வருங் காலங்களில் நான் எந்த நிலையிலும் ஜெயம் பெற்று வாழ கிருபை அருளும். ஆமென்