ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 9 செவ்வாய்
தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார் (2சாமு.21:14) தேசத்தை அழிக்காதபடி திறப்பிலே நின்று ஜெபிக்கிற விண்ணப்பங்களையெல்லாம் கர்த்தர் கேட்டு தேசத்திற்கு சேமத்தைத் தரவும், வாதை நம் தேசத்தில் பரவாதபடிக்கு தேவன் தடுத்தருளவும் மன்றாடுவோம்.
அடிமையாயிருந்து புத்திரரானோம்!
தியானம்: 2020 ஜுன் 9 செவ்வாய் | வேத வாசிப்பு: கலா. 4:1-11
…இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய். நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய் (கலா.4:7).
மனிதரை அடிமைகளாக விற்கும் இடத்தில், ஒரு வாலிபன் கட்டப்பட்டிருப்பதை ஒரு செல்வந்தர் கண்டார். அவனைத் தான் விலைக்கு வாங்குவதாகச் சொன்னார். அந்த அடிமை வியாபாரியோ, இவன் ஒரு இளைஞன், கம்பீரதோற்றமுடையவன், இவனது விலையோ அதிகம் என்றான். அந்தச் செல்வந்தரோ எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை இவனை வாங்குகிறேன் என்றார். இதைக் கேட்ட வாலிபன், என்னை அதிக பணம்கொடுத்து வாங்கும் இவருக்கு நான் எவ்வளவு காலம் அடிமையாக வாழ வேண்டுமோ என்று உள்ளத்துக்குள் புழுங்கிக்கொண்டான். அந்தச் செல்வந்தர் அவனை வாங்கி, கட்டுக்களைக் கழற்றி, விடுதலையாக்கி, சுயாதீனமாகப் போகச்சொன்னார்.
அந்த வாலிபனால் நம்பமுடியவில்லை. அப்பொழுது அந்தச் செல்வந்தர், “உன்னை நான் அடிமையாக வாங்கவில்லை; எனது மகனாகவே எண்ணி வாங்கினேன்” என்றார். ஒரு அடிமை, புத்திரனாகுவது எப்பேற்பட்ட ஒரு பாக்கியம்! அந்தப் பாக்கியத்தை நமக்கு கிறிஸ்துவே ஏற்படுத்தித் தந்தார். இந்தச் சிலாக்கியத்தை விட்டுவிலகி மீண்டும் ஏன் அடிமைத்தன வாழ்வை நாடிப்போகிறீர்கள் என்று பவுல் கலாத்தியரை எச்சரிக்கிறார். “அறியாமல் அடிமைத்தனத்துக்குள் வாழ்ந்தகாலம் போக, இப்போது அனைத்தையும் அறிந்து புத்திரராக வாழ வேண்டிய நீங்கள் மீண்டும் ஏன் இவ்விதமாக அடிமைத்தனத்துக்குள் போக ஆசிக்கிறீர்கள்; நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப் போயிற்றோ என்று உங்களைக்குறித்து பயந்திருக்கிறேன்” என்கிறார் பவுல். கலாத்தியர் பவுலின் உபதேசத்தினால் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு இரட்சிப்பைக் கண்டடைந்தவர்கள். ஆனால் பின்பு யூத மார்க்க போதனையாளரின் போதனைகளால் இழுவுண்டு பின்மாற்றம் கண்டதினால் பவுல் அவர்களை மீண்டும் எச்சரித்தார்.
கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கும், சத்தியத்துக்கும் அப்பாற்பட்ட போதனைகளினால் மக்களைக் கவருவோரையும், இந்தக் காலத்துக்கு ஒத்த, சத்தியத்துக்குப் புறம்பான போதனைகளினால் மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் இழுத்துக்கொள்வோரையும் நாம் இன்றும் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். எனவே, கலாத்தியருக்கு பவுல் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நமக்கும் பொருந்தும் என்பதை நாம் மறுக்கமுடியாது. நாம் விழிப்புடனும் எச்சரிப்புடனும் நடந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். கண்மூடி அசந்துபோகும் நேரத்தில் எதிரியாகிய சாத்தான் துள்ளி எழும்பிவிடுவான். ஜாக்கிரதையாய் நம்மை காத்துக்கொள்வோம்.
வேறொரு சுவிசேஷம் இல்லையே, சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல (கலா.1:7).
ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் சத்தியத்தையும் விட்டு விலகாதபடிக்கு தமது ஆவியானவர் எங்களுக்கு உதவியருள மன்றாடுகிறேன். ஆமென்.