ஜெபக்குறிப்பு: 2021 அக்டோபர் 7 வியாழன்

திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் (கொலோ.4:4) சத்தியவசன இலக்கிய பணிகளை ஆசீர்வதித்து, புதிய புத்தகம் வெளியிடுவதற்கான தேவைகள், மறு அச்சுப்பதிப்பு செய்யவேண்டிய புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு ஜெபிப்போம்.

இச்சையடக்கம்

தியானம்: 2021 அக்டோபர் 7 வியாழன் | வேத வாசிப்பு: எண்ணாகம் 11:18-35

தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே … கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார் (எண்ணாகமம் 11:33).

பாழான கிணற்றில் தவறுதலாக விழுந்த ஒருவன் தன் கையில் அகப்பட்ட மரக்கிளையிலே தொங்கிக்கொண்டு உதவி, உதவி என்று சத்தமிட்டான். அக்கிளை எப்போது முறியும் என்பது அவனுக்கே தெரியாது. அந்நேரத்தில் அருகில் மரத்தில் தேன்கூட்டில் இருந்து சொட்டுச்சொட்டாக தேன் ஒழுகுவதைக் கண்டு அதற்கு இச்சைப்பட்டு அம்மரக்கிளையை ஆட்டி அத்தேனை நாக்கினால் சுவை பார்க்க எண்ணினான். அப்போது கிளை முறிந்து அக்கிணற்றுக்குள் விழுந்து மரித்துப்போனான்.

தேவனின் கட்டளைப்படியே, அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கி இஸ்ரவேல் மக்களை வழிநடத்தி வந்த மோசேக்கு அவர்கள் கொடுத்த வேதனைகளோ கொஞ்சமல்ல. அதுவும் அவர்கள் இச்சையடக்கம் இல்லாதவர்களாய் எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டு, இச்சித்து அது வேண்டும் என்று அடம்பிடிக்கிறவர்களாய் இருந்தார்கள். இதனால் நித்தமும் மோசே தேவ சமுகத்திற்குச் சென்று அவர்களுக்காக முறையிடவும், வேண்டிக்கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்பட்டான். மன்னாவைக் கொடுத்தபோதும் திருப்தியடையாமல், இறைச்சி வேண்டும் என்று அடம் பிடித்தனர். கர்த்தர் இப்போது அவர்களது இச்சையடக்கமின்மையைக் கண்டு கோபங்கொண்டு, அவர்கள் சாப்பிட்டு தெவிட்டிபோய் மூக்காலே வரும்வரைக்கும் இறைச்சியை வாரிக்குவித்து கொடுத்தார். அவர்கள் அதைத் தின்று, பற்களைவிட்டு இறைச்சித் துணிக்கைகள் வெளியேறும் முன்னமே அவர்களுக்குள் வாதை வந்தது. இஸ்ரவேலர் தேவனின் கரத்திலே எவ்வளவோ நன்மைகளை அனுபவித்தும், திருப்தி காணாதவர்களாய் இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று இல்லாததையே எண்ணிப் புலம்பிக்கொண்டு, அனைத்தையும் இச்சித்து வாழும் மக்களாய் இச்சையடக்கம் இல்லாதவர்களாய் வாழ்ந்ததால் வாதைக்குட்பட்டனர். அவர்களுடைய வாயிலே தேவனைத் துதிக்கும் துதியும் ஸ்தோத்திரமும் மறைந்து, குறை கூறுதலும் முறுமுறுப்புமே காணப்பட்டது.

பிரியமானவர்களே, தேவ பிள்ளைகளாகிய நமக்கு இந்த இச்சையடக்கம் மிக அவசியம். தேவன் நமக்கு தந்தவைகளோடு நாம் திருப்தியடைந்தவர்களாய், அவருக்கு நன்றி சொல்லி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். திருப்தியான மனதுக்குத்தான் இச்சையடக்கமாய் இருக்க முடியும். இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை நோக்கிப் பறக்கும் சிந்தனையும் வாழ்வும் ஒருநாளும் திருப்தி காண்பதில்லை. நாம் எப்படிப்பட்டவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் கண் காண்பதையெல்லாம் இச்சித்துக்கொண்டிருக்கிறோமா அல்லது திருப்தியோடு இச்சையடக் கத்துடன் திருப்தியாய் வாழுகிறோமா?

உங்களுக்குள்ளே யுத்தங்களும், சண்டைகளும் எதினாலே வருகிறது? உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? (யாக்.4:1).

ஜெபம்: எங்கள் தேவைகளில் உதவி செய்கிற ஆண்டவரே, நீர் எங்களுக்கு அருளிய எல்லாவற்றிலும், நன்மையிலும் மனத்திருப்தியாய் வாழ உமதருள் தாரும். ஆமென்.