ஜெபக்குறிப்பு: 2022 மே 31 செவ்வாய்

ஐந்தாவது மாதத்தின் இறுதி நாளில் வந்திருக்கிற நாம் இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார் (1சாமு.7:12) என்று ஆண்டவருக்கு முன்பாக பணிந்து முழு இருதயத்தோடும் முழுப்பெலத்தோடும் அவரில் அன்புகூர்ந்து அவருக்கு ஸ்தோத்திர பலிகளைச் செலுத்தி கர்த்தரை மகிமைப்படுத்துவோம்.

புத்தி சாதுரியம்!

தியானம்: 2022 மே 31 செவ்வாய் | வேத வாசிப்பு: தானியேல் 1:8-17

YouTube video

பத்து நாள் வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப் பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து… (தானியேல் 1:12).

இவ்வுலக வாழ்விலே நாம் பலவிதமான சோதனைகளுக்கூடாகக் கடந்து செல்ல நேரிடுகிறது. இந்த வேளைகளில்தான் ஒருவன் எவ்வளவு தூரம் கிறிஸ்துவுக்குள் பக்தி வைராக்கியமுள்ளவனாக இருக்கிறான் என்பது வெளிப்படுகிறது என்பதை மறுக்கமுடியாது.

தானியேலும், அவனோடுகூட அனனியா, மீஷாவேல், அசரியா என்ற மூன்று பேரும், பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் காலத்தில், அவனுடைய அரண்மனையிலே சேவிக்கும்படியாகத் தெரிந்துகொள்ளப்பட்டார்கள். ஆனால், அதற்கு முன்பு, மூன்று வருடங்களுக்கு கல்தேயரின் பாஷையைக் கற்கவும், ராஜ போஜனத்தையே உண்ணவும் வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தானியேல், ராஜாவின் போஜனத்தால் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது என்று தனக்குள் தீர்மானித்துக்கொண்டு, பிரதானிகளின் தலைவனிடம் வேண்டிக்கொண்டான். தலைவனோ, அவர்களது முகங்கள் வாடியிருந்தால் ராஜா தன்னைச் சிரச்சேதம் செய்துவிடுவாரே என பயந்தான். அப்போது தானியேல், பத்து நாளைக்கு உண்பதற்கு பருப்பு முதலான மரக்கறி வகைகளையும், குடிப்பதற்குத் தண்ணீரையும் தமக்குக் கொடுத்து தம்மைச் சோதித்துப் பார்க்கும்படி கூறினான். தலைவனும் அப்படியே செய்து பார்த்தபோது, ராஜபோஜனத்தைப் புசித்த வாலிபர்களைவிட தானியேலினதும் மற்றைய மூன்று வாலிபர்களினதும் முகங்கள் களையுள்ளதாயும் சரீரம் புஷ்டியுள்ள தாயும் இருந்ததைக் கண்டான். ஏற்ற நேரத்தில் தானியேலும், நண்பர்களும் ராஜ அரண்மனையில் சேவிக்க அனுமதிக்கப்பட்டனர். மட்டுமல்ல, தேவன் நாலு வாலிபருக்கும் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார். அத்தோடு தானியேலுக்கு சொப்பனங்களை அறியத்தக்க அறிவையும் கொடுத்தார்.

தானியேலுக்கும் நண்பருக்கும் ராஜபோஜனம் ஒரு சோதனையாக அமைந்தது. ஆனால், தானியேலின் சாதுரியமான நடத்தை அவனையும், மற்றவர்களையும் சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள வழி செய்தது. மட்டுமல்ல, தமது தேவன்மீது அவர்கள் கொண்டிருந்த பக்தி வைராக்கியத்தையும் அவர்களது செயல் வெளிப்படுத்தியது. தேவபிள்ளையே, கிறிஸ்துவுக்குள்ளான நமது வாழ்க்கையில் சோதனைகளைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்த வேளைகளில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதுவே காரியம். தானியேலைப்போல, தேவனுக்காக வைராக்கியங்கொண்டு, புத்தி சாதுரியமாக, சோதனைகளை நாமும் வெல்லலாமே!

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே (ரோமர் 8:37).

ஜெபம்: அன்பின் தேவனே, சோதனை நேரத்தில் உம்மையே சார்ந்து நின்று, சகல காரியங்களிலும் புத்தி சாதுரியமாய் நடந்து, சோதனைகளை ஜெயிக்க எனக்கு பெலன் தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2022 மே 30 திங்கள்

ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் … சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; அப்போது முடிவு வரும் (மத். 24:14) உலகத்தின் முடிவு நாட்களில் வந்து நிற்கிற நாம் சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களாக காணப்படவும், கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமுள்ளவர்களாய் இருப்பதற்கும் வேண்டுதல் செய்வோம்.

என்றும் பச்சையான ஒலிவமரம்!

தியானம்: 2022 மே 30 திங்கள் | வேத வாசிப்பு: சங்கீதம் 52:1-9

YouTube video

நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன் (சங்கீதம் 52:8).

கல்வி, செல்வம், அந்தஸ்து, குடும்ப கௌரவம் என்று பல வழிகளில் தம்மைக் குறித்துப் பலர் பெருமை பாராட்டுவதுண்டு. சங்கீதம் 52இல், “பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்?” என்று தனக்கெதிராகச் செயற்பட்ட தன் எதிராளியைக் குறித்து தாவீது கூறுவதை வாசிக்கிறோம். இங்கே ஒருவனுக்கு “பொல்லாப்பு செய்வதில் பெருமை”. தாவீதின் நாட்களில் மட்டுமல்ல, இன்றும், தாம் செய்யும் பொல்லாப்புகளில் மகிழ்ந்து களிகூருகிறவர்கள் ஏராளம். இப்படிப்பட்ட, பொல்லாதவர்களின் பொல்லாப்பில் சிக்குண்டு தவிப்பவர்கள்தான் எத்தனை பேர்!

இங்கே தாவீதுக்குப் பொல்லாங்கு செய்தது யார்? பெலிஸ்தனின் கையிலிருந்து இஸ்ரவேலைப் பாதுகாக்க முடியாமல் தவித்த சவுல் ராஜாவே, அந்தப் பெலிஸ்தியனைக் கொன்று வெற்றியை ஏற்படுத்திக்கொடுத்த தாவீதைக் கொன்றுபோட வகை தேடினான். சவுலே தாவீதுக்கு விரோதியானான். அதற்காக, தாவீது, இந்தப் பொல்லாப்பினால் துவண்டு போனாரா? இல்லை. யார் என்ன பொல்லாப்புச் செய்தாலும், தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவ மரத்தைப் போலவே தான் இருப்பதாகத் தைரியமாகக் கூறினார்.

இதற்குக் காரணம் என்ன? எந்தச் சூழ்நிலையிலும் தாவீது தேவனின் கிருபையையே நம்பி வாழ்ந்தார். தேவன் தனக்குப் பக்கத்தில் இருப்பதை நம்பினார் தாவீது. தன்னை தேவனுடைய ஆலயத்தில் என்றும் பச்சையாகக் காட்சி தரும் ஒலிவ மரத்துக்கு ஒப்பிட்டது ஏன்? ஒலிவ மரம் நீண்டகாலம் வாழும் மரங்களுள் மிகவும் முக்கியமான ஒன்று. அது மாத்திரமல்ல, அதிக நீண்டகாலமாக செழிப்பாகவே காட்சிதந்து கனி கொடுக்கும் மரமாக இருக்கிறது. ஆக, தாவீது, துன்மார்க்கத்தில் வாழுகிறவர்களுக்கு வரும் சடுதியான வீழ்ச்சியையும், தம்மை நம்பியிருக்கிறவர்களுக்கு இருக்கும் தேவனுடைய முடிவற்ற நீடித்த நித்திய பாதுகாப்பையும் வேறுபடுத்திக் காட்டுவதை நாம் காண்கிறோம்.

தாவீது மட்டுமல்ல, இன்று நாமும் தேவனின் ஆலயத்தில் என்றும் செழித்து வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போல வாழலாம். தேவ பாதுகாப்பு, கிருபை, தயவு நமக்கு இருப்பதை நாம் விசுவாசித்தால், நமக்குப் பொல்லாப்பு நினைக்கின்ற அல்லது செய்கின்ற எவரைக்குறித்தும் நாம் கலங்கவேண்டிய அவசியமே இல்லை. நமக்குப் பொல்லாப்பு செய்பவர்களுக்குப் பயந்து ஒளியத் தேவையில்லை. ஆனால், தாவீது எப்படி தேவ கிருபையில் நிலைத்து நின்றாரோ, நாமும் அப்படியே தேவசமுகத்தில் வாழவேண்டியது நமது பொறுப்பாகும்.

நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர் (சங்.59:16).

ஜெபம்: அன்பின் தேவனே! எந்தச் சூழ்நிலையிலும் உமது சமுகத்தில், பச்சையான ஒலிவ மரத்தைப்போல உமக்கே சாட்சியாய் ஜீவிக்க உமது கிருபையைத் தந்தருளும். ஆமென்.