கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்விதழைத் தயாரித்து அனுப்பிவைப்பதற்கு தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். தினசரி தியானங்களை தியானபுத்தகத்தில் மட்டுமல்லாமல் சத்தியவசன இணையதளம், வாட்ஸ் ஆப், Youtube (Audio version) ஆகியவற்றிலும் வெளியிட்டு வருகிறோம். இதன்வாயிலாக அநேகர் ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனமடைந்து வருகின்றனர். இத்தியானங்களை தங்கள் உறவினர், சபை விசுவாசிகள், குடும்ப நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த அன்பாய் கேட்கிறோம்.
இப்புதிய கல்வியாண்டில் பிரவேசித்திருக்கும் சத்தியவசன பங்காளர்கள், சந்தாதாரர்கள், வாசகர்கள் குடும்பத்தின் பிள்ளைகளுக்காகவும் மேற்படிப்பில் இணைவதற்காக பிரயாசப்பட்டுக்கொண்டிருக்கிற பிள்ளைகளுக்காகவும் தேவனிடத்தில் பாரத்தோடு ஜெபிக்கிறோம். தேவன்தாமே பிள்ளைகளது படிப்பின் தேவைகள் அனைத்தையும் சந்தித்து வழிநடத்துவார். தங்களது ஜெப விண்ணப்பங்களை எங்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறீர்கள். உங்களுக்காக பாரத்தோடு ஜெபிக்கிறோம். தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்டு அநேக ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் அளித்து வருகிறதை அறிந்தும் ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறோம்.
இவ்விதழில் ஜூலை மாத தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்களும், ஆகஸ்ட் மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்களும் எழுதியுள்ளார்கள். நாம் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் வளர இத்தியானங்கள் அதிக ஆசீர்வாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிகாலை வேளையில்… பகுதியில் வெளிவந்த Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய செய்திகள் முடிவடைந்துள்ளது. தற்போது Dr.W.வாரன் வியர்ஸ்பி அவர்கள் பழைய ஏற்பாட்டிலிருந்து அளித்துள்ள தியான செய்தியானது இனி தொடர்ந்து வெளிவரும். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதுகிற தேவபிள்ளைகளுக்கு ஆண்டவர் நல்ல சுகம் பெலன் ஆரோக்கியத்தைத் தந்து, கிருபை வரங்களினால் நிரப்பி அநேகமாயிரமான மக்களுக்கு பிரயோஜனமாக எடுத்து பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.
கே.ப.ஆபிரகாம்