வாக்குத்தத்தம்: 2022 ஜூலை 23 சனி

உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் … பிரகாசிக்கக்கடவது (மத். 5:16).
வேதவாசிப்பு: காலை: யோபு 1-3 | மாலை: அப்போஸ்தலர் 20:17-38

ஜெபக்குறிப்பு: 2022 ஜூலை 23 சனி

… கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத் தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் (மாற்.13:22) என்ற தீர்க்கதரி சனம் நிறைவேறிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் கள்ள உபதேசங்களுக்கு எச்சரிக்கையாயிருந்து விசுவாசத்தைக் காத்துக்கொண்டு கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தமாயிருக்க பாரத்துடன் ஜெபிப்போம்.

வாழ்வு தரும் வார்த்தை

தியானம்: 2022 ஜூலை 23 சனி | வேத வாசிப்பு: யோவான் 11:1-26

YouTube video

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் (யோவான் 11:25,26).

என் வயதான தகப்பனார் தன் கடைசிக் காலத்தில், அடிக்கடி கண்களை மூடி தான் இறந்துவிட்டது மாதிரி நடிப்பார். பின்னர் கண்களை விழித்து, “நான்தானே செத்தாலும் வாழுவேன்” என்பார். எப்படி என்று கேட்டால், “இயேசுதானே சொல்லியிருக்கிறாரே” என்பார். நிகழ்கால சம்பவங்களை மறந்து, பழையவற்றை மாத்திரம் நினைவில் கொண்டிருந்த முதுமை நாட்களிலும், அவருக்குள் தேவ வசனம் மனப்பாடமாயிருந்தது. உண்மையாகவே அந்த உறுதியான விசுவாசம் நமக்குள் உண்டா? நாம் சரீரத்தில் மரித்தாலும் நாம் நித்தியமாய் வாழுவோம்.

லாசரு இயேசுவுக்கு அன்பானவன், அந்தக் குடும்பத்தையே இயேசு நேசித்தார். அவன் வியாதிப்பட்ட தகவலை இயேசு அறிந்திருந்தும் அவர் தாமதித்தே வந்தார், அதனால், இயேசுவே உயிர்த்தெழுதல் என்ற சத்தியம் நமக்கு வெளிப்பட்டது. இயேசு உலகில் வாழ்ந்தபோது செய்த ஒவ்வொரு அற்புதங்களும், அவரது வல்லமையைப் பிரஸ்தாபப்படுத்தின. லாசருவின் சம்பவமும்கூட, இயேசு யார் என்பதை உலகிற்கு வெளிக்காட்டியது. அவரே மனித வாழ்வினதும் சாவினதும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறவர். மாத்திரமல்ல, அவரே பாவங்களை மன்னிக்கவும் அதிகாரங்கொண்டவர்! ஏனெனில் அவரே படைப்பாளி! அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறவர்! அவர் நமது பாவங்களை மன்னிக்காவிட்டால் பிதாவை நாம் கிட்ட நெருங்கவே முடியாது. ஜீவனாக இருக்கிற அவரேயல்லாமல் நமது வாழ்வை யாராலும் காப்பாற்றமுடியாது. இயேசு, “நீ விசுவாசிக்கிறாயா” என்று மார்த்தாளிடம் கேட்டார். இந்தக் கேள்விதான் இன்று நம்மிடமும் வருகிறது. வாழ்வு தருகின்ற அவரது வார்த்தையின் வல்லமையை, அவரது தெய்வீகத்தை நாம் விசுவாசிக்கிறோமா? விசுவாசிக்கிறவனுக்கு அவர் அருளுகின்ற ஆவிக்குரிய வாழ்வை, மரணம் கைப்பற்றவோ, மழுங்கடிக்கவோ முடியாது. இவ்வுலகில் ஜீவனற்றவர்கள்போல வாழுகின்ற ஏராளமானவர்களைக் குறித்து நமது மனநிலை என்ன? அவர்களுக்கு மறுமையிலும் என்ன நம்பிக்கை இருக்கிறது? வாழ்வளிக்கும் வார்த்தையை அவர்களுக்கு அறிவிப்பது யார்?

அன்பானவர்களே, தேவனுடைய அதிகாரமிக்க வார்த்தையை விசுவாசித்தால், வாழ்வென்ன சாவென்ன எதுவும் நம்மை அவரது அன்பைவிட்டுப் பிரிக்கமுடியாது. இப்படிச் சொல்லுகின்ற நாம் அவருடைய வல்லமைமிக்க தெய்வீக வார்த்தைக்கு ஏற்றபடி வாழவேண்டுமே! அதுவே அந்த வார்த்தையை நாம் விசுவாசிக்கிறோம் என்பதற்கான ஒரே நிரூபணமாகும். ஆனால் நம்மில் அநேகர், இயேசு நமக்கிருந்தும், ஜீவனற்றவர்கள்போல வாழுவது ஏன்? இந்த உலகில் எது வந்தாலும், மரணமே வந்தாலும் நம்மைக் கலங்கடிக்க முடியாது. பிறர் முன்னிலையிலும் சாட்சிகளாக தலைநிமிர்ந்து நிற்போமா!

ஜெபம்: உயிர்த்தெழுதலும் ஜீவனுமான தேவனே, உயிரோடிருந்து கிறிஸ்துவை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் என்ற வாழ்வின் உண்மையை இன்று எனக்குக் கற்றுத்தந்தபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்.