வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 1 சனி

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம் (கொலோ. 1:13).

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவா.14:27).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 21-23 | மாலை: அப்போஸ்தலர் 7:41-60

ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 1 சனி

கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசாயா 41:17).

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவான் 14:27) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அருளும் மெய் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாம் பெற்றுக்கொண்டவர்களாய் வாழவும் அதை நமது வாழ்க்கையில் பிரதிபலிக்கவும் தக்கதாக ஜெபம் செய்வோம்.

ஒன்றுமில்லாதபோது…

தியானம்: 2023 ஜூலை 1 சனி | வேத வாசிப்பு: மாற்கு 8:1-9

YouTube video

அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து… (மாற்கு 8:1).

இவ்வருடத்தின் ஆறு மாதங்களை கடந்துவர கர்த்தர் செய்த கிருபைகளுக்காக அவருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். இப்புதிய மாதத்திலும் தேவன் நமது தேவைகள் அனைத்தையும் சந்தித்து வழிநடத்த உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படியே உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசு வுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி.4:19) என்ற வாக்கின்படி நமது குறைவுகள் யாவற்றையும் நிறைவாக்க தேவன் கிருபை செய்வாராக!

நம்மிடம் தேவையானவை எல்லாமே இருக்கும்போது இன்னும் ஒன்று கிடைத்தால் அதன் பெறுமதிப்பு விளங்காது. மாறாக, குறைவுபட்ட நிலையில் யாராவது ஒருவர் ஏதாவது ஒன்று கொடுத்தாலே அது நமக்கு மிக்க மதிப்பு வாய்ந்ததாக இருப்பது மாத்திரமல்ல, கொடுத்தவரிடமும் நமக்கு ஒரு மரியாதையும் ஏற்படும்! நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பார்கள். திரளான ஜனக் கூட்டம் இயேவின் பின்னே கூடிவந்தனர். நேரம் கடந்து செல்லுகிறது. சாப்பிட எதுவுமில்லை. அவர்களுடைய பசியை உணர்ந்த ஆண்டவர், அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்ய சீஷரிடம் சொல்ல, அவர்களும் கையை விரித்துவிட்டனர். ஆனால், எல்லாம் நிறைந்த ஆண்டவர், அத்தனை திரள் ஜனத்துக்குப் போஷிக்க, அவர்களின் தேவைகளைச் சந்திக்க, அவர் செய்த அற்புதம் அவரது அன்பை வெளிச்சம்போட்டுக் காட்டியது. திரள் ஜனக்கூட்டம் அமர்ந்திருந்து இயேசுவின் போதனைகளை மெய் மறந்து கேட்டுக்கொண்டிருந்ததில் மூன்று நாட்கள் கடந்துவிட்டது. இயேசு அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டார். அவர்களிடம் சாப்பிட ஒன்றுமில்லை. பசியாயிருக்கிறவர்களைப் பட்டினியாய் அனுப்ப ஆண்டவர் விரும்பவில்லை. சீஷர்களும் எதுவும் செய்யமுடியாது என்றபோது, தங்களிடம் ஏழு அப்பங்கள் மாத்திரமே இருக்கிறது என்றனர். அவர் அந்த அப்பங்களை எடுத்து ஸ்தோத்திரித்து, அவைகளைப் பரிமாறும்படி சீஷர்களிடம் கொடுத்தார்.

மட்டுமல்ல, அவர்களிடமிருந்த சிறுமீன்களையும் அவர் ஆசீர்வதித்துப் பரிமாறும் படி கூறினார். சாப்பிட்டுத் திருப்தியடைந்தவர்கள் நாலாயிரம் பேராய் இருந்தார்கள். மீதியானவைகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர். ஒன்றுமில்லாதிருந்தாலும், இருக்கின்றது அற்பமானாலும் அதை இயேசுவிடம் கொடுத்துவிட்டால், அது இடங் கொள்ளாமற் போகுமட்டும் பெருகும். ஜனங்கள் பசியாறி நிறைவாகப் போனார்கள். ஆம், தேவன் ஒன்றுமில்லாத எந்த சூழ்நிலையையும் நிறைவாக மாற்றுவார்.

பேதுருவின் வெறும் படகை, இரண்டு படகுகள் நிரம்பும் அளவுக்கு நிரப்பியவர் இன்றும் வல்லமை குன்றாத சர்வ வல்லவராயிருக்கிறார்! நமது வாழ்விலும் குறைவு, வெறுமை, ஒன்றுமே இல்லை என்ற நிலைமை எல்லாம் வரும். நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். அதை அப்படியே கிறிஸ்து இயேசுவின் கரங்களில் கொடுத்துவிடுவோம். அவர் நமது குறைவையெல்லாம் நிச்சயம் நிறைவாக்குவார்.

ஜெபம்: அன்பின் தேவனே, எனது குறைவை நிறைவாக்கும் தெய்வம் நீர் இருக்க எனக்கென்ன குறையுண்டு; உமக்கே துதிஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (ஜூலை – ஆகஸ்டு 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நித்தமும் நம்மை வழிநடத்திச் செல்கிற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்விதழின் வாயிலாக தங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். உலகில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்களை நாம் பார்க்கும்போது ஆண்டவருடைய வருகை மிகமிக சமீபமாயிருப்பதை நாம் உணரமுடிகிறது. அவருடைய வருகையிலே காணப்பட எப்போதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருப்போம்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி அனைவரையும் நிலைகுலைய வைத்தது. இவ்விதமான கோர சம்பவங்கள் இனி நேரிடாதபடியும் ரயில் பயணங்கள் பாதுகாப்பாக அமைவதற்கும் ரயில் இலாகாவில் பணிபுரிகிற ஒவ்வொருவருக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிப்போம். மணிப்பூர் மாநிலத்தின் சமாதானத்திற்காக இடைவிடாது ஆண்டவருடைய சமுகத்தில் மன்றாடுவோம். கலவரத்தினாலே இடிக்கப்பட்ட ஆலயங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதற்கும், பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் சோர்ந்துபோகாமல் விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்கும், காடுகளில் சிதறியிருக்கிற அனைவரையும் பாதுகாத்து தேவன்தாமே அவர்களைப் போஷித்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசன வெளியீடுகள் பிரிண்ட் பண்ணுவதற்கு அச்சுத்தாளின் கடுமையான விலை ஏற்றத்தினால் இருமாத வெளியீடுகளின் ஆண்டு சந்தா உயர்த்தப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் இதை கவனத்தில் கொள்ள அன்புடன் கேட்கிறோம்.

பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்கும் இந்த கல்வியாண்டு ஆசீர்வாதமாக இருப்பதற்கும், மேற்படிப்புக்காக கல்லூரிகளில் முயற்சி செய்யும் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பின பாடத்தைப் படிப்பதற்கு சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கு கர்த்தர் கிருபை செய்யவும் ஜெபிக்கிறோம்.

இவ்விதழில் ஜூலை மாதத்தில் சகோ.தர்மகுலசிங்கம் அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். ஆகஸ்டு மாதத்தில் 1-26 நாட்களுக்கு சகோ.வஷ்னி ஏர்ன்ஸ்ட் அவர்கள் எழுதிய தியானங்களும் 27-31 ஆகிய நாட்களுக்கு சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதிய தியானங்களும் இடம்பெற்றுள்ளன. தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் அனைவரையும் உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

செட்டைகளின் நிழலில்!

அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்டு 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: ரூத் 2:1-12

உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான் (ரூத் 2:12).

கர்த்தராகிய தேவன் மீது தன் நம்பிக் கையை வைத்திராவிட்டால் அவர் ரூத்தினுடைய விசுவாசமுள்ள கிரியைக்கு பலனளித்திருக்கமாட்டார். ஏனெனில் கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது (யாக்கோபு 2:26). ரூத் தன் மாமியார் நகோமியிடம் செய்த அறிக்கை (1:16-17) வேதாகமத்தில் மிகவும் முக்கியமான ஒரு சான்றுரையாகும். ரூத், தூய்மையானதும் இன்பமானதுமான ஒரு வரலாற்றுப் பெண்மணியாவாள். அவள் தேவனை நம்பினபடியால் ஆண்டவர் அவளுடைய வாழ்க்கையில் சில அற்புதமான மாற்றங்களை அருளினார்.

விலக்கப்பட்டவள் சேர்த்துக்கொள்ளப்பட்டாள்:

அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது (உபா.23:3). ரூத் தன்னுடைய விக்கிரக தேவர்களைவிட்டு ஆண்டவரை ஏற்றுக்கொண்டு நாட்டின் யூத மதத்திற்கு மாறினாள். ஆவிக்குரிய வார்த்தைகளில் கூறுவோமானால், அவள் மகா பரிசுத்த ஸ்தலத்தில் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் காவல் செய்யும் கேரூபின்களின் செட்டைகளின் கீழ் வந்து சேர்ந்தாள் (சங்.36:7,8; 61:4; 91:1-4). நான் கிறிஸ்துவை விசுவாசித்தபொழுது இதைப் போன்ற அனுபவத்தைப் பெற்றுக் கொண்டேன். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள் (எபே.2:13).

சஞ்சலப்பட்டவள் சமாதானம் பெற்றாள்:

ரூத்தின் ஆரம்ப அதிகாரத்தில் எலிமெ லேக்கும் அவன் மனைவி நகோமியும் தங்களுடைய இரு மகன்களுடன் பெத்லெகேமை விட்டு புறப்பட்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது. நகோமியின் கணவரும் இரு மகன்களும் மரித்ததால் மூன்று விதவைப்பெண்கள் தனித்து விடப்பட்டனர். அக்காலத்தில் விதவைகளும் குஷ்டரோகிகளும் சமுதாயத்தின் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்தனர். நகோமி பெத்லெகேமுக்குத் திரும்ப முடிவெடுத்தாள். ரூத்தும் அவளுடன் வருவதாக வற்புறுத்தினாள். அவர்கள் தங்கள் ஊரை அடைந்தபொழுது நகோமி தன் இனத்தாரிடம் “நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல் மாராள் என்று சொல்லுங்கள்” என்று கூறினாள். மாராள் என்ற எபிரெயச் சொல்லுக்கு கசப்பு என்று பொருள் (ரூத் 1:20). ஆனால் ரூத் தன்னுடைய இருதயத்தில் தேவசமாதானத்தைப் பெற்றிருந்ததால் உடனடியாக தன் மாமியாருக்கு உதவ ஆரம்பித்தாள். மோவாபிலிருந்த நகோமியின் அடுத்த மருமகளோ மறுமணம் செய்துகொண்டு அங்கேயே வாழ ஆரம்பித்திருக்கலாம் (1:9). ஆனால் பெத்லெகேமிலே ரூத் அனுபவித்த சமாதானமோ மிகச்சிறந்தது.

உழைப்பாளி மனநிறைவடைந்தாள்:

அறுவடைகாலத்தில் ஏழைகள் வயலில் அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ள எபிரெயச் சட்டம் அனுமதித்திருந்ததை ரூத் அறிந்துகொண்டாள். தன்னால் இயன்ற அளவு நகோமியை நன்கு கவனிக்க விரும்பினாள். இங்கே தேவனுடைய வழிநடத்துதலை நாம் காண்கிறோம். “தற்செயலாய்” அவளுக்கு நேரிட்ட வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது. அவள் கதிர்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் பொழுது போவாஸ் அங்கு வந்ததும் தற்செயலாக நிகழ்ந்தது. அதைக் “கண்டதும் காதல்” என நாம் கருதலாம். தன்னுடைய வயலில் மாத்திரமே பொறுக்கிக் கொள்ள அவன் கூறினான். மேலும் அவள் பொறுக்கிக் கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று தன் வேலைக்காரருக்குக் கட்டளையிட்டான். அவள் அந்நியளாயிருந்தும் அவள் ஓய்வெடுக்கவும், சாப்பிடவும், தண்ணீர் அருந்தவும் வேண்டியவைகளைக் கட்டளையிட்டான். அவனுடைய கண்களில் அவளுக்கு தயை கிடைத்தது (2:2,10,13); இதுவே இரட்சிப்பின் வழிக்கான ஆரம்பம்.

ஒன்றுமில்லாதவள் மேன்மையை அடைந்தாள்:

ரூத் தேவனை விசுவாசித்து, யூத சமுதாயத்தின் உறுப்பினரானது மாத்திரமல்ல, போவாஸை மணந்து தாவீது அரசரின் பாட்டனாரைப் பெற்றெடுத்தாள். அதற்கும் மேலாக, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு அட்டவணையில் அவளுடைய பெயரும் காணப்படுவது அதிக விசேஷமானது (மத்.1:5). ஓர் ஏழை விதவையாக ஆரம்பித்து (அதி.1), பொறுக்கினதில் வாழ்ந்து (அதி.2) போவாஸிடமிருந்து பரிசுகளைப் பெற்று (அதி.3) இறுதியில் அவனை மணந்து அவனுடைய சம்பத்துகள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டாள். இதுவே தேவனுடைய கிருபை! இவை யாவும் தேவன் அளித்த “பரிசு” ஆகும். ஒருநாளில் அவள் பரலோகத்தை அடையும்பொழுது “முழு வெகுமதியையும்” பெற்றுக்கொள்வாள். இங்கு பரிசுகளும் பரலோகத்தில் முழுமையான வெகுமதிகளும் கிடைக்கும். நாம் ஊழியம் செய்யும் எஜமான் எவ்வளவு தயையுள்ளவர்! நாம் அனைவரும் உன்னதரின் உச்சிதமான வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியக்காரராய் பணிபுரிய உறுதிகொள்வோம்.

உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (2 யோவான் 8).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள் (ஜூலை – ஆகஸ்டு 2023)

1

Dear Brother in Christ, I have been using “Anuthinamum Christhuvudan” for several years. Everyday, the contents is presented in three paragraphes. The first one is illustrative. The second one points out what is lacking behind in us. The third one describes what we should do when we face problems / troubles … in life. the Biblical Quotations are appropriate. The page ends with a guidance for prayer.

Mr.R.S.A Sundersingh, Tirunelveli.

2

Dear Brother in Christ, I express my greetings to all of you in the name of our Lord Jesus Christ, I have been a supporter of Sathiyavasanam for the past 40 years. Your daily devotional ‘Anuthinamum Christhu vudan’ is a great help in the development of my spiritual life. In slort they are a source of inspiration for us to lead a mature spiritual life, Sis.Shanthi Ponnu’s profound reflections about life in general and about the Biblical themes motivate us to follow the example of Lord Jesus Christ.

 Mr.P.Vincent, Srivilliputhur.

3

Dear Beloved in Christ, Today’s (04-05-2023) by Sis.Shanthi Ponnu akka titled “Secret of Night” was very super Lord taught me that, “He was not interested in man’s contact certificate. But, he was “Nee Theva nukku payappadukiravan” in 3rd and 4th Paragraph Lord God Jehovah Reveal this truth. Oh how Lord God was sweet in our day to day life. Thanks.

Mr.Asir Thomas Mathankumar, Kallidaikurichi.

4

கர்த்தருக்குள் அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்துடன் தான் எனது காலை தியானவேளை இருக்கும். சகோதரி சாந்தி பொன்னு எழுதிவரும் எல்லா தியானங்களும் எங்களுக்கு ஆசீர்வாதமாக உள்ளது. நம்பிக்கையையும் பெலனையும் தருகிறது.

Sis.Alice, Chennai.