ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 31 வியாழன்
நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக் கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள் (யாத்.19:4) இவ்வாக்குப்படியே இம்மாதத்தில் கர்த்தர் காலைதோறும் விசாரித்து விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் செட்டைகளின் கீழ் நமக்குக் கொடுத்த அடைக்கலத்திற்காகவும் எல்லாக் கிருபைகளுக்காகவும் ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.
வினையாகும் விளையாட்டு!
தியானம்: 2023 ஆகஸ்டு 31 வியாழன் | வேத வாசிப்பு: நீதிமொழிகள் 18:1-8

கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப் போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும் (நீதி.18:8).
பொதுவான ஒரு விளையாட்டு உண்டு. எல்லோரையும் வரிசையில் நிறுத்தி, முதல் நபரிடம் ஒரு செய்தி இரகசியமாய்ச் சொல்லப்படும். அதை அவர் மற்றவருக்கு வரிசையாக இரகசியமாகவே சொல்லவேண்டும். கடைசியில் நிற்கும் கடைசி நபர் அச்செய்தியை சத்தமாகச் சொல்லுவார். அப்போது அந்தச் செய்தி முற்றிலும் தலைகீழான செய்தியாகவே வெளிவருவதைக் கவனிக்கலாம். இது விளையாட்டுக்கு நல்லது; நிஜ வாழ்க்கையிலோ இது வினையாகி விடும்.
சிலர் கோள் சொல்வதில் பேர்போனவர்கள். இரண்டு பேருக்கிடையே கோள் சொல்லி அவர்களை மோதவைத்துப் பார்ப்பதில் இன்பங்கொள்வோரும் உண்டு. யாரைப் பற்றியாவது கோள் சொல்லாவிடில் சிலருக்குப் பொழுதே விடியாது. இப்படிப்பட்டவர்களில்; ஒருவனாக ஒரு கிறிஸ்தவன் வாழமுடியுமா?
நமது வாயின் வார்த்தைகள் கட்டுப்படுத்தப்படவேண்டியது மிகவும் அவசியம். சிறிய அவயவமாகிய நம் நாவு, கட்டுப்பாட்டுக்குள் இல்லாவிடில் அது நெருப்பைப் போன்ற அழிவைக் கொண்டுவரும். அடுத்தவரின் வாழ்வை நாசப்படுத்தி விடும். மற்றவரின் உள்ளத்துக்குள் அழியாத காயங்களை உருவாக்கும். ஐக்கியங்களை உடைக்கும். தேவனைவிட்டு நம்மைப் பிரித்தும்போடும். சில வேளைகளில் விளையாட்டாகச் சொல்லும் காரியங்களுங்கூட வினையாக வந்து முடிந்து விடக்கூடும். இவற்றின் விளைவுகள் எவ்வளவு பயங்கரமானவை என்பதை நாம் சிந்திக்கத் தவறுவது மிகவும் ஆபத்து. எனவே நாம் நாவைக் குறித்து மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பரி.பவுல் எபேசியருக்கு எழுதும்போது, “கெட்ட வார்த்தையொன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம். பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” என்கிறார் (எபே.4:29). ஒருவருக்கெதிராக, இன்னுமொருவருக்கு கோள் சொல்லுதலானது சண்டைகளையும், கோபங்களையும், கசப்பான வைராக்கியங்களையும் உருவாக்கும். ஒருவருக்கெதிராக, ஒருவரைத் தூண்டிவிடும். அந்தப் பாவம் நமக்கு வேண்டாம் பிரியமானவர்களே. நாம் உன்னதமான பணிக்காக அழைக்கப்பட்டவர்கள் என்பதை மறந்துபோக வேண்டாம்.
அன்பானவர்களே, நமது நாவை துதிப்பதற்கும், சாட்சி சொல்வதற்கும், பிறருக்குச் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் பயன்படுத்துவோம். நொந்து போன உள்ளங்களைத் தேற்றுவோம். தனிமையில் வாடுவோருக்கு ஆறுதலாக பயனுள்ள வார்த்தைகளைப் பேசுவோம். “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும். என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங்.141:3) என்ற தாவீதின் ஜெபம், நமது அன்றாட ஜெபமாகட்டும்.
ஜெபம்: அன்பின் கர்த்தாவே, எங்கள் வாயில் சொல் பிறவாததற்கு முன்னமே இதோ அவை எல்லாவற்றையும் நீர் அறிந்திருக்கிறீர். எங்கள் நாவைக் கட்டுப்படுத்தி வாழ உமது கிருபையை எங்களுக்கு அருளும். ஆமென்.
வாக்குத்தத்தம்: 2023 ஆகஸ்ட் 30 புதன்
கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; … அவன் கண்டான் (2இரா. 6:17).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 120-131 | மாலை: 1கொரிந்தியர் 9
ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 30 புதன்
ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது (2நாளா.20:12) தேவ சமுகத்தில் பல நாட்களாக வாழ்வின் பல பிரச்சனைகளோடு காத்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தருடைய கண்களில் தயவு கிடைக்கவும், எதிர்பார்த்த நன்மைகள் கைகூடி வருவதற்கும் துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு சரியாய் மகிழ்ச்சியைக் காண்பதற்கும் ஜெபிப்போம்.
அழைத்தவரை மறப்பாயோ?
தியானம்: 2023 ஆகஸ்டு 30 புதன் | வேத வாசிப்பு: யாத்திராகமம் 17:1-6

அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின் மேல் நிற்பேன் (யாத்.17:6).
சிறிய கட்டைகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி விளையாடிக் கொண்டிருந்த மகனைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் அவனது அப்பா. உயரம் கூடியதால் கட்டைகள் சரிந்து விழப்போனது. அப்போது, அவற்றை விழாமல் தனது கைகளினால் ஏந்திக்கொண்டார் அப்பா. ஆச்சரியத்தோடு அப்பாவைப் பார்த்த மகன், “எப்படியப்பா விழாமல் பிடித்தீர்கள்?” என்றான். “அது விழப் போகிறது என்று எனக்கு முன்கூட்டியே தெரியும்” என்றார் அப்பா.
நம்மை அழைத்தவர் நம் தேவன். நமது கரங்களில் பொறுப்புக்களையும், ஊழியங்களையும் தந்தவரும் அவரே. நாம் ஊழியங்களில் முழுமூச்சாக ஈடுபடும்போது, நம்மை அழைத்த தேவனை மறந்து, நமது சொந்த முயற்சிகளிலும், பெலனிலும் சார்ந்துவிடுவதுண்டு. நாமே அனைத்தையும் செய்கிறோம் என்ற பெருமையும் கூடவே நமக்குள் வந்துவிடுகிறது. எனினும் ஊழியப்பாதையில் உபத்திரவங்களும் பாடுகளும் வரும்போது, ஒன்றும் செய்யமுடியாதவர்களாய் சோர்ந்து விடுகிறோம். ஏன் தெரியுமா? நாம் நம்மை அழைத்தவரை மறந்துவிடுகின்றதினாலேயே.
இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துவர, மோசேயைத் தெரிந்தெடுத்தவர் தேவனே. அவரது கைகளில் இப்பெரிய பொறுப்பை ஒப்படைத்து, தொடர்ந்து எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வழிநடத்தியவரும் தேவனே. அவர்களது பிரயாணத்தில் தண்ணீர்ப் பிரச்சனை எழும்பியது. மக்கள் தண்ணீர் தாகம் பொறுக்கமாட்டாமல், மோசேயை திட்ட ஆரம்பித்தனர். அவ்வேளையில் மோசே, தன்னை அழைத்த தேவனை நோக்கிக் கூப்பிட்டார். “இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே” என்றார். அப்போது கர்த்தர், “நீ ஜனங்களுக்கு முன்பாக நடந்து போ. அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாக கன்மலையின் மேல் நிற்பேன்” என்று வாக்களித்தார்.
பிரியமானவர்களே, நம்மை அழைத்த தேவனையே நாம் மறந்துவிடலாமா? மோசேயோ மறக்கவில்லை. கர்த்தரும் அவருடன்கூடவே இருந்தார். நமது ஊழியங்களை நாம் முன்னெடுத்துச் செல்லும்போது, நமக்கு முன்பதாக ஆண்டவர் நிற்கிறாரா? எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அந்த இடத்தை நாம் அவருக்குக் கொடுத்திருக்கிறோமா? கொடுத்திருந்தால், உபத்திரவங்களைக் கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. நம்மை அழைத்தவர் எப்போதும் நமக்கு முன்பதாக நிற்கிறார். அவர் எல்லாச் சூழ்நிலை வழியாகவும் நம்மைக் கடந்து செல்லும்படியாக வழிநடத்துவார். நம் சித்தம் மறைந்து, அவர் சித்தம் செய்ய இன்றே நம்மை அவர் கைகளில் ஒப்புக்கொடுப்போம். அவரை நாம் மறவாதிருப்போம். உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். (1தெச.5:24).
ஜெபம்: என் சமுகம் உனக்கு முன்பதாகச் செல்லும் என்று சொன்ன ஆண்டவரே, என்னை அழைத்த உம்மை மறவாத இருதயத்தை எனக்குத் தாரும், ஆமென்.