வாக்குத்தத்தம்: 2024 ஜனவரி 1 திங்கள்

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக்கோபு 1:17).

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் …. பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது. (யாக்கோபு 1:17)
வேதவாசிப்பு: காலை: ஆதியாகமம் 1,2 | மாலை: மத்தேயு 1

ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 1 திங்கள்

கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப் படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே (சங்.96:4).

நன்மையான எந்த ஈவும் … பரத்திலிருந்துண்டாகி சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது (யாக்.1:17) என்ற வாக்கைப் பற்றிக்கொண்டு ஸ்தோத்திரத்தோடே புதிய வருடத்திற்குள் பிரவேசிப்போம். வருடம்முழுவதும் கர்த்தர் நம்மேல் தம் கண்ணை வைத்து தம்முடைய ஆலோசனையால் வழிநடத்த நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

நன்மையான ஈவும் பூரணமான வரமும்

தியானம்: 2024 ஜனவரி 1 திங்கள் | வேத வாசிப்பு: மத்தேயு 7:7-11

YouTube video

“நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது” (யாக்கோபு 1:17).

2024ஆம் ஆண்டு புதிய வருடத்திற்குள்ளாக பிரவேசித்திருக்கின்ற வாசகர்கள் அனைவருக்கும் சத்தியவசன ஊழியத்தின் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் நம்மை ஆதரித்து வழிநடத்தின நம் தேவனின் கிருபையும் நன்மையும் இந்தப் புதிய ஆண்டிலும் நம்மைத் தொடர்வதாக!!

நாம் ஒவ்வொருவரும் இவ்வருடத்திற்கான வாக்குத்தத்தங்களைப் பெற்றிருப்போம். நீங்கள் பெற்ற வாக்குத்தத்தங்கள் உங்கள் வாழ்விலே நிறைவேற தேவன் உங்களுக்கு கிருபை செய்வாராக! இவைகள் நம் வாழ்வில் நிறைவேற வேண்டுமானால் இவ்வாக்குத்தத்தங்களோடு வேதத்தில் தேவன் நமக்குத் தந்திருக்க நிபந்தனைகளையும் நாம் கைக்கொள்ள வேண்டியது அவசியம். தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் “ஆம்” என்றும் “ஆமென்” என்றும் இருக்கிறது. தேவன் தமது வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவர். அவ்வாறு நாமும் அவர் நமக்குத் தருகிற நிபந்தனைகளைக் கைக்கொள்வதிலும் அதை நிறைவேற்றுவதிலும் உண்மையுள்ளவர்களாக காணப்படவேண்டும். அப்பொழுது நிச்சயமாகவே இந்த புதிய ஆண்டு நமக்கு ஆசீர்வாதமான ஆண்டாக அமையும்.

வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்களெல்லாம் பரலோகத்தில் வாசமாயிருக்கிற நம்முடைய தேவனுடையவைகள். எனவேதான் வாக்குத்தத்தங்களில் இடம்பெற்றுள்ள நன்மைகளும் ஆசீர்வாதங்களும் பரலோகத்திலுள்ள தேவனிடமிருந்து நமக்கு இறங்கி வருகிறது. இதை யாக்கோபு தனது நிருபத்தில் கூறும்போது “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது” (யாக்.1:17) என்கிறார். இப்புதிய ஆண்டில் தேவன் நம்மை இவ்வுலகத்திற்குரிய நன்மைகளினாலும்; ஆவிக்குரிய வரங்களினாலும் ஆசீர்வதிக்கிறார்.

இயேசுகிறிஸ்து மலைப்பிரசங்கத்தின்போது தம்மிடத்தில் வந்த ஜனங்களிடத்தில் இவ்வாறான நம்பிக்கையைத் தந்தார்: “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” எனவே இவ்வாண்டில் நாம் வேண்டிக்கொள்ளும்போது தேவன் நன்மையான ஈவுகளை மாத்திரம் அல்ல, கிருபை வரங்களையும் நமக்குத் தருகிறார். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது (எபே-4:7). எனவே தேவன் நமக்கு பகிர்ந்தளிக்கிற வரங்களை ஆத்தும ஆதாயப் பணியில் உபயோகிக்க அர்ப்பணிப்போம். அதற்கான வாய்ப்புகளை நமக்குத் தருவதோடு வாசல்களையும் இவ்வாண்டில் திறந்து கொடுப்பார்.

ஜெபம்: அன்பின் தேவனே, பரலோகத்திலிருந்து இறங்கிவருகிற உமது நன்மையான ஈவுகளினாலும் பூரணமான வரங்களினாலும் இந்தப் புதிய ஆண்டிலே நீர் எங்களை ஆசீர்வதிக்கின்றபடியால் உம்மை துதிக்கிறோம். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (ஜனவரி – பிப்ரவரி 2024)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

புத்தாண்டில் இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். 2023ஆம் வருடம் முழுவதும் தேவன் நம்மை பாதுகாத்து நம் தேவைகளை யெல்லாம் சந்தித்து வழிநடத்தினபடியால் அவருக்கு ஸ்தோத்திர பலிகளை ஏறெடுப்போம். 2024ஆம் ஆண்டில் பிரவேசித்திருக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் குடும்பமாக ஆசீர்வதிக்க தேவனிடம் வேண்டுதல் செய்கிறோம். இவ்வாண்டில் நன்மையும் கிருபையும் உங்களைத் தொடர தேவன் கிருபை செய்வாராக! இப்புதிய ஆண்டில் சத்தியவசன ஊழியப் பணிகளை தேவன்தாமே ஆசீர்வதிக்கவும் தேவைகள் அனைத்தையும் சந்திக்கவும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இவ்வூழியங்கள் வாயிலாக நற்செய்தி அறிவிக்கப்படவும் பங்காளர்கள் வேண்டுதல் செய்ய அன்போடு கேட்கிறோம்.

2024ஆம் வருட சத்திய வசன காலண்டரை பங்காளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். கூடுதலான காலண்டர் தேவைப்படுபவர்கள் 78ஆம் பக்கத்திலுள்ள விளம்பரத்தைக் கவனிக்கவும். சத்தியவசன ஊழியத்தைக் கடந்தாண்டு முழுவதும் ஜெபத்தோடும் மனப்பூர்வமான காணிக்கையாலும் தாங்கி வந்த அன்பு பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவருக்கும் நன்றி கூறுகிறோம். இப்புதிய ஆண்டிலும் தொடர்ந்து தங்களது மேலான ஆதரவைத் தர அன்பாய் கேட்கிறோம். தியான புத்தகத்தின் வேதவாசிப்பு அட்டவணை யைப் பயன்படுத்தி 2023ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு தெரியப்படுத்த அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். அடுத்த இதழில் உங்களது பெயர்கள் பிரசுரிக்கப்படும்.

வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி செய்திகள் இவ்விதழிலிருந்து ஒரு புதிய தொடராக வெளிவருகிறது. ஜனவரி மாதமும், பிப்ரவரி 20-24 வரை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ள தியானங்களும், பிப்ரவரி மாதத்தில் 1-19 தேதி வரை சகோ.வஷ்னி ஏர்னஸ்ட் அவர்கள் எழுதிய தியானங்களும், ஏனைய தினங்களுக்கு தியானங்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுக்காக ஜெபியுங்கள்.

கே.ப.ஆபிரகாம்

தாவீதோடே இருந்த கர்த்தர்!

அதிகாலை வேளையில்… (ஜனவரி – பிப்ரவரி 2024)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: 1 சாமுவேல் 16:1-18

அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, புத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான் (1சாமு.16:18).

கோலியாத்தை வெல்லும் முன்னர் தாவீது அதிக அளவில் புகழ் பெறவில்லை. ஆனாலும் சவுலின் வேலைக்காரன் ஒருவன் தாவீதை கவனித்து, ஆச்சரியப்பட்டு, சவுல் பொல்லாத ஆவியினால் கலங்கிய நேரங்களில் சுரமண்டலம் வாசிப்பதற்கு அவனே ஏற்றவன் என்று பரிந்துரை செய்தான்.

இஸ்ரவேல் தேசத்தில் அநேக இளைஞர்கள் பாடகர்களாகவும், போர் வீரர்களாகவும், சிறந்த பேச்சாளர்களாகவும், அழகுள்ளவர்களாகவும் இருந்தனர். ஆனால் தாவீதிடம் இந்த வேலைக் காரனைக் கவர்ந்த அம்சம் கர்த்தர் அவனோடு கூடஇருந்ததே. கர்த்தர் சவுலுடன் இருந்தார்; ஆனால் அவனைவிட்டு நீங்கிவிட்டார் (1சாமு.10:7;16:14). கர்த்தர் ஆபிர காம்; (ஆதி.21:22), ஈசாக்கு (ஆதி.26: 28), யாக்கோபு (ஆதி.28:15), யோசேப்பு (ஆதி.39:2-3, 21-23), யோசுவா (யோசு.1:5) ஆகியோருடன் இருந்தார். எனவே தாவீதும் இத்தனித்துவமான குழுவில் இடம் பெற்றுள்ளார். தேவன் உங்களுடன்கூட இருக்கிறார் என்பதை விட வேறு உன்னதமான பாராட்டு எதுவுமில்லை. ஆனால் இதன் பொருள் யாது?

அது ஆவிக்குரிய பண்பு

சாமுவேல் தாவீதை அபிஷேகம் பண்ண ஈசாயின் வீட்டுக்குச் சென்ற பொழுது அவருடைய ஒவ்வொரு குமாரரும் அவனைக் கவர்ந்தனர். ஆனால் தேவனோ தோற்றத்தின்படி முடிவெடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார். ஏனெனில் “கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1சாமு.16:7). சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசாப் தாவீதைப் பற்றி “இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்” (சங்.78:72) என்று பாடியுள்ளார்.

சவுல் பெருமையுள்ள இருதயத்தை உடைய இரு மனமுள்ளவன்; ஜனங்களுக்கு முன்பாக மகிமையை விரும்பிய வன் (1 சாமு. 15:30); ஆனால் தாவீதோ தாழ்மையுள்ளவன், ஆண்டவர் ஒருவரை மாத்திரமே மகிமைப்படுத்த விரும்பினான்; நற்குணங்களையுடையவன், தேவனுடைய இருதயத்துக்கு ஏற்றவன் (13:14). இராபர்ட் முர்ரே மெக்கெய்ன் என்ற போதகர் “தேவன் உங்களிடமுள்ள சிறந்த தாலந்துகளைவிட நீங்கள் இயேசுவைப்போலிருப்பதையே விரும்புகிறார்” என்று எழுதியுள்ளார்.

அது தேவனுடைய வல்லமை

தாவீது இளைஞனாக இருந்தபொழுது ஒரு மேய்ப்பனின் கவணினாலே கோலி யாத் என்ற இராட்சதனைக் கொன்றான். தனது படைவீரர்களை வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று நடத்திச்சென்றான். எனவேதான் பெண்கள் அவனைப் புகழ்ந்து “சவுல் கொன்றது ஆயிரம்; தாவீது கொன்றது பதினாயிரம்” (18:7) என்று பாடினார்கள். இது தாவீதின் பேரில் சவுலின் பொறாமை தீயை எழுப்பக் காரணமாயிற்று. எனவே அவன் தாவீதைக் கொல்ல விரும்பினான். ஆனால் தேவன் தாவீதைக் காத்துக்கொண்டார். தேவன் அழைத்தவர்கள் எவர்களோ அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்து செயல்படுத்தும் ஞானத்தையும் கொடுக்கிறார். தாவீது கர்த்தருடைய வல்லமையைச் சார்ந்திருந்தார். தலைவர்களை உருவாக்கும் முறையையும் அவர் அறிந்திருந்தார் (அதிகாரம் 23). கர்த்தர் அவனோடே கூட இருந்தார்! அவனைக் கைவிடவில்லை. எனவே தாவீது, “யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்” (சங்.18:39) என்று பாடினார்.

அது எதிர்ப்பைக் குறிக்கும்

இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதை நேசித்து அவனைக் கனப்படுத்தினர். ஆனால் சவுலும் அவனைப் பின்பற்றிய வர்களும் அவனைக் கொல்ல வகை தேடினர். தேவனைக் கனப்படுத்தி, அவருடைய ஒளியைப் பிரகாசிக்கும் எந்த ஒரு உண்மையான ஊழியனும் இருளை விரும்பும் மக்களால் தாக்கப்படுவான். இதனை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் கூறியுள்ளார் (யோவான் 3:19-21). சுமார் ஏழு ஆண்டுகளாக சவுல் தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் பின்தொடர்ந்தான். எனவே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தப்பிச்சென்றனர். சில வேளைகளில் குகைகளிலும் வாழ்ந்தனர். நீங்களும் நானும் இவ்வாறு படை வீரர்களால் துரத்தப்படாவிட்டாலும், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவருக்கும் துன்பங்கள் உண்டு (2 தீமோ.3:12) என்று வேதாகமம் கூறுகிறது.

அது நித்திய ஆசீர்வாதத்தைத் தரும்!

1 இராஜாக்கள் 2 ஆம் அதிகாரம் தாவீதின் மரணத்தைப் பதிவுசெய்துள்ளது. ஆனால், அதன்பின்னரும் வேதாகமத்தில் அவருடைய பெயர் அநேக இடங்களில் காணப்படுகிறது. தாவீது தனது மரணத்துக்குப் பின்னரும் தனது மக்களுக்கு ஆசீர்வாதங்களை வைத்துச்சென்றார்; இன்றும் தேவனுடைய மக்களை ஆசீர்வதிக்கிறார். தேவனுடைய ஆலயக் கட்டுமான வரைபடத்தையும், அதற்கென்று திரளான பொக்கிஷங்களையும் சேகரித்து வைத்துச்சென்றார் (1நாளா. 28:11-20). படைகளுக்குத் தேவையான அநேக ஆயுதங்களையும் ( 2இராஜா. 11: 10; 2நாளா.23:9) ஆலயப் பாடகர்களுக்கான இசைக்கருவிகள் (2 நாளா.29: 26,27; நெகே.12:36) இனிமையான சங்கீதங்கள் ஆகியவற்றையும் அளித்துள்ளார். இன்று நாம் பாடும் அநேக பாடல்கள் தாவீதின் சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டவை. நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவும் தாவீதின் வம்சத்திலே தோன்றி தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டார்.

தாவீது நமக்கு விட்டுச்சென்ற ஆஸ்திகள் இன்றும் நமக்கு ஆசீர்வாதமாக அமைந்துள்ளன. “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்று 1 யோவான் 2:17 உறுதி அளிக்கிறது. ஆண்டவர் நம்மோடே இருப்பாராக! தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிற தற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்” ( 1 நாளா. 28:20).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

1.வேதாகமம் தேவனின் வெளிப்பாடாகும்!

வேதாகமத்தின் தனிச்சிறப்பு (ஜனவரி – பிப்ரவரி 2024)
Dr.உட்ரோ குரோல்

வேதாகமம் ஏன் இவ்வளவு சிறப்புப் பெற்றிருக்கிறது? தனிச்சிறப்பு வாய்ந்ததாயிருக்கிறது? என்று நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டதுண்டா?

இது அதிகம் விற்பனையாகும் புஸ்தகம் என்பது இதற்குக் காரணம் அல்ல. இது 2000 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதும் காரணம் அல்ல. இது ஒரு மிகப் பழமையான புத்தகம் என்பதும் காரணம் அல்ல. இது உண்மையானது என்பதாலும் அல்ல. இது பல்வேறு அமைப்புகளிலும் வடிவங்களிலும், பதிப்புகளிலும் வெளியிடப்பட்ட தாலும் அல்ல.

இந்த உலகில் வெளியிடப்பட்டுள்ள எல்லா புத்தகங்களைவிடவும் இது தனிச் சிறப்பும் பெற்றிருப்பதன் காரணம் வேதாகமத்தின் எழுத்தாளர் தேவன் என்பதே! இது அவருடைய புத்தகம்! இதை வாசிப்பதன் மூலம் நாம் கடவுளைப் பற்றியும் அவரோடுள்ள நமது உறவையும் தெரிந்துகொள்ளலாம்.

சத்தம் இல்லாத ஒரு உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள்! பேச்சு இல்லை; யென்றால் செவிக்குக் கேட்கும் வேலை இல்லை. எந்தவகையான செய்தி தொடர்பும் இல்லை. எங்கும் ஒரே அமைதிதான்!

ஹெலன் கெல்லருக்குப் பார்வை இல்லை. காதும் கேட்காது, இந்த வகையான அமைதியை அனுபவித்தவர் அவரே. போர்க் கைதிகள் ஏறக்குறைய இதுபோன்ற அமைதியை அனுபவித்திருப்பார்கள். அவர்களால் கேட்க முடியாது என்பதல்ல; கேட்கமுடியும். ஆனால், போர்க் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒருவரோடொருவர் பேசக்கூடாது. இப்படி மற்றவர்களோடு அவர்கள் பேச முடியவில்லை; ஆனால், இவர்கள் அனுபவிப்பது தனிமைச் சிறையே!

இந்தப் பூமியில் இருக்கும் நமக்கு தேவனோடு உறவு கொள்ள முடியாத நிலை இருக்குமானால், அது எவ்வளவு பரிதாபமான நிலை! ஆனால் அவர், நாம் அவரோடு தொடர்பு கொள்ளவும், பேசவும் ஒரு மார்க்கத்தைத் தந்திருக்கிறார். அதுதான் ஜெபம்; அதுபோலவே தேவனும் நம்மோடு தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ! தேவன் மனிதரோடு தொடர்புகொள்ளும் மார்க்கமே வேதாகமம்; வேதாகமத்தின் மூலமாக தேவன் நம்மோடு பேசுகிறார். நம்முடைய உள்ளத்துக்கு தேவன் தமது உள்ளத்தை வேதாகமம் மூலம் வெளிப்படுத்துகிறார்.

தேவன் தம்மை வெளிப்படுத்த வேண்டியதின் அவசியம்.

தேவன் தம்மை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தாரானால், நாம் அவர் இருக்கிறார் என்ற ஒன்றைத்தவிர வேறு எதையும் அறிந்திருக்கமாட்டோம். தேவன் இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் இந்த ஒழுங்கு எப்படி வந்தது?

  • நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் தம்தம் நிலைகளில் சென்றுகொண்டிருக்கின்றன.
  • கிரகங்கள் ஒவ்வொன்றும் தம்தம் வட்டப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
  • சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவை தவறாமல் நடைபெறுகின்றன.

தேவனே இந்தப் பிரபஞ்சம் முழுவ துக்கும் அதிபதி! அவர் எல்லாவற்றுக்கும் மேலானவராக உயர்ந்திருப்பதால், அவரது படைப்புகள் அவரை நெருங்க முடியாமல் இருக்கிறது. அவர் தம்மை வெளிப்படுத்தினால் மட்டுமே படைப்புகள் அவரை அறியமுடியும்.

“கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர் எல்லாத் தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்” (சங். 97:9).

“கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. உன்னதங்களில் வாசம் பண்ணுகிற நம்முடைய தேவனுக்குச் சமானமானவர் யார்? அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்” (சங்.113:4-6).

தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்த தீர்மானிக்காவிட்டால், அவரது தன்மை, பண்பு, குணாதிசயம் இவற்றை நாம் அறிந்துகொள்ள முடியாது. அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு, கரிசனை, பராமரிப்பு இவற்றைப் புரிந்துகொள்ளவும் முடி யாது.

தேவன் தம்மை நமக்கு வெளிப்படுத்துவது எப்படி?

இறையியலாளர்கள் இரண்டு வகையான வெளிப்பாடுகளைக் கூறுகிறார்கள்.

1. முதலாவது பொதுவான வெளிப்பாடு

இது தேவன் ஒருவர் உண்டு; அவர் நிலைத்திருக்கிறார் என்றுமட்டும் நமக்குக் காட்டும். அவரது தன்மைகள், பண்பு, குணாதிசயம் இவற்றை நமக்கு வெளிப்படுத்துவதில்லை. உதாரணமாக, தேவன் ஒர் அழகான உலகத்தைச் சிருஷ்டித்தார்.

“வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங்.19:1).

“காக்கைக் குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?” (யோபு 38:41).

தேவன் நம்மை பராமரிக்கிறவர் என்பதற்கு இதுவே சான்று!

“உன்னதமானவர் மனுஷனுடைய இராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமானவனுக்கு அதைக்கொடுத்து…” (தானியேல் 4:17).

தேவன் மனிதனுடைய ஆளுகையில் தலையிடுகிறார்.

தேவனைப்பற்றி நாம் அறிய விரும்பும் அனைத்தையும் தெரிந்துகொள்ள இந்தப் “பொது வெளிப்பாடு” போதாது. தேவனோடுள்ள நமது உறவு அவர் திட்டமிட்டபடி உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள அது போதாது. எனவே தேவன் தம்மை வெளிப்படுத்துவதில் இன்னும் ஒருபடி தாண்டிச் சென்றார்.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

page 1 of 2