ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 29 வியாழன்

கர்த்தாவே உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன் (சங்.25:1) இந்தநாளிலும் கர்த்தருக்கு ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி பிதாவின் வலது பாரிசத்தில் இருந்து நமக்காக பரிந்துபேசி, வேண்டுதல் செய்து கொண்டிருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மேல் வைத்துள்ள அன்பிற்காக மனதுருக்கத்திற்காக நன்றி சொல்லி ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

என்னைக் கொன்றுபோட்டாலும் …

தியானம்: 2024 பிப்ரவரி 29 வியாழன் | வேத வாசிப்பு: 2கொரி.4:8-11; 2தீமோத்.1:12

YouTube video

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் (யோபு 13:15).

பயங்கரமான சோதனைப் புயலில் அகப்பட்டு, நம்பிக்கை முற்றிலும் அழிந்து போன நிலையிலும், மன உறுதியோடு யோபு கூறிய இவ்வார்த்தைகளை, நமது சாதாரண வாழ்விலே நமக்கேற்படும் சாதாரண பாடுகளின் மத்தியிலே நம்மால் கூறமுடிகிறதா? யோபுவிற்கு ஏற்பட்ட சோதனைகள் நமக்கு வருமாயின் நமது வாயின் அறிக்கை எப்படிப்பட்டதாயிருக்கும்?

கிறிஸ்தவ வாழ்வு, நாம் நினைப்பதுபோல இலகுவானதல்ல. ஆண்டவர் அருளிய மன்னிப்பையும் மீட்பையும் எப்பொழுது பெற்று அவரை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்கிறோமோ, அக்கணமே சத்துருவானவன் நமக்கு எதிராக தனது போர்க்கொடியை ஏற்றிவிடுகிறான் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்வோமாக. நம்பிக்கை யாவுமே சிதறிப்போகும் தருணங்கள் உண்டாகலாம். ஒன்று மாறி ஒன்றாகப் பலத்த அடிகள் நம்மேல் விழக்கூடும். நம் ஜீவன் பறிக்கப்பட்டுப் போகுமளவிற்கு நிலைதடுமாறக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். நமது ஜெபங்கள் கேட்கப்படவில்லையோ என்று சோர்ந்துபோகவும்கூடும். சிலுவையின் கீழே வருந்தித் திகைத்து நிற்கக்கூடும். இவ்வேளைகளில் துக்கத்தையும் கண்ணீரையும் கட்டுப்படுத்தமுடியாது; தப்பிச்செல்ல வழிதேடி தவிக்காமலும் இருக்கமுடியாது. ஆனாலும், இவ்வேளைகள்தான் நாம் உறுதியாக இருக்கவேண்டிய தருணங்கள் என்பதையும் மறக்கக்கூடாது. இதுவரையிலும் நமது யுத்தங்களை நாமே நடத்தித் தோற்றுவிட்டோம் என்பதை ஏற்றுக்கொண்டு, ஆவியானவரின் கரங்களிலே நம்மை ஒப்புக்கொடுப்போம். சத்துருவுக்கு எதிராகக் கொடியேற்ற அவரே பாத்திரராயிருக்கிறார்.

ஆம்! பிரியமானவர்களே, பாடுகளின் வேளைகள்தான் பரத்துக்குப் படியேறும் நல்ல தருணங்கள். “எவ்வேளையிலும் கர்த்தாவே, நான் உம்மையே நம்புவேன்” என அறிக்கை செய்யக்கூடிய தருணம் இன்னொருதரம் நமக்குக் கிடைக்காது போகலாம். கடும்புயல் வீசும்போது, கப்பலை நங்கூரமிட்டு ஒருநிலையில் வைத்திருப்பதுதான் மாலுமி செய்யக்கூடிய ஞானமுள்ள செயலாகும். பவுல் அடியார், “நான் வெட்கப்படுவதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருப்பவர் இன்னாரென்று அறிவேன்” (2 தீமோத்.1:12) என்று பாடுகள் மத்தியிலும் அறிக்கை பண்ணினார். அறிவும், அனுபவமும், ஜெபமும்கூட ஆறுதலளிக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரலாம். அப்போது நங்கூரத்தைப் பாய்ச்சி, கிறிஸ்துவில் நிற்கப் பழகிக்கொள். அப்பொழுது நீ விசுவாசித்திருப்பவர் நிச்சயமாக உன் முன்னிலைமையிலும், உன் பின்னிலைமையை இரட்டிப்பான ஆசீர்வாதங்களினால் நிரப்புவார். “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (2 கொரி.4:8-9).

ஜெபம்: ஆண்டவரே, எங்கள் வாழ்வில் ஏற்படும் எல்லாத் துக்கத்திலும் உம்மை மட்டுமே சார்ந்து விசுவாச அறிக்கையிட்டு காத்திருக்க கிருபை தாரும். ஆமென்.

ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 28 புதன்

வாழ்வின் பலவிதமான போராட்டங்கள், தனிமை, ஆதரவற்ற சூழ்நிலை, வியாதியின் வேதனை, மேலும் வெளியே சொல்லிமுடியாத பாடுகள் வழியாக சென்று அனுதினமும் ஆண்டவருடைய பாதத்தில் விண்ணப்பித்துவரும் கர்த்தருடைய பிள்ளைகளின் துயர் துடைக்கப்பட கர்த்தர் ஆதரவாய் இருந்து அவர்களை வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.

என்னைத் தாங்கிடும் கிருபை!

தியானம்: 2024 பிப்ரவரி 28 புதன் | வேத வாசிப்பு: சங்கீதம் 73:1-28

YouTube video

என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது (சங்கீதம் 94:18).

நாம் வாழும் வாழ்க்கைப் பாதை நமக்கு எப்போதும் நியாயமானதாக தெரிகிறது. நமது நினைவுகளும் திட்டங்களும்கூட சரியானதாகவே தோன்றுகின்றன. வீதியிலே ஒரு சரியான நோக்கோடு நடந்துசெல்லும் ஒருவர், நினையாத நேரத்தில் பாதையிலுள்ள சிறுகுழியிலும் மண்மேடுகளிலும் கால் சிக்கி விழுந்துவிடுகிறாரே; அதேபோல சரியான பாதையிலும் இடர்கள் வரத்தான் செய்யும். நினைவுகளும் திட்டங்களும் திடீரென சரிய ஆரம்பிக்கும். துன்மார்க்கர் தழைக்கும் போதும், நமக்குத் தீங்கு செய்கிறவர்களும் நம்மைத் தள்ளிவைப்பவர்களும் மேன்மையடையும்போதும், நமது மனம் குழம்பிவிட இடமளிப்போமானால், நிற்கிறோம் என்கிற நாமும் சற்று சறுக்கி விழத்தான் செய்வோம். தேவ பிள்ளையே, நிதானத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்திருந்த உன் வாழ்விலும் சறுக்கல்கள் ஏற்பட்டிருக்கிறதா? விடை காணமுடியாத பல கேள்விகள் உன்னைச் சோர்வடையச் செய்கின்றனவா? சறுக்குகின்ற உன் கால்களைத் தூக்கிவிடுவார் யார் என்று ஏங்கி நிற்கிறாயா?

எருசலேம் தேவாலயத்தின் பாடற்குழுவின் பிரதான தலைவனும், துதி கீதங்கள் இசைப்பவனுமாகிய ஆசாப்பின் கால்கள்கூட சறுக்கியதாம். “துன்மார்க்கர் செழித்தோங்குவதைக் கண்டு பொறாமை கொண்டேன். நான் விருதாவாகவே என் இருதயத்தை சுத்தம்பண்ணி குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்” (சங்.73:13) என்று அலுத்துக்கொண்டான். ஆனால் அவன், பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்தபோது உண்மையைக் கண்டான். துன்மார்க்கரின் முடிவை அவனால் உணரமுடிந்தது. அப்போது, தன் நினைவை மாற்றிக் கொண்டவனாக, “ஆனாலும், என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று” என்றான்.

தேவபிள்ளையே, உன் மனக்குழப்பத்திற்கு காரணங்கள் பலவாக இருக்கலாம்; எதுவாயிருந்தாலும் தேவனுடைய சமுகத்திற்குப் போக மாத்திரம் மறந்து விடாதே. அங்கேதான் உன் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். நீ விழுந்துவிடும் முன்னதாகவே, அவரது ஒப்பற்ற கிருபை, உன்னை மறுபடியும் ஜீவபாதையிலே நிலைநிறுத்தும். தேவன் கூப்பிடும் சத்தத்தைக் கேட்கவும், அதைத் தாங்கிக்கொள்ளவும் நீ எம்மாத்திரம்? ஆனால், அதுவே அவரது “கிருபை” என்று அறிந்துகொள். உன் நினைவுகள் தத்தளிக்க ஆரம்பிக்கும் போதே தேவனை நோக்கிக் கூப்பிடு. உனக்குப் பிரியமானவர்கள் உனக்கு எதிராகத் திரும்பும்போது உன் மீட்பரை நோக்கி அபயமிடு. உன் சூழ்நிலைகள் உடனே மாறாவிட்டாலும், தேவன் நிச்சயம் உன்னைத் தாங்குவார்.

ஜெபம்: அன்பின் பிதாவே, குழம்பித் தவிக்கும் என் இதயத்தை உம் பாதத்தில் அர்ப்பணிக்கிறேன். என்னை ஜீவபாதையிலே நிலைநிறுத்துகிற உம்முடைய ஒப்பற்ற கிருபைகளுக்காக ஸ்தோத்திரம். ஆமென்.