ஜெபக்குறிப்பு: மார்ச் 31 திங்கள்

“.. அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்” (எரேமி.31:9) என்ற வாக்குப்பண்ணின ஆண்டவர் மாறாதவராய் வல்லமையுள்ளவராய் நம்மோடிருந்து இம்மாதம் முழுவதும் நடத்தினார். அவருக்கே எல்லா மகிமையையும் செலுத்தி ஸ்தோத்திரிப்போம்.

இயேசு ஒரு போதகர்

தியானம்: மார்ச் 31 திங்கள்; வாசிப்பு: யோவான் 3:1-13

“…நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும்
இவைகளை அறியாமலிருக்கிறாயா?”
(யோவான் 3:10)

தேவகுமாரனாகிய கிறிஸ்து, மனுஷகுமாரனாகிய கிறிஸ்து என்று இயேசுவைச் சுட்டிக்காட்டிய யோவான், மூன்றாம் அதிகாரத்திலே அவரை ஒரு போதகராக வெளிப்படுத்தியுள்ளார். நிக்கொதேமு யூதர்களுக்குள்ளே ஒரு அதிகாரியும், ஒரு பரிசேயனும், இஸ்ரவேலில் போதகனுமாயிருந்தான். பரிசேயர் இயேசுவையும் அவருடைய போதனைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆனால், இந்த மனுஷனோ அவற்றைக் குறித்துத் தானே நேரிலே வந்து கேட்டறிய விரும்பினான். ஆனாலும், பரிசேயருக்குப் பயந்து, தன்னை வெளிக்காட்ட விரும்பாமல், இரவிலே இயேசுவிடம் வந்தான். போதகனாயிருந்த அவனே, இயேசுவை, “ரபீ” என்று அழைத்து, இயேசு செய்த அற்புதங்களின் நிமித்தம் அவரை நோக்கி, “நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம்” என்று கூறினான். தேவனின் ராஜ்யம் யூதருக்கே என்பதுதான் நிக்கொதேமுவின் அறிவு. ஆகையால், தேவனுடைய ராஜ்யம் முழு மனிதருக்கும் உரியது என்றும், அதில் பிரவேசிக்கவேண்டுமென்றால், அவன் யூதனாயிருந்தாலும் மறுபடியும் பிறக்கவேண்டும் என்றும் இயேசு அவனுக்குப் போதித்தார். நிக்கொதேமு ஒரு போதகனாயிருந்தபோதும் மறுபடியும் பிறப்பதைக் குறித்து போதகராகிய இயேசுகிறிஸ்து கற்றுக்கொடுத்தார் .

ஜாண் வெஸ்லி ஐயர் அவர்கள் இரட்சிக்கப்படும்போது, ஏற்கனவே அவர் ஒரு போதகராகவே இருந்தார் என்பதை அறிவோம். மறுபடியும் பிறந்த அந்த மெய்யான அனுபவத்தைப் பெற்ற பின்னர் அவரது வாழ்விலே எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை அவரது வாழ்க்கைச் சரிதையை வாசித்தால் புரியும். ஆனால், நிக்கொதேமுவைப்போல இன்றும் எத்தனையோ நிக்கொதேமுக்கள் இன்றும் நம் மத்தியில் வாழ்கிறார்கள்? அவர்களில் நாமும் ஒருவராக இருக்கிறோமா? நாம் வேதத்தை வல்லமையாகப் போதிக்கலாம்; வல்லமையான பிரசங்கி என்று பெயர் பெற்றிருக்கலாம். அருமையான கூட்டங்களை நடத்தலாம். கிறிஸ்தவ தலைவராகக்கூட இருக்கலாம். இயேசுவை அற்புதம் செய்கிறவராகவும் அறிந்து, அனுபவித்தும் இருக்கலாம். ஆனால், ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்பதுவே இயேசு போதித்த சத்தியம். இந்தப் போதனையை நாம் அலட்சியம் செய்தால், நாம் ஒன்றுமே இல்லை.

எந்த உயர்நிலையில் நாம் இருந்தாலும், வேதத்தைப் போதிக்கிறவர்களாக இருந்தாலும், நாம் மறுபடியும் பிறந்திருக்கிறோமா என்பதைக் குறித்த தெளிவு நமக்கு இருக்கவேண்டியது அவசியம். எனவே நமது போதகராகிய ஆண்டவரின் போதனையைத் தள்ளாமல், அவரண்டை சேருவோமா!

ஜெபம்: “தேவனே! முதலாவது என் வாழ்க்கையில் வேத வசனத்தை நடை முறைப்படுத்தவும், அதன்பின்பு பிறருக்குச் சொல்லவும் நீரே உமதாவியால் என்னை நடத்தும். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: மார்ச் 30 ஞாயிறு

“ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்” (சங்.50:23) இம் மாதத்திலும் கர்த்தர் நடத்திவந்த பாதைகளில் கண்ட அதிசயங்களுக்காக நன்றிசெலுத்தி, இந்த லெந்துநாட்களில் அவரது பாடுமரணங்களைக் குறித்தும் அதிகமாய் தியானித்து கர்த்தரை ஆராதிப்போம்.

மனுஷகுமாரனாகிய இயேசுகிறிஸ்து

தியானம்: மார்ச் 30 ஞாயிறு; வாசிப்பு: யோவான் 2:1-11

“இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக்
கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.”
(யோவான் 2:2)

நம்மை யாரோடு அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்? உயர் நிலையில் உள்ளவர்களுடனா? அல்லது, சாதாரண மக்களுடனா? பெயர் பெற்ற சபைகளின் அங்கத்தவர்களுடனா? அல்லது, உலகமே அறியாத சாதாரணமான, கர்த்தருக்குள் உண்மையாகவே பக்தியாக இருக்கும் பிள்ளைகளுடனா? ஆண்டவராகிய இயேசு தம்மை எப்படி, யாருடன் அடையாளப்படுத்தினார் என்பதை யோவான் விளக்குகிறார்.

இயேசுகிறிஸ்துவே ‘தேவகுமாரன்’ என்பதை சுவிசேஷத்தின் முதல் அதிகாரத்தில் வெளிப்படுத்தின யோவான், இரண்டாம் அதிகாரத்தில் நேரடியாகவே, இயேசு எப்படித் தம்மை “மனுஷகுமாரன்” என்று அடையாளப்படுத்தி ஜீவித்தார் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். தாம் தேவனிடமிருந்து வந்தவர் என்றாலும், உலக வாழ்விலே இயேசு தம்மைக் கடவுளாக அல்ல, ஒரு முழு மனிதனாகவே அடையாளப்படுத்த வெட்கப்படவில்லை. இயேசு செய்த முதல் அற்புதம் கானாவூர்க் கலியாணத்தில் இடம்பெற்றது. அழைப்புப்பெற்ற இயேசு கல்யாண வீட்டுக்குப் போயிருந்தார். அங்கு திராட்சரசம் குறைவுபட்டது. அவரது தாயார் அவரை அணுகி, அக்குறைபாட்டைத் தெரிவித்தபோது, இயேசு தன் வேளை இன்னும் வரவில்லை என்று சொன்னார். ஆனாலும், அந்த மணவாளன் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, வெறுமையான சாடிகளை நிரப்பிய தண்ணீரை அவர் திராட்சை ரசமாக மாற்றியதை நாம் வாசிக்கிறோம். ஆம், தேவகுமாரனான இயேசுவை “மனுஷகுமாரனாக” யோவான் இங்கே வெளிப்படுத்தினார். அதாவது, இயேசு தாம் தேவகுமாரன் என்ற உயர்ந்த எண்ணத்தோடு, சமுதாயத்தை விட்டுவிலகி வாழாமல், தன்னைத் தாழ்த்தி சமுதாயத்தின் சாதாரண வைபங்களிலும் மற்றவர்களைப்போலவே கலந்துகொண்டு, தன்னை மக்களோடு மக்களாக அடையாளப்படுத்தினார் என்று யோவான் விளக்குகிறார்.

இப்படியிருக்க, ‘நாம் கிறிஸ்துவின் பிள்ளைகள்’ என்று சொல்லிக்கொள்ளுகின்ற நாம் இன்று யாருடன் நம்மை அடையாளப்படுத்துகிறோம்? நம்மை மேன்மையுள்ளவர்களாக அடையாளப்படுத்த நம்மிடத்தில் என்னதான் இருக்கிறது? நமக்கிருக்கும் ஆசிகள், மேன்மை, தேவனுடைய பிள்ளை என்ற உரிமை எல்லாமே கிறிஸ்து நமக்குச் சம்பாதித்துக் கொடுத்ததாகும். அப்படியிருக்க, நம்மை நாமே எப்படி உயர் இடத்தில் வைத்து உலகுக்குக் காண்பிக்க முடியும்? நாம் கிறிஸ்து நடந்த பாதையில் நடக்கவே அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் தேவனுக்குப் பிள்ளைகள்தான்; ஆனால், இவ்வுலகில் மனுஷர் மத்தியில் வாழுகிறோம் என்பதை மறவாதிருப்போமாக.

ஜெபம்: “பிதாவே, நான் உமது பிள்ளை என்ற கிருபையை ஈந்தவர் நீரே என்றுணர்ந்து, உம் வழியில் வாழ என்னை அர்ப்பணிக்கிறேன். ஆமென்.”