ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 31 திங்கள்
இம்மாதம் முழுவதும் நம்மை தமது கரத்தின் நிழலினால் மறைத்து, கூப்பிட்ட வேளைகளில் எல்லாம் அருகில் வந்து நமக்கு உதவி செய்த தேவாதிதேவனை ஆயுளுள்ள நாளெல்லாம் நன்றி செலுத்தி அவருடைய பாதத்தில் விழுந்து மகிமைப்படுத்துவோம்.
தேவனுடைய கோல்!
தியானம்: ஆகஸ்டு 31 திங்கள்; வாசிப்பு: சங்கீதம் 40:1-11
“…மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும்
கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு… தேவனுடைய கோலையும்…
தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்” (யாத்.4:20).
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஒரு கலைஞர் இருந்தார். அவர் வீதிகளில் செல்லும்பொழுதெல்லாம் அவரது கண்கள் உடைந்த கண்ணாடித் துண்டுகளையும், வாகனங்களின் உடைந்து நொறுங்கிய சமிக்ஞை விளக்குத் துண்டுகளையும் தேடும். வீணானவைகள் என்று விடப்பட்ட இத்தகைய பொருட்களை அவர் சேகரித்து வீட்டிற்கு எடுத்துச்செல்வது வழக்கம். பின்னர், மிகச் சாதாரணமான அப் பொருட்களை தமது திறமையினால் மொசைக் வேலைப்பாடுடன் கூடிய வண்ணமிகு கலைப்பொருட்களாய் மாற்றிவிடுவார். அற்பமான வைகளாய் எண்ணப்பட்டவைகள் அவரது கைகள் பட்டதும் அசாதாரண உயிரோவியங்களாய் உருப்பெற்றுவிடும்.
நமது தேவனும் இவ்வண்ணமே செயலாற்றுபவர். அவரது அற்புத வல்லமையினால் மோசேயின் கையிலிருந்த அந்த சாதாரண கோல் எனப்பட்டது, தேவனுடைய கோல் என மாற்றியமைக்கப்பட்டது. அவனது கையிலிருந்த சாதாரண மரத்தடியைப் பயன்படுத்தி, எகிப்தியர்மீது வாதைகளை வரப்பண்ணவும், சமுத்திரத்தைப் பிளக்கவும், கன்மலையிலிருந்து தண்ணீரைப் புறப்படப் பண்ணவும் தேவனாலே மாத்திரமே கூடுமாதானயிருந்தது.
அன்பானவர்களே! இந்த உண்மை நமது வாழ்வுக்கும் பொருந்தும். நாம் கிறிஸ்துவுக்குள் வரும்பொழுது, ஆண்டவருக்குள் ஒரு புது சிருஷ்டியாக மாற்றம் அடைகிறோம். தேவன் நமது பழைய தன்மைகளில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்துவிட்டு, அத்துடன் நிறுத்திக்கொள்பவர் அல்ல. மாறாக, அவர் பழையவைகள் அனைத்தையும் ஒழித்து, சகலத்தையும் புதிதாக்குகிறார். ஆம், இயேசுகிறிஸ்துவுக்கு நாம் நமது வாழ்வை அர்ப்பணித்து, அவரை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்பொழுது, ஒரு அசாதாரண மாறுதல் நம்மில் தோன்றுகின்றது. மிகச் சாதாரணமானவர்களாய் நாம் எண்ணப்பட்டா லும், அவர் நம்மை விசேஷித்தவர்களாய் வனைய வல்லவர்.
அன்று கலிலேயா கடற்கரையில் வாழ்ந்த சாதாரண மீனவர்களை அழைத்து, முழு உலகுக்கும் வாசனை வீசும் மலர்களாகவும், பாவ இருளில் ஒளிவீசும் தீபங்களாகவும், சரித்திரத்தில் அழியாத ஜீவ சிற்பங்களாகவும், பலமுள்ள ஜீவ சாட்சிகளாகவும், ஆதித் திருச்சபையின் ஆதார தூண்களாகவும் தேவனின் கரம் அவர்களை வடிவமைத்தது. எனவே சாதாரணமான நம்மையும் அவருடைய கரத்திலே கொடுப்போமா!
தேவன் சாதாரணமானவைகளை அசாதாரணமானவைகளாக்கும் அதிசயங்களைச் செய்ய வல்லவர்.
ஜெபம்: “அதிசயமானவரே, அற்பமான என்னைக் கொண்டு அசாதாரணமானவைகளை நடப்பிக்கும்படி என்னை உமது கரத்தில் அர்ப்பணிக்கிறேன். ஆமென்.”
வாக்குத்தத்தம்: ஆகஸ்டு 30 ஞாயிறு
ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் … உண்டாவதாக. (வெளி.7:12)
ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 30 ஞாயிறு
“விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்” (அப்.4:32) இவ்வாக்கு இந்தநாளின் ஆராதனையில் நிறைவேறவும், ஏகமனதோடே தேவனுக்கு ஆராதனை செய்யவும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.
அனுகூலமான துணை!
தியானம்: ஆகஸ்டு 30 ஞாயிறு; வாசிப்பு: சங்கீதம் 46:1-11
“ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேச
வேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்”
(யாத்திராகமம் 4:12).
“எலலோரும் நம்மைவிட்டு ஒதுங்கிச் செல்லும்போது நம்முடன்கூட நிற்பவனே உண்மை நண்பன்” என்று வால்டர் வின்செல் என்பவர் கூறினார். ஆனால், ஆத்ம நண்பர்களும்கூட நமக்கு உதவ முடியாத சில சந்தர்ப்பங்கள் உண்டு. அவர்கள் வெகுதொலைவில் இருந்து நமக்கு நேரடியாக உதவ முடியாமல் போகலாம். ஆனால், நாம் எங்கே இருந்தாலும், நமது சூழ்நிலைகள் எத்தகையதாய் இருந்தாலும் தேவனே நமக்கு உதவி செய்ய வல்லவர்.
அன்று பார்வோனை எதிர்த்து, எபிரெய மக்களை மீட்கும் பணியானது மோசேக்குக் கொடுக்கப்பட்டது. அவரது தலைமைத்துவம், அவரது ஜீவன், இஸ்ரவேல் மக்களின் எதிர்காலம் அனைத்துக்கும் அது ஒரு சவாலான நேரமாக அமைந்தது. அவனது நல்வாழ்வில் அக்கறைகொண்டு, அவனுக்காகப் பரிதபிக்கும் அநேகர் அவனுக்கு இருந்திருக்கலாம். ஆனாலும், தேவன் மாத்திரமே, “உன்னுடனேகூட இருந்து நீ பேசவேண்டியதை உனக்குக் கூறுவேன்” என்று சொல்லக்கூடியதாக இருந்தது.
தங்களுக்கு அருமையானவர்களையும், தங்கள் உடைமைகளையும் இழந்துபோகும் நேரங்களில், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங்.46:1) என்று தேவ பிள்ளைகளினால் மட்டுமே கூறமுடியும். 23ஆம் சங்கீதத்தில் தாவீது, “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” என்று நம்பிக்கையோடு கூறினார்.
அருமையான சகோதரனே, சகோதரியே! “இனி இதுதான் என்னுடைய முடிவு” என்று நீ கருதும்போது, தேவனே உன்னுடைய நம்பிக்கையின் “புதிய ஆரம்பம்” என்பதைக் கண்டுகொள்வாய். ஆகவே, தேவசித்தத்திற்குக் கீழ்படி. அவர் பாதை காட்டுவார். “பயப்படாதே! நான் உன் தேவன். நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே! நான் உனக்குச் சகாயம் செய்வேன். நான் உன்னைப் பலப்படுத்தி உன்னை நிலைநிற்கச் செய்வேன். என்னுடைய சர்வ வல்லமையினாலும் கிருபையினாலும் நான் உன்னைத் தாங்குவேன்” என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார். இது ஒரு வாக்குத்தத்தம். அதைச் சுதந்தரிக்காமல் விட்டுவிடாதே.
தேவனைத் தவிர வேறு எதுவுமே எனக்கு இல்லை என்று நீ உணரும் போது அவரே உனக்குப் போதுமானவராக இருப்பதைக் காண்பாய்!