ஜெபக்குறிப்பு: மே 1 ஞாயிறு
“பரிசுத்தமும் நீதியுமுள்ள” தேவன்தாமே இப்புதிய மாதத்தை நமக்கு ஆசீர்வதித்து தந்தருளவும், இந்தநாளின் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் ஒவ்வொரு வரும் கிறிஸ்துவின் இரத்தத்தினாலாகிய அந்த உடன்படிக்கையில் நிலைத்திருக்கிறவர்களாக காணப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.
பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுதல்
தியானம்: மே 1 ஞாயிறு; வேத வாசிப்பு: எபேசியர் 6:1-8
‘இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்’ (சங்.127:4).
காதல் தோல்வியினால் பாடசாலையில் அழுது கொண்டிருந்த ஒரு உயர்தர மாணவியிடம், ‘இவற்றைக் குறித்து நீ உன் பெற்றோரிடம் பேசுவதில்லையா’ என ஆசிரியர் கேட்டபோது, ‘இவற்றைக் குறித்து வீட்டிலுள்ளவர்களுடன் பேசினால் எனக்கு அடியும் உதையும்தான் கிடைக்கும்’ என்றாள் அவள்.
பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில், பெற்றோருடன் பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் எனப் பிள்ளைகளுக்கு எழுதிய அதேசமயம், பெற்றோரும் பிள்ளைகளோடு எப்படியாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார். எப்படிப் பிள்ளைகள் பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படிய வேண்டுமோ, அதேபோல, பெற்றோரும் பிள்ளைகளை கர்த்தருக்கேற்ற சிட்சையில் மட்டுமே கண்டனம் செய்ய வேண்டும். எனவே, பெற்றோர் பிள்ளைகள் உறவிலும், பிள்ளைகளைப் பெற்றோர் புரிந்து கொள்ளுவதிலும் கர்த்தரும், அவருடைய வார்த்தைகளும் முக்கிய பங்கை வகிக்கவேண்டும். பிள்ளைகளை நாம் பெற்றெடுத்திருந்தாலும், அவர்கள் கர்த்தரால் கிடைக்கும் பலனாகவே இருக்கிறார்கள். கர்த்தர் நமக்குத் தந்த பிள்ளைகளை அவருக்கு ஏற்றவர்களாக, அவரது வார்த்தையின்படி வளர்க்கின்ற பொறுப்பு பெற்றோராகிய நமது கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மறந்து போகக்கூடாது.
பெற்றோராகிய நாமும், முன்பு பிள்ளைகளாக இருந்துதான் பெற்றோரானோம் என்பதை மனதில் கொண்டு, நமது பிள்ளைகளை புரிந்துகொள்ளுகிற பெற்றோராக இருக்கவேண்டும். அவர்கள் தவறு செய்யலாம்! வழிதப்பி நடக்கலாம்! ஆனாலும் அவர்களைப் புரிந்துகொண்டு, செய்த தவறை உணர்த்தி, நல்லாலோசனை வழங்கி, நல்வழிப்படுத்த வேண்டியது பெற்றோராகிய நமது பொறுப்பாக உள்ளது. காட்டுமிராண்டித்தனமாக அவர்களை நடத்துவதும், நமது கோபத்தை அவர்கள்மீது வெளிக்காட்டுவதும் ஒருபோதும் அவர்கள் திருந்துவதற்கு உதவாது. மாறாக, உறவு உடைவுகளும், விரக்தி நிலைகளும் உருவாகுவதற்கு அதுவே காரணமாக அமைந்துவிடும். பெற்றோராகிய நாம் நமது பொறுப்பைச் சரிவர செய்வதற்கு தேவ வழிநடத்துதலுடன் செயற்பட வேண்டியது அவசியம். இன்று அநேக வாலிபப் பிள்ளைகள் வழிதப்பிப் போவதற்கும், தவறான முடிவுகளை எடுப்பதற்கும் பெற்றோரே, முக்கிய காரணமாக அமைந்து விடுவது மிகவும் வருத்தத்துக்குரிய காரியமாகும். எனவே இவற்றைச் சிந்தித்துச் செயற்படுவோமாக!
நமது பிள்ளைகள் விஷயத்தில் நாம் நடந்து கொள்ளும் விதங்களை சற்று அமர்ந்திருந்து சிந்திப்போம். நாம் மனந்திரும்பும்போது, அது பிள்ளைகள் வாழ்விலும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
‘உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான். உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்’ (நீதி.29:17).
சிந்தனைக்கு: நாம் நமது பிள்ளைகளைப் புரிந்துகொண்டு சிட்சிக்கிறோமா? அல்லது, நமது சிட்சை அவர்களை வேதனைப்படுத்துகிறதா?
நட்பு
அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2016)
– Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: 2 சாமுவேல் 16: 1-17:24
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுது விடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை (2சாமு.17:22).
மனித உறவுகளில் மிகப்பெரிய ஒரு பரிசு நட்பு ஆகும். “நண்பர்களைப் பெறுவதற்கு ஒரே வழி நாமும் நண்பராக இருக்கவேண்டும்” என்று எமர்சன் என்பவர் கூறியுள்ளார். இதையே நீதிமொழிகள் 18:24ஆம் வசனமும் விளக்குகிறது. நட்பு நம்முடைய வாழ்வை வளப்படுத்து கிறது. சில நேரங்களில் அது நம்மைக் காப்பாற்றவும் செய்கிறது. தாவீதின் வாழ்வில் ஊசாயின் நட்பு மிகச்சிறந்த ஓர் உதாரணமாகும்.
தாவீதின் மாபெரும் பாவத்தைக் கண்டித்த நாத்தான் தீர்க்ககதரிசி கூறிய தேவதண்டனை சீக்கிரமாக நேரிட்டது. அது முதலாவது தாவீதின் குமாரனான அம்னோனுக்கு நேரிட்டது. பின்பு முற்கோபியான அப்சலோ முக்கும் நிகழ்ந்தது. அப்சலோம் தனது தகப்பனுக்கு விரோதமாய் எழும்பினது இஸ்ரவேலை ஆழமாக பாதித்தது. எருசலேமில் வசித்த அவன் மற்ற ஜனங்களை தன் வசப்படுத்திக்கொண்டான். இஸ்ரவேலின் நடுவே தாவீதின் மதிப்பும் பிரசன்னமும் யுத்தத்தில் அவர் காட்டிய வீரமும் அப்சலோமின் எதிர்ப்புகளை நலிவடையச் செய்தன. அவர் தன்னிடமுள்ள வீரர்களுடன் தனது சொந்த தகப்பனையே விரட்டிச்செல்ல ஆரம்பித்தார். மேலும் அவரைக் கொலை செய்யவும் திட்டமிட்டார். இதை எவ்வாறு செயல்படுத்துவது?
அப்சலோமின் நெருங்கிய நண்பனான அகித்தோப்பேல் இதனை செயல்படுத்த ஒரு விவேகமான எதிர்ப்பு இல்லாத திட்டத்தை உருவாக்கினார். அதன்படி தெரிந்தெடுக்கப்பட்ட பன்னீராயிரம் வீரர்களுடன் இஸ்ரவேலின் சேனைகள் தாவீதைப் பின்தொடர்ந்து சென்று அவர்கள் சோர்வுற்று தளர்ந்திருக்கையில் அவர்கள் மீது பாய்ந்து தாவீதைமாத்திரம் கொல்லவேண்டுமென்று ஆலோசனை தந்தார். அப்சலோம் இதற்கு உடனடியாக சம்மதித்து, அதனைப் பாராட்டியது நம்பமுடியாத ஒரு செயலாக இருந்தது. ஆனால் அதனை செயல்படுத்துமுன் மற்றொருவரிடமும் ஆலோசனைக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தை அவனுள்ளத்தில் தேவன் உண்டாக்கினார். எனவே அவர் அற்கியனாகிய ஊசாயிடம் கேட் டார். அப்சலோமுக்கு விசுவாசியாகத் தன்னைக் காட்டிக்கொண்ட ஊசாய் தாவீதுக்கே நண்பராக இருந்து அப்சலோமின் நடவடிக்கைகளை தாவீதுக்கு அறிவிப்பவராக இருந்தார்.
ஊசாயின் திட்டம் ஒரு கொலை முயற்சியாக அமைந்தது. தாண் முதல் பெயர் செபா மட்டும் இருக்கிற கடற் கரைமணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் அப்சலோமுடன்கூட யுத்தத்துக்குச் சென்று தாவீதுடன் இருக்கும் அனைவரையும் கொன்றுபோட வேண்டும். அகித் தோப்பேலின் ஆலோசனையைவிட இத்திட்டம் மிகவும் கவர்ச்சியாகத் தோன்றியதால் அப்சலோம் இதனை மிகவும் விரும்பினான். இது தன்னை அழிக்கும்படியாக தேவனிடத்திலிருந்து தோன்றிய திட்டம் என்பதை அப்சலோம் அறியாதவனாய் இருந்தான். இப்படிக் கர்த்தர் அப்சலோமின் மேல் பொல்லாப்பை வரப்பண்ணும் பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.
தனது ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றதும் ஊசாய், அச்செய்தியை தெரிவிக்கவும், ஆபத்தை அறிவித்து தனது நண்பரான தாவீதை எச்சரிக்கவும் ஆசாரியர்களான சாதோக், அபியத்தார் என்பவர்களை அவரிடத்துக்கு அனுப்பினான். அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுது விடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை (2. சாமு.17:22). அவர்கள் தாமதிக்கவில்லை. விடியற்காலத்தில் அனைவரும் யோர்தானைக் கடந்து சென்றுவிட்டனர். ஆம்; ஒருநாளின் துவக்கத்திலேயே தீமைக்கு விலகி ஓடுவதே ஞானமுள்ள செயலாகும்.
அப்சலோம் யோர்தான் நதியைக் கடந்து தனது தகப்பனைப் பின் தொடர்ந்தான். அந்த நாளிலேயே அவனது தலை ஒரு பெரிய கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டது. அவன் கொன்றுபோடப்பட்டான். தான் அபிஷேகம் பண்ணிய அரசனுக்கு எதிராகத் தீமை செய்ய எழும்பியவனை, உண்மையும் பயபக்தியுமான ஒரு நண்பன் மூலமாய் தேவன் அழித்தார்.
ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தாமஸ் ஆல்வா எடிசன் என்ற அறிவியல் வல்லுநரின் சொந்த ஊருக்குச் செல்பவர்கள், அவருடைய தோட்டத்தில் ஒரு “நட்பின் பாதை”யைக் காணமுடியும். அந்தப் பாதையில் உள்ள ஒவ்வொரு கல்லும் எடிசனுடைய நண்பர்களால் தரப்பட்டது. ஊசாய் தனது நண்பரான தாவீதை ஆபத்திலிருந்து தப்புவித்து மகிழ்ச்சியை அளித்தார்; அதுபோல நண்பர்கள் ஒவ்வொரு நிலையிலும் தமது நண்பர்களைப் பாதுகாப்பார்கள். எனவே இப்பாதை ஒரு நட்பின் நினைவுச் சின்னமாக அமைந்தது.
உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இருந்தால் அவர்களுடன் மகிழ்ந்து அவர்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். இன்றே அவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களை நேசிப்பதாகவும் அவர்களுக்காக ஜெபிப்பதாகவும் கூறுங்கள். அவர்களுக்கு அது எவ்வளவு அர்த்தமுள்ளதாயிருக்கும் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்; ஆனால் அவர்கள் அறிவார்கள்.
அதிகாலைப் பாடல்:
பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே;
பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே;
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை
அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (மே-ஜுன் 2016)
அத்தியாயம்-10
சகோ.M.S.வசந்தகுமார்
தமிழ் வேதாகமத்தின் வரலாறு
(1) சீகன்பால்க் மொழிபெயர்ப்பு
தமிழில் முதல் தடவையாக வேதாகமத்தை மொழிபெயர்த்து வெளியிட்டவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பர்த்தலோமேயு சீகன்பால்க் என்பவராவார். 1628 ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள புல்சினிட்ஸ் எனுமிடத்தில் பிறந்த இவர், தனது 24 ஆவது வயதில் தமிழ் நாட்டுக்கு ஒரு மிஷனரியாகப் பணிபுரிய வந்தார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அநாதையாகிய இவர், தனது 16 ஆவது வயதில் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றதோடு, “ஐரோப்பாவில் நூறு பேரை இயேசுவுக்குள் கொண்டு வருவதை விட, புறமதத்தவர் வாழும் நாட்டில் ஒரு ஆத்துமாவை ஆதாயப்படுத்துவது மேலானது” எனும் ‘ஓபட் பிரைட் தெளப்ட்’ என்பவரது பிரசங்க வார்த்தைகள் காரணமாக மிஷனரியாகப் பணிபுரிய வேண்டும் எனும் வாஞ்சை கொண்டு, 1706 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் தேதி தென்னிந்தியாவிலுள்ள தரங்கம்பாடி எனுமிடத்திற்குத் தன் நண்பரான புளூட்சோ என்பவருடன் வந்து சேர்ந்தார்.
அக்காலத்தில், தரங்கம்பாடியில் டென்மார்க்கைச் சேர்ந்த வியாபாரிகளும் அரச அதிகாரிகளும் பெருமளவில் இருந்தனர். டென்மார்க்கின் அரசன், தன் நாட்டவர் வாழுமிடங்களில் கிறிஸ்தவத்தைப் பரப்பவேண்டும் என்பதற்காகவே ஜெர்மனியரான சீகன்பால்க்கையும், புளூட் சோவையும் இந்தியாவுக்கு அனுப்பியிருந்தான்.
சீகன்பால்க்கும் புளூட்சோவும் அரச அனுமதியுடன் வந்திருந்தபோதிலும் அச்சமயம் தரங்கம்பாடியிலிருந்த டென்மார்க் அதிகாரிகள், மிஷனரிகள் தமது குடியிருப்புப் பிரதேசத்துக்கு வருவதை விரும்பவில்லை. மிஷனரிகள் தமது உல்லாச வாழ்வுக்கு எதிராகப் பிரசங்கம் செய்வார்கள் என்பதினால், அவர்கள் சீகன் பால்க்குக்கும் புளூட்சோவுக்கும் உரிய வரவேற்பைக் கொடுக்கவில்லை. இவர்கள் வந்த கப்பலிலிருந்த அனைவரும் கரைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டபோதிலும், இவர்களிருவரும் சிலநாட்கள் கப்பலிலேயே இருக்க வேண்டியதாயிற்று.
பின்னர் தமிழ் மக்களது உதவியுடன் இருவரும் கரைசேர்ந்தனர். எனினும், இவர்கள் கரைக்கு வந்தவுடன் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை கடற்கரையிலேயே நிற்கவேண்டியதாயிருந்தது. சீகன்பால்க்கும் புளூட்சோவும் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை வாசித்தவாறே கடற்கரையில் இருந்தனர். இவர்களுக்கு குடிப்பதற்குக்கூட தண்ணீர் கொடுக்கப்படவில்லை. எனினும், இவர்கள் டென்மார்க் அரசின் கட்டளைப்படி வந்திருந்தமையினால் கடைசியில் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தரங்கம்பாடியிலிருந்த டென்மார்க் அதிகாரிகள் சீகன்பால்க்குக்கும் அவரது நண்பருக்கும் எவ்வித உதவியும் செய்யாதபோதிலும், தேவன் அற்புதமான முறையில் அச்சமயம் அங்கிருந்த ஒரு ஜெர்மன் நாட்டவர் மூலம் இவர்களுக்கு உதவினார். சீகன்பால்க் தரங்கம்பாடியில் ஒரு பாடசாலையை ஆரம்பித்தார். சீகன் பால்க்கும் புளூட்சோவும் பாடசாலைப் பிள்ளைகளுடன் தரையில் உட்கார்ந்து, விரலினால் தமிழ் எழுத்துக்களை மணல்தரையில் எழுதுவதன் மூலமாக தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினர். இவர்களுக்கு முதலியப்பன் என்பவர் தமிழ்மொழியைக் கற்றுக்கொடுத்தார்.
சீகன்பால்க் ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் 8 மணி வரை முதல் நாளில் தான் கற்ற தமிழ்ச் சொற்களை மனப்பாடமாய்ச் சொல்வார். 8 மணி முதல் 1 மணிவரையும், பின்னர் மாலை 3 மணி முதல் 5 மணிவரையும் தமிழ்ச் சுவடிகளைப் படிப்பார். மறுபடியும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை யாராவது ஒருவரைத் தமிழ்ப் புத்தகங்களை வாசிக்கச் சொல்லிவிட்டு அதைக் கவனித்துக் கேட்பார். இவ்விதமாக 8 மாதங்களில் சீகன் பால்க் தமிழில் எழுதவும் பேசவும் கற்றுக் கொண்டார். சீகன்பால்க் தமிழ் நாட்டில் இருந்த காலத்தில் மொத்தம் 119 தமிழ் நூல்களைக் கற்றுள்ளார். இப்புத்தகங்கள் மூலமாக மட்டுமல்ல, தமிழ் மக்களுடன் பேசுவதன் மூல மாகவும் தமிழைத் தன்னுடைய சொந்த மொழிபோல் அறிந்திருந்தார்.
சீகன்பால்க் ஆரம்பத்தில் ஒரு சில பிரசங்கங்களையும், லூத்தரன் சபையின் உபதேசங்களையும், ஒரு சில துண்டுப்பிரசுரங்களையும் தமிழில் எழுதினார். எனினும், அவரது இலட்சியமாக இருந்தது தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பேயாகும். தரங்கம்பாடியில் போர்த்துக்கேய மொழியைப் பேசும் பலர் அக்காலத்தில் இருந்தமையினால், சீகன்பால்க்கோடு வந்த அவரது நண்பர் புளூட்சோ போர்த்துக்கேய மொழியைப் படிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியமையினால், சீகன்பால்க் தனித்தே மொழி பெயர்ப்பு வேலைகளைச் செய்ய வேண்டியதாயிருந்தது. சீகன்பால்க் இப்பெரிய பணியை ஆரம்பிப்பதற்கு முன்பு ஊக்கமாய் ஜெபித்து, உற்சாகத்தையும் தேவவழி நடத்துதலையும் பெற்று, 1708ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பு வேலைகள் 1711 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பூர்த்தியடைந்தன.
சீகன்பால்க்கின் மொழிபெயர்ப்பு வேலைகளைப் பற்றி கேள்விப்பட்ட இங்கிலாந்திலிருந்த கிறிஸ்து மார்க்க கல்வி அபிவிருத்திச் சங்கம், ஒரு அச்சியந்திரத்தை அவருக்குப் பரிசாக அனுப்பியது. 1713ஆம் ஆண்டு, சீகன்பால்க் தனது புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பை அச்சிடும் பணிகளை ஆரம்பித்தார்.
(தொடரும்)
வாசகர்கள் பேசுகிறார்கள்
(மே-ஜுன் 2016)
1. Greetings to you in the name of our Lord and Saviour Jesus Christ. We used to study the Back to the Bible book in Tamil Anuthinamum Christhuvudan in our family prayer. I used to follow the one year Bible schedule in the last page of your book regularly. My name is Jerushah praisy Marvel, studying in 10th std by the grace of God. I have completed the Holy Bible in the year 2015. Thank you for your guidance and motivation.
Sis.Jersushah, Chennai.
2. கர்த்தருடைய பெரிதான கிருபையினால் நான் 2015 ஆம் வருட அனுதினமும் கிறிஸ்துவுடன் அட்டவணைப்படி வேதாகமம் முழுவதையும் வாசித்து முடிக்க கர்த்தர் கிருபை செய்தார். இங்ஙனம் எங்களை ஊக்குவிக்கிறதற்காக உங்களுக்கு நன்றி. மேலும் அனுதினமும் உள்ள தியானங்கள் எனக்கு மிகவும் புத்துணர்வைத் தருகிறதாக இருக்கிறது. உங்கள் ஊழியத்தை மேன்மேலும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!
Mrs.Ramini Livin, Nagercoil.