ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 28 செவ்வாய்

“..அவர் வருகையில் அவருக்குமுன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்” (1யோவா.2:28) என்ற எச்சரிப்பின்படியே தொடர்ந்து கர்த்தரில் நிலைத்திருந்து அவரது வருகைக்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் காணப்பட நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.

நித்தியத்திற்குரியவர்கள்

தியானம்: பிப்ரவரி 28 செவ்வாய்; வேத வாசிப்பு: 2கொரிந்தியர் 5:1-9

“…நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2கொரி 5:9).

தேவன் மனிதனைப் படைத்தபோது, தம்மைப்போல பரிசுத்த மானவனாகவே அவனைப் படைத்தார். அவனுடைய சரீரம் பரிசுத்தமாகவே இருந்தது. ஆனால், அவன் பாவத்தில் விழுந்தபோது மனுக்குலமே மாசடைந்தது; மனிதனின் பரிசுத்த சரீரமும் மாசடைந்தது. நாம் தேவ மகிமையை முற்றிலுமாக இழந்தோம். கர்த்தருக்குள் நாம் கொண்டிருந்த சுதந்திரமும் மாசடைந்தது. இதன் பலனாக வாழ்வில் நம்பிக்கை இல்லாமற்போனது. இனி என்னவாகும் என்ற அங்கலாய்ப்பு உண்டானது. தேவபிரசன்னம் விலகியது. தேவனோடு கொண்டிருந்த உறவு உடைந்தது. அதற்காக நல்ல தேவன் நம்மைப் பாவத்திற்கென்றே விட்டுவிடவில்லை. தாமே நம்மைத் தேடி வந்தார். நம்மை மீட்பதற்காகவே கிறிஸ்து தமது ஜீவனைக் கொடுத்தார். இதை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். ஆகவே இப்போது நமக்கொரு நம்பிக்கையுண்டு. இந்தப் பாவ சரீரம் இந்த மண்ணோடு மண்ணாக அற்றுப்போனாலும், நமக்கொரு புதிய சரீரம் உண்டு; புதிய வாழ்வு உண்டு என்பதை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

பவுல் சாவிற்குப் பயப்படவில்லை. இந்த சரீரத்தைப் பூமிக்குரிய கூடாரம் என்றும், நமக்குக் கிடைக்கவிருக்கும் உயிர்த்தெழுதலின் புதிய சரீரத்தை, தேவனால் கட்டப்பட்ட வீடு என்றும், நமது நித்திய குடியிருப்பு என்றும் திடமாக எழுதுகிறார். இந்த சரீரம் நமது பாடுகளுக்குக் காரணமானாலும், நமது மரணத்தின்பின் நமக்கு ஒரு நித்திய சரீரமுண்டு என்றும், நித்திய வாழ்வுக்கு அது தகுதியானது என்றும் நமக்குத் திடமளிக்கிறார். இந்த உறுதியை நமக்கு அளிப்பவர் பரிசுத்த ஆவியானவர். ஆனாலும் நாம் இதுவரை கண்டிராத ஒரு புதிய காரியத்தைக் காணும் அங்கலாய்ப்பும், நமக்கு அருமையானவர்களை இழந்துபோன தவிப்பும் நமக்குள் உண்டாயிருக்கலாம். என்றாலும், பவுல் நமக்குக் கற்றுத்தந்த அந்த நம்பிக்கை நமக்குள் ஒரு உறுதியை உருவாக்குகிறது.

நாம் உண்மையாகவே கிறிஸ்துவை, அவருடைய மரணம் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறோமா? அப்படியானால் மரணம் என்பது நமது நித்திய வாழ்வுக்குமுன் வாசிக்கும் ஒரு ஆயத்த இசையைப் போன்றதாகவே இருக்கும். ஒரு இரகசியம் தெரியுமா? நமக்குள் நித்திய ராஜ்யமும் அதற்குரிய வாஞ்சையும் வைக்கப்பட்டிருக்கிறது. அது தேவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரே நம்பிக்கையோடே நாம் வாழலாமே. தேவனுக்கு சேவை செய்யலாமே. நமது சுயவிருப்பங்களை எடுத்துப்போட்டு, மனந்திரும்பி, மாம்ச இச்சைகளை சிலுவையில் அறைந்துபோட்டு, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழலாமே. அப்போது நமது கிரியைகளும் மாற்றமடையும்.

ஜெபம்: நித்திய ஜீவனைத் தருவேன் என வாக்குப்பண்ணினவரே, நாங்கள் இப்பூமிக்குரியவர்கள் அல்ல; தேவனோடு என்றும் வாழ வேண்டியவர்கள் என்ற நினைவோடு உமக்குப் பிரியமாய் வாழ உதவிச்செய்யும். ஆமென்.