ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 31 வியாழன்
என் ஆத்துமாவே, .. தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிற வரை நான் இன்னும் துதிப்பேன் (சங்.42:11) நாம் வேண்டிக்கொண்டதற்கும் நினைத்த தற்கும் அதிகமான நன்மைகளாலே கர்த்தர் இம்மாதம் முழுவதும் நம்மை நிரப்பி வழிநடத்தினார். மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிற அவருக்கே சகல கனத்தையும் மகிமையும் செலுத்துவோம்.
கிறிஸ்துவுக்குள் வேர் கொள்வோம்!
தியானம்: 2022 மார்ச் 31 வியாழன் | வேத வாசிப்பு: கொலோ.2:5-12,1பேது.1:7-9
நீங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபடியே அவருக்குள் வேர்கொண்டு… அவருக்குள் நடந்துகொள்ளுங்கள் (கொலோ.2:6).
தன்னை முற்றுமாக கிறிஸ்துவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்த சவுல், தேவன் தெரிந்துகொண்ட பாத்திரமாக மாற இரு முக்கிய காரியங்கள் அமைந்தன.
1. கிறிஸ்துவுக்குள் வேர் கொண்டார்,
2. கிறிஸ்துவைப்போல கனி கொடுத்தார்.
ஒரு மரம் நல்ல கனியைக் கொடுக்க வேண்டுமானால் அது தன் வேரை மிகவும் ஆழமாக செலுத்தி நீரையும் கனிப் பொருட்களையும் நித்தமும் பெற்றுக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் தடைபடுமாகில் அது பிரயோஜனமற்ற மரமாகவே போய்விடும். பவுலின் வாழ்க்கையில் இவை தடையின்றி கிடைத்தன. கிறிஸ்துவுக்காக கனி கொடுப்பதற்கு கிறிஸ்துவுக்குள் பவுல் விட்டுச்சென்ற வேர் “விசுவாசம்” என்னும் வேராகும். ஒரு மரத்தின் கனியிலிருந்து அதன் வேர் எத்தனை ஆழமாகச் சென்றுள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ளமுடியும்.
பவுலின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், கிறிஸ்துவைக் குறித்த பக்தி வைராக்கியம், கிறிஸ்துவைக் குறித்ததான சாட்சி, அவர் கிறிஸ்துவிலே கொண்டிருந்த விசுவாசத்தின் உறுதியை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இப்படியாக பவுல் வாழ்ந்தபடியால்தான், இறுதியாக, நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் (2 தீமோ.4:7) என்று கூறினார். கிறிஸ்தவ ஓட்டத்தில் அநேகர் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளாமல் தங்கள் ஓட்டத்தை முடிக்காமல்போன சரித்திரங்கள் உண்டு. கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான் (லூக்.13:20,21).
அன்பானவர்களே, உண்மையாகவே பவுலைப்போல கிறிஸ்துவுக்காக வாழ வேண்டுமாகில், முதலாவதாக, நீங்கள் “கிறிஸ்துவுக்குள் விசுவாசம்” என்னும் வேர்கொள்ளவேண்டும். இந்த வேர் உறுதியாக நிலைத்திருக்குமாகில் இவ்வுலகிலே நல்ல போராட்டத்தை நீங்கள் போராடி உங்கள் ஓட்டத்தை வெற்றியோடு ஓடிமுடித்து கிறிஸ்துவோடு நித்திய நித்திய காலமாக நீங்கள் ஜீவிக்கும் பெரிதான சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகவே, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடக்கடவோம்” (எபி.12:1) என்று கூறப்பட்டபடி, இன்றிலிருந்து உங்கள் விசுவாச ஓட்டத்தை ஓட ஆரம்பியுங்கள்.
ஜெபம்: தேவனே! நான் உம்மிலே விசுவாசம் என்னும் வேர் கொண்டு வளர்ந்து என் ஜீவிய ஓட்டத்தை ஓட என்னைக் கரம் தாங்கி வழிநடத்தும். ஆமென்.