அதிகாலை வேளையில்…
(மார்ச்-ஏப்ரல் 2022)
Dr.உட்ரோ குரோல்
வேதபகுதி: யாத்திராகமம் 34:1-35
விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில் (யாத்தி.34:2).
தேவனுடைய சமுகத்தில் அதிகமாகத் தாழ்த்தி தலைகுனியும்; மனிதனே பாவத்தின் முன் தலைநிமிர்ந்து நிற்பான். இந்த உண்மையை பழைய ஏற்பாட்டு பக்தர்களில் மோசே நன்கு அறிந்திருந்தார். இஸ்ரவேலரின் பாவத்துக்கு முன்பாக அவர் நேருக்கு நேர் எதிர்த்து உறுதியுடன் நின்றார். ஒருமுறை மோசே சீனாய் மலையின் மேல் தேவனுடன் உறவாடிக் கொண்டிருக்கையில் இஸ்ரவேலர் பாவத்தில் மூழ்கிவிட்டனர். மலையிலிருந்து கீழே இறங்கிவந்த மோசே, பொன்னால் ஆன கன்றுக்குட்டியையும், மரபை மீறிய இஸ்ரவேலரின் நடவடிக்கையையும் கண்டார். அவரது நேர்மையான கடுங்கோபம் தேவனுடைய சாட்சிப் பலகைகள் இரண்டையும் தரையில் போட்டு உடைத்தது (யாத்.32:19). மக்கள் இந்த பாவத்திற்காகக் கடிந்து கொள்ளப்பட்டனர். 3000 பேர் கொலை செய்யப்பட்டனர். மோசே மீதியுள்ள மக்களுக்காக தேவனிடம் மன்றாடினார். பொன் கன்றுக்குட்டியின் பிரச்சனை முடிந்தது.
ஆனால், இஸ்ரவேலரிடம் இன்னும் அதிகமான பாவங்கள் இருந்தன. உடைத்துப்போடப்பட்ட சாட்சிப் பலகைகளை மீண்டுமாக சரிசெய்ய வேண்டும். எனவே தேவன் மோசேயை மீண்டுமாக சீனாய் மலைக்கு ஏறிவரக் கட்டளையிட்டார். விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில் (யாத்.34:2). “ஆயத்தமாகி” , “ஏறி வா”, “வந்து நில்” ஆகிய மூன்று சொற்களையும் கவனியுங்கள். ஊழியத்திற்கு அவசியமான இம்மூன்று முக்கியமான காரியங்களை மோசே புதுப்பித்துக்கொண்டார். தேவனு டைய ஊழியத்துக்கான அழைப்பில் இம் மூன்றும் அத்தியாவசியமானவை.
1. ஆயத்தமாகுதல்:
ஆயத்தமாகவும், விருப்பமுடையவனாகவும், உபயோகிக்கப்படத்தக்க அர்ப்பணிக்கும் மனிதனையே தேவன் உபயோகிக்கிறார். நாம் ஆயத்தமாக இல்லையெனில் தேவன் நம்மையல்லாது வேறோருவரை உபயோகிப்பார். நமக்கு வரவேண்டிய ஆசீர்வாதங்களை நாம் இழந்துபோக நேரிடும். அப்.பவுல் ஊழியம் செய்ய எல்லா வேளைகளிலும் ஆயத்தமாக இருந்த ஓர் மனிதர். “ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்” (ரோமர் 1:15) பவுலுக்கு பிரசங்கம் பண்ணுவது மிக விருப்பமானதொன்று. “எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன்” (அப்.21:13). அநேக ஆண்டுகள் தனது ஆண்டவருக்காக உழைத்த பவுல், “நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப்பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோ.4:6-7) என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். அப். பவுல் நற்செய்தியை அறிவிக்க ஆயத்தமாகவும், அதனால் பாடுபடவும், ஊழியத்தில் மரிக்கவும் ஆயத்தமாக இருந்தார்.
2. நெருங்கிச்சேருதல்:
தேவனுடைய ஊழியத்தைச் செய்ய முதலாவது அவரிடத்தில் வந்து அவர் தரும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தேவன் மோசேயை அழைத்தது இரட்சிப்பைத் தருவதற்கல்ல; அவருடன் ஐக்கியம் கொள்வதற்காகவே. இரட்சிப்புக்கு அழைத்த ஆண்டவர் பின்னர் “வாருங்கள், போஜனம் பண்ணுங்கள்” (யோவா. 21:12) என்று அழைக்கிறார். மோசேயைப்போல நம்மையும் ஆண்டவருடன் ஐக்கியம் கொள்ள அவர் அழைக்கிறார். “ஜெபத்தில் நாம் அவருடன் ஐக்கியம் கொள்ளுகிறோம்.” இரட்சிப்பைப் போலவே, ஜெபமும் ஐக்கியமும் தேவனுடைய ஊழியத்துக்கு முந்தியது (எபே. 6:18-20).
3. அர்ப்பணித்தல்:
தேவனுடைய ஊழிம் செய்யவும் பாவத்தை எதிர்கொள்ளவும் நாம் நம்மை தேவனிடத்தில் அர்ப்பணிக்கவேண்டும். அப்.பவுல் ரோம விசுவாசிகளை “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார் (ரோமர் 12:1). தேவனுக்கு ஊழியஞ் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். அதேவேளையில் உபயோகமான ஊழியத்துக்கு தேவனிடம் நெருங்கிவர ஜெபிக்கவேண்டும். நம்முடைய சொல், செயல், சிந்தை எல்லாவற்றையும் மோசேயைப்போல தேவனுக்கு அர்ப்பணிக்கவேண்டும். அப்பொழுது நாம் பாவத்தின் பிரசன்னத்திலிருந்து விலகி உறுதியாய் வெற்றி பெற்று வாழமுடியும்.
தேவனுடைய அழைப்பைப் பெற்ற மோசே, “முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பல கைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான்” (யாத்.34:4). அதிகாலமே மோசே ஊழியத்துக்கு ஆயத்தமானார். இஸ்ரவேலரின் பாளையத்தில் இன்னும் அநேக பாவங்கள் இருந்தன. அவற்றை எதிர்கொள்ள மோசே பாவத்துக்கு எதிராக உறுதியாய் நிற்க வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு விசுவாசியும் மோசேயைப் போலவே அதிகாலையில் எழுந்து, ஜெபத்தில் தேவனிடம் நெருங்கிவந்து அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அன்றைய நாள் நல்லமுறையில் அமையும்.
அதிகாலைப் பாடல்:
நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை