ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 31 வெள்ளி

கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசா.41:17) கைவிடாத தேவன் இந்த மாதத்தையும் தம்முடைய தயையினால் காணச்செய்து கடந்துவரச் செய்தார். அவருக்கே என்றென் றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை கனம் ஸ்தோத்திரங்களைச் செலுத்தி அவரை உயர்த்தி ஆராதிப்போம்.

நாம் மிருகங்களல்ல!

தியானம்: 2025 அக்டோபர் 31 வெள்ளி | வேதவாசிப்பு: பிரசங்கி 3:18-22

YouTube video

உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? (பிரசங்கி 3:21)

“மிருகத்தைச் சுடுவதுபோல மனிதனையும் சுட்டுப்போடுகிறார்களே” என்று மனம் பேதலிக்கும்போது, “மனிதனும் சரி, மிருகமும் சரி, இவை எல்லாமே ஒரு இடத்துக்குத்தானே போகின்றன” என சில சமயம் நாம் அலுத்துக்கொள்வதுண்டு. அது உண்மைதான்! மனுஷனோ மிருகமோ சாகும்போது சரீரம் மண்ணில்தானே புதைக்கப்படுகிறது. இப்படி ஒரு மனுஷன் நினைப்பானானால், தான் நிலையற்றவன் என்ற உணர்வைத்தான் அவன் வெளிப்படுத்துவான். இவ்வுலகை பொறுத்தவரையிலும் நாம் நிலையற்றவர்கள்தான். ஆனால், இவ்வுலகில் வாழுவதற்கென்று தேவன் மனுஷனைப் படைக்கவில்லை என்பதை மறந்துபோவதால்தான் துன்பங்கள் மத்தியில் கசப்புணர்வுக்குள்ளாகிறோம். சாலொமோனுக்கும் அன்று அதுதான் நடந்தது. தான் இவ்வுலகை அனுபவிக்கப் பிறந்தவர்போல வாழ்ந்தார். ஆனால், பின்னர் உண்மையைக் கண்டு கொண்டார்.

“குரங்கிலிருந்து மனிதன் வந்தான்” என விஞ்ஞான பாடம் படித்தபோது, அது அந்த சிறுவயதில், மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், மனிதனையும் மிருகத்தையும் பலவிதங்களில் ஒப்பிட்டுப் பேசக் கேட்கும்போது, தேவனுடைய படைப்பு, அதாவது தேவனைக் குற்றப்படுத்தப்படுவதை உணரக் கூடியதாக இருக்கிறது. சுவாசிக்கும் எல்லா உயிர்களும், கரப்பான் பூச்சிகூட தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எவ்வளவாய் பாடுபடுகிறது. ஆம், எல்லா ஜீவன்களுக்கும் உயிர்களுக்கும் வாழவேண்டும் என்ற உணர்வு இருக்கிறது. ஆனால், நமக்கு, தேவன் நித்தியத்தை நமது இருதயத்திலே வைத்திருப்பதால், வெறும் வாழ்வு அல்ல; நித்தியத்திலே தேவனோடு வாழவேண்டும் என்ற வாஞ்சையே நம்மை நிரப்பியுள்ளது. ஆனால், அந்த நித்திய வாழ்வுக்காக நமக்கொரு நியாயத்தீர்ப்பு உண்டு. இவை எதுவும் மிருகங்களுக்கு இல்லையே!

தேவபிள்ளையே, “நாம் மேன்மையான படைப்புகள்” என்பதை அடிக்கடி மறந்துபோகிறோம். தேவனோடு உறவுகொள்ளும் ஆவியும், அதைத் தாங்கி நிற்கும் ஆத்துமாவும், அவை வாழுகின்ற சரீரமும் நமக்குண்டு. நம்மைப் படைத்தவரோடு நாம் உறவு கொள்கிறோம். ஆனால், இந்த உறவு மிருகங்களுக்கு இல்லை. நாம் சாகும்போது நமக்கு ஆவியைத் தந்த தேவனிடமே நமது ஆவி செல்கின்றது. ஆனால், மற்ற ஜீவராசிகளுக்கு இந்தப் பாக்கியம் இல்லை. ஆனாலும், ஒரு காரியம். தேவனோடு உறவுகொள்ளும் பாக்கியம் பெற்ற நாம், அதை உதாசீனப்படுத்தி மிருகங்கள்போல வாழ எத்தனிக்கக்கூடாது. பின்னர் நியாயத்தீர்ப்பில் நாம்தான் வெட்கப்பட வேண்டிவரும். தேவன் தந்த ஈவாகிய இந்த வாழ்வை தேவனுக்கென்று வாழ அர்ப்பணிப்போமா!

ஜெபம்: “அன்பின் கர்த்தாவே, உம்மோடு நித்தியமாய் வாழவென்று இந்த வாழ்வை ஈவாகத் தந்திருப்பதால், அதை உமக்கென்றே வாழ கிருபை புரியும். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: 2025 அக்டோபர் 30 வியாழன்

கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு (சங்.130:7) இந்த நாளில் தேவைகள் சந்திக்கப்படாததாலும், எதிர்பார்த்த காரியங்கள் கைகூடி வராதபடியாலும், பலவிதமான மனச்சோர்வுகளோடு இருக்கும் ஒவ்வொரு குடும்பங்களையும் தேற்றரவாளனாகிய பரிசுத்தஆவியானவர் அவர்களது விசுவாசத்தை வர்த்திக்கச்செய்து, பெலப்படுத்தி வழிநடத்த ஜெபிப்போம்.

நீதி சாகாது!

தியானம்: 2025 அக்டோபர் 30 வியாழன் | வேதவாசிப்பு: பிர.3:15-17; ரோமர் 2:5-11

YouTube video

“சகல எண்ணங்களையும், சகல செய்கைகளையும் நியாயந் தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால்…” (பிரசங்கி 3:17)

நமது கண்கள் காணவே, “அநியாயம் செய்தவன் தப்பிப் பிழைக்கிறான். கொள்ளைக்காரன் சமூகத்திலே பெரியவனாய் வாழுகிறான். கொலைக்காரன் சாட்சிகளின் சாதுரியத்தால் விடுதலையாகிறான். அதேசமயம் அப்பாவி சட்டத்தின்முன் குற்றவாளியாகிறான். இருட்டிலே கொலை செய்யப்படுகிறான். மொத்தத்தில் நீதி விளங்கவேண்டிய இடத்திலே அநீதி துள்ளிக் குதிக்கிறது.” இன்று நாம் எழுப்பும் இதே கேள்விகளைத்தான் அன்று சாலொமோனும் எழுப்பினார். தேவபிள்ளையே, உங்கள் மனதிலும் இன்று இப்படியான கேள்விகள் எழும்பிக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு மிகவும் அருமையானவர்கள் அநீதியின் கைகளில் அகப்பட்டு, சட்டத்தாலேயே தண்டிக்கப்படலாம். இதனால் நீங்கள் வெறுப்படைந்து, நீதி செத்துவிட்டது என்று புலம்பலாம்.

ஆம், தேவன் ஆளுகைசெய்யும் இவ்வுலகிலே, இத்தனை அநீதிகள் நடக்கலாமா? அநீதியும் அக்கிரமமும் பெருகியிருக்கும் இக்காலத்திலே தேவனுடைய திட்டங்களும் காலங்களும் சரியாக நேர்த்தியாக இருக்கமுடியுமா? முடியும். ஒரு காரியத்தை நாம் சிந்திக்கவேண்டும். அநியாயமும் அக்கிரமமும் தேவனுடைய அநாதி திட்டத்தின் பரிபூரணத்தை ஒருவேளை மறைத்து வைத்திருக்கலாம்; ஆனால், அதன் நிறைவேறுதலை எதனாலும் தடுக்கவேமுடியாது. தேவனுடைய நாள் ஒன்று உண்டு. அன்று தேவநீதி விளங்கும். அதை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. “தன் சுயவழிதான் நீதி” என்றிருக்கும் சன்மார்க்கனும், ”தேவனே இல்லை” என்கின்ற துன்மார்க்கனும் அழிந்துபோவதை அந்த நாளில் யாராலும் தடுக்கமுடியாது.

தேவன் நம்மீது வைத்திருக்கும் ஒரே நோக்கம் நாம் நித்தியத்தில் அவரோடே வாழவேண்டும் என்பதுதான். அந்த நித்தியத்தின் வாழ்வை இங்கேயே வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் முடிவு உண்டு. தேவனுடைய காலநேரங்கள் நமக்குத் தெரியாததினாலே நாம் எதையும் நியாயந் தீர்க்கக்கூடாது. “ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும் தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்” (பிரச.12:14). சாலொமோன் 3000 வருடங்களுக்கு முன்னரே இதைக் கண்டறிந்துகொண்டாரென்றால், இன்று நாம் ஏன் தைரியத்தை இழக்கவேண்டும்? தேவன் பட்சபாதமின்றி யாவரையும் நியாயத்திலே நிறுத்துவார்.

ஆகையால் தேவபிள்ளையே, அநியாயங்கள் மத்தியிலும் நியாயாதிபதியான தேவனையே பற்றிக்கொண்டு, அவருடைய நாளுக்காகக் காத்திருப்பதோடு, பொறுமையோடு நித்தியத்தின் வெளிச்சத்திலே வாழ நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

ஜெபம்: “அன்பின் பிதாவே, நீர் நீதியுள்ள தேவன். உமது நீதி விளங்கும் நாளுக்காகக் காத்திருக்கும் நான், இன்று உம்மையே பற்றி வாழ என்னை நீரே வழிநடத்தும். ஆமென்.”