வாக்குத்தத்தம்: 2025 நவம்பர் 1 சனி
தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் (எபேசியர் 5:21).
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர். (செப்.3:17)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 51,52 | மாலை: தீத்து 2
தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள் (எபேசியர் 5:21).
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர். (செப்.3:17)
வேதவாசிப்பு: காலை: எரேமியா 51,52 | மாலை: தீத்து 2
என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார் (சங். 25:15).
அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் பெருகவும், இளம் தலைமுறையினர் தங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் ஜெபிப்போம்.
தியானம்: 2025 நவம்பர் 1 சனி | வேதவாசிப்பு: எபிரெயர் 4:6-13

…ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு,.. (எபிரெயர் 4:11).
நவம்பர் மாதத்திற்குள் பிரவேசிக்கும்படியாக கர்த்தர் கிருபை செய்தபடியால் தேவனை ஸ்தோத்திரிப்போம். உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார் (செப்.3:17). இம்மாதத்தில் தேவனுடைய அனுக்கிரகமும் ஆசீர்வாதங்களும் ஒவ்வொரு குடும்பங்களிலும் நிறைவாய் காணப்பட்டு கர்த்தரால் வழிநடத்தப்படுவதற்கு நாங்களும் ஜெபிக்கிறோம்.
பத்துமாதங்களை சீக்கிரமாகவே கடந்து ஒரு புதிய மாதத்திற்குள் வந்து விட்டோம். தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவில் எவ்வளவுக்கு வளர்ந்திருக்கிறோம்? தேவவார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் எவ்வளவுக்கு ஜாக்கிரதையாக இருந்திருக்கிறோம்? இவற்றை சிந்திப்பது நல்லது. தேவனுடனான உறவின் வளர்ச்சிக்கு நமது கீழ்ப்படிதல்தான் அளவுகோல் என்பதை அன்றைய வட ராஜ்யமான இஸ்ரவேல் மறந்தது. இஸ்ரவேலை ஆண்ட சில ராஜாக்களின் வாழ்க்கையை கவனித்து, அதன் அடிப்படையில் நம்மை ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம். சாலொமோனின் பாவத்தால் அவருடைய மகனின் ஆட்சிக்காலத்தில் ராஜ்யபாரம் இரண்டாகப் பிளந்தது. வடராஜ்யத்தின் முதல் ராஜாவாக ரெகொபெயாம் ஆண்டான். அவனது ராஜ்யபாரம் அத்துடன் முடிந்தது. அவன் பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளைச் செய்வித்து, இவைகளைப் பணிந்துகொள்ளும்படி ஜனங்களையும் வற்புறுத்தி, தன் மனதுக்கு ஏற்றபடி பண்டிகைகளையும் ஏற்படுத்தி, பலியிட்டான். மக்களைத் தேவனைவிட்டு வழிவிலகச் செய்த அவனுடைய இந்தப் பாவம் இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்கள் வாழ்விலும் தொடர்ந்தது. தனது மனைவி யேசபேலின் எண்ணத்துக்கு மதிப்புக்கொடுத்து பாகாலுக்கு வணக்கம் செய்த ஆகாப் வரையும் தொடர்ந்த இந்தப் பாவம், கி.மு.732ல் ஒசெயா இஸ்ரவேலின்மீது ராஜாவாகும் வரைக்கும் தொடர்ந்தது. எலியா, எலிசா உட்பட பல தீர்க்கதரிசிகளைக் கர்த்தர் எழுப்பி எச்சரித்திருந்தார். ஆனாலும், “அவர்கள் செவி கொடாமல்… தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டு விட்டு, பாகாலைச் சேவித்தார்கள்.” ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார் (2இராஜா. 17:14-18). வடராஜ்யம் அசீரியாவினால் சிறைப்பிடிக்கப்பட்டு, கி.மு.722ல் முடிவுக்கு வந்தது.
“அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாகவும் வெளியரங்கமாகவுமிருக்கிறது” (எபி.4:13). நம்மால் எதனையும் கர்த்தருக்கு மறைக்கமுடியாது என்று தெரிந்திருந்தும் நாம் ஏன் அடிக்கடி அவரைத் துக்கப்படுத்துகிறோம்? தமது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படிக்கு கர்த்தர் புறவினத்தாரிடமா கேட்டார்? கீழ்ப்படிதல் ஒன்றைத்தவிர கர்த்தர் வேறே எதை நம்மிடம் எதிர் பார்க்கிறார்? நமது செயல்கள், சிந்தனைகள், கற்பனைகள் யாவையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் அவருக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்கள். இஸ்ரவேலை தமது முகத்துக்கு முன்னின்று தள்ளியவர் இன்று நமக்கு அருளியிருக்கும் கிருபையை நமக்குச் சாதகமாக்கி விடாமல், நம்மை ஆராய்ந்து அவரிடம் ஒப்புவிப்போமாக.
ஜெபம்: கர்த்தாவே, நான்; அடிக்கடி உம்மைவிட்டு விலகாதபடி கீழ்ப்படிந்து நடக்க என்னை அர்ப்பணிக்கிறேன். இப்புதிய மாதத்தை ஆசீர்வதித்துத் தாரும். ஆமென்.
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திக்க தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். ஒவ்வொரு நாளின் தியானங்களும் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் தாங்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினாலே நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
அக்டோபர் மாதம் மதுரை திருநகர் சி.எஸ்.ஐ ஆலயத்திலும், ஏழாயிரம் பண்ணை சி.எஸ்.ஐ ஆலயத்திலும் சத்தியவசன முன்னேற்றப்பணிகளை செய்ய கர்த்தர் கிருபை செய்தார். சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அனுதினமும் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் போதிக்க தேவன் கிருபை செய்து வருகிறார். இவ்வூழியங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் சத்தியத்தை அறியவும் ஜீவனுள்ள தேவனண்டைக்கு வழிநடத்தப்படவும் வேண்டுதல் செய்கிறோம். இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட தாங்கள் இணைக்கரம் கொடுத்து உதவ அழைக்கிறோம்.
இத்தியானபுத்தகத்தில் வெளியாகிவரும் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை தவறாது வாசித்துமுடிக்கிறவர்கள் வழக்கம்போல் பெயர்களை ஜனவரி 31ஆம் தேதிக்குள் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். அவர்கள் பெயர்களை அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் பிரசுரிப்போம்.
நவம்பர் மாதத்தில் இராஜாக்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்களையும், டிசம்பர் மாதத்தில் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். தியானங்கள் தங்களது ஆவிக்குரிய வாழ்வுக்கு பயனுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம். தியானங்களை எழுதும் சகோதர. சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.
ஆ.ஜான் துரை
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன் (யோபு 42:3).
யோபுவின் புத்தகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. அவைகள் தேவன், யோபு மற்றும் யோபுவின் நண்பகளால் பேசப்பட்டவை. யோபு ஒரு முன்மாதிரியான விசுவாசி. ஆனால், “யோபுவை நீர் ஆசீர்வதித்ததால் மாத்திரமே அவர் உம்மை வணங்குகிறான் என்று சாத்தான் தேவனோடு வாதாடினான். அவனது செல்வத்தையும், உடல்நலம், பத்து குழந்தைகளையும் எடுத்துவிட சாத்தானுக்கு தேவன் அனுமதி கொடுத்தார். யோபு நகரத்துக்கு வெளியே சாம்பலில் அமர்ந்து துக்கித்துக்கொண்டிருந்தான். அவனது துயர நிலையைக் கேள்விப்பட்ட அவனது நண்பர்கள் அவனைக் காணவந்தனர். பல நாட்களாக அவர்கள் வாதிட்டு கடவுளின் செயல்களை விளக்கமுயன்றனர். ஆனாலும் அவர்களால் சரியான முடிவுக்கு வர முடியவில்லை. இப்புத்தகத்தில் “மூன்று மெளனங்கள்” காணப்படுகின்றன. அவைகளை தியானிப்பது நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
யோபுவின் நண்பர்கள் நெடுந்தூரம் பயணம் செய்து யோபுவை சந்திக்க வந்தனர். யோபுவின் நிலையைக் கண்டு துயரப்பட்டு சத்தமாய் அழவும், தங்கள் ஆடைகளைக் கிழிக்கவும் தங்கள் தலைகள் மேல் புழுதியை தூற்றிக் கொண்டும், ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் ஒரு வாரம் அவனுடன் அமைதியாக இருந்தனர். “அவனது துக்கம் மிகப்பெரியது என்று அவர்கள் கண்டார்கள்”; (2:13). அவரது துயரத்தைப் போக்கும் வழியறியாமல் அமைதியாய் இருந்தனர். அவர்களிடம் தேற்றும் வார்த்தைகள் இல்லை. ஆறுதலளிக்கும் வார்த்தைகளைவிட, சில நேரங்களில் மெளனமொழி தெளிவாகவும் சிறப்பாகவும் அமைந்து நல்ல தாக்கத்தை உண்டாக்கும்.
நான்கு நண்பர்களின் அறிவுரைகளை நீங்கள் படிக்கும்பொழுது கர்த்தர் ஏன் தனது தெய்வீக அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களைக் கண்டிக்கவில்லை என ஆச்சரியப்படலாம். ஆனால் தேவன் அமைதியாக இருந்தார். யோபு புத்தகத்தில் 329 வினாக்கள் எழுப்பப்பட்டன. ஒவ்வொருவரும் தமது கருத்துகளே சரி என எண்ணினர். அவை அனைத்துக்கும் விடைகள் இல்லை. ஆனால் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். சோப்பார் எழுப்பிய கேள்விகள் (11:7,8) அவர்களை உலுக்கியது. தேவனுடைய ஆழமான காரியங்களை உங்களால் ஆராயமுடியுமா? சர்வவல்லவரின் பிரகாரங்களை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? அவை வானத்தைவிட உயர்ந்தவை, உங்களால் என்ன செய்யமுடியும்? அவை பாதாளத்திலும் ஆழமானவை. உங்களால் எதுவும் அறியமுடியாது. நமது அறிவு குறைவுள்ளது” (1 கொரி. 13:9) என்று அப். பவுலும் தெளிவாகக் கூறியுள்ளார். பொருத்துக படப்புதிரில் (Zig Zag Puzzle) நமக்கு அனைத்துப் பகுதிகளும் புரியவில்லை என்றால் நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும் புதிரை விடுவிக்கமுடியாது. இவ்விவாதத்தின்பொழுது தேவனின் மெளனம், உண்மையை மறைத்து சொற்களைப் பயன்படுத்தி செயலைப் புறக்கணிக்க மனிதர்களை அனுமதித்தது. வாழ்க்கையின் பல புத்திசாலித்தனமான விவாதங்கள் செயல்களுக்கு மாற்றாக அமையாது. அரசியல்வாதிகளும் தலைவர்களும் தங்கள் வார்த்தையினால் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாது. அவை பிரச்சனைகளை மேலும் மோசமாக்குகின்றன. ‘சொற்கள் யதார்த்தத்தின் மிகப்பெரிய எதிரிகள்’ என்று நாவலாசிரியர் ஜோசப் கான்ராட் என்பவர் எழுதியுள்ளார்.
தேவனுடைய சொற்பொழிவிலிருந்து யோபு தன்னைப் பற்றி அதிகம் கற்றுக்கொண்டார். “அறிவற்ற சொற்களால் தேவனுடைய ஆலோசனையை இருட்டடிப்பு செய்தார்; (38:2). மேலும் தேவன் தன்னைப் பாதுகாக்க அனுமதி கேட்டார். ஆனால் தேவன் தோன்றியபோது, யோபு அமைதியானார், கையால் வாயைப் பொத்தினார் (40:3-5). இறுதியில் யோபு தனது அறியாமையால் பேசியதை ஒப்புக்கொண்டார். தேவனைப் பார்த்தவுடன் அவர் செய்யக்கூடிய ஒரே விஷயம் மனந்திரும்புவதுதான் . தேவனும் யோபுவை நியாயப்படுத்தினர். தாவீது அரசரும் இதுபோன்ற ஒரு விழிப்புணர்வை அனுபவித்தார் (சங்.131).
இன்றைய உலகில் ஆரவாரங்களும் சத்தங்களும் நிறைந்துள்ளன. இறைவனின் அமைதியான குரலைக் கேட்க விரும்பினால், நாம் மெளன ஊழியத்திற்கு நேரம் ஒதுக்கவேண்டும். நமது வார்த்தைகளை நாம் கவனிப்பது போல நமது மெளனங்களையும் கவனிக்கவேண்டும். இல்லையெனில் நம்மையும் தேவனையும் நாம் அறியமுடியாது.
இதோ கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று: பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லிய சத்தம் உண்டாயிற்று (1இராஜா.19:11-12).
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை
வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உண்டு. அவற்றில் 39 புத்தகங்கள் பழைய ஏற்பாடு என்றும் 27 புத்தகங்கள் புதிய ஏற்பாடு என்றும் அழைக்கப்படும், பழைய ஏற்பாட்டில் 929 அதிகாரங்களும், புதிய ஏற்பாட்டில் 260 அதிகாரங்களும் உள்ளன.
பழைய ஏற்பாட்டில் எப்போதும் 39 புத்தகங்கள் இருந்ததில்லை. யூத ஜெப ஆலயங்களில் பயன்படுத்தப்பட்ட வேதாக மங்களில் 24புத்தகங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அவற்றில் 39 புத்தகங்களிலும் இருந்த பொருள் இருந்தது.
இந்த எபிரெய வேதாகமத்தில் இருந்த 24 புத்தகங்களும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன அவை;
இவை ஐந்தாகமங்கள் என்று அழைக்கப்படுகிறது ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவை.
ஏசாயா, எரேமியா போன்ற பெரிய தீர்க்கதரிசிகள் முதல் மல்கியா வரை உள்ள சின்ன தீர்க்கதரிசிகள் வரை எழுதிய புத்தகங்கள்.
இதில் வரலாற்று நூல்களும் (இராஜாக்கள், நாளாகமம், போன்றவை) செய்யுள் நூல்களும் (சங்கீதம், நீதிமொழிகள், யோபு, ரூத், பிரசங்கி, எஸ்தர் போன்றவை) அடங்கும்.
பல வேத அறிஞர்கள் யோபு புஸ்தகம்தான் முதலில் எழுதப்பட்டது என்று நம்புகிறார்கள், கி.மு 2150 இல் எழுதப்பட்டிருக்கலாம். அதற்கு அடுத்தபடியாக ஐந்தாகமங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். தீர்ககதரிசன நூல்கள் கி.மு 700, 600 இல் தொடங்கி கி.மு 400வரை எழுதப்பட்டிருக்கலாம். கடைசியில் எழுதப்பட்ட எஸ்றா, நெகேமியா, மல்கியா போன்றவை பழைய ஏற்பாட்டு நூல்கள் 1700 ஆண்டு காலத்தில் எழுதப்பட்டவை.
புதியஏற்பாட்டின் நூல்கள் குறுகிய காலத்தில் எழுதப்பட்டவை. கி.பி 50 முதல் கி.பி 100 ஆண்டுக்குள் எழுதி முடிக்கப்பட்டவை. பலர் யாக்கோபு எழுதிய நிருபம் முதன்முதலில் கி.பி 49ல் எழுதப்பட்டது என்று நம்புகிறார்கள். இதைத் தொடர்ந்து தெசலோனிக்கேயருக்கு எழுதப்பட்ட நிருபங்களும் பவுலின் ஆரம்ப நிருபங்களும் எழுதப்பட்டன. அதன்பின் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டன. (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்). கடைசியாக யோவான் எழுதிய மூன்று நிருபங்களும் வெளிப்படுத்தின விசேஷங்களும் எழுதப்பட்டன.
அநேக புதிய ஏற்பாட்டு நூல்களில் அவற்றை எழுதியவர்களின் பெயர்கள் உள்ளன. யாக்கோபு, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், பேதுரு, யூதா என்பன, அப்போஸ்தலனாகிய பவுல், எழுதிய நிருபங்கள் அவை எந்த நகரத்தாருக்கு எழுதப்பட்டதோ, அந்த நகரத்தின் பெயரைத் தாங்கி உள்ளன. ரோமர், கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், சில புத்தகங்கள் பவுலினால் தனிப்பட்ட நபர்களுக்கு எழுதப்பட்டன. அவை தீமோத்தேயு, தீத்து, பிலேமோன்,
பழைய ஏற்பாட்டுக் காலத்திலும், புதிய ஏற்பாட்டு காலத்திலும் வேதாகமத்தில் சேர்க்கப்பட்டிருக்கிற நூல்கள் தவிர இன்னும் ஏராளமான நூல்கள் எழுதப்பட்டிருந்தன. மக்கபேயர்1, மக்கபேயர்2, தோபித், பாருக், என்ற பெயர்களில் உள்ள புத்தகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பேதுருவின் நடபடிகள், பவுலின் நடபடிகள் பற்றித் தெரியுமா? நீங்கள் எஸ்தரின் சரித்திரம் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் யூடித் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எஸ்றாவின் புத்தகம் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் 1, 2 – எஸ்திராவின் புஸ்தகங்கள் பற்றி கேள்விப்ட்டிருக்கிறீர்களா?
பிரசங்கி என்ற புத்தகம் தெரியும். அதுபோல இன்னொரு புத்தகம் உள்ளது தெரியுமா? 12 வயதில் இயேசு தேவாலயத்தில் ஞானிகளின் கேள்விகளுக்கு விடை கூறியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயேசு களிமண்ணால் சிறுபறவைகள் செய்து அவற்றுக்கு உயிர்கொடுத்து, அவை பறந்து செல்வதைக் கண்டு ரசித்து விளையாடியதைப்பற்றி அறிந்ததுண்டா? இன்னும் இவைபோன்ற பல நூல்களும் பரிசீலனை செய்யப்பட்டு, வேதாகமத்தில் சேர்க்கப்படாத தகுதியற்றவை என முடிவு செய்யப்பட்டது. தள்ளுபடியாகம நூல்கள் என்று இந்த நூல்கள் விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கிப் பணத்தை வீணாக்காதீர்கள். வேதாகமத்தின் எந்த நூலும் இழக்கப்படவில்லை.
எப்படி சில புத்தகங்கள் மாத்திரம் வேதாகமத்தின் பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. எந்த தேர்வு செயல்முறை பயன்படுத்தப்பட்டது? இதற்கான அளவு கோல்கள் எவை? வேண்டும், வேண்டாம் என்று தீர்மானங்கள் செய்தது யார்? இவையனைத்தும் முக்கியமான கேள்விகள்.
நூல்களின் தரத்தை அறிவதற்கு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. புத்தகங்களில் கீழ்க்கண்ட அம்சங்கள் உள்ளனவா? என்று பரிசோதிக்கப்பட்டது.
1. அதிகாரம் உடையதாய் இருக்க வேண்டும்.
2. தெய்வீகமானதாய் இருக்க வேண்டும்.
3. விசுவாசிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும்.
4. சபையில் செயல்படுத்தத்தக்கதாய் இருக்க வேண்டும்.
தெரிந்தெடுக்கப்பட்ட நூல்கள், “CANON” என்று அழைக்கப்பட்டன. இதற்கு அளவுகோல் என்று பொருள். வேதாகமத்தில் உள்ள 66 நூல்களும் “பரிசுத்த நூல்கள்” என்றே அழைக்கப்படும். இராஜாவின் கையில் செங்கோல் இருந்து நீதியாய் அரசாளுவது போல, இந்த நூல்கள் செங்கோல் போலக் கிரியை செய்யும்.
(தொடரும்)
மொழியாக்கம்: ஜி.வில்சன்