ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 1 ஞாயிறு

“.. நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்” (சங்.99:9) பரிசுத்தமுள்ள ஆண்டவரை பரிசுத்த உள்ளத்தோடு ஆராதித்து கர்த்தருடைய பந்தியில் கலந்து கொண்டு இப்புதிய மாதத்தை கர்த்தர் நன்மையாலும் கிருபையாலும் முடிசூட்டி வழிநடத்த நம்மை  ஒப்புவித்து ஜெபிப்போம்.

உமக்கு ஒப்பானவர் யார்?

தியானம்: 2018 ஜூலை 1 ஞாயிறு; வேத வாசிப்பு: எபிரெயர் 12:18-29

“நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே” (எபி.12:29).

எரிமலை வெடித்து, அக்கினிக் குழம்பாய் ஓடும்போது அதனருகில் நிற்கத்தக்கவன் யார்? ஜூவாலித்து எரிகின்ற காட்டுத் தீயை நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியே கட்டுப்படுத்துவது கடினமாகிவிடுகிறது. அதிகம் ஏன், நமது நாடு அனுபவித்த கொடிய சுனாமியின் பயங்கரத்தையும், நம்மவர்களை அது கொள்ளைகொண்டபோதும் காப்பாற்ற முடியாமல் தவித்த அவலத்தையும் நாம் இன்னமும் மறக்கவில்லை. இயற்கைக்கு இத்தனை சக்தி உண்டென்றால், அதைப் படைத்தவரின் வல்லமையை கணக்கிடத்தான் கூடுமா?

அன்று சீனாய் மலையடிவாரத்தைக் கிட்டிச் சேர்ந்த இஸ்ரவேல் மக்கள் நிலையும் இதுதான். மக்கள் மாத்திரமல்ல, “மோசேயும் நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன்” என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது. ஒரு எரியும் மெழுகுதிரியின் முன் நிற்பதும், பற்றியெரியும் அக்கினி ஜூவாலைக்கு முன்பு நிற்பதும் ஒன்றா? ஜூவாலித்து எரிகின்ற அக்கினியை அடக்கமுடியுமா? இவற்றையெல்லாம் தமது ஆளுகைக்குள் கொண்டிருக்கும் தேவனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கத்தக்கவன் யார்? அவரது வல்லமை பட்சிக்கிற அக்கினிபோன்றது. இருந்தாலும், அவர் மனதுருக்கத்தின் தேவன். பாவத்திலிருந்து நம்மை மீட்கும்படி தம்மையே பலியாகக் கொடுக்குமளவுக்கு அவர் அன்பு நிறைந்தவர். ஆனால், தகுதியற்றதும், பாவமானதுமான எந்தக் காரியமும் அவரை என்றைக்கும் நெருங்கமுடியாது. அவரது கோபாக்கினையின் அக்கினி அதைப் பட்சித்துப்போடும்.

ஆகையால், அவருடைய காருண்யத்தை நாம் துச்சமாய் எண்ணக் கூடாது. சீனாய் மலையடிவாரத்துக்கு நடுக்கத்தோடு சென்று தரித்துநிற்க முடியாமல் பயந்தோடிய மக்களுக்கும், சீயோன் மலையண்டைக்கு நித்திய மகிழ்ச்சியுடன் சேருகின்ற மக்களுக்கும் இடையே எவ்வளவு பெரிய வேறுபாடு! தேவன் பயமுறுத்துகிறவர் அல்ல; ஆனால், பயப்படத்தக்கவர். இந்த நவீன சமுதாயத்தில் தேவன் அவசியமில்லை என்ற சோதனை நமக்கு வரலாம். ஆனால் அவர் பட்சிக்கிற அக்கினி என்பதை மறவாதிருப்போமாக. அவர் நம்முடைய அழிவை ரசிக்கிறவர் அல்ல; மாறாக, அக்கினியாய் இறங்கி, நம்மை அழித்துப்போடும் சகலத்தையும் அழித்துப்போடுகிறவர். ஆகவே, தேவதயவையும் கிருபையையும் நமக்குச் சாதகமாக்காதபடிக்கும், தேவனுடைய வல்லமைக்கு எதிராக திரும்பத் திரும்ப கலகம் பண்ணாதபடிக்கும், மனித கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவிட முடியாதவருக்குள் நாம் அடங்கிவிடுவோமாக.

“கர்த்தாவே, …பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?” (யாத்.15:11).

ஜெபம்: அன்பின் தேவனே, உமக்கு எதிராக நாங்கள் கலகம் பண்ணினதை எங்களுக்கு மன்னியும். உமது அன்பையும், அதேசமயம் கோபத்தையும் நாங்கள் உணர்ந்து பயத்தோடு ஜீவிக்க உமது அருள்தாரும். ஆமென்.

விடியற்காலத்தில் உண்டாகும் களிப்பு!

அதிகாலை வேளையில்… (ஜூலை – ஆகஸ்டு 2018)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி : சங்கீதம் 30:1-12
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய  பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். அவருடைய  கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் (சங்.30:4,5).

அநேக சங்கீதங்களில் காணப்படுவது போன்றே தாவீது 30ஆம் சங்கீதத்திலும் தான் தேவனைத் துதிப்பதாகக் கூறியுள்ளார். மிகப்பெரிய விடுதலையை அவர் அனுபவித்திருந்ததால் தேவனுக்கு நன்றியுள்ளவராய் இருக்கிறார். தனது ஆபத்தில் அவர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். ஆண்டவர் அவரைக்கேட்டருளி அவரது ஆத்துமாவை அழிவிலிருந்து மீட்டெடுத்தார்.

எனவேதான், “கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங் காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” (சங். 30:5) என்று ஆச்சரியப்படுகிறார்.

நாமும் அநேக வேளைகளில் இவ் வசனத்தின் உண்மையை அனுபவித்திருக்கிறோம் அல்லவா! பாரமான அழுத்தங்களுடன் தாங்க முடியாத கவலைகளுடன் இரவில் நித்திரைக்குச் செல்லும்பொழுது சமாதானமில்லாமையால் உறக்கம் வராது புரண்டு புரண்டு படுக்கிறோம். நமது சரீரமும் ஓய்வு எடுப்பதில்லை. உதவியற்றவர்களாய் ஒரு பரிதாபமான நிலையை உணருகிறோம். பலமணி நேரமாய் கஷ்டப் பட்டபின் சிறிதே கண்ணயர்வோம்.

கிறிஸ்தவ வாழ்வும் வியாதி – சுகம், பலவீனம் – பலம், அவமானம் – புகழ், தேவை –  நிறைவு என்று பலவிதமான மேடுபள்ளங்களைக் கொண்டது. சில நேரங்களில் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற உரிமையின் நன்மைகளை அனுபவிக்கிறோம். சில வேளைகளில் அந்த சலுகைகளால் சிலுவையை சுமக்கிறோம். சில வேளைகளில் தேவனுடைய கிருபை என்னும் தென்றல் காற்று நாம் வாழ்வில் வீசுகிறது.

சில வேளைகளில் பாதகமான வட காற்று வீசுகிறது. நடுக்கும் குளிர்ச்சியான வடகாற்று நமது இரவை நித்திரையில்லாமல் செய்யும்பொழுது நாம் சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் என்ற வாக்குறுதியைப் பற்றிக்கொள்ளலாம். தமது பிள்ளைகளின் துன்பங்களுக்கும் ஓய்வின்மைக்கும் தேவன் எப்பொழுதும் ஒரு கால எல்லையை வைத்திருக்கிறார்.

நித்திரையில்லா இரவுக்குப் பின்னர் நாம் எழும்பொழுது இரவின் குழப்பங்களுக்கு ஒரு சிறிய தெளிவு கிடைத்திருக்கும். நமது எண்ணங்களைத் திரும்பிப் பார்க்கும்பொழுது நாம் உறக்கம் கொள்ளாமல் இருந்ததற்கு காரணமும், நாம் உதவியற்று பரிதாபமான நிலையில் இருந்ததற்கும் ஒரு விடை கிடைக்கும். கையாளக்கூடாதவையாக இருந்த காரியங்களுக்கு தெளிவு கிடைக்கும். இம்மாறுதலுக்குக் காரணம் யாது? நம்முடைய கவலைகளை தேவன் மீது வைத்து அவர் கவனித்துக்கொள்வார் என்ற எண்ணங்களைக் கொண்டு வரும் காலை நேர மகிழ்ச்சியாகும் (1 பேதுரு 5:7; யோபு 33:26; ஏசாயா 26:20; 54:7).

இரவின் கவலைகள் தற்காலிக மானது மாத்திரமல்ல; அவை தேவனிடத்திலிருந்து வரும் பரிசும் ஆகும். ஆத்துமாவை அதிரவைக்கும் அனுபவங்களை சகித்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. கிறிஸ்தவ வாழ்வில் அழுகையின் நாட்கள் நிச்சயம் உண்டு. கண்ணீர் விடும் இரவுகள் அநேகமாயும் அடிக்கடியும் காணப்படும். ஆனால் காரணமில்லாமல் அவை நீண்டு காணப்பட தேவன் அனுமதிப்பதில்லை.

இலண்டன் மாநகரிலுள்ள தூய பேதுரு பேராலயத்தின் மேல் விதானத்தை சர்.ஜேம்ஸ் தார்ன்ஹில் என்பவர் வண்ணந்தீட்டினார். அதனை அவர் ஒரு தொங்கு பலகை மீது நின்று செய்யவேண்டும். ஒருநாள் மிகக் கடினமான ஒரு பகுதியை மிகவும் சிரத்தையுடன் செய்து முடித்தார். தன்னுடைய அழகிய அவ்வேலைப்பாட்டை ஆராய்வதற்கு மெதுவாக பின்னோக்கி நகர்ந்தார். இன்னும் ஓரடி நகர்ந்தால் சர்.ஜேம்ஸ் கீழே விழுந்து மரணத்தை சந்திப்பார் என்பதை அறிந்த அவருடைய உதவியாளர், மிக விரைவாக ஒரு தூரிகையை எடுத்து அப்படத்தின் மீது வண்ணத்தை வீசினார். இதை சற்றும் எதிர்பாராத அந்த கலைஞர் கலங்கியவராய் கதறிக்கொண்டு முன்னால் நகர்ந்தார். அவருடைய உதவியாளர் பின்னர் நிலைமையை விளக்கிய பொழுது சர் ஜேம்ஸ் நன்றியுடன் கண்ணீர் விட்டார்.

ஒரு மருத்துவர் தமது நோயாளிகளுக்குத் துல்லியமாய்ப் பரிந்துரை செய்யும் அக்கறையைவிட இருமடங்கு தேவன் நம்முடைய நித்திரையில்லா இரவுகளின் நிலையை அறிந்து பதிற் செய்பவர். ஒருவேளை விடியலின் வெளிச்சம் அதிக தொலைவில் இருப்பது போன்று நமக்குத் தெரியும். ஆனால் தேவன் வாக்களித்த மகிழ்ச்சியுடன் காலை நிச்சயம் வரும். தேவனுடைய வார்த்தையை நீங்கள் நம்பலாம்.

அதிகாலைப் பாடல்:

பாரங்கள் அழுத்த, வேதனைகள் பெருகிட
கவலைகளில் நான் மூழ்கி அழும்பொழுது,
பகல்வேளையும் சோர்வுற்று நீண்டு காணப்படும்பொழுது
என் இதயத்தின் வேதனையை இயேசு கவனிப்பாரா?
ஆம்; அவர் அறிவார் என்பதை நான் அறிவேன்.
என் வேதனை அவர் இதயத்தைத் தொட்டது.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜூலை – ஆகஸ்டு 2018)

[1]
தாங்கள் அனுப்பும் ‘அனுதினமும் கிறிஸ்துவுடன்’ புத்தகம் மிகுந்த பயனுள்ளதாய் அமைந்துள்ளது. தியானங்களை எழுதி வருபவர்களை தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக! நல்ல நீதி போதனைகளையும் பாவ வாழ்க்கை வாழாதபடியும் இயேசுகிறிஸ்துவைச் சார்ந்து எவ்வாறு வாழ்வது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். எனது வயது முதிர்வின் காரணமாக தங்களது அலுவலக ஜெபக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். தினந்தோறும் வாசிக்கும்படியாக குறிப்பிடப்பட்டுள்ள வேத வசனங்களை பட்டியலிட்டு வாசித்து வருகிறேன். வேதாகமம் முழுவதையும் ஒராண்டிற்குள் வாசித்து முடித்துவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

Mr.C.Gnanakkan Selvaraj, Maduari.


[2]
By Grace of our Lord Jesus Christ, I am regularly reading your Magazine/ hearing your messages through Radio and Tv. Anuthinamum Christhuvudan benefitted in my spiritual life. we thank our Lord for His Marvelous grace and mercy bestowed on us all through the year of 2017. we are upholding you and your Ministry in our prayers.

Mrs.Suganthi, Bangalore.


[3]
Greetings to you in the mighty name of Lord Jesus Christ. We receive your Magazines regularly and the articles are of immense help to our spiritual growth.

Mrs.E.Jeyakumar Israel, Chennai.


[4]
அநேக நாட்களாக தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளோடு இருந்தேன். தேவனுடைய வாக்குத்தத்தங்களையெல்லாம் சொல்லி ஜெபித்து வந்தேன். வேதத்தை நேசிப்பதால் உள்ளத்தில் சமாதானம் இருந்தது. ஆண்டவர் வசனங்கள் மூலமாக என்னைத் தைரியப்படுத்தினார். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரச்சனைகள் அதிசயமாய் நீங்கும்படி கர்த்தர் கிருபை செய்தார். என்னுடைய பாரங்கள் நீங்கின. மகிழ்ச்சியை கர்த்தர் கொடுத்தார். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.

Mrs.Sarojini Arumairaj, Thiurvellore.


[5]
எனக்கு 80 வயதாகிறது. கண்பார்வை மங்கியபோதும கடந்த ஆண்டு முழுவதும் என்னையும் என் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவரையும் எத்தனையோ பெலவீனங்களில் கர்த்தர் கண்ணின்மணிப் போல் பாதுகாத்து வந்தார். சத்தியவசன இதழ்கள் அனைத்தும் கிடைக்கின்றன. அனுதினமும் கிறிஸ்துவுடன் தவறாமல் வாசித்து ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்று வருகிறேன். கடந்த வருடத்திலும் தியானபுத்தகத்தின் அட்டவணைப்படி வேதாகமத்தை வரிசை கிரமமாக வாசித்து முடிக்க கர்த்தர் கிருபைசெய்தார்.

Mrs.Victoria Issac, Palayamkottai.


[6]
By the Grace of our Lord myself and my family are keeping good health. I am receiving your Daily reader regularly. Received your Calander. Thanks for the same.

Mr.R.K.Dhanaraj, Dindigul

ஆசிரியரிடமிருந்து…

(ஜூலை – ஆகஸ்டு 2018)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்விதழின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நமது தேசத்திலும் தமிழகத்திலும் கலவரங்கள், போராட்டங்கள் மேலும் வேலை நிறுத்தங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றங்கள் இதுபோன்ற பல்வேறு சூழ்நிலைகளாலும் அமைதலற்ற நிலையைப் பார்க்கிறோம். திருச்சபைகளுக்குள் இருக்கும் பிரச்சனைகள் நிமித்தமாக புறஇனமக்கள் மத்தியில் இருக்கிற அதிருப்தி, கிறிஸ்தவ ஸ்தாபனங்கள், சபைகளுக்குள் காணப்படும் ஐக்கிய குலைவுகள் இவை எல்லாவற்றிற்காகவும் கர்த்தருடைய பிள்ளைகள் ஒரு மனதோடு கர்த்தருடைய சமுகத்தில் அதிக பாரத்தோடு ஜெபிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் அநேகருக்கு  ஆசீர்வாதமாயிருப்பதை அவர்கள் எழுதிய சாட்சி கடிதங்கள் வாயிலாக அறிந்து தேவனைத் துதிக்கிறோம். அட்டவணையைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக வேதாகமத்தை படித்து வருகிறவர்களுக்காகவும் ஜெபிக்கிறோம். சத்தியவசன வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு ஜெபத்தோடு ஆதரவளித்த யாவருக்காகவும் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். தாங்கள் அளித்துவரும் ஆதரவினால் தேவன் இவ்வூழியத்தின் தேவைகளைச் சந்தித்து வருகிறார். இவ்வருடத்தில் பங்காளர் காணிக்கையைப் புதுப்பிக்காத பங்காளர்களும் சந்தாவைப் புதுப்பித்து தொடர்ந்து ஜெபத்தோடு தாங்கிவர அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழின் ஜூலை மாதத்தில் அருமை ஆண்டவர் எவ்வளவாய் தம்முடைய ஜனத்திற்காக பரிதபிக்கிறார் என்றும், தூரம்போன தமது ஜனத்தை மீண்டும் சேர்த்துக்கொள்ள ஆவலுள்ளவராயிருக்கிறார் என்பதை சகோதரி சாந்திபொன்னு அவர்கள் ஒசியா தீர்க்கதரிசி புத்தகத்திலிருந்து தியானங்களை எழுதியுள்ளார்கள். ஆகஸ்டு மாதத்தில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் கடைசி காலத்தில் வாழும் மனிதர்களின் நிலை எப்படிப்பட்டதாய் இருக்கும், நமது ஜீவியத்திலே கிறிஸ்துவின் அன்பை நாம் வெளிப்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தைக்குறித்தும் தியானங்களை தொகுத்து வழங்கியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபியுங்கள். இத்தியானங்கள் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பதாக!

கே.ப.ஆபிரகாம்