வாக்குத்தத்தம்: 2019 ஜூலை 1 திங்கள்

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ … நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் (மத்.13:@3).


நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1தெச.4:3).
2நாளாகமம் 21-23 | அப்போஸ்தலர் 7:41-60

ஜெபக்குறிப்பு: 2019 ஜூலை 1 திங்கள்

கர்த்தாவே. உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும் (சங்.27:11).


நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன் (சகரி.10:6) இப் புதிய மாதத்திலும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம் பட்சத்தில் நமக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருந்து நமது நடைகளை அவருடைய வழியில் ஸ்திரப்படுத்தி நம்மை நடத்தும்படியாக ஒப்புவித்து ஜெபிப்போம்.

நிலைநிறுத்தும் நிறுத்தங்கள்!

தியானம்: 2019 ஜூலை 1 திங்கள் | வேத வாசிப்பு: மத்தேயு 14:6-14

“இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார்” (மத்தேயு 14:13).

இன்னிசை வாசிக்கப்படும்போது இடையிடையே நிறுத்தங்கள் வரும். ஆனால், தாளம் தொடரும். இதனால், அடுத்த சுருதி விடாமல் தொடர இது ஏதுவாகிறது. அதனால் இராகமும் தொடர்ந்து வருகிறது போலவே தோன்றும். நிறுத்தங்களைக் குறித்து அதிகம் கவலை கொள்ளாமல், சுருதி மாறாமல் இராகத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டியது பாடுகிறவன் பொறுப்பு. நிறுத்தங்களில் இசை இல்லாவிட்டாலும், இராகத்தின் தொடர்ச்சி உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.

இயேசுவின் வாழ்நாட்களில் அடிக்கடி இந்த நிறுத்தங்கள் ஏற்பட்டதை கவனிக்கலாம். ஆனால், இந்த நிறுத்தங்கள், அவரது வாழ்க்கைப் பாடலை நிறுத்த அவர் ஒருபோதும் இடமளித்ததே இல்லை. தாம் வந்த நோக்கம் மாறாதிருக்க, தம்பணியில் தொடர்ந்து ஓட, அப்பப்போ ஏற்பட்ட நிறுத்தங்கள் மத்தியிலும் அவர் மேல்நோக்கி பார்த்தார். ஆகவே பிதாவானவர் விட்டுப்போகாமல் நேர்த்தியாய் வழிநடத்தி வந்ததைக் கண்டார். அதனால் அவரால் அடுத்த அடியை எடுத்துவைப்பது கடினமாக இருக்கவில்லை. யோவான் ஸ்நானன் கொலை செய்யப்பட்டான் என்று கேள்வியுற்றதும் அங்கே ஒரு நிறுத்தம் நேரிட்டது. உடனே அவர் செய்தது, ஒருவரும் இல்லாத வனாந்தரத்தில் தனித்திருக்கச் சென்றார். அந்தத் தனிமையில் பிதாவின் சத்தத்தைக் கேட்டிருப்பார். அதனால் தம்மை நாடி வந்த மக்களைக் கண்டு மனது உருகி தமது பணியை விடாமல் தொடருகிறதைக் காண்கிறோம்.

நமது வாழ்வும் ஒரு இனிய சங்கீதம்தான். அதன் இசையில் நிறுத்தங்கள் வரலாம். ஊழியத்தைவிட்டு சற்று விலகியிருக்கவும் நேரிடலாம். வியாதியும், தொல்லைகளும் இடைநிறுத்தங்களை ஏற்படுத்தலாம். சில சமயம் இருண்ட தனிமை பாதையில் செல்வதைக்கூட உணரலாம். அதற்காக நாம் இசைப்பதை விட்டுவிடக் கூடாது. சுருதி மாறிவிட இடமளிக்காமல் வாழ்வின் இராகத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டியது நமது கடமை. ஏனெனில், அதற்குரிய தாளத்தை பரமபிதா தொடர்ந்து நேர்த்தியாகத் தட்டிக்கொண்டே இருக்கிறார். அதனால், எந்தச் சூழ்நிலையிலும் கலங்கத் தேவையில்லை. செய்யவேண்டியது ஒன்றுதான். தனித்திருந்து மேலே நோக்குவோமானால் கர்த்தர் நம்முடனேயே இருப்பதை உணருவோம். நம் வாழ்வில் தேவன் அனுமதிக்கும் நிறுத்தங்கள் நம்மை நிலைகுலையச் செய்வதற்கல்ல; மாறாக, நம்மை நிலைநிறுத்தவேயாகும். அதற்காக தேவனை ஸ்தோத்திரிப்போமாக.

‘நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே, நான் உன் தேவன்’ (ஏசா.41:10).

ஜெபம்: அன்பின் தேவனே, எனது வாழ்வில் ஏற்பட்ட நிறுத்தங்களுக்கும் இருளுளான அனுபவத்திற்கும் உமக்கு நன்றி கூறுகிறேன். உம்மோடு தனித்திருக்கும்படி நீர் அனுமதிக்கும் வாழ்வின் நிறுத்தங்களை முழுமனதுடன் ஏற்கிறேன். ஆமென்.

பொறாமை

அதிகாலை வேளையில்… (ஜூலை-ஆகஸ்டு 2019)
– Dr.உட்ரோ குரோல்

வேதபகுதி: 1 சாமுவேல் 20:11-42


 மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்த நேரத்திலே ஒரு சிறு பிள்ளையாண்டானைக் கூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய் … (1 சாமுவேல் 20:35).


“சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி” என்று சாலொமோன் ஞானி கூறியுள்ளார் (நீதி. 14:30). இத்தகைய பொறாமைக்கு சிறந்த ஒர் எடுத்துக்காட்டாக பேரரசர் சாலொமோனைக் கூறலாம். கோலியாத் என்னும் பெலிஸ்திய வீரனை இளைஞனான தாவீது கொன்ற பின்னர் பட்டணத்து பெண்கள் “சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றது பதினாயிரம்” என்று முறைவைத்து பாடி ஆடினார்கள். இதைக் கேட்ட சவுல் அரசன் எரிச்சலுற்றான். தான் இஸ்ரவேல் நாட்டின் முழுமைக்கும் அரசனாக இருந்தாலும் மக்களுக்குப் பிரியமானவன் தாவீது என்ற எண்ணம் அவனை வதைத்தது. பொறாமையும் எரிச்சலும் ஓர் பச்சைக் கண் அரக்கனைப் போல அவனை விழுங்க ஆரம்பித்தது.

சவுல் இருமுறை தாவீதைக் கொல்ல முயற்சித்ததால் அவனால் அரண்மனையில் பணிபுரிய முடியவில்லை. சவுலுடன் அமர்ந்து போஜனம் பண்ணுவதைத் தவிர்த்து வெளியே ஒளித்து கொண்டான். தன்னுடன் தாவீது உணவருந்த வராததின் காரணத்தை சவுல் யோனத்தானிடம் விசாரித்தபொழுது, பெத்லெகேமில் தாவீதின் குடும்பத்தினரின் பலி விருந்துக்குச் செல்ல தன்னிடம் அனுமதி கேட்டதாக யோனத்தான் கூறினான். அது வெறும் சாக்குப்போக்கு என்று சொல்லி தன்னுடைய மகனின் மேல் சவுல் கோபம் கொண்டான். அவனது பிறப்பைப் பற்றியும் தாவீதுடனான நட்பையும் அவதூறாகப் பேசி களங்கப்படுத்தினான். தாவீதைக் கொல்வதற்காக அவனை அழைத்துவரச் சொன்னதற்கு யோனத்தான் எதிர்ப்பு தெரிவித்தான். எனவே தன்னுடைய ஈட்டியை தனது சொந்த மகன் மீதே எறிந்து தனது எரிச்சலைக் காட்டினான். யோனத்தானும் பந்தியைவிட்டு எழும்பி கோபமாய் வெளியேறினான்.

மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்தநேரத்திலே ஒரு சிறு பிள்ளையாண்டானைக் கூட்டிக் கொண்டு, (1 சாமு. 20:35) சவுலுக்கும் மற்றவர்களுக்கும் சற்றும் சந்தேகம் வராமலிருக்க அம்புகளை எறியும் பயிற்சிக்குத் தான் செல்வதுபோல பட்டணத்துக்கு வெளியே புறப்பட்டுப்போனான். அப்பிள்ளையாண்டானை அனுப்பிவிட்ட பின்னர் தாவீது தன்னுடைய ஒளிப்பிடத்திலிருந்து வந்தான். தங்களுடைய வாழ்நாள் நட்பினை இரு நண்பர்களும் புதுப்பித்துக்கொண்டனர். ஒருவரையொருவர் தழுவி முத்தமிட்டு அழுத பின்னர் கனத்த இருதயத்துடன் பிரிந்தனர். இப்பிரிவு சவுலின் எரிச்சலாலும் பொறாமையாலும் நிகழ்ந்தது. இந்த எரிச்சல் உண்மை நிலையை மறைத்து, அடிப்படையான நியாயத்தை நீக்கிவிடுகிறது. காரணங்களின் ஆளுமையானது, உணர்ச்சிக்கு அடிமையாக்கி, இறுதியில் சிந்தைக்கு முரணான செயல்களுக்கு நடத்திச் செல்கின்றது.

தன்னைவிட நன்கு பறக்கும் மற்றொரு பறவையின்மேல் எரிச்சலும் பொறாமையும் கொண்ட ஒரு கழுகைப் பற்றிய கதை ஒன்றை டி.எல்.மூடி கூறியுள்ளார். ஒரு நாள் அக்கழுகு வில்லும் அம்பும் வைத்திருந்த ஒரு வேடனைக் கண்டது. அவனிடத்தில் “உயரமான அந்த இடத்திலுள்ள கழுகை நீ வீழ்த்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது. தன்னுடைய அம்புக்கு சில இறகுகள் தேவை என்று அவன் கூறினான். உடனே பொறாமை கொண்ட அக்கழுகு தன்னுடைய சிறகிலிருந்து ஒரு இறகை பிடுங்கிக் கொடுத்தது. அதனைத் தன் அம்பில் வைத்து பறந்து கொண்டிருந்த கழுகின் மீது எய்தான். ஆனால் குறி தவறியது. பொறாமை கொண்ட கழுகு தன்னுடைய இறகுகளில் ஒவ்வொன்றாகப் பிடுங்கி அவனிடம் கொடுத்தது. அநேக இறகுகளை இழந்ததால் அக் கழுகால் பறக்க இயலவில்லை. அச்சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வேடன் தப்ப வழியில்லாத அக்கழுகைக் கொன்றான். “மற்றவர்கள்மீது எரிச்சலும் பொறாமையும் கொண்டால் அதிகமான பாதிப்படைபவர் நீங்களே” என்பதே இக்கதையின் நீதியாகும்.

நமக்குள்ளே ஒளிந்திருக்கும் பொறாமை என்ற அரக்கனுக்கு அடிமையாகி அழிந்துவிடாமல் தேவனுடைய அன்பில் வளருவோம்.

அதிகாலைப் பாடல்:

காரிருளிலும் உன் கரம்பிடித்து நடத்துவார்;
உனது பாரச்சுமை யாவையும் இயேசு சுமப்பார்;
இடுக்கமான பாதையிலும் உண்மையாய்
அவருக்காய் வாழ அர்ப்பணிப்பாய் நண்பனே!

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜூலை-ஆகஸ்டு 2019)

[01]
சத்தியவசனத்தார் குழுவினர் அனைவருக்கும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். நான் 1977 லிருந்து சத்தியவசன வானொலி நிகழ்ச்சியைக் கேட்டுவருகிறேன். அப்பொழுது வானொலி, இப்போது டிவி. குறிப்பாக 1984 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் வழங்கிய நோவா பேழை குறித்த செய்தியை கேட்டது இன்றும் நினைவில் உள்ளது. அவர் உடல் ஆரோக்கியம் தேவ சேவையை ஆண்டவர் இன்னும் ஆசீர்வதிக்கவும் உங்கள் ஊழியங்களுக்காகவும் ஜெபிக்கிறேன்.

Mr.Marimuthu, Thamdaram pet.


[02]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, வேதாகம அட்டவணைப்படி 2018ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன். தின தியான புத்தகம் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. சத்தியவசனம் இருமாத இதழ் வரலாற்று செய்திகளுடனான ஆழ்ந்த திருமறை விளக்கங்களுடன் வரும் கட்டுரைகள் மிக்க நன்று. வாட்ஸ் அப் செய்திகள் மற்றைய நண்பர்களுக்கும் அனுப்ப பிரயோஜனமுள்ளதாக இருக்கிறது. கட்டுரை, தியானங்கள் எழுதுகிறவர்கள், மொழியாக்கம் செய்கிறவர்கள், வானொலி, தொலைகாட்சியில் செய்தி கொடுக்கிறவர்கள் மற்றும் அனைத்து பணிகளுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம்.

Mr.Stephen Natarajan, Cuddalore.


[03]
அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வேத வாசிப்பு கால அட்டவணைப்படி வேதாகமத்தை ஒரு ஆண்டிற்குள் வாசித்து முடிக்க தேவன் கிருபை புரிந்தார். தியானபகுதி மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது.

Dr.Y.Lydia Rajasekar, Kuzhithurai.


[04]
Greetings to you in the Matchless name of our Lord Saviour Jesus Christ, We watch your TV Programme which is very useful for us. Please broadcost Dr.Theodore Williams speechs. As a family we are remembering you, your family and your Ministries for the Lord in our Prayers. We hope that the Lord is using you in His vineyard for the expansion of His kingdom.

Mr.V.Soma Sundaram, Chennai.


[05]
அன்பு சகோதரருக்கு, சத்தியவசன பத்திரிக்கைகள் மிகவும் பயனுள்ளது. எனக்கும் குடும்பத்திற்கும் அதிக பிரயோஜனமாக இருக்கிறது. சத்தியவசன பத்திரிக்கை ஊழியத்தையும் இதர ஊழியங்களையும் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

Mr.Sugumaran, Erode.


[06]
கர்த்தருக்குள் அன்பான ஊழியர்களுக்கு, எனக்கு மாதந்தோறும் பத்திரிக்கை ஒழுங்காக கிடைக்கிறது. கடந்த வருடமும் நான் அட்டவணைப்படி வேதாகமம் முழுவதையும் வாசித்து முடித்தேன். எங்களுக்காக ஜெபியுங்கள்.

Mrs. Sarojini Moses, Dohnavur.

ஆசிரியரிடமிருந்து…

(ஜூலை-ஆகஸ்டு 2019)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

என்றென்றும் மாறாத நேசர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

2019 ஆம் ஆண்டின் பாதிவருடத்தை கடந்துவர கர்த்தர் கிருபை செய்துள்ளார். சத்திய வசன பங்காளர்கள் நேயர்கள் வாசகர்கள் யாவரது குடும்பங்களிலும் இக்கல்வியாண்டின் தேவைகளைக் கர்த்தர் சந்திக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கிறோம். இவ்வூழியங்களுக்கு தங்களது அன்பின் பிரயாசங்களை காண்பித்துவரும் அனைத்து ஜெபபங்காளர்களுக்காக, ஆதரவாளர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம்.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சென்னையிலும் கடுமையாக நிலவிவரும் தண்ணீர் பஞ்சம் நீங்க கர்த்தர் ஒரு வழியை திறந்துதர மன்றாடுவோம். அதிக உஷ்ணத்தினால் பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியாகி உள்ளதை அறிவோம். இப்படிப்பட்ட சாவுகள் இனியும் தொடராதபடியும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் விரைவில் சுகம் பெறவும், தேவனுடைய அற்புத கிரியை அங்கே விளங்கவும் உஷ்ணத்தின் கடுமை குறைவதற்கும் ஜெபிப்போம்.

கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாய் உள்ள இந்நாட்களில் பரிசுத்த வேதாகமத்தை கருத்தாய் வாசித்து கைக்கொள்வோம். தியான புத்தகத்தில் இடம்பெறும் அட்டவணையைப் பயன்படுத்தி ஒரு வருடத்திற்குள் வேதாகமத்தை அனைவரும் வாசித்து முடிப்பதற்கும் தொடர்ந்து உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.

இவ்விதழில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் நமது கிறிஸ்தவ வாழ்வில் நாம் பெற்றுக் கொள்ளவேண்டிய மேன்மையான அனுபவங்களை ஜூலை மாதத்தில் தியானங்களாக எழுதியியுள்ளார்கள். ஆகஸ்டு மாதத்தில் சகோ. வர்ஷினி ஏர்னஸ்ட் அவர்கள் 23 ஆம் சங்கீதம் முழுவதையும் தியானங்களாக எழுதியுள்ளார்கள். ஒவ்வொரு நாளின் தியானங்களும் நமது வாழ்வை செப்பனிடுகிறதாகவும், கிறிஸ்துவோடு உள்ள உறவில் பெலப்படுத்துகிறதாயும், இக்கட்டு நெருக்கமான சூழ்நிலைகளில் ஆறுதலையும் திடநம்பிக்கையையும் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. நீங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாத அனுபவங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கவும் மறவாதீர்கள். தேவனுடைய நன்மையும் கிருபையும் உங்கள் ஒவ்வொருவரையும் தொடர்ந்து வர ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்