ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 15 திங்கள்

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (பிரச.3:11) சகலத்தையும் நேர்த்தியாகவும் ஆசீர்வாதமாகவும் நடத்துகிற கர்த்தர்தாமே பங்காளர் குடும்பங்களில் திருமணத்திற்காக காத்திருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு, ஆவிக்கேற்ற துணைகளைத் தந்து தேவைகளைச் சந்திப்பதற்கும் தேவனுக்கு உகந்த தூயகுடும்பங்கள் கட்டப்படுவதற்கும் மன்றாடுவோம்.

பொல்லாப்புக்கு வழிநடத்தியவள்

தியானம்: 2021 நவம்பர் 15 திங்கள் | வேத வாசிப்பு: 1இராஜா.16:29-33; 2இராஜா.9:30-37

தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாப்… (1இராஜா. 21:25).

இப்படியானதொரு குறிப்பு, ஆகாப் என்ற கணவனைத்தவிர வேறு யாரைக் குறித்தும் எழுதப்படவில்லை. ஆகாப் ராஜா செய்த பொல்லாப்புக்கு மனைவியே தூண்டுகோலாக இருந்தாள் என்பது உண்மையென்றாலும், ஆகாபின் புத்தி எங்கே போனது? அழிக்கப்படமுடியாதபடி இப்படியொரு வாசகம் எழுதப்பட்டாயிற்றே! இப்படியே ஆகாப் தனது மனைவி யேசபேலுக்கு முதலிடம் கொடுக்கவும், அவள் தூண்டிவிட்டபடியே செய்யவும், இந்த யேசபேல் என்பவள் யார்? அவள் சீதோனிய ராஜகுமாரத்தி; பாகாலை வணங்குகிறவள்; ஆகாபை மணந்ததினால் இப்போது இஸ்ரவேலின் ராஜாத்தி, இவள் தன் கணவனின் பெலவீனங்களை அறிந்தவளாக, அவனைத் தன் கைக்குள்ளாகவே வைத்திருந்தாள். “கற்பில்லாதவள்” என்ற அர்த்தம்கொள்ளும் இவள் பெயருக்கேற்ப இவளது புற நடத்தையும் காணப்பட்டது. இவள் தனது சரீர அளவில் நடத்தை கெட்டவளாகத் தெரியவில்லை. ஆனால், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்னிலையிலும், தன் இருதயத்திலும், கற்பு இழந்தவளாகவே காணப்பட்டாள். அவளது இருதயம் பாகால் வணக்கத்தாலும், அதன் பலனான பொல்லாத சிந்தனைகளாலும் நிறைந்திருந்தது. மனைவிக்குரிய எல்லையை மீறியதால், தனக்கும் குடும்பத்திற்கும் சாபத்தைத் தேடிக்கொண்டாள். அவள் பரிதாபகரமான மரணத்தையும் சந்திக்க நேர்ந்தது.

“குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்” (நீதி.12:4). கிரீடம் மகிமைக்கு அடையாளம். ஒரு புருஷன் கனம்பெற்று விளங்குவானென்றால், திரைக்குப் பின்னால் நிற்கும் மனைவியே இதில் பெரும் பங்குவகிக்கிறாள் என்பதை மறுக்கமுடியாது. ஒரு ஊழியனின் வெற்றி, அவனது மனைவியின் முழங்கால்களிலேயே தங்கியுள்ளது. “குணசாலியானவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் புருஷனுக்குத் தீமையையல்ல; நன்மையையே செய்கிறாள்” (நீதி.31:12). அப்படியிருக்க, புத்திகெட்டு நடக்கிற மனைவியை என்னவென்று சொல்லுவது?

தேவபிள்ளையே, கற்பு என்பது, நமது சரீரத்திற்கு மாத்திரமல்ல, அது நமது ஆத்துமாவிற்கும் அவசியம்! அன்று தேவனைவிட்டு வேறே தேவர்களை நாடிய போதெல்லாம், கர்த்தர், இஸ்ரவேலரை ‘விபசார சந்ததி’ என்றே அழைத்தார். நாமும் தேவனின் வழிகளை விட்டுவிலகி, மற்றவர்களை பொல்லாப்புக்கு வழி நடத்துவோமாயின், வீணான சாபத்திற்கு ஆளாகநேரிடும். யூதாஸ் ஒரு முப்பது வெள்ளிக் காசுக்கு ஆசைப்பட்டு தன் இருதயத்தின் கற்பை இழந்தான். யூத அதிகாரிகளின் பொல்லாப்புக்கு உரமூட்டினான். இறுதியில் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டான். ஆத்துமாக்களைப் பொல்லாப்புக்கு அல்ல; இரட்சிப்பின் வழியிலே நடத்து வதற்குத்தான் தேவன் நம்மை அழைத்திருக்கிறார். அதை மறந்து சுயவழிகளையும் இச்சைகளையும் நாடி நம்மை இழந்துவிடாதிருக்க இன்றே நம்மைத் தேவனின் கரத்திலே முழுவதுமாக ஒப்புவிப்போமாக.

ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, யாராயினும் அவர்கள் வழிதப்பி நடப்பதற்கு நான் காரணர் ஆகாதபடிக்குக் காத்தருளும். இரட்சிப்பின் வழியில் பிறர் நடப்பதற்கு நான் வழி காட்டியாக இருக்க எனக்க கிருபை தாரும். ஆமென்.