ஜெபக்குறிப்பு: மே 1 வியாழன்

“பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்” (சங்.90:2) சர்வவல்லமையுள்ள தேவன் இம்மாதத்திலும் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார். அவருக்கே மகிமையைச் செலுத்தி ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.

கைதட்டி ஆர்ப்பரி!

தியானம்: மே 1 வியாழன்; வாசிப்பு: யாத்திராகமம் 24:9-18

“அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய
யோசுவாவோடே எழுந்துபோனான்”
(யாத்திராகமம் 24:13).

சிறுவன் ஜாமி ஸ்காட், பள்ளியில் நடக்கப்போகும் நாடகத்தில் தானும் பங்கெடுக்க விரும்பினான். அதை அறிந்திருந்த அம்மா, ஒருவேளை அவன் தெரிந்தெடுக்கப்படாமல் போவானோ என்று வருந்தினார். அன்று பங்கெடுப்பவர்களை தெரிந்தெடுக்கும் நாள். மாலையில் மகனை அழைத்துவரப் பள்ளிக்குச் சென்ற அம்மா, மகன் மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து வந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். “என்ன நடந்தது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று அம்மாவிடம் கேட்டான். “அம்மா நாடகத்தில் எனக்கும் ஒரு பங்குண்டு. ஒரு இடத்தில் ‘கைதட்டி, ஆர்ப்பரித்து, மகிழ்ச்சி ஆரவாரம் செய்யவேண்டும்” என்றான் அவன்.

தேவன் நம்மில் பலரை முன்னணியில் நிற்கத் தெரிந்தெடுக்கிறார். சிலரை சிறு பாத்திரங்களாக, கைதட்டி ஆரவாரம் செய்கிறவர்களாகக்கூடத் தெரிந்தெடுக்கலாம். யோசுவா, இந்த இரண்டாம் வேலையைச் செய்யும்படிதான் அழைக்கப்பட்டார். இவர் இஸ்ரவேலரின் தலைவனாவதற்கு 40 வருடங்கள் ஆயின. அக் காலப்பகுதியில் மோசேக்கு உதவியாளனாக இருந்து, அந்தப் பணியை நன்றாகவே செய்தார். அமலேக்கியரோடு யுத்தம் செய்தபோது யோசுவா நன்கு செயற்பட்டார் (யாத்.17:10). தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேக்கு உண்மையுள்ள ஊழியனாக இருந்து நல் ஊக்கம் அளித்தார்.

தலைவர்களாக செயற்படும்படி தேவன் தெரிந்துகொள்ளும் நபர்கள் அநேக சவால்களைச் சந்திக்க நேரிடும். கனமான பொறுப்புக்களையும், ஆவிக்குரிய பாரங்களையும் சுமக்கவேண்டியது வரும். மக்கள் கூட்டத்தின் பொறாமையான பேச்சுக்கும், நேரடியான தாக்குதல்களுக்கும் ஆளாக நேரிடும். இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களை உற்சாகப்படுத்தி சோர்வை நீக்கக் “கைதட்டி ஆரவாரம் செய்து” ஊக்கப்படுத்தும் பல விசுவாசிகள் தேவை. இப்படிப்பட்ட ஊக்குவிப்பு எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாயிருக்கும்.

தேவஊழியர்களை உற்சாகப்படுத்துகிறீர்களா? உங்கள் போதகரையும் அவருடைய மனைவியையும் உற்சாகப்படுத்துவது யார்? உங்கள் வேதாகமப் பள்ளி ஆசிரியரை உற்சாகப்படுத்துவது யார்? அநாதை ஆசிரமத்தில் வேலை செய்கிறவர்களை ஊக்குவிப்பது யார்? அவர்களது சுமைகளைக் குறைத்து, ஆறுதல்படுத்தி, சந்தோஷப்படுத்துவது யார்? பலருக்கு இப்படிப்பட்டவர்களைக் குறைகூறுவதே வேலை. தேவன் உங்களுக்கு ஒரு பங்கு வைத்திருக்கலாம். அதை ஏற்று, ஆர்ப்பரித்து, நடிக்கும் நாடகத்தின் வெற்றிக்கும் பெருமைக்கும் காரணமாக இருக்கலாமே! கைகொட்டி, ஆர்ப்பரித்து உற்சாகப்படுத்துகிறவனாக இரு. குறை கூறி ஏளனம் செய்து குற்றம் சுமத்துபவனாக இராதே.

ஜெபம்: “பிதாவே, நீர் அடியேனுக்கு எந்தப் பாத்திரத்தைக் கொடுத்தாலும் மன ரம்மியத்தோடு அதைச் செய்து முடிக்க உமது பெலன் தந்தருளும். ஆமென்”.

மாபெரும் எழுப்புதல் கூட்டம்

அதிகாலை வேளையில்… (மே-ஜுன் 2014)
– Dr.உட்ரோ குரோல்

“தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்” (நெகேமியா 8:3).

எருசலேமின் அலங்கத்தைப் புதுப்பித்துக் கட்டியபின், எஸ்றாவும் நெகேமியாவும் இணைந்து மக்களுடைய சமூக மற்றும் சமய சீர்திருத்தங்களுக்காகப் பாடுபட்டனர். அவர்களுக்கு மல்கியா தீர்க்கதரிசி உற்ற துணையாக இருந்தார். இந்த மூவருடைய பணியினால் இஸ்ரவேலின் வரலாற்றில் மாபெரும் மறுமலர்ச்சி தோன்றியது. ஜனங்களும் தேவவார்த்தையைக் கேட்க ஆர்வமாய் கூடி வந்தனர். அந்த எழுப்புதல் கூட்டத்தின் தன்மைகள் நெகேமியா 8ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

1. மக்களின் வருகை (வசனம் – 1) “ஜனங்கள் எல்லாரும் தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி,…” என்று எழுதப்பட்டுள்ளது. எந்த ஒரு யூதனும் இந்த கூட்டத்திற்கு விலக்கமாயிருக்கவில்லை. அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் அவர்களுக்கு அனுப்பப்படாவிட்டாலும், தேவனுக்குள் இருந்த மகிழ்ச்சியினால் நிறைந்திருந்ததினால் அவர்கள் தன்னார்வத்துடன் அங்கே குழுமிவிட்டார்கள்.

2. காலத்தின் நீளம் (வசனம் – 3) இக்கூட்டத்தில் வேதபாரகராகிய எஸ்றா, மோசேயின் நியாயப்பிரமாணத்தை எடுத்து வந்தார். “தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியான மட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்;” அதிகாலையிலேயே குழுமிவிட்ட மக்கள் மத்தியானமட்டும் கலைந்து செல்லாமல் பாலஸ்தீன நாட்டு சுட்டெரிக்கும் வெயிலிலும் நின்று எஸ்றா வாசித்ததைக் கவனத்துடன் கேட்டார்கள்.

3. அருட்செய்தியாளர்களின் வரிசை (வசனம் – 4) மரத்தால் செய்யப்பட்ட பிரசங்கப்பீடத்தில் எஸ்றா நின்ற பொழுது அவருடன்கூட வேறு 13 அருட்செய்தியாளர்களும் நின்றிருந்தனர். ஒவ்வொருவரும் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து அர்த்தஞ் சொல்லி, தாங்கள் வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.

4. மக்களின் கவனம் (வசனம் – 5): “எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத் திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றார்கள்”. அதிகாலையிலிருந்து மத்தியானமட்டும் மக்கள் அனைவரும், நியாயப்பிரமாணத்தை விளக்கிக்காட்டிய லேவியர்களும் நின்று கொண்டிருந்தனர். தேவனுடைய வார்த்தைக்கு அவர்கள் மரியாதைக் கொடுத்து, கவனம் சிதறாதவாறு பயபக்தியுடன் கேட்டார்கள்.

5. எழுப்புதலின் ஆவி (வசனம்-6): எஸ்றாவும் மற்ற லேவியர்களும் தேவ வார்த்தையை வாசித்து முடித்த பின்னர் தேவனை ஸ்தோத்திரித்து, அவரைப் பணிந்துகொண்டனர். “…ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்”.

6. எழுப்புதல் கூட்டத்தின் விளைவு (வசனம் – 7, 8): இந்த எழுப்புதல் கூட்டத்தின் சுருக்கத்தை வசனம் 8 தெளிவுபடக் கூறுகிறது. “அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ் சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்” தேவ வார்த்தையைக் கேட்டு அதனைப் புரிந்துகொண்ட மக்கள் அழுதனர். தனிப்பட்ட மனந்திரும்புதல் எப்பொழுதும் இவ்வாறான கண்ணீர் சிந்துதலுடன் இணைந்திருக்கும்.

7. எழுப்புதலின் கொண்டாட்டம் (வசனம் 9-12): மக்களிடையே தேவனுடைய வார்த்தையை வாசித்ததினால் உண்டான தாக்கத்தைக் கண்ட நெகேமியா, எஸ்றா மற்றும் லேவியர்கள் ஜனங்களை நோக்கி, “இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள். பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப் படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான். லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப் படவேண்டாம்…” என்றும் கூறினர்.

யெகோவாவின் மன்னிப்பை அறிந்துகொண்ட அம்மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் கூடாரப்பண்டிகையை ஒரு வாரத்துக்குக் கொண்டாட ஆயத்தமானார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜிப்ஸி ஸ்மித் என்ற நற்செய்தியாளர் நடத்திய கூட்டமொன்றில் ஒரு பிரசங்கியார் அவரை சந்தித்து, அவரது வெற்றியின் இரகசியத்தைக் கேட்டார். தனது சபை மக்களிடமும் அவ்விதமான எழுப்புதலை உருவாக்க சிறந்த முறையை அறிந்து கொள்ள அவர் விரும்பினார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக ஜிப்ஸி ஸ்மித், “சகோதரனே, நீங்கள் உங்கள் இல்லத்துக்குச் சென்று, உங்களுடைய அறைக்கதவைப் பூட்டிக்கொள்ளுங்கள். ஒரு சாக் பீiஸ எடுத்து தரையில் ஒரு வட்டம் வரையுங்கள். அவ்வட்டத்துக்குள்ளே நீங்கள் முழங்காற்படியிட்டு, நீங்கள் செய்த பாவங்களை அறிக்கையிடுங்கள். தேவனுடைய வார்த்தை வழிகாட்டும் பாதையில் செல்ல முடிவெடுங்கள். அவர் முதலாவது உங்களில் கிரியை செய்ய கேளுங்கள். உங்களுடைய இந்த ஜெபம் கேட்கப்படும்பொழுது, உங்கள் சபையில் எழுப்புதல் உருவாகும்” என்றார்.

நெகேமியாவின் காலத்தில் எருசலேமில் நடைபெற்ற எழுப்பு தலை நம்முடைய நாட்டிலும் காணவேண்டுமாயின், நாமும் நம்முடைய அறைக் கதவைப் பூட்டி முழங்காற் படியிட்டு உண்மையாய் ஜெபிக்க வேண்டும். இன்று முதலாவது நம்முடைய இருதயத்தில் எழுப்புதல் ஏற்பட நாம் ஜெபிப்போம்.

அதிகாலைப் பாடல்
தேவனே உமது நேசகுமாரன் இயேசுவின் அன்புக்காக
உம்மைத் துதிக்கிறோம்; மரித்து உயிரோடெழுப்பினீரே
உமக்கே மகிமை; அல்லேலூயா; ஆமென்! அல்லேலூயா!
உமக்கே மகிமை; அல்லேலூயா; எங்களையும் உயிர்ப்பியும்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (மே-ஜுன் 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(1) பர்மிய மொழிபெயர்ப்பு

அதோனிராம் ஜட்சன் ரங்கூனி லிருந்து ஆவா எனுமிடத்திற்குச் சென்றார். 1824இல் அவரது மனைவியும் அங்கு வந்து சேர்ந்தாள். அச் சமயம் பர்மாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே யுத்தம் மூண்டதினால், வெளிநாட்டினர் அனைவரும் ஒற்றர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதோனிராம் ஜட்சனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு 11 மாதங்களாக புழுக்களும், பூச்சிகளும் நிறைந்த ஒரு சிறையில் சங்கிலிகளினால் கட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தார். அங்கு கொசுக்களும், பூச்சிகளும் அவரைக் கடித்துக்கொண்டிருந்தன. தரையும் ஈரமாகவும் துர் நாற்றம் வீசுவதாகவும் இருந்தது. சிறையில் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த ஜட்சன் எப்போதும், தான் மொழிபெயர்த்த பர்மிய புதிய ஏற்பாட்டைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தார்.

அதோனிராம் ஜட்சன் சிறையிலிருந்த காலத்தில், பர்மிய அதிகாரிகள் தான் பர்மிய மொழியில் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டின் பிரதிகளை அழித்துவிடக்கூடாது என்பதே அவரது கவலையாயிருந்தது. அவரது மனைவி நான்சி அவற்றை ஒரு தலையணைக்குள் வைத்துத் தைத்து, அதை ஜட்சனிடம் அனுப்பியிருந்தாள். அத்தலையணையைப் பல நாட்கள் ஜட்சன் வைத்திருந்தார். பின்னர், ஒருவர் பின் ஒருவராகச் சங்கிலிகளினால் கட்டப்பட்டிருந்த மனிதர்களோடு சேர்த்துக்கட்டப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக வேறிடத்திற்கு கொண்டு போகப்பட்டார். அதேசமயம் அவர் வைத்திருந்த தலையணை அவரிட மிருந்து பிடுங்கி எறியப்பட்டது. இது நடந்து 7 கொடிய மாதங்களின் பின் ஜட்சன் ஒரு காவலாளியின் மேற்பார்வையின் கீழ் அரசின் மொழி பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். 1825 நவம்பரில், சரியாக ஜட்சன் சிறைப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின் பிரித்தானியர்கள் யுத்தத்தில் வெற்றியடைந்தமையால் அவர் விடுதலை செய்யப்பட்டார். அச்சமயம் அவருடைய மனைவியும், அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் இரட்சிக்கப்பட்ட பர்மிய கிறிஸ்தவனும் ஜட்சனின் தலையணையை அவரிடம் கொண்டு வந்தனர். 7 மாதங்களுக்கு முன் ஜட்சனின் உடைமைகளில் அதை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. அதனுள் அவர் மொழிபெயர்த்த பர்மிய மொழி புதிய ஏற்பாடு இருந்தது. சிறையிலிருந்து விடுதலையடைந்த ஜட்சன் தனது மொழி பெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்து செய்தார். எனினும் 6 மாதங்களில் அவரது மனைவி நான்சி மரணமடைந்தபின் அவர் வெகுவாகப் பாதிக்கப்பட்டார். இதனால் மொழிபெயர்ப்பு வேலைகளும் பாதிக்கப்பட்டன. எனினும் 1834 ஆம் ஆண்டு, அவரது மனைவி மரித்து 7 வருடங்களின் பின் பர்மிய மொழியில் முழுவேதாகமத்தினது மொழிபெயர்ப்பு வேலையையும் பூர்த்தி செய்தார். 1835ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது பர்மிய மொழிபெயர்ப்பு வேதாகமம் அச்சிடப்பட்டது. அதன் பின் 5 வருடகாலமாக அவர் தனது மொழிபெயர்ப்பைத் திருத்தும் வேலைகளில் ஈடுபட்டார். உண்மையில் கடும் உபத்திரவங்களுக்கூடாகச் சென்ற அதோனிராம் ஜட்சன் பர்மிய மக்களுக்குத் தேவனுடைய வார்த்தை அவர்களுடைய மொழியில் கிடைப்பதற்குத் தன்னையே தியாகம் செய்திருந்தார். இன்று, பர்மாவில் பேசப்படும் 8 மொழிகளில் முழுவேதாகமமும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதைவிட, புதிய ஏற்பாடு மேலும் 8 மொழி களிலும், வேதாகமத்தின் பகுதிகள் 10 மொழிகளிலும் பர்மாவில் மொழி பெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

(2) சீன மொழிபெயர்ப்பு

லண்டன் மிஷனரி சங்கம் ரொபர்ட் மொரிசன் என்பவரை சீனாவுக்கு மிஷனெரியாக அனுப்பியது. இவர் 1807ஆம் ஆண்டு சீனாவிலுள்ள கன்டன் எனும் நகருக்குச் சென்றார். சீனர்களது உதவியோடு அவர்களது மொழியைக் கற்றிடலாம் எனும் நம்பிக்கையோடிருந்த மொரிசனுக்கு அங்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. தமது தூயமொழியை வெளி நாட்டவருக்கு கற்றுக்கொடுப்பவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்படும் என அக்காலத்தைய சீன அரசாங்கம் கட்டளையிட்டிருந்தது. எனினும் வெகுவிரைவிலேயே இரு ரோமன் கத்தோலிக்க சீனர்களைச் சந்தித்த மொரிசன் அவர்களது உதவியோடு இரகசியமாக சீனமொழியைக் கற்றவாறே ஒரு சீன ஆங்கில அகராதியையும் தயாரித்தார். எனினும் வெளிநாட்டவர்களுக்கு 6 மாதங்கள் மட்டுமே கன்டன் நகரில் இருப்பதற்கு சீன அரசு அனுமதி கொடுத்தமையினால், 6 மாதங்களின் பின் மொரிசன் போர்த்துக்கேயரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மெக்கவ் எனுமிடத்துக்குச் சென்றார். மேலும் மொரிசன் மெக்கவ்வில் இருக்கும் போது அங்கிருந்த இங்கிலாந்து நாட்டு மருத்துவர் ஒருவரின் மகளைத் திருமணமுடித்தார். எனினும் 6 மாதங்களின் பின் மறுபடியுமாக கன்டன் நகருக்குச் செல்வதற்கு கிழக்கிந்தியக் கம்பனியில் மொழிபெயர்ப்பாளராக வேலைக்குச் சேர வேண்டியதாயிற்று. அத்தோடு அவரது மனைவிக்கு கன்டன் நகருக்குச் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் கன்டன் நகரில் தனியாக வாழ்ந்த மொரிசன் பகற்பொழுதில் தனது உத்தியோகக் கடமைகளைச் செய்ததோடு, இரவு வேளையில் சீனர்களது உதவியோடு வேதாகமத்தை சீனமொழியில் மொழி பெயர்த்து வந்தார்.

1809ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்தை சீன மொழியில் மொழிபெயர்க்கும் வேலைகள் பூர்த்தியடைந்தன. அதை புத்தகமாக அச்சிட்டு வெளியிடுவதற்குத் தேவையான சீன அச்சு எழுத்துக்களை மொரிசன் மரப்பலகையில் செய்தார்.

(தொடரும்)

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மே-ஜுன் 2014)

1. “அனுதினமும் கிறிஸ்துவுடன்” தியானநூல் காலைவேளையில் வாசித்து பயன்பெற மிகவும் உதவியாக உள்ளது. ஆம் எனது காலை போஜனம் “பரலோக மன்னவாகிய” தேவவார்த்தைகள். இது என்னை வயோதிப நாட்களில் பெலப்படுத்துகிறது. திடப்படுத்துகிறது, தாங்குகிறது. இந்நாள் வரை அவரது கிருபை எனக்கு போதுமானதாயிருக்கிறது. தங்களது வேத அட்டவணையைப் பின்பற்றி வேதாகமம் முழுவதும் இந்த ஆண்டு படித்து பயன்பெற உதவியாக உள்ளது.

Mr.D.A. Sundararaj, Chennai.

2. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை நானும் என் மனைவியும் தவறாமல் படிக்கிறோம். அந்தச் செய்திகள் தினமும் எங்களோடு பேசுகிறது. கர்த்தர் எங்களை எவ்வளவோ ஆசீர்வதித்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டில் நானும் என் மனைவியும் அட்டவணைப்படி வேதத்தை ஒருமுறை படித்து முடித்துவிட்டோம். இப்பொழுது மறுமுறை படிக்க ஆரம்பித்துள்ளோம். திங்கட்கிழமை சத்தியவசன டிவி நிகழ்ச்சியை தவறாமல் பார்க்கிறோம். குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு தியானிக்கிறோம். உண்மையாகவே அது பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது.

Mr.T. Selvaraj, Kangayam.

3. We praise God for your Ministry. We enjoy that watching your T.V. Programme every Monday. We are praying for you. Please send us all your Magazine and Literature to my address.

Mr.J.D.Hudson, Munnar.

4. நாங்கள் குடும்பத்துடன் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்திலுள்ள வேதத்தை ஒரு வருடத்திற்குள் வாசிப்பதற்கான அட்டவணைப்படி 2013 ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக வாசித்து முடித்தோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தியானப்பகுதி மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது.

Mrs.P.Lily Christy, Trichy.

5. நான் தொலைகாட்சியில் தமிழன் சேணலில் தங்களின் சத்தியவசன நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறேன். ஆழ்ந்த சத்தியங்களுக்காகவும், கருத்தாழமிக்க பாடல்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.

Mr.A.Thomas Samuel, Sattur.

6. அனுதினமும் கிறிஸ்துவுடன் 2013ஆம் ஆண்டில் தொடர்ந்து படித்து வந்தேன். ஜூலை – ஆகஸ்டு மாத பிரதியில் தேவவல்லமையும் அவருடைய உண்மையும் மாறாதது என்று உணர்ந்துகொண்டேன். மத்.22ஆம் அதிகாரத்திலுள்ள தேவனுடைய ராஜ்யம், கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள், கலியாண வஸ்திரத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொண் டேன். இங்கு அநேகருக்கு இயேசு உயிருடன் இருக்கிறார் என சொல்லியும், தியானபுத்தகத்தில் உள்ள செய்தியை தினமும் கூடிவரும் சகோதரர்களுக்கு படித்து காண்பித்தும் வருகிறேன். நாங்கள் எங்களை இயேசுவுக்கு ஒப்புவித்து ஜெபித்து வருகிறோம்.

Bro.S.Selvam, (மத்தியசிறை, மதுரை)

page 1 of 2