ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 1 திங்கள்

“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது” (1பேது.3:12) என்ற வாக்கைப்போல இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மேல் தம் கண்ணை வைத்து ஆலோசனை தந்து நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்தும்படியாக அவருடைய கரத்தில் அர்ப்பணித்து  ஜெபிப்போம்.

உபத்திரவத்தின் வழி

தியானம்: செப்டம்பர் 1 திங்கள்; வாசிப்பு: அப்போஸ்தலர் 14:19-24

“…நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த்
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்….”
(அப்போஸ்தலர் 14:22).

ராஜா, ராஜ்யம் என்றதுமே போர், போராட்டம் என்றுதான் எண்ணத் தோன்றும். இவ்வுலகத்திலேயே ஒரு ராஜ்யத்தைப் பிடிக்க ஒரு ராஜா போராடவேண்டியிருந்தால், தேவராஜ்யத்தின் பிரஜைகளாகிய நாம் அந்த ராஜ்யத்துக்காகப் போராடுவது எவ்வளவு அத்தியாவசியமானது! ஒரு காலத்தில் சவுலாக இருந்த பவுல், கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்தி சபைகளைப் பாழாக்கிக் கொண்டிருந்தான் (அப்.8:3). கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி பிரதான ஆசாரியரிடத்தில் போய், தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கிக்கொண்டு புறப்பட்டான் (அப்.9:1,2). தமஸ்கு வுக்குச் சமீபித்தபோது, “சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்” என்று கேட்ட கர்த்தர், “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்றார். அன்று சவுலின் வாழ்வு தொடப்பட்டது (அப்.9:3-20). அதன்பின்பு, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று தைரியமாய்ப் பிரசங்கித்தார். இயேசுவைத் துன்பப்படுத்தின (சவுல் என்று அழைக்கப்பட்ட) பவுல் இப்போது இயேசுவுக்காய் துன்பங்களையும், உபத்திரவங்களையும் அனுபவிப்பதில் பின்நிற்கவில்லை. நாமும் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் எனவும் இப் பவுலே வலியுறுத்துகிறார்.

நமது வாழ்வு சீராக இருக்கும்போது நாமும் சந்தோஷமாக இருப்போம். ஆனால், சிறு பிரச்சனைகள் வந்துவிட்டால் போதும்; அலறியடிக்க ஆரம்பித்து விடுவோம். கிறிஸ்தவ வாழ்வு ஒரு சுகபோக வாழ்வு அல்ல, மாறாக அது ஒரு போராட்டம் நிறைந்த வாழ்வு. உபத்திரவங்களைச் சந்திக்க ஆயத்தமுள்ளவர்களாய் எந்நேரமும் நாம் இருக்கவேண்டிய ஒரு வாழ்வு. கிறிஸ்துவுக்காய், அவருடைய ராஜ்யத்துக்காய் எந்நேரமும் நாம் பாடுகளை அனுபவிக்க ஆயத்தமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். நமக்கு வரும் பாடுகளைக்குறித்து நாம் கலங்கவோ அல்லது அவற்றைக் கண்டு ஓடி ஒளிந்துகொள்ளவோ வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், பாடுகளுக்கூடாக நமது விசுவாசம் உறுதிப்படுகிறது; நாமும் பெலனடைகிறோம். உபத்திரவங்கள் நம்மை தேவராஜ்யத்தின் பிரஜைகளாக்குகிறது. உபத்திரவத்தின் வழியாக நாம் செல்லும்போது, தேவராஜ்யத்தின் வழியில் செல்கிறோம் என நம்மை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

நம்மைநாமே ஒருவிசை ஆராய்ந்து பார்ப்போம். பாடுகளைக் கண்டு பயந்து தேவனைவிட்டுப் பின்வாங்கிப் போவோமா? அல்லது, தேவனுக்காய் பாடுபட நாம் ஆயத்தமாவோமா? அவருக்காய் உபத்திரவங்களைச் சகித்து முன்செல்வோமா?

ஜெபம்: “ஆண்டவரே, உமது நாமத்தினிமித்தம் பாடு அனுபவிக்க, உபத்திரவங்களைத் தைரியமாய் எதிர்நோக்க எனக்கு அருள் செய்யும். ஆமென்.”

ஒப்பந்தம்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர்-அக்டோபர் 2014)
– Dr.உட்ரோ குரோல்

“லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ் செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத்  திரும்பிப்போனான்.   .. நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், …கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர் (ஆதி. 31:55, 49)”.

தாங்கள் மறுபடியும் சுகத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஒருவரை ஒருவர் மீண்டும் சந்திக்க விரும்பும் இரு குழுக்கள் ஏறெடுக்கப்படும் ஜெபமாக இது கருதப்படுகிறது. ஆயினும் இதன் பின்னணியை நோக்கும் பொழுது இது ஓர் எதிர்மறையான பொருளையே தருகிறது.

யாக்கோபு ஓர் எத்தனாக இருந்தான். ஒரு பயிற்றங்கூழுக்காக தன்னுடன் பிறந்த ஏசாவை அவனுடைய சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப்போட வற்புறுத்தினான். பின்னர் தன்னுடைய தகப்பனிடம் பொய் சொல்லி ஏமாற்றி, மாற்றக் கூடாத குடும்ப ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான். யாக்கோபு என்ற பெயரின் பொருள், சூழ்ச்சியினால் துரோகம் செய்து, ஒருவரை அகற்றிவிட்டு அவரது இடத்தைக் கவர்ந்துகொள்வது என்பதாகும். அவன் தன்னைப் போலவே ஏமாற்றுக்காரனான தனது மாமனார் லாபானை சந்தித்தான். யாக்கோபு ஆரானை அடைந்தபொழுது, ரூபவதியான ராகேலை சந்தித்தான். அவளைத் திருமணம் செய்வதற்காக ஏழு ஆண்டுகள் லாபானிடம் வேலை செய்தான். அந்த ஏழு ஆண்டுகளின் முடிவில் லாபான் யாக்கோபை ஏமாற்றி ராகேலுக்குப் பதிலாக லேயாளை கொடுத்தான். எனவே, தான் விரும்பிய பெண்ணுக்காக யாக்கோபு இன்னொரு ஏழு ஆண்டுகள் வேலைசெய்ய வேண்டியதாயிற்று. லாபானின் குமாரத்திகளுக்காக இவர் பதினான்கு ஆண்டுகளையும், மந்தைகளுக்காக மற்றொரு ஏழு ஆண்டுகளையும் லாபானிடம் பணிபுரிந்தார்.

இந்த காலத்தின் முடிவில் தேவன் யாக்கோபுக்கு வாக்குப் பண்ணப்பட்ட கானான் தேசத்துக்கு திரும்புவதையும் அவனுடைய பொருத்தனையையும் நினைப்பூட்டினார். எனவே யாக்கோபு லாபானிடம் தான் பெத்தேலுக்கு போவதற்காகத் தன்னை விடுவிக்குமாறு கேட்டான். ஆனால், இது லாபானின் பொருளாதாரத்தை பாதிக்கும் காரியமாகும். எத்தனாக இருந்தாலும், தேவனுடைய வாக்குத்தத்தத்துக்கு யாக்கோபு சுதந்திரவாளியாவார். தனது செல்வத் திரட்சிக்குக் காரணம் தேவனுடைய ஆசீர்வாதம் யாக்கோபிடம் இருந்ததால்தான் என்பதை லாபான் நன்கு அறிந்திருந்தார். எனவே பிரிந்துசெல்வதை மறந்து விடுமாறும் தன்னுடனேயே இருந்து விடும்படியாகவும் யாக்கோபுக்கு பரிந்துரைத்தார். எனவே லாபான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் பொழுது, ஆரானை விட்டு இரகசியமாக ஓடிவிடுவதே யாக்கோபுக்கு ஒரே வழியாயிருந்தது.

தனது தகப்பனுடைய சுதந்திரம் தனக்குக் கிடைக்காது என்பதை அறிந்திருந்த ராகேல் தனது வீட்டை விட்டுக் கிளம்பும்பொழுது, குடும்ப சுரூபங்களைத் திருடிக்கொண்டாள். மெசப்பத்தோமியாவின் வடபகுதியிலுள்ள நுசி என்ற இடத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியிலிருந்து, குடும்ப தெய்வ சுரூபங்களை உடையவரே சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட வாரிசு என்பதை வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாகவே ராகேல் தனது தகப்பனுடைய சுரூபங்களை அவருடைய அனுமதியின்றியும், யாக்கோபுக்கு மறைத்தும் எடுத்துக்கொண்டாள்.

தனது வீட்டைவிட்டு யாக்கோபு புறப்பட்டுச் சென்றுவிட்டதை அறிந்த லாபான் யாக்கோபையும் அவனுடைய குடும்பத்தையும் பின் தொடர்ந்தான். ஏழு நாட்களுக்குப் பின் அவர்களை கீலேயாத் மலையில் கண்டுபிடித்தான். உடனடியாக யாக்கோபிடம் தனது சுரூபத்தைப் பற்றி வினவினான். அதைப்பற்றி அறிந்திராத யாக்கோபு தனது பொருட்களை சோதனையிட்டுக் கொள்ள லாபானை அனுமதித்தார். ராகேல் அதனை தந்திரமாக ஒளித்து வைத்தபடியினால் அச்சுரூபங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையில் நம்பிக்கையின்மையை உண்டு பண்ணியது. ஆனால் இருவருக்கும் இடையில் இச்சந்தேகமானது நிரந்தரமாகிவிடக் கூடாது என்பதால் இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் திட்டமிடப்பட்டது.

இதன்படி இருவருக்குமிடையே ஒரு தடை உருவாக்கப்பட்டது. மிஸ்பாவில் உண்டாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் மிக எளிமையானதே. லாபானுக்கும் யாக்கோபுக்கும் இடையில் கற்குவியல் சாட்சியாக உருவாக்கப்பட்டது அந்தக் குவியலையும் அந்தத் தூணையும் கடந்து மற்றவரிடத்துக்கு வராதபடிக்கும் அந்தக் குவியலும் சாட்சி, அந்தத் தூணும் சாட்சி. இந்த நிகழ்வுக்கு தேவன் ஒருவரே சாட்சி என்பதால், “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் ஆண்டவரே நம்மைக் கண்காணிப்பாராக” என்று சொல்லிக்கொண்டனர். சந்தேகமும் நம்பிக்கையின்மையும் இதன் அடிப்படையாக அமைந்தது.

“லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான்” (ஆதி. 31:55). பின்பு லாபான் புறப்பட்டு, ஆரானுக்குத் திரும்பிப் போனான். இதன் பிறகு லாபானைப் பற்றி வேதாகமத்தில் குறிப்புகள் தரப்படவில்லை.

தேவ மனிதனாகிய யாக்கோபு, உலக மனிதனான லாபானுடன் ஒப்பந்தம் செய்துகொள்கிறான். உலகத்துடன் தேவையான உடன் படிக்கைகள் செய்துகொள்ள வேதாகமம் தடை கூறவில்லை. அடிக்கடி தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் இவ்வுலகில் செய்யப்படுகின்றன. ஆனால் அந்நிய நுகத்தில் அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படக்கூடாது என்பதை வேதம் எச்சரிக்கிறது (2கொரி.6:14). யாக்கோபு இருபது வருடங்களாக லாபானுடன் உடன்படிக்கை செய்வதை கவனமாகத் தவிர்த்து வந்தான். உலகத்தோடு தன்னை உடன்படிக்கை செய்துகொண்டால் அது கவர்ச்சியாகவும், இலாபமாகவும் காணப்பட்டாலும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் ஆசீர்வாதங்களுக்கு ஈடாகாது என்பதை அந்த தேவ மனிதர் அறிந்திருந்தார். இன்றைய கிறிஸ்தவர்களும் உலக ஆசீர்வாதங்களைவிட தேவனுடைய ஆசீர்வாதமே மேலானது என்பதை அறிந்துகொள்வது நல்லது.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்

புனித வேதாகமத்தின் வரலாறு (செப்டம்பர்-அக்டோபர் 2014)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்

(4) திபெத்திய மொழிபெயர்ப்பு

கிறிஸ்தவ மிஷனெரிகள் உட்புக முடியாத ஒரு நாடாக திபெத் இருந்தபோதிலும் தேவனுடைய வார்த்தையானது திபெத்திய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு, அந்நாட்டுக்குள் சென்றுள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மொரேவிய கிறிஸ்தவர்கள், திபெத்தில் சுவிசேஷத்தை அறிவிக்கக்கூடிய வாய்ப்புகளை அறிந்துவர இரு மிஷனெரிகளை அனுப்பினர். இவர்கள் கடும் இக்கட்டுகளுக்கு முகங்கொடுத்ததோடு, திபெத்திய எல்லைப் பகுதியில் குடியிருப்பதற்கும் சீன அதிகாரிகளினால் அனுமதிக்கப்படவில்லை. எனினும் இவர்கள் தமது முயற்சியைக் கைவிடாமல் கைலாங் எனும் காட்டுப் பகுதிக்குச் சென்றனர். அங்கு அவர்கள் 1856-இல் தமது நண்பரான ஹெயின்ரிச் ஜெஸ்கி என்பவரை சந்தித்தனர். இவர் திபெத்திய மக்களை சந்திப்பதற்கான ஒரு வழி, அவர்களுடைய மொழியைக் கற்று வேதாகமத்தை அம் மொழியில் மொழிபெயர்ப்பதே என்பதை அறிந்தவராக அப்பணியைச் செய்யத் தொடங்கினார்.

இதன் பயனாக 1871-இல் புதிய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதி கள் திபெத்திய மொழியில் மொழி பெயர்த்து அச்சிடப்பட்டு திபெத்திய நாட்டின் எல்லைப்பகுதிகளில் குடியிருந்த மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. இது அப்பகுதி திபெத்திய மதத்தலைவர்களுக்குத் தெரிந்தபோது, அப்புத்தகத்தை வாசிக்க வேண்டாம் என அவர்கள் கட்டளையிட்டனர். இதனால் சிலர் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களைத் தமக்கு கொடுத்தவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டனர். ஆனால் பலர் அவற்றைத் தமது திபெத்திய தெய்வச் சிலைகளுக்கு முன் வைத்து, தமது மதநூல்களுக்கு செய்வதுபோலவே அவற்றுக்கு முன் விளக்கேற்றினர்.

அதேசமயம், சீன எல்லைப் பகுதியிலிருந்து சில மிஷனெரிகள் திபெத்துக்குச் சென்றதோடு, திபெத்திய வேதப்பிரதிகளையும் நாட்டுக்குள் எடுத்துச்சென்றனர். சில மிஷனெரிகள் திபெத்திய மக்கள் விரும்பும் பொருட்களை சீனாவிலிருந்து கொண்டுவந்து அவர்களுக்கு விற்பனை செய்ததோடு, திபெத்திய வேதாகமத்தையும் அவர்களுக்கு கொடுத்தனர். பல திபெத்திய மக்கள் வேதபுத்தகத்தை வாசித்து இரட்சிக்கப்பட்டுள்ளனர். சீன கிறிஸ்தவ வியாபாரிகளும் திபெத்திய வேத புத்தகங்களை மக்களுக்கு விநியோகித்து வந்தனர்.

(5) மலாய மொழிபெயர்ப்பு

1814-இல் பிரித்தானிய வெளி நாட்டு வேதாகமச் சங்கம் மலேசிய கிறிஸ்தவர்களுக்காக அவர்களுடைய மலாய மொழியில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டது. 1970-ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, மலேசியாவிலிருக்கும் வேதாகமச் சங்கம் கிழக்கு மலேசியாவில் பேசப்படும் 7 மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்ததை அறிகின்றோம்.

(6) தாய்லாந்து மொழிபெயர்ப்பு

நெதர்லாந்து மிஷனெரி சங்கத்தைச் சேர்ந்த குட்லொஃப் என்பவர் 1828 முதல் 1831 வரையிலான காலப் பகுதியில் தாய்லாந்தில் பணியாற்றிய காலத்தில் வேதாகமத்தை அந்நாட்டு மொழியான சயமீஸ் மொழியிலும், வேதாகமத்தின் சில பகுதிகளை லாஓ, மற்றும் கம்போடிய மொழியிலும், மொழிபெயர்த்துள்ளார். எனினும், இவரது மொழிபெயர்ப்புகள் அச்சிடப்பட்டது பற்றி எவ்வித குறிப்புகளும் இல்லை. 1834-இல், வேதாகமச் சங்கம் தாய்லாந்து மொழியில் வேதாகமத்தின் பகுதியொன்றை அச்சிட்டது. பின்னர் 1843-இல் புதிய ஏற்பாடும், 1883இல் முழு வேதாகமமும் தாய்லாந்து மொழியில் வெளியிடப்பட்டது. தாய்லாந்தின் வடபகுதி மக்களது மொழியில் புதிய ஏற்பாடு 1914-இலும், முழுவேதாகமமும் 1927-இலும் வெளிவந்தது.

1967-இல் இதன் திருத்தப்பதிப்பு வெளிவந்தது. 1967-இல் தாய்லாந்து மொழி புதிய ஏற்பாடானது முதல் தடவையாக தாய்லாந்திலேயே அச்சிடப்பட்டது. தற்போது இலகு மொழிநடையிலான தாய்லாந்து மொழி வேதாகமம் தயாரிக்கப்பட்டு வருவதோடு, தாய்லாந்தின் 5 கோத்திர மொழிகளிலும் வேதத்தின் பகுதிகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

(7) வியட்னாமிய மொழிபெயர்ப்பு

1911-இல் புரட்டஸ்தாந்து சபைகளைச் சேர்ந்த மிஷனெரி சங்கங்கள் வியட்நாமுக்கு மிஷனெரிகளை அனுப்பின. 1916-இல் வேதாகமம் வியட்நாமிய மொழியில் வெளிவந்தது. இதன்பின்னர் வியட்நாமிய கோத்திர மக்களது சில மொழிகளிலும் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது. 1957-இல், வைக்கிளிப் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் தமது மொழி பெயர்ப்பு வேலைகளை வியட்நாமில் ஆரம்பித்தனர். அவர்கள் தற்சமயம் 20-இற்கும் அதிகமான வியட்நாமிய கோத்திர மக்களது மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்த்து வருகின்றனர்.

(8) கொரிய மொழிபெயர்ப்பு

1832-ஆம் ஆண்டு குட்லொஃப் என்பவர் கொரியாவுக்கு விஜயம் செய்ததோடு, சீனமொழிபெயர்ப்பு வேதப் பிரதிகளையும் அங்கு விட்டுச் சென்றுள்ளார். கொரிய மொழியில் புதிய ஏற்பாடு முதன் முதலாக ஜோன் ரொஸ் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்டது. எனினும், இதில் சீன மொழியின் செல்வாக்கு அதிகம் இருந்த மையினால், திருத்தப்பட்டு 1900-இல் வெளியிடப்பட்டது. 1910-இல் பழைய ஏற்பாடும் கொரிய மொழியில் வெளிவந்தது. 1935-இல் இவ்விரு ஏற்பாடுகளும் திருத்தப்பட்டன. 1960-இல் முழு வேதாகமத்தையும் மறுபடியுமாகத் திருத்தும் வேலைகள் ஆரம்பமாகின. கொரியாவை ஜப்பான் ஆக்கிரமித்திருந்த காலத்தில் வேதாகமம் மட்டுமே கொரிய மொழியில் வெளியிடப்பட்ட ஒரே ஒரு புத்தகமாகும். மற்ற அனைத்தும் ஜப்பான் மொழியிலேயே வெளியிடப்பட்டன. அக்காலத்தில் வேதாகமமே கொரிய மொழி அழிந்து போகாமல் இருப்பதற்கு காரணமாயிருந்தது என்பதற்காக 1970-இல் கொரிய அரசாங்கம் கொரிய வேதாகமச் சங்கத்துக்கு சிறப்பான விருதொன்றை வழங்கியுள்ளது.

(9) சிங்கள மொழிபெயர்ப்பு

இலங்கையில் கி. பி. முதலாம் நூற் றாண்டிற்குப் பின்னர் 5 ஆம் 6 ஆம் நூற்றாண்டுகளிலும் சில கிறிஸ்தவர்கள் இருந்த போதிலும், 16-ஆம் நூற்றாண்டு போர்த்துக்கேயரது வருகையோடேயே கிறிஸ்தவம் நாட்டின் கரையோரப்பகுதிகளில் பரவத் தொடங்கியது. எனினும் அக் காலத்தில் வேதாகமத்தைச் சிங்கள மக்களது மொழியில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகளில் ரோம சபை மிஷனெரிகள் ஈடுபடவில்லை. அவர்கள் சிங்கள மொழியில் ஒரு வேதாகம உபதேசப் புத்தகத்தை மட்டுமே வெளியிட்டுள்ளனர்.

17-ஆம் நூற்றாண்டில் (1658-இல்) போர்த்துக்கேயரிடமிருந்து இலங்கையின் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் தமது சீர்திருத்த கிறிஸ்தவத்தை அறிமுகப் படுத்தியதோடு, இலங்கை மக்களது மொழிகளில் வேதாகமத்தை மொழி பெயர்ப்பதற்கான ஆக்கபூர்வமான நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். (தமிழ் வேதாகமத்தை மொழி பெயர்க்க ஒல்லாந்தர் மேற்கொண்ட பணிகள் பற்றி அடுத்த அத்தியாயத்தில் நாம் பார்ப்போம்).

1670-ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த ஒல்லாந்த சீர்திருத்த சபை மிஷனெரி சைமன்கட் என்பவர், லத்தீன், கிரேக்கம், எபிரேயம், டச்சு, போர்த்துக்கேயம், தமிழ், மற்றும் சிங்கள மொழிகளில் பட்டம் பெற்றிருந்தார். இவர், மத்தேயு சுவிசேஷத்தையும், அப்போஸ்தலர் நடபடிகளின் முதல் 14 அதிகாரங்களையும் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆரம்பத்தில் பனை ஓலைகளில் எழுதப்பட்ட பிரதிகளாக உபயோகிக்கப்பட்ட இம்மொழிபெயர்ப்பு 1780-ஆம் ஆண்டே அச்சிடப்பட்டது. 1717-ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த விலம்ஸ் கொனைன் என்பவர், நான்கு சுவிசேஷங்களையும் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதன் பிரதிகள், இவரது மரணத்தின் பின்பு கண்டு பிடிக்கப்பட்டு, வெட்ஸெலியுஸ் என்பவரினால் 1739-இல் அச்சிடப் பட்டது.

புதிய ஏற்பாட்டின் ஏனைய புத்தகங்கள் ஹென்றிக்சன் பிலிப்ஸ் என்பவரினால் மொழிபெயர்க்கப்பட்டதோடு இவை ஏற்கனவே மொழி பெயர்க்கப்பட்டிருந்த புத்தகங்களோடு சேர்க்கப்பட்டு 1780-இல் சிங்கள புதிய ஏற்பாடு வெளிவந்தது. இதன்பின்னர் பிலிப்ஸ் பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்க தொடங்கினார். 1786-இல் ஆதியாகமமும் 1787-இல் யாத்திராகமமும் 1789-இல் லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் எனும் புத்தகங்களும் சிங்களத்தில் இவரால் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன.

(தொடரும்)

வாசகர்கள் பேசுகிறார்கள்

(செப்டம்பர்-அக்டோபர் 2014)

1. சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக உள்ளது. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின செய்தி மிகவும் அருமையாகவும், ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றமடையவும் உதவியாக உள்ளது.

Mr.Immanuel Gideon Inbadas, Vellore.

2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியானம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டுடன் அழகாக எழுதப்பட்டுள்ளது. இதை நான் தினமும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து தியானித்து முக்கியமான செய்திகளை எழுதி வைத்துக் கொள்வேன். ஒவ்வொரு நாளின் தினதியானமும் மிகுந்த ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டதாக இருக்கிறது. வேதாகமத்தின் வரலாறு மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த ஊழியம் மென்மேலும் வளர ஆண்டவர் அருள்புரிவாராக!

Mr.Mercy Refus, Salem.

3. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியானம் எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. கர்த்தர் ஆவிக்குரிய காரியங்களை கோடிட்டு காட்டுவது எனக்கு நலமாக உள்ளது. உங்கள் ஊழியங்களுக்காகவும் தினமும் ஜெபித்து வருகிறேன். எங்கள் ஜெபக்குறிப்புகளுக்காக நீங்கள் ஜெபித்து நீங்கள் எழுதியிருந்த கடிதத்தை மிக்க நன்றியுடன் பெற்றுக்கொண்டேன். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கடிதத்தில் தாங்கள் எழுதி நினைவூட்டின வாக்குத்தத்தம் உற்சாகம் அளிக்கிறது.

Mr.P.Samson Jawaharpandian, Palayamkottai.

4. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் கடந்த ஒரு வருட காலமாக உங்கள் வெளியீடான அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற புத்தகத்தை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். ஒவ்வொருநாளுக்கும் உரிய தியானங்களை படிக்கும்பொழுது மிகவும் பரவசம் ஊட்டுகிறது. சில சமயங்களில் தியானங்களில் குறிப்பிட்ட வசனங்கள் எங்களுக்காகவே எழுதப்பட்டிருப்பதை நாங்கள் தியானிக்கின்றோம். உடலும் மனமும் சோர்வுற்ற சமயங்களில் அதை நான் மீண்டும் படித்து என் மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.

Mr.D.Gnana prakash, Pakala.

5. Praise God, I would see the T.V.Programmes telecasted. It is very encouraging and enlighting the mind and our spiritual growth. I learn the Biblical truths and how God speaks to us.

Mrs.Sheela Mercy, Chennai.

6. Thank you for sending publications. Anuthinamum Christhuvudan and Sathiyavasanam Magazine. Please for us. God hath helped me to read the whole Bible once a year for more than fifteen years. Pray for me to go in depth in the word of God and study His Word and teach it to others.

Mrs. Magadalene Kamalam, Nagercoil.

7. We praise God for your Ministry. It is wonderful that the Lord is using each one of you to reach out to the world at large with the Good News of the Gospel. All honour and praise to Him alone.

Mr.Cecil Coilpillai, Chennai.

page 1 of 2