ஜெபக்குறிப்பு: நவம்பர் 1 ஞாயிறு
“கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்” (நீதி.3:26) என்ற இவ்வாக்குப்படியே இம்மாதத்திலும் கர்த்தரே நம்முடைய நம்பிக்கையாக இருந்து, கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்திட, கர்த்தரை உயர்த்தி அவருடைய பாதபடியிலே பணிந்து அவரை ஆராதனை செய்வோம்.
நானா?
தியானம்: நவம்பர் 1 ஞாயிறு; வேத வாசிப்பு: யோவான் 6:61-71
“அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப் போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்” (யோவான் 6:66-67).
பல வருடங்கள் நண்பர்களாக இருந்த இருவரில் ஒருவன் திடீரென பிரிந்துவிட்டான். அவன் சொன்னது இதுதான்: “இதுவரையிலும் நம் இருவருடைய சிந்தனைகள், செயல்கள், தீர்மானங்கள் யாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருந்தன. நாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தோம். இப்போது அவன் மாறிவிட்டான். என்னோடு நேரம் செலவழிப்பதில்லை. களியாட்டங்களுக்கு வருவதில்லை. அவனது போக்கே மாறிவிட்டது. இந்த வாழ்வின் சந்தோஷங்களைத் தியாகம்பண்ணி அவனோடு நடக்க எனக்கு சம்மதமில்லை” என நட்பை முறித்துப் போட்ட அவன் கூறினான்.
ஒரு பையன் கொண்டுவந்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு இயேசு ஐயாயிரம் பேருக்கும் அதிகமான மக்களைப் போஷித்ததை மக்கள் கண்டனர் (யோவான் 6:1-14). அதை உண்டு பசி தீர்த்த அவர்கள்: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றனர் (யோவா.6:14) அதுமாத்திரமல்ல, இயேசுவைத் தேடிக்கொண்டு படகுகளில் ஏறி கப்பர்நகூம் வரைக்கும் சென்றனர். எப்போது இங்கே வந்தீர் என்று ஆவலுடன் கேட்டனர். அந்த ஜனக்கூட்டம் எதற்காகத் தம்மைப் பின்தொடருகிறார்கள் என்பதை அறிந்திருந்த இயேசு, பிதாவின் சித்தத்தைச் செய்வது குறித்தும், ஜீவ அப்பத்தைக் குறித்தும், மனுஷகுமாரன் படப்போகிற பாடுகள், அடிக்கப்படப்போகிற சரீரம், சிந்தப்படப்போகிற இரத்தம் இவற்றைக்குறித்தும் பிரசங்கிக்கத் தொடங்கினார். நடந்தது என்ன? இது கடின உபதேசம் என்று சொல்லி சீஷரில் அநேகர் பின்வாங்கிப்போனார்கள். அப்படியானால் அன்று அவர்கள் இயேசுவைப் பின்பற்றியதன் நோக்கம் என்ன? இன்று நாம் இயேசுவைப் பின்பற்றுகின்ற நோக்கம் என்ன? நீயும் போய்விட மனதாயிருக்கிறாயா? என்று இயேசு நம்மிடமும் கேட்கிறார்.
“இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும். அப்பொழுது என் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலும் இருக்கும்” (ஏசாயா 48:17,18).
இன்றைய சமுதாய அமைப்பில் இயேசு கற்பித்த பாதையில் அவரோடுகூட நடப்பதற்கு நமக்குக் கடினமாய்த் தெரிகிற வழிகள் எவை? இதனால் நாமும் பின்வாங்கிப் போய்விடுவேனா? சிந்திப்போம்!
தேவனுடைய நிலையான பிரசன்னம்!
அதிகாலை வேளையில்… (நவம்பர்-டிசம்பர் 2015)
– Dr.உட்ரோ குரோல்
“தேவன் எங்கே இருக்கிறார்?” என்று ஒரு கிறிஸ்தவனிடம் ஒரு நாத்திகன் இகழ்ச்சியாகக் வினவினான். உடனடியாக அந்த கிறிஸ்தவன், “அவர் எங்கே இல்லாமல் இருக்கிறார்?” என்று மறுவினா எழுப்பினான்.
இஸ்ரவேலின் முதல் அரசனாக சவுல் முடிசூட்டப்பட்டார். ஆனால் அவரது தலைமைத்துவம் வெளிப்படுத்தப்படவில்லை. அதற்காக அவர் அதிக காலம் காத்திருக்க அவசியமில்லாமல் போயிற்று. இஸ்ரவேலரை வழிநடத்திச் செல்ல வேண்டிய ஒரு வாய்ப்பு விரைவிலேயே அவருக்கு வாய்த்தது. சாமுவேல் தீர்க்க தரிசியின் இறுதிகாலத்தில் இஸ்ரவேலரின் எதிரிகள் குறிப்பிடத்தக்க வலிமை பெற்று விட்டனர். அவர்களில் யோர்தான் நதியின் கிழக்கே வாழ்ந்து வந்த அம்மோனியர்களும் ஒரு எதிரியாவர். கலிலேயா கடலின் கிழக்கே அமைந்துள்ள அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்த கீலேயாத்திலிருக்கிற யாபேஸ் பட்டணத்துக்கு எதிராக நாகாஸ் என்ற அம்மோனியர் முற்றிக்கைப் போட்டார்கள்.. வறண்ட நிலத்தில் வாழ்ந்து வந்த அம்மோனியர்களுக்கு இந்த வளமையான பட்டணம் கவர்ச்சியாக அமைந்தது.
கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தை முற்றுக்கை போட்ட நாகாஸ் அந்நகர மக்கள் தன்னிடம் அடிமைகளாக இருக்கும்படி ஓர் உடன்படிக்கை செய்துகொள்ள வாய்ப்பு அளித்தார். ஆனால் அதின் ஒரு நிபந்தனை அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருந்தது. அம்மோனியனாகிய நாகாஸ் “நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலதுகண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தையை வரப்பண்ணுவதே நான் உங்களோடேபண்ணும் உடன்படிக்கை” என்றான். இது ஒரு கருணையற்ற செயலாகக் காணப்பட்டாலும் இஸ்ரவேலர்கள் முடிவெடுக்க ஏழு நாட்கள் தவணை கேட்டனர்.
இந்த இக்கட்டான செய்தியை உடனடியாக கீலேயாத்திலிருந்து இஸ்ரவேலின் இராஜாவுக்கு சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினர். நாகாஸின் இத்துணிகரம் சவுல் அரசரின் தலைமைப் பதவிக்கு ஒரு சவாலாக அமைந்தது. உடனடியாக அவர் ஓரிணை மாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாதிபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி சவுலின் பின்னாலேயும் சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான். இஸ்ரவேல் புத்திரரில் மூன்று லட்சம் பேரும், யுதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் பேசேக்கிலே கூடி அம்மோனியரை எதிர்ப்பதற்கு கீலேயாத் செல்ல திரண்டனர். “நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும்” என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்ற செய்தியை ஸ்தானாபதிகள் மூலம் அனுப்பினர். மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்து வரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான். தப்பின வர்களில் இரண்டு பேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப்போனார்கள் (1சாமு. 11:11). அம்மோனியருக்கு எதிரான யுத்தம் முற்றுப்பெற்றது. தேவன் அதிகாலமே அதிவேகமாக செயல்பட்டார்.
யோர்தானுக்குக் கீழ்ப்புறம் யாபேஸ் பட்டணம் அமைந்திருந்ததால் அம்மோனியனான நாகாஸ் அதனை அடிமைப்படுத்த எண்ணியிருப்பார். இஸ்ரவேலின் தேவன் வாக்குபண்ணப்பட்ட தேசத்தில் மாத்திரமே வாசம் பண்ணுகிறார் என்றும் ஆற்றின் கரைக்கு அப்பால் வசிக்கும் இரண்டரை கோத்திரங்களைப்பற்றி அவர் கவலைப்பட மாட்டார் என்றும் நாகாஸ் நினைத்திருக்கலாம். ஆனால் தேவன் எப்பொழுதும் சமீபத்திலேயே இருப்பார் என்ற வாக்கு தேவனுடைய பிள்ளைகளுக்கு உண்டு. “நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ?” (எரேமியா 23 : 24). தேவனுடைய பிரசன்னம் அவருடைய பிள்ளைகளுக்கு எப்பொழுதும் உண்டு. தேவனுடைய செயல்பாடுகளுக்குத் தொலைவில் அவர்கள் இருப்பினும் சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் தேவபிள்ளைகளுக்கு எதிராக எந்த ஒரு சூழ்ச்சியும் செய்ய இயலாது.
பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சால்மர் என்ற ஒரு ஸ்காட்லாந்து தேவ மனிதர் “நான் தெருவோரம் நடந்து சென்றாலும் அவர் என்னுடன் இருக்கிறார். தேவனை நான் மறந்து என் நண்பர்கள் மத்தியில் இருந்தாலும் அவர் என்னை ஒரு போதும் மறப்பதில்லை. நான் இமைகளை மூடி நித்திரை செய்தாலும், என் ஆத்துமா நினைவிழந்து இருந்தாலும் என்னை ஆராய்ந்தறியும் அவரது இமைகள் மூடாது. என்னைக் காக்கிறவர் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை. நான் செல்லும் இடத்துக்கு அவர் என்னை வழிநடத்துகிறார். என்னை காக்கிறார் என்னை கவனித்துக்கொள்ளுகிறார்” என்று எழுதியுள்ளார்.
நீங்களும் தேவனுடைய பிள்ளைகளில் ஒருவரானால், நீங்கள் கைவிடப்பட்டவராகவோ ஆதரவற்றவராகவோ தனிமையானவராகவோ எண்ண வேண்டாம். ஒரு காலத்தில் தேவனுடைய ஊழியங்களை அதிகமாய் செய்து, தற்பொழுது செய்வதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தபொழுதும், நாகாஸைப் போன்ற மனிதர்களின் எதிர்ப்புகளுக்கும் அஞ்சவேண்டாம். வாக்களிக்கப்பட்ட தேசத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களிடம் தேவன் ஆர்வம் காட்டியது போலவே, யோர்தானுக்கு அக்கரையில் வாழ்ந்த இரண்டரை கோத்திரங்களிடமும் தேவன் கரிசனையுள்ளவராய் இருந்தார். மற்றவர்களைப் போலவே தேவனுடைய பிரசன்னம் உங்களுக்கும் உண்டு. உங்கள் வாழ்நாள் முழுவதும் அவருடைய வாக்குறுதியைப் பற்றிக் கொள்ளுங்கள்.
அதிகாலைப் பாடல்:
நேசர் இயேசு என்னோடிருக்கும்பொழுது நான் தனித்துவிடேன்;
என் நண்பர்கள் கைவிட்டாலும் அவர் என்னைக் கைவிடமாட்டார்.
இருண்ட பாதையில் அவர் கரம் நடத்திச் செல்லும்; என்றாலும்,
இயேசு என்னோடிருக்குமிடமே துதியின் மாளிகையாகும்!
அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (நவம்பர்-டிசம்பர் 2015)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
ஆப்பிரிக்க மொழிகளில் வேதாகமம்
1970ஆம் ஆண்டுவரை அந்நாட்டின் 7 மொழிகளில் புதிய ஏற்பாடும் 45 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. நீகர் எனும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் 1924இல் மிஷனரிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்நாட்டின் ஒரு மொழியில் முழுவேதாகமமும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான கமரூன் நாட்டில் 1970 ஆம் ஆண்டுவரை 3 மொழிகளில் முழு வேதாகமமும், 7 மொழிகளில் புதிய ஏற்பாடும் 3 மொழிகளில் வேதப்பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. மத்திய ஆப்பிரிக்காவின் இன்னுமொரு நாடான சாட் இல் 50 வருட கால மிஷனரிப் பணிகளின் பின்பு 7 மொழிகளில் புதிய ஏற்பாடும், 5 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் உள்ளன. 1970 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் எந்த ஒரு மொழியிலும் முழுவேதாகமமும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவில்லை. மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் 1966 ஆம் ஆண்டு முழுவேதாகமமும் வெளியிடப்பட்டது.
இதைத்தவிர அந்நாட்டின் இன்னும் இரண்டு மொழிகளில் புதிய ஏற்பாடும் 3 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்ததாக 1970 ஆம் ஆண்டின் அறிக்கைகள் கூறுகின்றன. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள கபோன் எனும் நாட்டில் 1970ஆம் ஆண்டு வரை ஒரு மொழியில் முழுவேதாகமமும் 3 மொழிகளில் புதிய ஏற்பாடும், 8 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள கொங்கோ எனும் நாட்டில் மொத்தம் 200 மொழிகள் பேசப்படுகின்றன. 1970 ஆண்டுவரை இவற்றில் 12 மொழிகளில் முழுவேதாகமமும், 20 மொழிகளில் புதிய ஏற்பாடும், 34 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள ருவான்டா, புரூண்டி எனும் நாடுகளிலும் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் நடைபெற்றுள்ளன.
கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள எத்தி யோப்பியாவில் 4ஆம் நூற்றாண்டே கிறிஸ்தவம் பரவிய போதிலும், பின்னர் இஸ்லாமியத்தின் வளர்ச்சி காரணமாக கிறிஸ்தவம் குன்றிப்போயினும் 1866 இல் மறுபடியுமாக அந்நாட்டில் மிஷனரிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டுவரை அந்நாட்டின் 3 மொழிகளில் முழு வேதாகமமும், 3 மொழிகளில் புதிய ஏற்பாடும், 10 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இந் நாட்டின் அம்ஹாரிக் மொழி வேதாகமம் 1840இலேயே வெளியிடப்பட்டது. கிழக்கு ஆப்பிரிக்காவின் இன்னுமொரு நாடான சோமாலியாவில் 1953இல் மிஷனரிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1966 இல் சோமாலி மொழியில் புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. 1844 இல் மிஷனரிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கென்யா நாட்டில் 1970 ஆம் ஆண்டு வரை 9 மொழிகளில் முழுவேதாகமமும், 6 மொழிகளில் புதிய ஏற்பாடும், 6 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.
கிழக்கு ஆப்பிரிக்காவின் இன்னு மொரு நாடான உகன்டாவில் 1876 இல் மிஷனரிப்பணி ஆரம்பிக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் 4 மொழிகளில் முழுவேதாகமமும், 1 மொழியில் புதிய ஏற்பாடும், 5 மொழிகளில் வேதப்பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. 1860ஆம் ஆண்டு கிழக்கு ஆபிரிக்காவின் டன்சேனியா நாட்டில் மிஷனரிப்பணி ஆரம்பிக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டுவரை அந்நாட்டின் 3 மொழிகளில் முழுவேதாகமமும் 15 மொழிகளில் புதிய ஏற்பாடும், 11 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.
ஆப்பிரிக்கா கண்டத்தில் தென் ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிகளவு கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். அப் பகுதியிலுள்ள அங்கோலா எனும் நாட்டில் 1878இல் மிஷனரிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1970ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் 3 மொழிகளில் முழுவேதாகமமும், 2 மொழிகளில் புதிய ஏற்பாடும், 4 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொசாம்பிக் எனும் நாட்டில் 1893 இல் மிஷனரிப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
1970ஆம் ஆண்டு வரை அந்நாட் டின் 5 மொழிகளில் முழு வேதாகமமும் 3 மொழிகளில் புதிய ஏற்பாடும், 6 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. ரொடீசியா எனும் நாட்டிற்கு 1829 இல் ரொபர்ட் மொஃபட் விஜயம் செய்திருந்த போதிலும் 1859இலேயே நிரந்தரமான மிஷனரிப்பணிகள் அந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டன. அதே சமயம் 1957ஆம் ஆண்டே அந்நாட்டின் ஒரு மொழியில் முழு வேதாகமம் வெளியிடப்பட்டது.
1970 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் 4 மொழிகளில் புதிய ஏற்பாடும், ஒரு மொழியில் வேதாகமப் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஸம்பியாவில் 1970 ஆம் ஆண்டுவரை 2 மொழிகளில் முழு வேதாகமமும் 5 மொழிகளில் புதிய ஏற்பாடும் 4 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இருக்கும் இன்னுமொரு நாடு மாலாவி ஆகும். இந்நாட்டின் தம்புக்கு எனும் ஒரு மொழியில் மட்டுமே முழுவேதாகமமும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் 5 மொழிகளில் புதிய ஏற்பாடும் ஒரு மொழியில் வேதாகமப் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன.
தென்ஆப்பிரிக்கா நாட்டின் இரு மொழிகளில் முறையே 1831இலும் 1857இலும் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டன. ஆப்பிரிக்காவுக்கு கிழக்கே இருக்கும் மடகாஸ்கர் தீவு மக்களது மொழியில் 1835இல் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது.
(தொடரும்)
வாசகர்கள் பேசுகிறார்கள்
(நவம்பர்-டிசம்பர் 2015)
1. இயேசுவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். எனது சகோதரிக்கு Food Tube இல் பிரச்சனை இருந்தது. ஆபரேஷன் செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். நாங்களும் சத்தியவசன அலுவலகத்தோடு தொடர்புகொண்டு ஜெபிக்கும்படி கேட்டிருந்தோம். நீங்களும் ஜெபித்தீர்கள். கர்த்தரின் பெரிதான கிருபையால் கடினமான சூழ்நிலையை கடந்து ஆபரேஷன் முடிந்து சுகமாக இருக்கிறார்கள். அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கையில் இதை சாட்சியாக எழுதவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக!
Sis.C.Prabhavathy, Coimbatore.
2. செப்டம்பர் அக்டோபர் மாத தியானபுத்தகம் சீக்கிரமாகவே கிடைத்தது. அதிக சந்தோஷம். அதிக நன்றி. வயதான காலத்தில் அது ஒரு துணையைப் போலாகிவிட்டது. சத்தியவசன அனைத்து வகை ஊழியங்களையும் ஆண்டவர் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக!
Mrs.Nirmala Martin, Bangalore.
3. சத்தியவசனம் தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பார்த்தேன். சத்தியவசன செய்தியாளர்கள் கொடுக்கும் எல்லா செய்திகளும் இதயத்திற்கு ஏற்ற செய்தியாக மிகவும் எளிய உரை நடைமுறையில் கேட்பதற்கு மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. சுவி.சுசி பிரபாகர தாஸ் அவர்கள் தாவீது ராஜாவையும் சவுல் ராஜாவையும் பற்றி மிகவும் தெளிவாக சொன்ன சத்தியம் மிகவும் பிடித்தது. உங்கள் செய்திகளை கேட்பது மிகவும் அருமையாக உள்ளது.
Mr.R.Samuel, Vellore.
4. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை ஒவ்வொருநாளும் அதிகாலை ஜெபத்தில் வாசித்து அளவற்ற ஆசீர்வாதத்தைப் பெற்று வருகிறோம்.
Mr.Joseph, Erode.
5. அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் சஞ்சிகை ஆகிய மாத வெளியீடுகளை ஒழுங்காக பெற்றுக்கொண்டு படித்து ஆசீர்வாதமடைகிறோம். தேவன்தாமே தங்கள் ஊழியத்தை மேன்மேலும் எல்லாவித நன்மைகளினால் ஆசீர்வதித்து ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் ஆன்மீக வளர்ச்சியடைய ஜெபிக்கிறோம்.
Mr.S.C.M.Pandian, Ujjain, M.P.
6. 2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எனது மூத்த மருமகனின் வேலையில் இடமாறுதலுக்காக ஜெபிக்க கடிதம் எழுதியிருந்தேன். நீங்களும் ஜெபித்தீர்கள். 2015 ஜனவரி மாதத்தில் கர்த்தர் மாறுதல் தந்தார். தயை செய்த கர்த்தருக்கு நன்றி. அனுதினமும் கிறிஸ்துவுடன் எனக்கு பயனுள்ளதாகவும் ஆவிக்குரிய ஜீவியத்தில் ஆங்காங்கு காணப்படும் பழுதுகளை பழுது நீக்கும் நல்ல ஒரு மெஷினாக எனக்கு உதவுகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சத்தியவசன ஊழியங்கள் மற்றும் யாவருக்காகவும் ஜெபித்து வருகிறோம்.
Mr.Samson JawaharPandian, Tirunelveli.