ஜெபக்குறிப்பு: 2025 மே 30 வெள்ளி

இரண்டாம் நூற்றாண்டில் நற்செய்தி ஆப்கானிஸ்தானில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இங்கு தேவாலயங்கள் இல்லை. இதுவரை மக்கள் வீடுகளில்தான் கர்த்தரை ஆராதிக்கின்றனர். சுவிசேஷத்திற்கு அங்கு நிலவிவரும் பலத்த எதிர்ப்புகள் மாறி மக்கள் விடுதலையோடு கர்த்தரை ஆராதிக்கவும் மேலும் சுவிசேஷத்திற்கான வாசல் திறக்கப்படவும் ஜெபிப்போம்.

அனுகூலமான துணை!

தியானம்: 2025 மே 30 வெள்ளி | வேதவாசிப்பு: சங்கீதம் 46:1-11

YouTube video

ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேச வேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார் (யாத்.4:12).

“எல்லோரும் நம்மைவிட்டு ஒதுங்கிச் செல்லும்போது நம்முடன் கூட நிற்பவனே உண்மை நண்பன்” என்று வால்டர் வின்செல் என்பவர் கூறினார். ஆனால், ஆத்ம நண்பர்களும்கூட நமக்கு உதவ முடியாத சில சந்தர்ப்பங்கள் உண்டு. அவர்கள் வெகுதொலைவில் இருந்து நமக்கு நேரடியாக உதவமுடியாமல் போகலாம். ஆனால், நாம் எங்கே இருந்தாலும், நமது சூழ்நிலைகள் எத்தகையதாய் இருந்தாலும் தேவனே நமக்கு உதவி செய்ய வல்லவர்!

அன்று பார்வோனை எதிர்த்து, எபிரெய மக்களை மீட்கும் பணியானது மோசேக்குக் கொடுக்கப்பட்டது. அவரது தலைமைத்துவம், அவரது ஜீவன், இஸ்ரவேல் மக்களின் எதிர்காலம் அனைத்துக்கும் அது ஒரு சவாலான நேரமாக அமைந்தது. அவனது நல்வாழ்வில் அக்கறைகொண்டு, அவனுக்காகப் பரிதபிக்கும் அநேகர் அவனுக்கு இருந்திருக்கலாம். ஆனாலும், தேவன் மாத்திரமே “உன்னுடனேகூட இருந்து நீ பேசவேண்டியதை உனக்குக் கூறுவேன்” என்று சொல்லக் கூடியதாக இருந்தது.

தங்களுக்கு அருமையானவர்களையும், தங்கள் உடைமைகளையும் இழந்து போகும் நேரங்களில், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங்.46:1) என்று தேவபிள்ளைகளினால் மட்டுமே கூறமுடியும். கிட்லரின் வதை முகாமில் இருந்த கோரி டென் பூமின் தன்னுடன் இருந்த தனது சகோதரி பெட்சி துன்புறுத்தப்பட்டு இறந்தபோது தனது எண்ணங்களை அவள் இவ்வாறு நம்பிக்கையோடு கூறினாள்: நான் மரிப்பதற்குப் பயப்படவில்லை. மரண இருளின் பள்ளத்தாக்கு எனக்கு எந்த பயத்தையும் ஏற்படுத்தவில்லை. இயேசு என்னை இந்த சிறைச்சாலைகள் வழியாக சுமந்துசென்றார். அவர் இறுதிவரை என்னுடன் இருப்பார்.

அருமையான சகோதரனே, சகோதரியே! “இனி இதுதான் என்னுடைய முடிவு” என்று நீ கருதும்போது, தேவனே உன்னுடைய நம்பிக்கையின் “புதிய ஆரம்பம்” என்பதைக் கண்டுகொள்வாய். ஆகவே, தேவசித்தத்திற்குக் கீழ்படி. அவர் உனக்குப் பாதை காட்டுவார். “பயப்படாதே! நான் உன் தேவன். நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே! நான் உனக்குச் சகாயம் செய்வேன். நான் உன்னைப் பலப்படுத்தி உன்னை நிலைநிற்கச் செய்வேன். என்னுடைய சர்வ வல்லமையினாலும் கிருபையினாலும் நான் உன்னைத் தாங்குவேன்” என்று ஒரு கவிஞர் பாடியுள்ளார். இதுவொரு வாக்குத்தத்தம். அதைச் சுதந்தரிக்காமல் விட்டுவிடாதே.

தேவனைத் தவிர வேறு எதுவுமே எனக்கு இல்லை என்று நீ உணரும்போது அவரே உனக்குப் போதுமானவராக இருப்பதைக் காண்பாய்!

ஜெபம்: கிருபையுள்ள கர்த்தாவே, எந்தவிதமான இக்கட்டான சூழ்நிலையானாலும், நீர் எங்களுக்கு அருகில் சகாய கர்த்தராகவும் துணையுமாகவும் இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென்.